Friday, July 31, 2009

மானிட்டர் பக்கங்கள்....4 (31/07/09)



நாயருக்கும்,முகர்ஜிக்கும் முட்டை வியாபாரம் சுத்தமாக படுத்துவிட்டது.கடை திறந்து காத்தாடியது.ஒரு சமயம் தாத்தா இல்லைன்னா பெரியம்மா தயவில் முட்டை விற்று வந்த வரதனும்,பாண்டியனும் இப்ப பெரும் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

ஏன் பாண்டி..இந்த வாட்டி சந்தையில தனியா கடை போட்டிருவோமா? பெரியம்மா கடைதான் போடலயாமே..

வரதா...நம்ம தனியா கடை போட்ட போணியாகுமா?

வேற வழியில்லையா..அடுத்தாப்ல அந்தியூர் குதிரை சந்தைப்ப தாத்தா கால்ல விழுவோம்..

இல்ல,கருப்பு கூட சேருவோமா?

செய்யலாம்..ஆனா அந்த ஆள் பண்ணையை இல்ல எழுதி கேக்கான்..

சரி பாப்போம்.ஆமாம்..ஏன் நம்ம முட்டை விக்கமாட்டேங்குது..

அட..போய்யா..நம்ம எல்லாம் கூமுட்டைன்னு சனங்க தெரிஞ்சுகிட்டாங்க..

பேசாம ‘அரிவாளூம்,சுத்தியும்எடுத்துகிட்டு அறுப்புக்கே போகவேண்டியதுதான்..

டாஸ்மாக்கில் ஒரு ஆளை ரெகுலராக பார்ப்பேன்.பார்ட்டி தண்ணி அடிக்காது..உள்ளே வரும்..2 காலி பாட்டிலை எடுத்து நைசாக பையில் போட்டுகிட்டு வெளியேறிடும்..பின்னால் போய் பார்த்தால் சைக்கிளில் தொங்க விட்டுருந்த பை முழுக்க காலி பாட்டில்..ஒரு கட்டிங் வாங்கி கொடுத்து விசாரித்தால் பார்ட்டிக்கு முழு நேர தொழிலே அதுதான்..ஒரு நாளைக்கு எப்படியும் 200ரூ தேத்திடுமாம்.வீட்டு செலவு இப்படித்தான் ஓடிகிட்டு இருக்காம்.எலேய்..மாட்டினா பின்னிடுவானுகளேன்னா.இது வரைக்கும் மாட்டல.மாட்டினா பார்த்துகிடுவோம்...கிட்ட தட்ட 100 கடை ஒரு நாளைக்கு கவர் பண்றாராம்..சூப்பரப்பு..

கடைசி சொட்டையும்

கவிழ்த்து அடித்த பின்தான்

தெரிந்தது..

காலி பாட்டிலுக்குள்

பொண்டாட்டியின் தாலி..

--------------------------------------------------------------

---------------------------------------------------------------------------

தினத்தந்தி யை படிக்கவே பயமா இருக்கு.விதம்,விதமா கொலை பண்றாங்கப்பா..பணம் இல்லைன்னா கள்ளக்காதல்.அதுலயும் மதுரைல பெத்த புள்ளையையே ஒருத்தி பீஸ் போட்டிருக்கா..சென்னைல ஒரு பெண்..காதல்..வீட்டில் சம்மதிக்கவில்லை..காதலனுடன் வாழ பணம் தேவை..தன் தோழியை மாறு வேடத்தில் வீட்டுக்கு வர சொல்லி தன் தாயின் முகத்தில் மயக்கப் பொடி தூவ வைக்கிறாள்.தானும் மயங்கி விழுவது போல்

நடித்து பின் தாயை உருட்டு கட்டையால் மண்டையை உடைத்து வீட்டிலிருந்த பணம் மற்றும் நகைகளை தோழியிடம் கொடுத்தனுப்பி விட்டாளாம்..என்ன தவம் செய்திருக்கிறாள் அந்த தாய்....

--------------------------------------------------------------------

உடன்பிறவா உபத்திரத்தின் சாராய ஆலையிலிருந்து டாஸ்மாக்கின் தேவையில் 25% கொள்முதல் செய்யும்படி அரசு உத்தரவாம்..என்னய்யா நடக்குது?

--------------------------------------------------------------------

குடி,பீடி,சிகரெட் பழக்கமெல்லாம் இருந்தா முதுமையே வராதாம்.ஒரு சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது...(அட சீக்கிரம் டிக்கெட்டாம்).அதனால நான் இனிமேல் வெள்ளிக்கிழமைல மட்டும் குடிக்கலாம்னு முடிவெடுத்திருக்கேன்.

--------------------------------------------------------------------


Wednesday, July 29, 2009

குளிச்சா “குற்றாலம்’









கந்தையானாலும் கசக்கி கட்டு..
கூழானாலும் குளித்து குடி
ஆனால்,குற்றாலத்தில்..
குடி.குளி..குடி..குளி

ஒரு முடிவோடுதான் கிளம்பியது எங்கள் வாலிபர்(???) படை..(கேபிள் சங்கருக்கு மட்டும் சீனியர் சிட்டிசன் டிக்கெட்).செங்கல்பட்டு தாண்டுவதற்குள் போரடித்துவிட்டது..சீனியர் எடுக்கப் போகும்(எப்பன்னு கேக்காதீங்க..அவருக்கே தெரியாது)..படத்தின் கதையை என்னுடன் விவாதித்துக் கொண்டு வந்தார்..இன்னொரு பதிவரும்,நண்பரும் காலையில் டாஸ்மாக்கில் பிளாக்கில் வாங்கிய சரக்கின் புண்ணியத்தில் இருவரும் தமக்குள் பேசியபடி அமர்ந்திருந்தனர்..என் தலைக்கு மேல் என் பையில் சாதுவாக படுத்துக் கொண்டிருந்த அந்த 1.5 லிட்ட ர் எம்டன் என் கண்ணை உறுத்தியபடி இருந்தது..அது “பின்னூட்ட பெருந்தகை’ராகவன் அன்பளிப்பாக கொடுத்த வி.எஸ்.ஒ.பி சீமை சரக்குத்தான்..அதை நைட்டுக்கு வச்சுக்கலாம்னு கேபிள் சொன்னதற்காக மனதை தேற்றிக் கொண்டேன்.

டாஸ்மாக் சரக்கும்,நேத்து வச்ச நெத்திலி மீன் குழம்புக்கும் உண்டான ஈகோ பிரச்சனை சக பதிவரை பாதிக்க,மேல் முன் வாசல்,மற்றும் கீழ் பின் வாசல் வழியாக அருவி பெருக்கெடுக்க,திருநெல்வேலி ஆஸ்பத்தியில் அவருக்கு உடனடி அனுமதி..(மது அருந்தியவருக்கு உள்ளெ அனுமதி இல்லை என்ற ஆஸ்பிடல் அறிவிப்பு எங்களை கேலி செய்தது வேறு விஷயம்)...இவ்வளவு களேபரத்திலும் கேபிள் அங்கிள் அந்த பிரெஞ்சுக் காரியை கரெக்ட் செய்ய பார்த்தது அந்த நீரோ மன்னனுக்கே அடுக்காது...

அடுத்த முறை நெல்லையில் ‘வைத்தியம்’ செய்துக் கொண்ட அந்த பதிவரை பார்த்தால் ‘டிரிப்’ எப்படி இருந்தது என்று கேளுஙகள்..ஏ ..அப்பா நரம்புலயே ஊசியை ஏத்திட்டாங்கப்பா...(அது மட்டும்தானய்யா இருக்கு)

நைஜிரியா சரக்கை ஒரு ரவுண்டு முடித்து “வைரமாளிகை’ என்ற ஓட்டலுக்கு சாப்பிட போனோம்..மீராஜாஸ்மின்” புரோட்டா(அவ்வளவு மென்மை),தேங்காஎண்ணெயில் பொறித்த ‘நாட்டுக்கோழி’ வறுவல்..கட்டு கட்டி முடித்தவுடந்தான் அங்கே”சீக்கு கோழியாய்’ சுருண்டிருந்த நம்மாள் ஞாபகம் வந்தது...அவருக்கு துணைக்கு ஒரு நண்பரை விட்டு விட்டு குற்றாலத்துக்கு ஜீட்....








வழக்கம் போல்”குடியும்,குளித்தனமும்”தான்..அங்கிருந்து கேரளா பார்டரில் “பாலருவி”என்ற இடத்துக்கு போனோம்...செக்போஸ்டில் கேரளா போலிஸ் தமிழனை எவ்வளவு இழிவு படுத்த முடியுமோ,அவ்வளவு படுத்துகிறார்கள்...
அருவி சுமார் 200 அடி உயரத்திலிருந்து பேரிரைச்சலோடு விழுகிறது..குளிக்க சுகம்..இருந்தாலும் மூச்சு திணறுகிறது...நானும்,கேபிளும் மட்டும் குளித்தோம்..மற்றவர்கள்..டித்தார்கள்..ஆனால் அந்த அருவியில் குளிக்க தகுதி மூன்று பேருக்குத்தான் உண்டு..1.அர்னால்டு.. 2.சில்வஸ்டர் ஸ்டாலன்..3..நம்மூர் ‘தலைவி நமீதா’.

