Friday, December 2, 2011

வெம்மை





அம்மா கொளுத்திக்கிச்சு மாமா என்றாள் சுமதி..

திடீரென்றது . என்னடி சொல்ற தங்கம்..விளையாடுறியா ?

இல்ல மாமா .. இப்பதான் ..அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சண்டை..அப்பாவை போட்டு அம்மா அடிச்சிச்சு .. சீமெண்ணெயை ஊத்திக்கிட்டு ...

 12 வயசு பெண் . குரலில் பிசிறில்லாமல் தெளிவாக சொல்கிறாள் .. அம்மாவை பெரியாஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போயிருக்காங்க.. அப்பாவை போலிஸ்காரங்க கூட்டிகிட்டு போயிட்டாங்க..தம்பி தூங்கிட்டு இருக்கான் . எனக்கு என்னமோ ஆயிடுச்சு..பாவாடையெல்லாம்..ஒரே ரத்தம்..


இன்னிக்குத்தான் பிரச்சாரம் கடைசி நாளு.. தலைவர் வந்துட்டு போற வரைக்கும் அங்க இங்க நகரமுடியாது .. அடுத்த வாட்டியும் நம்ம ஆட்சிதான் .. அப்புறம் இருக்கவே இருக்கு உள்ளாட்சித்தேர்தல் .. இந்த ட்ரிப்பு எப்படியும் கவுன்சிலர் சீட்டு நிச்சயம்.. சந்திரனின் செல் அடித்தது .செல்வி ..

முந்தாநாளே கேஸ் தீர்ந்து போச்சு .. கெரசினும் இல்லை.. எப்படி பொங்கி புள்ளைகளுக்கு சோறு போடறது . உனக்கென்ன .. ஓசியில குடிச்சிட்டு பிரியாணியை தின்னுட்டு ஆட்டோவில கத்திகிட்டே சுத்துவ.. நிறுத்தாமல் பேசிக்கொண்டே போனாள் செல்வி ..

ஏய் ...கொஞ்சம் நிப்பாட்டறியா.. புள்ளைகளுக்கு கடையில இட்லி வாங்கி கொடுத்தனுப்புறேன்..அப்படியே கெரசினும் ,மீனும் வரும்.. பொங்கி வை. தலைவர் வந்துட்டு போனதும் வந்துர்றேன் என்றபடி கட் பண்ணினான் சந்திரன் .

விட்டிற்குள் நுழையும்போதே எரிஞ்ச வாசனை அடிக்குது . சுமதி தம்பியை மடியில போட்டு கிட்டு திண்ணையில் இருந்தாள் .. பக்கத்து வீட்டு அம்மா கூட . புள்ளை உக்கார்ந்துட்டா .. துணி மாத்தி உக்கார வச்சிருக்கேன் . என்ன அழுத்தமா இருக்கா பொட்டச்சி.. அம்மாக்காரி உடம்பு பத்தி கிட்டு எரியுது .. அப்பன் அண்டாத்தண்ணியை கொண்டு வந்து ஊத்தினான் .. கழுத்துக்குகீழ முக்காவாசி வெந்திருக்கும் .. அதுக்குள்ள போலிஸ் வந்திருச்சு .. புருஷனை கையை காட்டிட்டா அவ . பக்கத்து ஊட்டுக்காரி சொல்லிக்கொண்டே போனாள்  .

இல்ல மாமா ..அப்பா மேல தப்பு இல்லை .. எங்களுக்கு இட்லியும்  ,புரோட்டாவும் செந்தில் அண்ணன் கிட்ட வாங்கி கொடுத்து விட்டாரு ..கெரசினும் கேன்ல வந்துச்சு .. இன்னிக்கு அவன் வரட்டும் .. ரெண்டுல ஒன்னு பார்த்துட்டுத்தான் அடுப்பை பத்த வைப்பேன்னு அம்மா சொல்லிடுச்சு .. நானும் தம்பியியும் சாப்பிட்டுட்டு டிவியை பார்த்துக்கிட்டிருந்தோம்.. தம்பி தூங்கிட்டான் .. அப்பா வந்துச்சு ..