இரவு வழக்கம் போல் கச்சேரி என்றால் அண்ணன் உண்மைத்தமிழனுக்கு கோபம் வரலாம்..ரமேஷ் வைத்யா ஒரு ஆங்கில சிறுகதையை அற்புத பாவனைகளுடன் சொன்னார்..குரலில் உணர்ச்சி பொங்க சில கவிதைகளும் கூட..ஒரு வழியாக அவர்கள் சென்னைக்கு கிளம்ப,மறுநாள் என் குடும்பத்தினர் வருவதாக இருந்ததால் நான் மட்டும் தங்கிவிட்டேன்..









குற்றாலத்தில் ஒரு சிறு ஓட்டல்..ஒரு பெண் தான் உரிமையாளர்..வரவேற்பது முதல் இலை போட்டு உபசரிப்பு..கணக்கு பார்த்து காசு வாங்கி போடுதல்,பணியாளரை கடுமை கலந்த குரலில் மரியாதை குறையாமல் வேலை வாங்குவது வரை..அப்பெண்ணின் ஆளுமை வியக்க வைத்தது..குற்றாலத்திலும் ஒரு “இந்திரா நூயி”

அருவியில் ஒரு தாய் தன் மகளுடன் குளித்துக் கொண்டிருந்தார்..தந்தை வெளியில் நிற்க ,மகள் தாயிடம் சொல்லாமல் ஓடி வர,இருவரும் பஞ்சு மிட்டாய் வாங்க கொஞ்சம் தள்ளி சென்றனர்..மகளை காணாமல் தாய் மார்பில் அடித்துக் கொண்டு போட்ட கூச்சல் அருவியின் ஓசையையும் மீறி கேட்டது..மகள் கையில் பஞ்சு மிட்டாயுடன் ‘அம்மா’ என்று ஆசையுடன் ஓடி வர அந்த குழந்தைக்கு விழுந்த அடி ...அக்குழந்தை சே..இதுக்கு காணமலயே போயிருக்கலாமோ என்று நிணைத்திருக்க கூடும்..சமாதானம் செய்ய வந்த தந்தைக்கும் ரெண்டு சாத்து விழுந்தது...






மதுரையில் 8.45 க்கு பாண்டியன்...பதிவுலக நண்பர் யாரையாவது சந்திக்கலாம் என்று நமீதா ஊருக்கு போன் போட்டேன்..டக்ளஸ் தம்பி(ராஜீ) அண்ணே ஸ்டேஷன்ல இருங்க.கார்த்திகை பாண்டியனும்,ஸ்ரீயும் வருவார்கள் என்று கூற “மூவர் சந்திப்பு”கார்த்திகை பாண்டியன் சமூக அக்கறையுடன் பேசினார்..ஸ்ரீயும் கலந்து கட்ட ’அ” முதல் பல விஷயங்கள் விவாதித்தோம்......நல்ல சந்திப்பு(மதுரைகார பாசக்கார பயபுள்ளைங்கப்பா)..

ஒரு ரெண்டு நாளு எதையாச்சும் கிறுக்கலைன்னா வால்மீகி(அதாங்க பிக்பாக்கெட்)மாதிரி கை அரிக்குதப்பா..உங்களுக்கும் அப்படியா?ஒரு டாக்டரிடம் கேட்டதுக்கு’இது பதிமோபியா”மற்றும் பின்னுட்டரைடிக்ஸ்”இப்ப நிறைய பேரு இப்படித்தான் திரியராங்க......என்கிறார்..

ஞானசேகரன் அரசாங்க வீடு ஓசியில் கேட்டதை எல்லாரும் எழுதி விட்டனர்..ஆனால் அவருக்கு கொடுக்கலாம்..வீடு அல்ல..”வீடுபேறு’

Saturday, July 25, 2009

சிக்கு ..புக்கு ...



இருக்கை தேடி அமர்ந்து


சற்று ஆசுவாசம் ..


அப்புறம் ? நீங்க ..எங்க ..


வழித்துணைக்கு ஆள் சேர்த்தல் ..


குறும்பு செய்யும் குழந்தை .


விழுந்து விடுவானோ என்ற


பயம் கலந்த பெருமையுடன் தாய் ...


ஆங்காங்கு சிணுங்கும் அலைபேசிகள் .


இப்பதான் ...கிளம்பிச்சு .


இன்ன பிற அறிவிப்புகள் ..


கொஞ்சம் தூரம் போகட்டுமே..


"மூடி திறக்கும் " தவிப்பில் 'மப்பர்கள் "


கடந்து செல்லும் சிற்றுண்டி


விற்பவனின் குரலிலும் பசி


பிச்சை எடுக்கவில்லையப்பா ..


பார்த்து கொடுங்கள் என்ற


மண்டியிட்டு சுத்தம் செய்பவனின்


பரிதாப பார்வை ....


வெள்ளைத்தோல் காரியை


வெறித்து நோக்கும்


வெள்ளந்தி மனிதர்கள் ...


சேர்வதே நிச்சயமில்லை எனினும்


திரும்பும் இடம்


பற்றிய கவலை ..


பற்றியும் பற்றாமலும்


சென்று கொண்டே இருக்கிறது வண்டி

Tuesday, July 21, 2009

அர்த்தமில்லாத கதைகள்----2

அக்கா...

என்ன?

நா போயிட்டு ஒரு நாள்ல திரும்பிடறனே..

எனக்கும் அந்த ஆளுக்கும் ஆகாதுன்னு தெரியுமில்ல..

தெரியும்..இருந்தாலும்,ஊர் உலகம்னு ஒண்ணு இருக்கே..

இங்க பாருடி..எனக்கு அதை பத்தி கவலை இல்லை...பழசு எல்லாம்
மறந்துட்டியா நீ? பட்டு புடவைக்குள்ள ஒளிச்சு வச்சிருந்த வீட்டு பத்திரத்தை எடுத்து ரெட்டியார் கிட்ட கொடுத்து என் மானத்தை வாங்கினானே....அன்னையோட அந்தாளை வெட்டி விட்டுட்டேன்

இருக்கலாம்கா..ஆனா நமக்கு அவரு எவ்வளவோ உதவியும் செஞ்சிருக்காரு..அதை நினைச்சு பார்க்ககூடாதா?

என்ன பெரிய உதவி..பதிலுக்கு எவ்ளோ பணத்தையும் அடிச்சிருக்கான்.குத்தகை பணத்தையும் தராம,வயலையும் அவன் பேருக்கு எழுதிகிட்டானே..அதுக்கு என்ன சொல்றே?மதுரை ஆண்டியாரை கூட்டு சேர்த்துகிட்டு தோட்டத்தையே வளைக்க பார்த்தானே..அதுக்கு என்ன சொல்றே?

அக்கா என் நிலைமையையும் கொஞ்சம் பாரு..ஒரு கடை,கண்ணிக்கு போக முடியல...ஒரு காது குத்து,கல்யாணம்னு போக முடியுதா?எல்லாரும் நாக்கை புடுங்கறா மாதிரி பேசறாங்க..இம்புட்டு புடைவையும்,நகையும் இருந்து என்ன பிரயோசனம்?நீயும் நானும் போட்டுகிட்டு போஸ் கொடுத்ததுதான் மிச்சம்...

அடிப் போடி..பைத்தியம்..நீ பேப்பர் படிக்கிறது இல்லை..அட..”நம்ம” டிவியை கூட பாக்குறது இல்லை..சுப்ரீம் கோர்ட்லயே அதை சரின்னு சொல்லிட்டாங்கடி.போய் இளநீயை வெட்ட சொல்லு..
-------------------------------------------------------------------------------------------------

என்னங்க ..நாந்தான்..

ம்ம்..சொல்லு..

எவ்வளவு சேர்ந்திருக்கும்?

அதை எண்ணி முடிக்க இன்னும் அஞ்சு வருஷம் ஆகும்

சரி..அங்க,இங்கன்னு அலைஞ்சீங்க.. கூட அலையறவளை தொலைச்சிடுவேன்..


ஐயோ....ஐயோ....ஐயோ....




ஐயோ...ஐயோ...ஐயோ...

கனவெல்லாம் கலைஞ்சு போச்சே....

கறிசோறு..காப்பவுன் கம்மல்...

பித்தளை குண்டான்..பிரியாணி பொட்டணம்....

அத்தணையும் அப்புட்டுதானா? ஐயோ..ஐயோ..

இத்த நம்பி வாங்கின கைமாத்து

இப்படி நிக்கறமே ஏமாந்து....

மூட்டையை அவுக்க இருந்தாங்க...

முத்தெல்லாம் கொட்ட இருந்தாங்க.

தேடி வர இருந்த சீதேவியை

மூதேவி முடிச்சுட்டாளே....

ஒண்ணா, ரெண்டா?

காசு ஆயிரம்..கழுத்தை அறுத்துட்டாளே....

இனி அவுக்க இளிச்சவாயானா அவனுக.....

சனியன் புடிச்சவ..சாய்ச்சுபுட்டாளே..


(இடைத் தேர்தலில் அதிமுக போட்டியில்லையாம்)


-------------------------------------------------------------------------------------------------


Monday, July 20, 2009

உனக்கே இது ஓவரா தெரியலை?

எனக்கே சற்று சோம்பல்தான்

அந்த வாசம் நாசியை தாக்கும்வரை

பார்வையை கூராக்கி உற்று நோக்கினேன்

தூரத்தில் பளபளத்தது அது

ஆஹா..அருமையான வேட்டைதான்

தனியொருவனாய் தள்ளிக் கொண்டு வர முடியாது

பரிவாரங்களுக்கு தகவல் அனுப்பினேன்

தளபதிகள் அணிவகுக்க பயணம் தொடங்கியது.

நாங்கள் மேலிருந்தோம்

அது கீழே சமவெளியில்

இத்தனை பேரும் பங்கு போட்டாலும்

மிச்சம் நிறையவே இருக்கும்

இதோ இலக்கு நெருங்கி விட்டது

சின்ன அடையாள ஒலி

அதற்கே வந்துவிட்டாள் தோழி

சீ..சீ நான் அதற்கு அழைக்கவில்லை

பின்..

மேலே பார் அணிவகுப்பை

இடமும்,வலமுமாய்

இரு பக்கமும் காத்திருப்போம்

சரியான தீனிதான்..

என்னை பார்க்கும் போதெல்லாம்

மனதிற்குள் மழையடிக்கும்

என்பீர்களே

இப்போதும் அப்படித்தானா?

எட்டாவது திருமண நாள்

முடிந்ததும் மனைவி கேட்டாள்

இல்லையென்று உண்மையை சொன்னால்

புண்படுவாள்-என்று

“ஆமாம்என்று பொய் சொன்னேன்

இதில் எதாவது முரண் இருந்தால்

அதுமுன் நவினத்துவம்

இல்லையென்றால் ‘பின் நவினத்துவம்

புரியவில்லையென்றால்

சர்க்காரிசம்

ஐஞ்சு பேர்..சமாளிக்க முடியுமா?

ஐயோ..நிச்சயம் முடியாது..

அட்ஜஸ்ட் பண்ணி பாரேன்..

வேற வழியில்லை..வர சொல்லிட்டேன்

என்னை கேட்க வேண்டாமா?

நீ பெரிய கைகாரியாச்சே..உன்னால முடியும்

ம்ம்..பொண்டாட்டி மானத்தை வாங்கறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க..வரட்டும் ..பார்க்கலாம்

உள்ளே சென்று டப்பாவை திறந்து இருந்த கொஞ்சம் துவரம் பருப்பை எடுத்து ஊற வைத்தாள்..

ஆறு பேருக்கு சாம்பார் வைக்க இந்த பருப்பு எப்படி போதும்..சாம்பார் தண்ணியாத்தான் இருக்கும்.புலம்ப ஆரம்பித்தாள்

(துவரம்பருப்பு கிலோ 96 ரூபாயாம்)

எனக்கொரு வேலை கொடுங்க..

சம்பளம் எவ்வளவு வேணும்?

முத நாள் ஒரு பைசா..

ஒரு பைசாவா?

ஆமாம்..ஆனா அடுத்த நாள் ரெண்டு பைசா..அதுக்கு அடுத்த நாள் நாலு பைசா..அப்புறம் எட்டு..பதினாறு..முப்பத்திரண்டு..

சரியென்று ஒத்துக் கொண்ட முதலாளி ஒரு மாசத்தில் போண்டியானார்..

(கணக்கு போட்டு பாருங்களேன்)

Friday, July 17, 2009

மானிட்டர் பக்கங்கள்....17/07/09

”சாமி எனக்கொரு உண்மை தெரிஞ்ச்சாகனும்...

அகண்ட வெளியில் எங்கோ
ஒலிக்கும் ஒற்றை புல்லாங்குழலின் ஓசை..
இதயத்தை அறுக்கிறது....
காற்று திடிரென்று நின்று ....
கனவொன்று களவு போனது..
நிமிஷத்தின் நிழல்..
நிராயுதபாணியின் மீது யுத்தம் தொடுக்க.
நிர்கதியாய்..உணர்கிறேன்...
மூழ்கிய நிலையிலும்
மூச்சு விடுவது சாத்தியமா?
சந்தேகம் தீராத...

டேய்..டேய்..நீ முதல்ல நிறுத்து..யாராவது அவன் கிட்ட இருந்து பேனாவை பறிங்கப்பா....என்னாச்சு உனக்கு?மானங்கெட்ட மானிட்டரை வுட்டுத் தொலைன்னா..கேக்கறியா?ஏன்யா..உலகத்தை பத்தி நல்லதா நாலு வார்த்தை எழுதுன்னா....இப்படியா?பரந்து விரிந்த உலகம்..பல்வேறு நாடுகள்..பலதரப்பட்ட மொழிகள்...நிறைய நீரும்,மீதி நிலமும் நாலாம் வகுப்பு படிக்கிற பையனுக்கு ஒரு கட்டுரை எழுத சொன்னா,நீ கெட்ட வார்த்தைல திட்டிகிட்டு இருக்கியே..போ..போ..இடத்தை காலி பண்ணு..இரு.இரு..இந்த காலி பாட்டிலையையும்,பீடி கட்டையும் எடுத்து கிட்டு நடை கட்டுறா சாமி..


சத்தியா மடத்தில் சில ஆண்டிகள்:


சாமிகளா..இந்த ராஜகுரு செய்யறது சரியில்ல.

என்னாச்சு?இன்னைக்கு என்ன பிரச்சனை?ஒரு காவி ..இடுப்புல கட்னது மட்டும்தான் இருக்கு..கிழிக்காம சொல்லு..

அங்க காசி மடத்துல ராஜகுரு ஆளுகளுக்கு ஏழு கோயில் வாசல்ல உக்கார இடம் கொடுத்தோம்..கலந்து கட்டி அடிக்கிறாங்க..ஆனா இங்க நமக்கு..நமக்கு ஒரு மூணோ,அஞ்சோ ஒதுக்கி கொடுத்தா என்ன?கொஞ்சம் பட்டை சோறு..ஏதோ கொஞ்சம் சில்லறை தேத்தலாமில்ல..

அதை பத்திதான் பேசகூடாதுன்னு மங்கம்மா சொல்லுதே?

மங்கம்மா அப்படித்தான் சொல்லும்..நாமதான்யா அடிச்சு புடிச்சு இடம் கேக்கணும்....முச்சூடும் அவங்களே வழிச்சு கொட்டிகிறாங்க..பக்கத்துல போனா ”கையை”உதறி பருக்கையை பொறுக்கிட்டு போங்கிறாங்க.....சங்கம் கூடுறப்ப நாம ஒரு தீர்மானம் கொண்டு வருவோம்....நாச்சியார் மடத்துக்கு ஆதரவை மாத்தி விட்ருவோம்னு மிரட்டி பார்ப்போம்..

எலேய் ..சும்ம இரும்..மங்கம்மாவுக்கும்,நாச்சியாருக்கும் ஆகாது.....தெரியுமில்ல....அப்படியே கொடுத்தாலும் அஞ்சு பொட்டலம் கொடுப்பாங்க..நம்ம அதை பிரிக்கறதுக்குள்ள அம்பது எழவு விழும்.....

யாரப்பா..இங்க பிச்சை? என்றொரு குரல் கேட்கிறது..

ஆளாலுக்கு நாந்தான் என்றபடி கலைகின்றனர்...

அறிவு மடத்தில் ராஜகுரு...காசி மடத்துக்காரனுங்க ஓசில எதை கொடுத்தாலும் போதும்பாங்க...சோத்தை மட்டும் போடுங்க..தப்பி தவறி”எப்படி” பொங்க வைக்கிறதுன்னு கத்து கொடுக்கவே கூட்டாது..ருசி கண்டுட்டா..அம்புடுதான்...விருதாசலம் சாமியார்,தைலாபுரம் ஆதினம் இவங்க கூட கூட்டு சேர்ந்து நம்ம அடி மடியில ”கை”வச்சுடுவாங்க..பாத்து சூதானமா நடந்துக்கணும்..


மணிரத்னமிடம் 32 கேள்விகள் என்றதும் கொலை வெறியோடு பார்த்தார்..சரி வந்தது வந்துட்டீங்க..சில கேள்விகள் மட்டும் என்றார்..அது..

உங்க பெயர் சொல்லுங்க.. உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

நா பொறந்தது சினிமா தியேட்டரில்தான் முதல்ல ம...ன்னுதான் வச்சாங்க...அப்புறம் இண்டர்வல்லுக்கு பிறகு ணி..சேத்தாங்க.. ஆனா இந்த பேர் எனக்கு பிடிக்கலை..

ஏன் சார்?