உனக்கெல்லாம் எதுக்குய்யா பொண்டாட்டி ,புள்ளைங்க..அப்படியே உன்  கட்சி ஆஃபீசிலயே இருந்துக்க வேண்டியதுதானே.. விரால மீன் கவரை விசிறியடித்தாள் செல்வி ..

ந்தாப்பாரு செல்வி.. எலெக்‌ஷன் நேரம் . அப்படித்தான் இருக்கும்.. தலைவரு காலைலேர்ந்து ஒன்னும் சாப்பிடலையாம் .. மீட்டீங்க்ல சொன்னாரு ..அப்படியே அழுதுட்டேன்.. போய் அடுப்பை பத்த வை..நல்லா மாங்கா போட்டு மீன் குழம்பு வை.. நாளைக்கு ஒரு நாள் பொறுத்துக்க ..கேஸ் வந்திரும் என்றான் சந்திரன் ..

முகம் கழுவி கைலி மாற்றி திரும்புவதற்குள் கெரசின் வாசம் சுர்ரென்று மூக்கில் ஏறியது .. தொப்பலாய் இருந்தாள் செல்வி.. இந்தாய்யா .. நீயே பத்த வை .. கொளுத்திட்டு என் மேலயே சோறாக்கிக்கோ என்றவள்..சடாரென்று தீக்குச்சியை உரசி..

முழுக்க வெந்திருச்சு .. உசிர் மட்டும்தான் இருக்கு .. முகம் அப்படியே இருக்கு.. பெரிய கண்ணு செல்விக்கு .. கண்ணாலயே கவுத்துடுவான்னு  ஆச்சி அடிக்கடி சொல்லும் .. கணுக்காலை கூட அடுத்தவன் ..அதுவும் பொம்பளைங்க கூட பார்க்கக்கூடதுன்னு இருப்பா .. தழைய , தழைய சீட்டிப்பாவாடை கட்டி கிட்டு கொலுசு சிணுங்க அவள் ஓடியது ஞாவகம் வருது .. என்னடி கண்ணுன்னு கன்னத்தை தொடப்போனாக்கூட , தட்டி விட்டுட்டு ஓடிருவா தங்கம்.. இன்னிக்கு. கிட்டதட்ட முக்கா அம்மணம்.. கண்கள் மூடியிருந்தது .. 

மெட்ராஸ் கொண்டு போலாமான்னு பார்த்தோம்.. ஆனா பிரயோசமில்லன்னு பெரிய டாக்டர் சொல்லிட்டாரு . போயிரும்னு சொல்றாரு .. புள்ளை வேற பெரியவளாயிட்டா .. அவ ஆத்தாக்காரி மூஞ்சியலயே முழிக்கமாட்டேன்னு சொல்லிட்டா.. புலம்பினாள் செல்வியின் ஆத்தாக்காரி.. எனக்கு அக்காமுறை.. என்ன சொல்றது ..செல்விக்கு ஏதோ தோணியிருக்க வேண்டும்.. ஒரு முறை உடம்பை கூனி குறுக்கிக்கொண்டாள்.. கண்ணை திறந்து என்னைப்பார்த்தாள். ஒரு நொடிதான் ..முகத்தில் ஒரு வேதனை..

என்னண்ணே... இன்னும் கொஞ்சம் பொறுத்து , இந்த சிறுக்கி செத்தப்புறம் வந்திருக்க கூடாதா? என் சுபாவம் தெரிஞ்சு எப்படிண்ணே ?

இதுதான் அவள் மனதில் ஓடியிருக்க வேண்டும்..