ரொம்ப நீளமா இருக்கு...

கடைசியாக அழுதது எப்பொழுது?

ராவணா சீதாவை கிட்நாட் பண்ணிட்டு போனப்ப அழுதேன்..

உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

எனக்கு ஆய்தஎழுத்துதான் பிடிக்கும்..

பிடித்த மதிய உணவு என்ன?

பசிக்கலை..

சார் சாப்பிடுறீஙகளான்னு கேக்கல.....பிடிச்ச உணவு என்னன்னு கேட்டேன்...

தச்சி மம்மு...

கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

மாட்டேன்..ப..யம்.....

உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

நா அவங்க கிட்ட மொத்தமே நாலு வார்த்தைதான் பேசியிருக்கேன்..

என்ன சார் அது?

ம்...சரி..

சார்..ரெண்டு வார்த்தைதான் இருக்கு...

அதை யேதான் ரெண்டு வாட்டி...

கடைசியாகப் பார்த்த படம்?

சம்பூர்ணராமாயணம்......

இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?

வால்மீகி ராமாயணம்....

வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

தளபதிக்காக அஸ்தினாபுரம்,அங்க நாட்டுக்கெல்லாம் போனேன்.இப்ப ராவணாவுக்கு அயோத்தி...

என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

பேசாதே...வாயுள்ள ஊமை நீ.....

Thursday, July 16, 2009

ஆண்டுகள் ஐந்து கடந்தது.....மடிந்த மழலைகள்...?


மாலை பள்ளி முடிந்து திரும்பும் பிள்ளைக்கு
தின்ன வாங்கி வைத்திருந்த

தின்பண்டம் எறும்பு மொய்த்திருந்தது....

மதிய உணவுக்கு வைத்த உலை அரிசி
வாரிசுக்கு வாய்க்கரிசி என்பதை
உணராமல்
புளியை ஊற வைத்த அன்னையர்கள்..


பிறந்த நாளுக்கு புத்தாடை வாங்க
மாலை போகலாம் என்று அப்பன் சொன்னதையே
பலரிடமும்
பீற்றிக் கொண்டிருந்த விஜயா புள்ள..


என்ன வரம் வாங்கி வந்தனர் இவர்கள்.
ஏன் இந்த சாக்காடு..

எந்த அலட்சியம் இத்தனை
பச்சை குருத்துக்களை..
பொசுக்கியது..
சின்ன,சின்ன கனவுகள்.... மெளனமாய் கருகியது.....

அத்தனை துயரிலும் தோள் கொடுத்து தாங்கிய
அன்றைய தஞ்சை மாவட்ட
ஆட்சித் தலைவர் ராதாகிருஷ்னனும்
அவர் தம் துணைவியாரும்

இன்றும் அந்த எளியோர் நினைவிலிருக்கிறார்கள்..



சித்தம் கலங்கி சோக சிறையிலிருக்கும்
பிள்ளையை பெற்றவர்களுக்கும்
மகாமக மண்ணில் எரிந்த
மழலை தெய்வங்களுக்கும்
கண்ணிர் அஞ்சலிகள்.........



Wednesday, July 15, 2009

உணர்வுகள் தொட்டு உறவாகும்...



காஞ்சிபுரத்தில் புகழ் பெற்ற பட்டு சேலை தயாரிப்பாளர்கள்”பச்சையப்பா சில்க்ஸ்”
80 ஆண்டுகளுக்கும் மேல் கொடி கட்டி பறப்பவர்கள்..தங்கள் பாரம்பரியத்தை சொல்லும்
வண்ணம் ஒரு விளம்பர படம் எடுக்க வேண்டும் என்று அழைத்தார்கள்.அந்த படத்தை நண்பர்கள்
நீங்களும் பார்த்து கருத்து சொன்னால் மகிழ்வாக இருக்கும்..




போங்கடா..போங்க..

ஹி..ஹி...நாந்தான்..ஆட்டோ வந்தா அடையாளம் தெரிய கூடாது இல்ல...




ஜனவரி 30
பிப்ரவரி 24
மார்ச் 1
ஜுன் 3
ஆகஸ்ட் 25

இதெல்லாம் தமிழ் நாட்டில் சில முக்கியமான நாட்கள்.என்ன அது என்று பிறகு பார்க்கலாம்.நாம் ஒரு நாளில் எத்தனை முறை நம் கண்ணாடியில் முகத்தை பார்த்துக் கொள்கிறோம்?சராசரியாக ஒரு பத்து முறை??கூட குறைய இருக்கலாம்.

வீட்டில் ,வெளியில்.. எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ,நம் முகத்தை பார்த்துக் கொள்ள நாம் தவறுவதில்லை.
சில சமயம் அருகில் ஒரு கண்ணாடி தெரியும்..அதில் நம் முகத்தை பார்க்கும் அந்த இடத்தை அடைவதற்க்குள் நமக்கும் அதற்க்கும் விகிதம் மாறி போய் நம் முகம் அதில் தெரியாமல் போகும் போது ஒரு சின்ன ஏமாற்றம் நமக்குள் எழும்.அனேகமாக நம்மில் பலரும் இதை அனுபவித்திருப்போம்.

ஒரு கண்ணாடி மட்டுமே இருக்கும் அறையில் தனித்திருக்க நேரிடும் ஒருவன் செய்யும் முக பாவங்கள்...நம் முன்னோரை நினைவூட்டுவதாகவே இருக்கும்.காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது போல் நாம் இவ்வளவு அழகா??என்று தன்னை தானே வியந்து...சட்டென்று அன்னியர் யாராவது அவனை பார்த்து விட்டால் அவன் முகத்தில் தெரியும் நவரசம்......(அசடு)

நம் முகத்தை வேரொரு இடத்தில் பார்க்க நேரும் போது..(புகைப்படம்,பத்திரிக்கை,.....)நமக்குள் ஒரு இனம் புரியாத ஒரு உணர்வு..வரும்..ஒரு சின்ன (அல்ப)சந்தோஷம்...சார் உங்களுக்கு போட்டோ ஜெனிக் ஃபேஸ் என்று யாராவது சொல்லும்போது ஒரு வித கர்வம் தவிர்க்க முடியாததாகிறது.

சரி... ஜனவரி 30 அழகிரி
பிப்ரவரி 24 ஜெயலலிதா
மார்ச் 1 ஸ்டாலின்
ஜுன் 3 கருணா நிதி
ஆகஸ்ட் 25 விஜயகாந்த்

இதெல்லாம் தமிழகத்தின் முக்கிய தலைவர்களின் பிறந்த நாட்கள்.ஒரு படத்தில் கவுண்டமணி சொல்வது போல் என்னவோ இவனுக மட்டும்தான் உலகத்தில பொறந்த மாதிரியும் நம்மளை எல்லாம் செஞ்சா மாதிரியும் இல்ல இருக்கு
இந்த கண்றாவி நாளுங்க வர்ரதுக்கு ஒரு மாசம் முன்னடியே ஆரம்பிச்சிடும் எல்லா கூத்தும்...
உயிரே....உணர்வே....இதயமே...உதயமே
வாழும் வரலாறே ...நிகழ் கால பூகோளமே.....
தங்க சரித்திரமே.....எங்கள் தரித்திரமே...

இதில் பெரிய கொடுமை....வயசு வித்தியாசமில்லாமல் ஒரு வசனம்...."வாழ்த்த வயதில்லை....வணங்குகிறோம்.."எனன எழவுடா இது..

இதில் கூ ட புலி,சிங்கம்,தேர்,படை எல்லாம் ...அதிலும் கீழே போஸ்டர் அடிச்சவன் பண்ற அலப்பறைய பார்க்கனுமே...செல் போன் இல்லாம எவனும் போஸ் கொடுக்க மாட்டான்....

சரி போய் தொலையுது.... சொல்லி வச்சா மாதிரி எல்லாரும் "இலங்கை தமிழர் பிரச்சனைக்காக இந்த வருடம் என் பிறந்த நாளை கொண்டாட வேண்டாம்" இப்படி ஒரு அறிக்கை வேற....அப்பத்தான் இன்னும் தூள் பறக்கும்...நாத்திகம் பேசறது ஊருக்குத்தான்....சில பேர்...அடுத்தவன் நெத்தியிலே இருந்தா அது ரத்தம்..ஆனா இவங்க வீட்டு பொம்பளைங்கள பாருங்க ஒவ்வொருத்தியும் ஒரு ரூபா காசு அளவு பொட்டு வச்சிகிட்டு தெய்வீகமா...அபிஷேகம் என்ன..ஆராதனை...தங்கத் தேர்...கொடுத்து வச்சவனுங்க.....

பேரை எல்லாம் பாருங்களேன்...
அந்தம்மா வந்தா கரண்(சி )பாஸ்/சுதா/தின
தலைவர் வந்தா ஊருக்கே தெரியுமே ....நிதி
ஆனா நம்ம விதி.....
காமெடி த்திரை
சிரிப்பொலி
ஆதித்யா
என்னவோ எழுத ஆரம்பிச்சேன்....எங்கையோ போயிடுச்சு......
தலைவர் வாழ்க...தலைவி வாழ்க....தமிழரெல்லாம் ஒழிக......

Tuesday, July 14, 2009

நாட்டிலொரு நாடகம் நடக்குதுங்க.....

பெங்களுரு பெரியவர்
இடையூரப்பாவிற்கு
தமிழ் தாத்தா வீட்டில்
இலைபோட்டு விருந்து..
சிலை திறப்பது பற்றி..
சில மணித் துளிகள் பேச்சு..
கூடவே கொஞ்சம் கோள் மூட்டல்..
துரைக்கு இருக்கும்
தொழில் தொடர்புகள் பற்றி..

தாத்தாவுக்கு அதிர்ச்சி....
தனக்கு தெரியாமல் இத்தனையா என்று..
துணை முதல்வரிடம் ஆலோசனை..
துரைக்கு கட்டம் கட்ட..
இத்தனை ஆண்டு ஆட்சியில்
இவ்வளவு தைரியமாய் தூக்கியதில்லை யாரையும்..
எவ்வளவு பெரிய காரியம் துரை செய்திருந்தால்
இந்த முடிவை முக எடுத்திருப்பார்..

என்னவோ போகட்டும்...

ஆடு தாண்டும் ஓடையாய்
ஆரம்பிக்கும் அன்னை ..
அகண்ட காவிரியாய் விஸ்வரூபம் எடுக்கிறாள்..
அங்கங்கு கன்னடர் கைப்பட்டு விட்ட
காரணத்தினாலோ என்னவோ..
தமிழ் மண்ணுக்கு வருகையில்
கூனி குறுகி விடுகிறாள்..
அதை பற்றி பெரியவர்கள்
ஏதும் பேசினார்களா? தெரியவில்லை...
சிலை வேண்டுமென
வள்ளுவனா கேட்டான்....
தண்ணிரை தவிர்க்க...இப்படியொரு நாடகம்....
சொல்லியா தரவேண்டும்..நம்மூர் ராஜாவுக்கு..
கடை மடை விவசாயிகள்
கண்ணீர் சிந்த வேண்டாம்..
விவசாயத்தை விட்டு விடுங்கள்..
தெருத்தெருவாக திருக்குறள்
புத்தகம் விற்று பிழைப்பு நடத்துங்கள்

ஏற்கனவே அரைச்ச மாவுதான்..திரும்பவும்....






சாருக்கு நாலு குஷ்பு பார்சல்..சப்ளையர் சொன்னதும் எனக்கு விபரீத ஆசைகள் வந்தது.நிஜமாவே நாலு..இல்லை ஒரு குஷ்பு வந்தா போதுமே..சின்னதம்பி ல தொடங்கி எத்தனை வாட்டி கனவுலே வந்திருப்பா.நிறைய முறை நேரிலும் பாத்திருக்கேன்..அடடா..என்ன அழகு..என்று சொல்ல முடியா விட்டாலும் ஒரு வித வித்தியாசமான கவர்ச்சி..சே...பார்சல் வந்து விட்டது.நான் கேட்டேன்"இதுக்கு குஷ்பு இட்லினு ஏன் பேர் வந்துச்சு..சர்வர் சொன்னார்..எப்படினு தெரியாது.ஆனா என்ன பொருத்தமான பேர் பாருங்க..குஷ்பு மாதிரியே கொழு..கொழுனு நல்லா பூசினாப்பல,அழகா உப்பலா.. குஷ்புவை பார்த்தா கன்னத்தை தொட்டு செல்லமா கிள்ள தோணும்..குஷ்பு இட்லியை..கிள்ளி வாயில போட்டுக்க சொல்லும்..இந்தாங்க சார் பார்சல்.என்னமோ குஷ்புவையே எனக்கு தாரை வார்த்து கொடுக்கிற மாதிரி பீலிங்க் ஆயிட்டாரு சர்வர்

தமிழனின் தேசிய உணவான இட்லி (இறையாண்மைக்கு எதிரா எதுவும் இல்லையே) சுமார் 800 ஆண்டுகள் பாரம்பரியம் மிகுந்தது.அந்த காலத்தில் "இட்டு அவி" என்ற பெயரில் இருந்த ஒரு வித சிற்றுண்டி தான் காலப் போக்கில் மருவி இட்லி ஆகி விட்டது.நீராவியை கண்ட ஒருவன் அதை வைத்து நீராவி இன்ஜீனை கண்டு பிடித்தான்(ஜேம்ஸ் ஸ்டிவன்சன்)நம்மாளு?? வட்டமா நிலா மாதிரி சுவையா கண்டு பிடிச்சதுதான் இட்லி.இன்று சென்னை மயிலாப்பூரிலிருந்து தினமும் சூடா இட்லி சிங்கப்பூர்,மலேஸீயானு பறக்குது.அது மட்டுமல்ல உலகம் முழுக்க இட்லிக்கு ரசிகர் பட்டாளமும் இருப்பதாக சொல்கிறார்கள்.

எங்கள் தஞ்சாவூரில் நைட்டு கடையில் இட்லிக்கு ஆறு வித சட்னி கொடுப்பார்கள்.மல்லி,மிளகாய்.பூண்டு,வெங்காயம்,தக்காளி,தேங்காய் என போட்டு தாக்கும் போது சும்மா ஒரு டஜன் சர்வ சாதாரணமா இறங்கும்.மதுரை முருகன் இட்லி கடை,கோவை அன்னபூர்னா கௌரிஷங்கர்,ஈரோடு குப்பண்ணா மெஸ்,சென்னை திருவல்லைகேணி ரத்னா கேப் ,பெங்களுரு M.T.R என இட்லிக்கு புகழ் பெற்ற இடங்கள் உண்டு.

முன்பு ஆட்டு கல்லில் தான் மாவாட்டுவார்கள்.அதுவும் அப்ப எல்லாம் கூட்டு குடும்பமாக இருப்பார்கள்.ஒரு 10,15 தலையாவது தேறும்(இப்ப நாள் கிழமைன்னா கூட அண்ணன் தம்பி எல்லாம் sms லதான் வாழ்த்து??) படிக் கணக்கில் அரிசியை ஊற வச்சு ஒருவர் தள்ளி விட்டு கொண்டேயிருப்பார்கள்.ஒருவர் குழவியை சுற்றி கொண்டே இருப்பார்கள்.இது சுவை மட்டும் இல்லை.ஒரு சிறந்த உடற்பயீற்சியாகவும் இருந்தது.திடகாத்திரமாக இருந்தார்கள்.ஆனா இப்ப??
ஆட்டு கல் போய் கிரைண்டர் வந்தது.இப்ப அதுவும் போச்சு.."என்னங்க வரும்போது ஒரு மாவு பாக்கெட்"வாங்கிட்டு வந்திடுங்க..இந்த வார்த்தை புழங்காத வீடே இல்லைனு அடிச்சு சொல்லலாம்...வீட்டுக்கு வீடு குடிசை தொழிலாகவே இது ஆயிடுச்சு.

டிப்ஸ்

இட்லிக்கு மாவரைக்கும் போது நல்ல வழுக்கை இளனிரை போட்டு அரைத்தால் இட்லி மிகவும் மிருதுவாகவும்,சுவையாகவும் இருக்கும்.அரிசி ஊர வைக்கும் போது கொஞ்சம் அவல் சேர்த்தாலும் மிருதுவாக இருக்கும்(ஈரோடு குப்பண்ணா மெஸ் தகவல்)

அருமையான,சுவையான உடலுக்கு தீங்கு செய்யாத இட்டு அவித்த இட்லியை என் கணக்கில் சுவையாக சாப்பிட இங்கு வாருங்கள்.

Saturday, July 11, 2009

அர்த்தமில்லாத கதைகள்....1 (11/07/09)

அர்த்தமில்லாத கதைகள்....1 (11/07/09)


அப்பா.....

என்னடா மகனே..

நா வேணும்னா அத்தை வீட்டுக்கு போயிட்டு வரட்டா?

போய்..?

கேட்டுப் பார்க்கிறேன்...

தாராளாமா கேக்கலாம்..உனக்கு உரிமை இருக்கு..

மதிப்பாங்களா..?

அதை சொல்லமுடியாது..ஆனா உனக்குன்னு நிச்சயம் பண்ணதுதானே..அப்புறம் நீங்க கேக்கலைன்னு சொல்ல கூடாது பாரு..போயிட்டு வா...பஸ்சுக்கு காசு இருக்கா..?

ம்ம்..நா போயிட்டு வர்ரேன்..

அத்தை வீடு பட்டணத்தில் இருக்கிறது..பெரிய கதவு வச்சு மாளிகை மாதிரி..

வாசல் காவல்காரன்...தம்பி எங்க இப்படி?

அத்தையை பார்ககணும்..

வரச் சொன்னாங்களா.?

இல்லை..ஆனா ஒண்ணும் சொல்ல மாட்டாங்க..

என் பொழைப்பை கெடுத்திடாதீங்க தம்பி..நா உள்ளே போய் கேட்டு கிட்டு வர்ரேன்..