Sunday, October 30, 2011

மூன்றாவது பர்த் ...உமா சீரிஸ் -2


பாட்டு கேக்கறீங்களா ? எல்லாம் ராஜா கலெக்‌ஷன்ஸ் என்றான் அவன் . ஐ பாட்டை எடுத்து பா (மா) ட்டிகொண்டேன் . என்னை ரசிக்கிறான் என்று புரிந்தது .. ஆனந்தராகம் என்று பதிமன் வயதுக்குள் காதலை கடந்து விடும் பாடல் ஒலிக்க அவனை பார்த்தேன் .. ரமணாவின் நியாபகம் வந்தது .. கன்னியர் தம் கடைக்கண்ணை காட்டி விட்டால் காளையருக்கு மாமலையும் சிறு கடுகாம் “ என்று காலேஜ் கல்ச்சுரல்சில் ரமணா கம்பீரமாக ஆரம்பித்ததும் , சட்டென ஏதோ ஒன்று உடைந்து அவளுக்குள் இறங்கியதும் .... இவன் பெயர் என்னவாக இருக்கும் ... கொஞ்சம் ரமணா மாதிரியும் இல்லாமல் இருக்கிறான் .. ஆனந்தராகம் சரணத்துக்கு மாறியிருந்தது ..

பாவி உமா ! அவனையா என்றாள் ராஜி ... 

ஏன் ? அவன் என்ன உச்சாணிக்கொம்பா என்றேன் ..கொஞ்சம் கர்வத்துடன்.. என் அழகின் மீது எனக்கு கொஞ்சம் கர்வமிருந்தது .. அருணின் அந்த வர்ணனைக்கு பிறகு .. உயிரை குழைத்து இதை எழுதியிருக்கிறேன் என்ற அருணின் ஆரம்ப வரிகள்.. அதன் பின் ராஜபார்வையில் மாதவியை கமல் வர்ணிப்பதையெல்லாம் தாண்டி ... கடிதத்தை அப்படியே கிழித்து விட்டு கண்ணாடிக்கு ஓடினேன் .. என் தனியறை ..ஆளுயர கண்ணாடி .. அரைமணி நேரம்.. எனக்குள் படர்ந்திருந்த கர்வம் ..கொழுந்து விட்டு எரிய தொடங்கியிருந்தது .. 

“காந்த சிலையழகன் .. கற்கண்டு சொல்லழகன் என்றேன்...ஜன்னி வந்தது போல்.. 

முதல்ல அவனுக்கு உன்னை பிடிச்சிருக்கான்னு பாரு என்றாள் ராஜி ..கொஞ்சம் காந்தல் வாசம் வந்தது .. ஒரு கேள்விக்குறியுடன் அவளை பார்த்தேன் ..

எனக்கும் அவனை பிடிச்சிருக்குடி உமா ..புரொஃபோஸ் பண்ணப்போறேன் என்றாள் .. பண்ணிக்கோ என்றேன் ...நீ என்னை விட ஒரு மாற்று கம்மிதானடி தங்கமே என்பதையும் சேர்த்து.. 

ஓகே...பசங்கதான் பண்ணனுமா என்ன? நாம ரெண்டு பேரும் அவனை புரெஃபோஸ் பண்ணலாம்... அவன் யாரை லவ் பண்றான்னு பார்க்கலாம் என்றேன்..மவளே...உன் மேல மட்டுமில்ல ..அவன் மேலேயும் ஆசிட் ஊத்திடுவேன் என்று மனதுக்குள் கர்விக்கொண்டே..