இந்த வீட்டுலதான் எப்படி விளையாடியிருக்கோம்..இப்ப..எல்லாம் விதி..

காவல்காரன் ..தம்பி அத்தை பூஜைல இருக்காங்க..இப்ப பார்க்க முடியாதாம்..

நா வந்திருக்கேன் சொல்லலையா..

சொன்னேன்..

அத்தை என்ன சொன்னாங்க..

அவன் கிடக்கான் சொத்தைன்னாங்க....

அழுகை முட்டிக்கொண்டு வந்தது...செல் அடிக்க ..அப்பாதான்..

என்ன தம்பி ஆச்சு?

பேச்சு வரவில்லை..அழுகைதான் வந்தது..பின்ன இலவு காத்த கிளி கதையா போச்சே..

அப்பா..பெரியப்பா வீடு பக்கத்திலதான்..ஒரு எட்டு பாத்துட்டு வரவா?

அவர் உங்க அத்தைக்கு மேல ராங்கி பிடிச்சவர்டா..வேணாம்..நா அப்புறமா அவர் கிட்ட பேசறென்..

இல்லப்பா..முயற்சி பண்ணி பார்க்கலாம்..

அத்தை வீட்டுலேர்ந்து கூப்பிடு தூரம் தான் பெரியப்பா வீடு..ஆனால் அவர்களுக்குள் பேச்சு வார்த்தை இல்லை...சொத்து தகராறு..

வாடா அன்பு மகனே..பெரியப்பா வரவேற்பில் நக்கல் இருந்தது...அவர் அப்படித்தான் ..யாராயிருந்தாலும் கிண்டல்தான்..டில்லி பெரிய அத்தை மட்டும்தான் அவருக்கு இப்ப உசத்தி..

நல்ல இருக்கீங்களா பெரியப்பா..?

நீங்க இந்த பக்கம் வர்ரதில்லை இல்ல..நல்லாதான் இருக்கேன்..ஆமாம் காபி,கீபி சாப்புடுறியா??ஆமாம் அத்தையை பார்த்துட்டு வந்திருப்பே..அங்க விருந்தே ஆயிருக்கும்..உங்கப்பன் எப்படியிருக்கான்..வீட்டுல அடுப்புலாம் எரியுதா??

உங்களை அப்பா பார்த்துட்டு வர சொன்னார்..

எதுக்கு என் முதுகு எப்படியிருக்கு..குத்த இன்னும் இடம் இருக்கான்னா?
பெரியவன் வர்ர நேரம் பொழைச்சு போயிடு..

தெருவில் இறங்கி நடந்தான்..போன் அடித்தது..

மகனே என்னாச்சுடா?பெரியப்பா என்ன சொன்னார்?

அப்பா..குரல் கம்மியது..ஏம்பா நமக்கு இப்படி நடக்குது...


அது வேற ஒண்ணுமில்லடா தம்பி..இப்ப நம்ம சாதி சனத்து கிட்டயே நமக்கு
மதிப்பு போயிடுச்சு..அதான்.. நீ பஸ்சை பிடிச்சு வீடு வந்து சேர்..

பஸ் வந்தது..ஏறி சீட்டில் அமர்ந்து கொண்டான்..கண்டக்டர் வர “திண்டிவனம்” ஒண்ணு கொடுங்க..

Friday, July 10, 2009

ஆ”நொ”ந்த விகடன்......ஒரு விமர்சனம்....(காரமான)

விகடன்...நூற்றாண்டை நெருங்கும் பாரம்பரியமான பத்திரிக்கை நிறுவனம்...இதன் ஒரு கிளையான ஜீனியர்விகடன் “தமிழ் மக்களின் நாடிதுடிப்பு”என்று விளம்பரபடுத்துகிறார்கள்...ஆனால் உண்மையில் ......

ஒரு தவறான திரைப்பட விமர்சனத்திற்காக வருந்தி “சினிமா விமர்சனம்’பகுதியையே சில காலம் மூடி வைத்திருந்தார்கள்..பின் ஷங்கரின் பாய்ஸ் படம் குப்பையென்று “சீ” என்று முதல் பக்கத்தில் விமர்சனம் செய்தார்கள்..
ஆனால் அந்த தகுதி விகடனுக்கு இருக்கிறதா? என்றால்...பெரிய கேள்விகுறிதான் மிஞ்சுகிறது...

ஆனந்தவிகடனைக் கூட விட்டுவிடலாம்...தூக்கி எறிந்து விடலாம்..இப்பல்லாம் விகடன் வரவில்லையென்றால் கூட மனசு படிக்க அலைவதில்லை(முன்பு தேடி போய் வாங்கி வரத் தூண்டும்)அப்படியே படித்தாலும் முழுவதும் (அட்டை டூ அட்டை சொத்தை) படிக்க முடிவதில்லை..அலுத்துப் போன செய்திகள்..சுவாரசியமே இல்லாத நடை...சினிமா பேட்டிகள் இன்னும் சுத்தம்(உதா”ரணம்”)இந்த வாரம் வேட்டைக்காரன் பட தகவல்கள்)..முடிவில் ட்விஸ்ட் இருக்கும் ஒரு பக்க கதைகள்,பரிகாரம்போல் கொஞ்சம் ஆன்மீகம்....

இன் பாக்ஸ் என்ற பெயரில் ஏற்கனவே வாசகர்களுக்கு இணையம் மூலம் தெரிந்த செய்திகள்(கமெண்ட் என்ற பெயரில் கழுத்தறுப்பு)..கொஞ்சம் அரசியல்(அதிலும் கருணாநிதியை தாக்குவதிலும்,ஆதரிப்பதிலும் இவர்களின் ஊசலாட்டம் பட்டவர்த்தனமாய் வெளிப்படுகிறது..சரி பத்திரிக்கைதான் இப்படி என்றால் தொலைகாட்சி தொடர்கள்....கேவலத்தின் உச்சம்.....

சினிமாவை சீரழித்தவர்கள் மார்க்கெட்(டு) போனதும் சீரியல் என்ற சீரழிவை ஆரம்பித்தார்கள்.. சென்சார் ஒன்று சின்னத்திரைக்கு இல்லாததால் சீரழிவு தொடங்கியது..ஏவிம் வியாபர நிறுவனம்,,அது வும் தயாரிப்பில் இறங்கியது..நம்பிக்கை,நிம்மதி என்று பாசிட்டிவாக தலைப்பு இருக்கும்..கதை..அதே குடி கெடுக்கும் கதைதான்...அந்த சேற்றில்தான் விகடனும் விழுந்தது...முதலில் ஓரளவு தரமான (ஆனந்த பவனம்)கதைகளை கொடுத்தவர்கள் பின் ரேட்டிங் மாயையில் சிக்கி ”கல்சுரல் அசாசினேஷனை ”ஆரம்பித்தனர்...நான்கு வருடங்களுக்கும் மேல் வரும் “கோலங்கள்’ என்ற தொடரை ஒரு அரை மணி பார்த்தால்”முழுக்க,முழுக்க விபசாரம்’ செய்வதையே தொழிலாக கொண்ட ஒரு குடும்பத்துடன் நம் பொழுது கழிந்த உணர்வே உண்டாகிறது.. அம்மா,மகன்.அப்பா,மகள் இவர்களைத் தவிர யாரும்,யாருடனும் புணரலாம் என்கிறது அந்த கதை..

அந்த வரிசையில் இப்போது திருமதி செல்வம் என்ற இன்னொரு குப்பை...உணவுடன் சிறிது சிறிதாக மலத்தை சேர்த்து உண்டு வந்தால் கொஞ்ச நாளில் மலமே உணவாகி விடும்..அது இல்லாமல் உணவு சுவையாயில்லை என்றே தோன்றும்..டிவி சிரியல்களும் அப்படித்தான் ஆகிவிட்டது...

சராசரி இரத்த அழுத்த விகிதம் 80/120...இன்றைய வாழ்க்கை முறையில் 100/140 ..வரை நார்மல்தான் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்..ஆனால் நீங்கள் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னும்,பின்னும் இரத்த அழுத்தத்தை சோதித்தால் தெரியும்..எந்த அளவிற்கு இவை பாதிப்பை ஏற்பத்துகிறது என்பது..

அண்ணன்,தம்பி,மாமன்,மச்சான்,சம்பந்தி என்று சொந்தங்களுடன் இந்த எபிசோட் கண்ரவிகளை பார்த்தால்,,,தற்செயலாக யாருக்காவது எதாவது பிரச்சனை வந்திருந்தால் கூட..இவன் தான் காரணமாயிருக்குமோ..இவள்தாள் சூன்யம் வச்சுட்டாளோ என்றெல்லாம் கூட உறவுகளை யோசிக்க வைக்கும்

ஜீனியர்விகடனில் வரும் கொலை,கற்பழிப்பு,பாலியல் பலாத்காரங்கள்,கள்ளதொடர்புகள் சம்பந்தப்பட்ட செய்திகளின் முடிவில் ஒரு அறிவுரை இருக்கும்..ஐயோ..இப்படி நடக்கிறதே..இளைய சமுதாயம் சீரழிகிறதே என்ற ஒரு போலி ஓலம் ..உண்மையில் இவை பெருகி போனதுக்கு தொலைகாட்சி தொடர்கள்தான் காரணம் என்று அனைவரும் கூறுகிறார்கள்..
ஆனால் இவர்கள் செய்வது என்ன? தூண்டியும் விடுவார்களாம்,,துப்பறிந்தும் கொடுப்பார்களாம்...எல்லாம் பணம்....நம்பர் 1 ஸ்தானத்திற்கான போட்டியில் ஜெயிக்க வேண்டும்...அது ஒன்றே தான் குறி..இல்லை...வெறி....

இப்ப திரைப்படம் வேறு எடுக்கிறார்கள்...டாஸ்மாக்,பிக்பாக்கெட்,பொறுக்கி...இப்படித்தான் பாத்திர படைப்பே இருக்கிறது...

எதாவது செய்து விட்டு போங்கள்...பத்திரிக்கைகளில் மக்களுக்கு அறிவுரை மட்டும் சொல்லாதீர்கள்..ஆனால் ஒன்று..விபச்சாரம் இதை விட நிச்சயம் இழிவான தொழிலில்லை...

Wednesday, July 8, 2009

ராங்கி ராமதாசு..உங்க ரவுசு என்னாச்சு....


பின்னுட்டமே வராத இடுகை போல் வெறிச்சோடி கிடக்கிறது தைலாபுர தோட்டம்....ராமதாஸ் வாசலில் ஈசிசேரில் தமிழோசை படித்துக்கொண்டிருக்கிறார்..அவர் பேரன்கள் ஒருவருக்கொருவர் காலை வாரி “அட்டாக்” சொல்லி விளையாடி கொண்டிருக்கிறார்கள்..காடுவெட்டி குருவும்,கோ.க மணியும் வருகிரார்கள்..

என்னய்யா எங்க வந்திங்க..

சின்னய்யா கூட்டிகிட்டு பம்பு செட்டுக்கு குளிக்க போலாம்னு..

அவர் பின்னாடி உக்கார்ந்து அழுதுகிட்டு இருக்கார்..

ஏன் அய்யா?

நேத்து திருவிழாவுக்கு போனோம்..பலூன் கேட்டான்..வாங்கி தரலை..அப்ப அழ ஆரம்பிச்சவந்தான்....போய் சமாதான படுத்துங்க...

சின்னய்யா..என்ன இது...வாங்க பம்புசெட்டுல குளிச்சுட்டு டெண்ட் கொட்டாயில விஜயகாந்த் படம் பாத்துட்டு வருவோம்..

அன்பு அழுகையை அடக்கி..என் கிட்ட காசு இல்லையே..அய்யா கிட்ட கேட்ட வெய்யராரு ..

அதை விடுங்க..உங்க வீட்டுல ஒரு டிவி இருக்குல்ல..அதை விலை பேசி வச்சிருக்கேன்..காசு தேத்திடலாம்..

அப்படியே அச்சடிச்ச தமிழோசை பேப்பரும் நிறைய இருக்கு,,அதையும் போட்டுட்டா..சரக்குக்கும் தேத்திடலாம்..

ராமதாசு..குரு அன்பை பாத்து கூட்டிகிட்டு போயிட்டு வாங்க..அரசாங்க ஆஸ்பத்திரி வழியா போகாதீங்க.. ஏங்கய்யா.. பழைய ஞாபகத்துல உள்ளே போய் பெட்ல படுத்துகிடுறான்..நா போய் சமாதானபடுத்தி கூட்டிகிட்டு வரவேண்டியதாயிருக்கு..அப்புறம் எனக்கும் பொழுது போகலை..என் பழைய ஆஸ்பத்திரியை ஓட்டல்காரனுக்கு வாடகைக்கு விட்டிருந்தோமில்ல ..அவனை காலி பண்ண சொல்லிடு...நா திரும்பவும் வைத்தியம் பார்க்கப் போறேன்..

பாட்டாளி கிளினிக்....டாக்டரின் மனைவி சோறு கொடுக்க வருகிரார்..

என்னம்மா குழம்பு..?


காய்கறி என்ன விலை விக்குது..வீட்டுலயேயும் வருமானத்தை காணும்..

அப்புறம் என்ன பண்ண?


கொடநாட்லேர்ந்து உங்க தங்கச்சி வந்துச்சு..அங்க தோட்டத்துல காய்ச்சதுன்னு ஏழு வன்னிக்காய் கொடுத்திச்சு..அதை போட்டு குழம்பு வச்சேன்..

அன்புக்கு அடுத்த வருஷம் சுரைக்காய் தாரேன்னுச்சே நிணைப்பூட்டினியா?


ம்ம்ம்..ஆனா அது ஏட்டு சுரைக்காயாம்...இனி கூட்டுக்கு உதவாதுன்னு சொல்லிட்டாங்க..

அடடா..வடையும் போச்சே..இது என்ன சாம்பார்ல உப்பே இல்ல..

இனிமே உப்பு சேர்க்காதீங்க..திமுக வோட திரும்ப கூட்டுக்கு கெஞ்சனும் இல்ல..அதான்..

அதுவும் சரிதான்.. வைத்தியத்துக்குன்னு ஒரு பய வரமாட்டேங்கிறான்..ஓட்டல்காரன் சூன்யம் வச்சுட்டானா? ராமதாசின் மணைவி வெளியில் சென்று பார்க்கிறார்..

என்னங்க இங்க வாங்க..
தமிழ்குடிதாங்கி கால் தாங்கி நடந்து வெளியில் வருகிறார்..

ஓட்டல் பெயர் பலகையை மாத்தினிங்க....இந்த போர்டை கழட்டாம விட்டுட்டீங்க..எவன் வருவான்..

அந்த போர்டில் இருந்த வாசகம்”வியாதியஸ்தர்கள் உள்ளே வரக்கூடாது..

Tuesday, July 7, 2009

மானிட்டர் பக்கங்கள்----------07/07/09

ஒரு மாலை நேரம்..லேசாக பசியெடுக்க என் அலுவலகத்திற்கு பக்கத்தில் இருக்கும் ஒரு ஓட்டலுக்கு போனேன்..சூடாக போண்டா போட்டுக் கொண்டிருந்தார்கள்.ஒரு செட் போண்டா சொல்லி விட்டு ஓட்டல் வெளி கண்ணாடி வழியாக பராக்கு பார்த்துக்கொண்டிருந்தேன்..கண்ணாடிக்கு வெளியே அவன் தென்பட்டான்..மொட்டை அடித்திருந்தான்..கசங்கிய உடை..என்னை பார்த்து சிநேகமாக சிரித்தான்..நான் பதிலுக்கு சிரிக்கவில்லை..சட்டென்று அவன் முகத்தில் ஒரு பாவமாற்றம் ..போண்டா வந்தது..பிய்த்து சுவைத்துக் கொண்டே அனிச்சையாக திரும்பி பார்த்தால்,,அவன் என்னையே அடிப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தான்..அவன் பார்வையில் இருந்த கூர்மை சுரீரென்றது..மீண்டும் சிரித்து ஏதோ சைகை காட்டினான்..பசிக்குது..எதாவது கொடேன் என்பதாக எனக்கு பட்டது..பார்வையை விலக்கி போண்டாவில் கவனம் செலுத்தினேன்..இப்போது வேறு பக்கம் பார்த்தால் மீண்டும் அவன்..இந்த முறை அவன் சிரிப்பில் ஒரு பரிகாசம் இருப்பதாக எனக்கு பட்டது...ஒருத்தன் பசியோடு பார்க்கிறான்..அவனை நீ தவிர்க்கிறாய்..நீ சாப்பிட்டது உனக்கு செரிக்காது என்கிறானோ...சரி..அவனுக்கு எதாவது வாங்கி கொடுக்க முடிவு செய்தேன்..காபியை குடித்து விட்டு பில்லுடன் கல்லாவில இருந்தவனிடம் 100ரூபாயை நீட்டி..அவன் கேக்கறதை கொடுங்க என்று என் வள்ளல் தன்மையை...வெளிகாட்டுவதற்கு முன் ... அவன் ஒரு 50ரூபாய் தாளை அலட்சியமாக நீட்டி “ரெண்டு செட் போண்டா பார்சல் “என்றான்..பாய்ஸ் படத்தில் கிராபிக்ஸீல் துண்டாவது என் மூக்காய் உணர்ந்தேன்..


கொஞ்சம் அரசியல்.....

ஒரு தொழிலதிபர் ஒரு விழாவிற்கு பெரிய இடத்தை அழைக்க நிணைத்தார்..மீடியேட்டர் மூலம் பெரிய இடத்தின் பர்னிச்சர் கடையில் சந்திப்பு நிகழ்ந்தது.. ”இரண்டாவது” அதிகார மையம் போட்ட நிபந்தணைகள்..