அதன் பின் நிறைய சந்தர்ப்பங்கள் .. காலேஜில், இண்டர் காலேஜ் கல்ச்சுரல்ஸ் போன இடத்தில் , ஒரு சமயம் கோயிலில் என்று பொங்கி வழிந்திருக்கிறேன் காதலாய்.. ஆமோதிக்கிறானா...நிராகரிக்கிறானா என்றே புரியாத ஒரு மர்ம புன்னகைதான் அவனிடம் .. அன்று லேபிற்குள் ரமணன் போவதை பார்த்து விட்டு ,கொஞ்சம் தயங்கி பின்னால் போகிறேன்.. அவனை காணவில்லை .. கால்கள் நகர மறுக்க ,கண்களால் துழாவுகிறேன் .. ரமணன் வருகிறான் ..அதே மர்ம புன்னகை.. இதழ்களில் ஏதோ விஷமம்.. என்ன செய்கிறேன் என்று தெரியாமல் இரு கைகளை வாரி அணைப்பது போல் அவனை பார்த்து நீட்டுகிறேன்.. கண்களை மூடிக்கொள்கிறேன்.. காற்றில் அவன் என்னை நோக்கி வரும் வாசம் வீசுகிறது.. உதடுகளை ஈரப்படுத்திக்கொள்கிறேன்..

எக்ஸ்யூ மீ உமா ..என்ன கேட்டீங்க...

மெல்ல கண்களை திறக்கிறேன்.. அவன் தான்..ம்ம்.. என்று சுதாரிக்க முயற்சிக்கிறேன்..

என்ன கேட்டீங்க.. ரமணாவைத் தெரியுமா என்றுதானே.. நீங்க கேட்டிருப்பீங்களே... முதல் பாட்டு ..ஆனந்தராகம்... உமா ரமணன்.. பெரிய விசிறி நான் என்கிறான் அவன்... ஏதோ ஸ்டேஷனில் வண்டி நிற்கிறது ..துணி உலர்த்தும் கம்பியில் வரிசையாக நிலம் பார்க்கும் ஈரத்துளிகள் ... யாரோ சட்டென உதறி விட வெறுமையாக இருக்குமே..அதைப்போன்ற ஒரு மனநிலை.. மீண்டும் கண்களைமூடிக்கொள்கிறேன்.

“நீ தானே என் பொன் வசந்தம்” 

பாலுவின் குரல் இழைய ஆரம்பிக்கிறது...



Tuesday, June 28, 2011

மனப்பத்தாயம்... 1





எடுக்கவோ..கோர்க்கவோ..

வேண்டாம்.....இழுத்துகிட்டு ஓடிடு.. # நண்பேண்டா


ராமனை நான் தூக்கி கொண்டு வந்திருந்தால்..

வீணை வாசிக்கவா ..இல்லை விளக்கு பிடிக்கவா மண்டோதரி!!

பின்னால் பாருங்கள் நாதா..ப்ராணனை எடுக்க கூலிப்படை# களவொழுக்கம்



கருவறை வாசம் ..கழிந்த கதை
கை முருக்கு வாசம்... நிகழ் கதை # கனிமொழி ஸ்டேட்டஸ் மெசேஜ்



விறகடுப்பில் பொங்கி
விசிறிக்கொண்டு தூங்கி
கை வீசி காலாற நடக்கிறோம்
இயற்கைக்கு திரும்புதல் # நாட்டு நடப்பு



அஞ்சு பேரில் ,ஒருத்தன் மூலமாக கூடவா குந்திக்கு வாய்க்கவில்லை

சாபமா?/ வித்ட்ராயல் சிஸ்டமா?


உள்ளொன்று வைத்து , புறமொன்று பேசுவோர்
உறவு கலையாமை வேண்டும்....


நின்றுக்கொண்டிருக்கிறது மனசு...
சென்றுக்கொண்டேயிருக்கின்றன கால்கள்.
சமயங்களில் .. நேர் / எதிர்மாறாக..


பாத்திரம் அறிந்து பிச்சை இடாதே
கேரக்டர் தெரிஞ்சு சரக்கு வாங்கி ஊத்து # ஊத்திச்சூடி


காதல் போயின் சாதல்..இல்லை... கல்யாணம்..
முன்னது கொஞ்சம் பெட்டர்தான் # பாண்டிதாசன்


அம்மன் அலங்காரம் பார்க்கும்போதெல்லாம்
ரோஜா மற்றும் ரம்யாவின்
மழை ஆட்டங்கள் சூடேற்றுது
பக்தி மனசிலிருக்குது...