1.பத்து லட்சம் ரூபாய் ரொக்கம்...

2.வீட்டிலிருந்து விழா நடக்கும் இடம் வரை போஸ்டர்,தோரணம்(அன்னைக்கும்,மகளுக்கும்) அமர்க்களப்பட வேண்டும்..

3.மினிமம் ஒரு கிலோ கொண்ட வெள்ளியிலான பரிசு தரவேண்டும்..(

4.முக்கியமான நிபந்தணை.....பத்து லட்சம் விவகாரம் எக்காரணம் கொண்டும் “பெரியவருக்கு” தெரியக் கூடாது...

5.போஸ்டர் மற்றும் விளம்பரங்களில் பெரியவர்,இவர்கள் இருவர் படம் மட்டுமே..

அடப்பாவிகளா...(சந்திப்புக்கு ஏற்பாடு செய்த மீடியேட்டருக்கு ரூ25,000/-)

அவர் சொன்னது இது...அப்படி ஒண்ணும் இந்தம்மா வேணாம்..அந்தம்மா கைப்பட்டது எதுவும் விளங்கிடல..விட்டுடலாம்..


நீங்க எளுதறது எதுவும் விளங்கலயே?

இருத்தலிசம் தெரியுமா உனக்கு?

யாருக்குங்க தெவசம்...

நீட்ஷே வாசித்திருக்கிறாயா..?

எனக்கு கோட்சேதான் தெரியும்..காந்தியை சுட்டு கொன்னவரு..

பூர்ஷ்வாக்கள் பற்றியாவது..?

நைட்டு தண்ணி ஊத்தி வச்சா காலைல பழைய சோறுதான்..

ஓஷோ கேள்விபட்டிருக்கிறாயா..?

எங்கங்க எழவு விளுந்திருச்ச்சு...

அதிகாரமாவது..?

அஞ்சலை எப்ப மீன் குழம்பு வச்சாலும் காரமாத்தான் வைக்கும்..

என்ன வேலை பாக்குற நீ..?

கல்லுடைக்குர வேலை..அய்யா நீங்க..

சொல்லுடைத்தல் எமக்குத் தொழில்..

பார்த்துங்க..பல்லை உடைச்சுர போறாங்க...


ஒரு தகவல்.....

இந்த ஜீலை மாதம் வரும் தேதிகளின் கூட்டுத் தொகை அந்தந்த எண்களில் முடிகிறதாம்..உதாரணம்..இன்று தேதி 07/07/2009 ---இதன் கூட்டு தொகை --7
இது போல்தான் இந்த மாதம் 1 முதல் 31 ஆம் தேதி வரை வருகிறது....

Monday, July 6, 2009

செத்து..செத்து..விளையாடலாம் ..வர்ரீங்களா....



செத்து..செத்து..விளையாடலாம் ..வர்ரீங்களா....மறு பதிவு(பிறவி)

இருக்கும் வரை வரப் போவதில்லை..வந்தபின் நாம் இருக்கப் போவதில்லை...மரணம்....நிச்சயம் என்று தெரிந்தாலும் நிணைத்து பார்க்க மனம் விரும்புவதில்லை.அடுத்த நொடியில் கூட சம்பவிக்கலாம்....சதம் கூட அடிக்கலாம்..அதற்குள் வாழ்க்கையை முழுசாய் வாழ்ந்து விட முடியுமா?அடுத்த வீட்டில் நிகழ்ந்தால் செய்தி..நம் வீட்டில் நடந்தால் துக்கம்...


நாம் இறந்த பின்னர் எத்தனை பேர் உண்மையில் அழுவார்..எத்தனை பேர் கூலிக்கு மாரடிப்பார்..காடு வரை பிள்ளை... கடைசி வரை யாரோ.. கவியரசர் நிதர்சனமாய் எழுதி விட்டுத்தான் போயிருக்கிறார்...எல்லோருடைய வாழ்க்கையிலும் யாரோ ஒருவரின் மரணம் எதாவது ஒரு செய்தியை விட்டு விட்டுத்தான் போகிறது..நண்பன்...நெருங்கிய உறவினர்..ஆனாலும் அதையே நாம் நினைத்து கொண்டிருப்பதில்லை..கால ஓட்டத்தில் இறந்த தேதி கூட மறந்து போகிறது....சரி..நாம் இறக்கும் நாள் தெரிந்தால் எப்படியிருக்கும்....

அருப்புக்கோட்டை பேருந்து பணிமனை அருகில் ஒரு கடையில் மட்டன் சுக்கா மிக நன்றாக இருக்கும்.ஒரு முறை சாப்பிட்ட உடன் இதற்காகவே சென்னையிலிருந்து மீண்டும் வர வேண்டும் என்று நினைத்தேனே. அதை சாப்பிட தோன்றுமோ?இறுதி வரை அவளுக்கு அஞ்சல் செய்யப் படாத அந்த கடிதத்தை நேரிலேயே போய் கொடுத்து விட்டு வந்து விட தோன்றுமோ?...சோகத்தில் பெரிது"புத்திர சோகம்"என்பார்களே...பெற்றவர் இருக்க நாம் முன் போனால் அந்த அக்னியின் வீச்சு அடி வயிற்றில் எப்படி இருக்கும்...

நீங்கள் எப்போது இறப்பீர்கள் என்பதை ஒரு வலைத் தளம் சொல்கிறதாம்..அது மட்டுமல்ல..நாம் இறக்கும் போது அல்லது இறந்த பின் சிலருக்கு சில விஷயங்களை சொல்லி விட வேண்டும் என்று நினைத்தால் அதற்கும் அந்த வலைத் தளம் உதவுகிறது.உதாரணமாக சொத்து விவரங்கள்(எனக்கு அடியில் கண்ட சொத்துக்கள்தான் ???)
பிள்ளைகளுக்கான அறிவுரைகள்(ம்ம்ம்..இருக்கும் போதே கிழிஞ்சது..செத்த பின்னாடி கேட்டுட்டுதான் மறு வேலை..)
யாரை நம்புவது,,அம்மாவை யார் பார்த்துக் கொள்வது இதையெல்லாம் அந்த தளத்தில் நீங்கள் பதிவு செய்து வைத்து விடலாமாம்.அந்த தளத்தில் ஒரு அம்சம் நம் ஆயூள் எத்தனை நாள் என்று கணக்கு போட்டு அது சொல்வதுதான்.பெயர்,வயது,பால்(செத்த பின் ஊத்தறது இல்லிங்க..)எடை,உயரம்,மது,புகை உண்டா?என்று கேட்டு பின் குத்து மதிப்பாக ஒரு கணக்கு காட்டுகிறது.(நிமிடம்,நொடி உட்பட)
தளத்தில் பதிவு செய்தவுடன் நம் இமெயில் முகவரிக்கு ஒரு லிங்க் வரும்.அதில் நமக்கு ஒதுக்கபட்ட பக்கத்தில் நம் எண்ணங்களை பதிந்து வைக்கலாம்.நாம் இறந்த பின்னர் அவை வெளியிடப்படும்..அது மட்டுமல்ல ..நமக்கு பிடித்த பாடல்களையும் பதியலாம்(ஆறு மனமே ஆறு/ சட்டி சுட்டதடா/போனால் போகட்டும் போடா/கனவு காணும் வாழ்க்கை யாவும்/வாழ்வே மாயம்..)

சரி..நாம் இறந்தது எப்படி அந்த தளத்திற்கு தெரியும்?நாம் நமக்கு நம்பிக்கையான??நாலு நபர்களின்(நாலு பேருக்கு நன்றி..)தகவல்களை பதிய வேண்டுமாம்.அவர்கள் இன்பார்மர்கள் என்று அழைக்கப் படுவார்கள்.அவர்களுக்கு நம் லிங்கும் பாஸ்வேர்டும் தெரிய வேண்டும்.நாம் இறந்த பின் அவர்கள் தளத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும். 12 வகையான சோதனைகளை மேற்கொண்டு இறப்பு உறுதி செய்ய பட்ட உடன் 18 ம் நாள்(அதாவது கருமாதி முடிந்த பின்னாடி)நம் தகவல்கள் உலகிற்கு காட்டப்படுமாம்.அப்பா ..கண்ணை கட்டிடுச்சுப்பா..(அப்பா உண்மைத் தமிழா..எப்படிதான் வளைச்சு வளைச்சு)


நம்ம எல்லாம் தமிழ் இல்லியா? சாவை பத்தி தெரிய..info@mellogam.out/admin@emaa.in க்கு ஒரு எ(ருமை) மெயில் அனுப்புங்க..இல்ல http://www.farawayfish.com/Main.php?do=Welcome

ஆயூஷ்மான் பவ...... நீடூடி வாழ்க...

பின் குறிப்பு: யாரையாவது திட்டி ஒரு பதிவு கூட போடலாம்..இறப்புக்குப் பின் வெளியிட சொல்லலாம்...கரப்பான் பூச்சி,எலி பாஷாணம் சாப்பிட்டு இறக்க விரும்புபவர்கள் கவனிக்கவும்...