உன்னை எப்போதும் எனக்கு பிடிக்கும் என்று சொல்லமுடியாது. எப்போதுமே பிடிக்காது என்றும் சொல்ல முடியாது . என்னை எப்போதெல்லாம் உனக்கு பிடிக்கிறதோ , அப்போதெல்லாம் உன்னை எனக்கு பிடிக்கிறது



மழையோடு பெய்கிறது.... வெயிலும்...






Friday, June 10, 2011

கண்ணாடி நிழல்..




அலைந்து கொண்டிருக்கின்ற
அவசரகதியில் அங்கமிங்குமாய்
அந்த நிழல்கள்

எனக்கு அருகாமையில் விசித்திர
ஒலியெழுப்பிக்கொண்டேயிருக்கிறது
ஒரு பூதாகர வஸ்து

மிதந்துகொண்டு இருக்கும் நான்
அந்த ஒலியில் மிரள்கிறேன்

செவ்வக பெட்டியின் மீது 
முளைக்கிறது சிறிது வெளிச்சம்
ஆறுதல் வேண்டி
தூவப்படும் உணவு


பொன்மயமாய் ஜொலிக்கும்
என்னுடலை
உடலை வெறித்து பார்த்து
நகர்கிறதுஅந்த நிழல்
அசைவற்று , அமைதியில்
இருப்பதை நான் காணவில்லை
ஒரு நிழலானேனும்...

எதையோ துரத்தி கொண்டே
இருக்கின்றன நிழல்கள்
துரத்தப்பட்டுக்கொண்டும்தான்

சுதந்திரமாக நீந்தியபடி
ரசித்துக்கொண்டே இருக்கிறேன் நான்..
...சுதந்திரமாக நீந்தியபடி

Tuesday, June 7, 2011

உப்பு...




இன்னிக்கு வெள்ளிக்கிழமை..புதுப்படம் ரிலீஸ்..நிறைய கலர் விக்கும்.. அதுவும் டபுள் செவனா நிறைய ஓப்பன் ஆகும். மூணு நாள் ..கொஞ்சம் கூடுதல் கமிஷன் கிடைக்கும். ஸ்டைல்ஃபிக்ஸ் டெய்லரிடம் ரொம்ப நாளாக வாங்காமல் இருக்கும் அந்த பேண்ட்டை வாங்கிடலாம் ..ஆனா அதை விட இன்னொரு சந்தோஷம் .நாளைக்கு காலைக்காட்சிக்கே உமா வந்து விடுவாள்.. வேலாயுதம் அண்ணன் தான் லேடிஸ் கவுண்டரில் இருப்பார் .. கூட யார் வராங்கன்னு தெரியலை . ஆனா உமா நிச்சயம் வருவா . ரபீக் ரெண்டு நாள் லீவு சொல்லிட்டு போயிட்டான் . முதலாளி கிட்ட சொல்லிடனும் ..நாளைக்கு தியேட்டர் உள்ள கிரேடு தூக்க முடியாது . கவுண்டரை பாத்துக்கறேன்னு. கலரை அடுக்கி வச்சு சாவியால பாட்டில் வரிசையில் ட்ட்டூரிரீன்னு.. அப்புறம் ரொம்ப நாளா எழுதி வச்சிருக்கிற அந்த லெட்டரை உமா கிட்ட

புதுப்பட பொட்டிகூட அந்த பாண்டிச்சேரி அண்ணன் தானே வருவாரு..முருகனுக்கு கொஞ்சம் பயமாகவும் இருந்தது.. போன தடவை வந்தப்ப நடந்ததை நினைச்சா..அன்னிக்கு நைட்ஷோ முடிஞ்சுது . புரோட்டாவும் ,கால் கறியும் வாங்கிட்டு வாடா முருகான்னாரு . வாங்கிட்டு வந்தான் . ரெப் அண்ணன் பிராந்தி குடிச்சிகிட்டிருந்தாரு . கொஞ்சம் குடிச்சு பாருடான்னாரு . நாக்குல சுரீர்னு உறைத்தது ..ஆனா கால் கறி அன்னிக்கு இன்னும் டேஸ்டா எப்படியிருந்ததுன்னு நினைச்சா ஆச்சர்யம் தான்

முருகா .. நீ பொம்பளையா பொறந்திருந்தா உன்னையத்தாண்டா கட்டியிருப்பேன்

அண்ணே... முருகனுக்கு வெக்கமாக இருந்தது . வேணும்னா இந்த கண்ணாடியில் உன் முஞ்சியை பாரு ..முருகன் நல்ல சாய்வு வகிடு எடுத்து சீவியிருந்தான் . கருப்புன்னாலும் கொஞ்சம் பளிச்சுனு இருப்பான் . கண்ணாடியில் பார்க்கும்போது அண்ணன் சொல்றது உண்மை மாதிரிதான் இருந்துச்சு

என்னடா ..நான் சொன்னது சரியா ..முகத்தை காதோரம் கொண்டு வந்து கிசுகிசுப்பாக அண்ணன் கேட்டப்படி..கையை கொஞ்சம் இறக்கி..சிலிர்த்தது ..பிடித்தும் இருந்தமாதிரியும் இருந்தது. சென்ட் வாசனையும் ,பிராந்தி நாத்தமும் கலந்து ..கைலியை அவிழ்த்திருந்தார் அண்ணன்..

சோடா குடிச்சு வாயை கொப்பளிக்கனும்டா முருகா.. உனக்கு பிடிச்சுதா?

தெரியலை அண்ணே..ஆனா நல்லாயிருந்தா மாதிரி தோணுது .

நல்ல விடப்பயடா நீயி என்று இறுக்க கட்டியணைத்தார் ரெப் அண்ணன்


முருகன் சொந்த ஊர் தஞ்சை பக்கத்தில் ஒரு கிராமம்.  அப்பன் கூட கோவிச்சுகிட்டு வந்துட்டான் . இந்த தியேட்டரில் அப்போது ரஜினிபடம் ரிலீசாகியிருந்தது . ராத்திரி படம் பார்த்தவன் அப்படியே தூங்கிட்டான் . அங்கு வேலை செய்யும் ரபீக்தான் வந்து எழுப்பி வெளியே போகச்சொன்னான் .

அண்ணே..எங்கப்போறதுன்னு தெரியலைன்னு அழுதுட்டான் முருகன். ஏனோ ரபீக்குக்கு முருகனை பிடித்துவிட்டது . அவனும் வீட்டை விட்டு ஓடியாந்தவந்தான்..அதனால் கூட இருக்கலாம் . சோடாக்கடை நாயுடுவிடம் சொல்லி வேலைக்கு சேர்த்து விட்டான் . முதலில் தட்டு தூக்க சொன்னார் நாயுடு .முறுக்கு , கடலை மிட்டாய் , பாப்கார்ன் பொட்டணம்னு அம்பது ரூபாய்க்கு சரக்கு அடுக்கி கொடுப்பார்கள் . படம் ஆரம்பிக்க பத்து நிமிடம் முன், இடைவேளை பத்து நிமிடம் உள்ளே குரல் கொடுத்தபடி அலைய வேண்டியதுதான் . இவனை மாதிரி 5 பேர் .கலர் விக்கறவன் ஒரு அஞ்சு பேர்.. கடலைமுட்டாய் ,முறுக்குன்னு ஒரு ராகம் இழுக்க வேண்டும் .. முருகனுக்கு ரொம்ப குஷியாக இருந்தது. படம் ஆரம்பிக்கும் முன்பே 30 ரூ வியாபாரம் ஆகிவிட்டது . 10% கமிஷன்னு சொல்லியிருந்தார் நாயுடு . ..இன்னுமிடைவேளை இருக்கு.. அடுத்து மூணு காட்சி இருக்கு ..எப்படியும் 200 ரூபாய்க்கு வித்துடலாம் . சுளையா 20 ரூ.. குஸ்கா இப்போதே நாக்கில் சுரக்க ஆரம்பித்தது அவனுக்கு . நாயுடு தட்டி கொடுத்தார் . 30 ரூபாய் சரக்கை நிரப்பிக்கொண்டான் .படம் போட்டாகி விட்டது தியேட்டர் ஃபுல் . ஓரமாய் நின்று படம் பார்த்துக்கொண்டிருந்தான் ரபீக்

ரொம்ப தாங்க்ஸ் ரபீக் .. ரபீக் அவனை தோளில் தட்டி ,இன்னும் நிறைய இருக்கு ..சொல்லித்தரேன். இடைவேளையில்  லேடீஸ் பக்கம் வா ..என் ஆளை காமிக்கறேன்

ரபீக் உன் ஆளா ? யார் காட்டு

இப்ப பாரு என்ற ரபீக் தொண்டை கிழிய ஒரு விசிலை இழுத்தான் . சட்டென்று கதவு பக்க சீட்டில் இருந்து ஒரு பெண் கையை தட்டினாள்..

அவ தான் என்றான் ரபீக்

முகம் தெரியலையே ரபீ

இடைவேளையில் அவளை பார்த்தான் முருகன் ...அவள் அம்மாவோடு வந்திருந்தாள் . ரபீக் கையில் தட்டோ ,கிரேடோ எதுவும் இல்லை .. சூப்பர்வைசர் மாதிரி இருந்தான்.. முருக இங்கன வா என்று அழைத்தான்..

இவங்களுக்கு கடலை முட்டாயும் ,சோளப்பொறியும் கொடு என்று கிட்டதட்ட உத்தரவிட்டான்  .காசு யார் கொடுப்பா என்று குழப்பமாக இருந்தது முருகனுக்கு . கணக்கு நைட்டுதான் கொடுக்க வேண்டும் ..ரபீக் ஜாடை காட்டினான் . முருகனுக்கு காசு கவலை பறந்து போனது . ரபீக் மாதிரி தனக்கும் ஒரு ஆள் வேண்டும் என்று தோன்றியது..

வெள்ளிக்கிழமை புதுப்படம் ரிலீசாகும் முருகா .. சனி, ஞாயிறு லேடீஸ் கூட்டம் அம்மும் . ஸ்கூல் பிள்ளைங்கல்லாம் வரும் .ஒன்னை பாத்து செலக்ட் பண்ணிக்கோ.. நிறைய பேர் கூட்டத்துல டிக்கெட் வாங்க முடியாம திரும்புவாங்க.. உங்காளுக்கு வேலாயுதம் அண்ணன் கிட்ட சொல்லி டிக்கெட் வாங்கி கொடு.

யார் எங்காளு என்றான் முருகன் ..

அதை நீதான் சொல்லனும். முதல்ல ஆளைப்பாரு. என் கிட்ட காமி ..நான் ஓகே பண்றேன் அப்புறம் கரெக்ட் பண்ணு

வேலாயுதம் அண்ணன் டிக்கெட் தருவாரா?

நான் சொன்னா தருவாரு . 30 டிக்கெட்டை வெளியில சீட்டு போடற கலியன் கொடுத்து பிளாக்ல விக்க சொல்லி தருவாரு. அதுலேர்ந்து ரெண்டு வாங்கிடலாம் ..என்ன கொஞ்சம் அப்பப்ப ஏவுவாரு..அதை வாங்கியா ..இத்த வாங்கியான்னு ..செஞ்சாப்போச்சு

ரபீக் ..நீ அந்தப்பொண்ணைத்தான் கட்டப்போறியா?

தெரியலை என்றபடி ரபீக் போய் விட்டான் . இவனுக்கே ஆள் செட்டாகும்போது நமக்கு ஆகாதா என்று தோன்றியது முருகனுக்கு .. அடுத்த படம் ரிலீஸின் போதுதான் உமா கண்ணில் பட்டாள் ..

முருகனை நாயுடுவுக்கு ரொம்ப பிடித்து போனது .. அப்பப்போ கொஞ்சம் காலை நீவுடா என்பார்..சுணங்காமல் செய்தான் . தீன் பாய் கடையில் போய் 5 ரூபாய்க்கு சைக்கிள் வாங்கிட்டு வா என்பார் .. 

5 ரூபாய்க்கு சைக்கிளா? வாடகை சைக்கிளா அண்ணே என்றான் .போடா..போய் தீன் பாய் கிட்ட கேளுடா மூதேவி என்றார் நாயுடு சிரித்தபடி . அங்கு போகவும்தான் தெரிஞ்சது

சைக்கிளை சீனியில் சேர்க்கனும் தம்பி என்றார் தீன் பாய். சீனி விக்கற விலைக்கு இத்த சேர்த்தாதான் கட்டுபடியாகும் . இதுக்கு சாக்ரீன்னு பேரு .. சைக்கிள்னுதான் சொல்வாங்க..டீக்கடை , ரொட்டிகடை, கலர் கடைன்னு எல்லாரும் இத வாங்கிட்டு போவாங்க..

கலருக்கு கேஸ் பிடிக்கும் வேலையையும் கத்து கொடுத்தார் நாயுடு . கீழவாசல் போய் சிலிண்டர் எடுத்து வர்றது , நாட்டன் எசன்ஸ் வாங்கியாறதுன்னு முருகனுக்கு சகலமும் அத்துபடியானது . ஆனால் நாயுடுவுக்கு திடீர்னு வர்ற கோவத்தை பாத்தாதான் கொஞ்சம் பயமாயிருக்கும் . பொய் , திருட்டு இரண்டும் அவருக்கு அறவே ஆகாது.  அவரு கோவம் அவரோட..நாமதான் சுத்தமாச்சேன்னு நினைத்துக்கொண்டான் முருகன் .


ரபீக் சொன்ன மாதிரியே நடந்தது . ஆரஞ்சு கலர் தாவணியில் உமாவைப்பார்த்ததும் , இவதான் நம்மாள் என்று முடிவெடுத்தான் முருகன் . ரபீக்கிடம் காட்டினான் ..

சூப்பர்டா மாப்ளை ..நடத்து என்றான் ரபீக்

உன் ஆளை விட நல்லாயிருக்க இல்ல ..கூட்டம் நிறைய இருக்கு . ஆனா அவங்களே டிக்கெட் வாங்கிருவாங்க போலிருக்கே என்றான் முருகன் .

ரபீக் லேடீஸ் கவுண்டரினுள் போனான். டிக்கெட் கொடுக்க இன்னும் நேரமாகவில்லை. கலியனிடம் பிளாக் டிக்கெட் கொடுத்துக்கொண்டிருந்தார் வேலாயுதம் ..ரபீக்கை பார்த்தது என்னடா..உன் பொட்டச்சி வந்துட்டாளா என்றார்.

ரெண்டு வேணுமண்ணே என்று வாங்கி முருகனிடம் கொடுத்தான் . போய் கொடுத்துடு என்றான் . முருகனுக்கு தயக்கமாக இருந்தது . எடுத்த எடுப்பில் எப்படி ரபீ என்றான்..ரபீக் காதில் கிசுகிசுத்தான் . அன்று முருகன் தட்டு தூக்கவில்லை. வவுத்தால போறாப்ல இருக்குன்னு நாயுடுவிடம் சொல்லி விட்டான் . அவள் லேடீஸ் சைடில் கடைசி வரிசையில் இருந்தாள் . அவளுக்கு சற்று நேர் சாய்வாக முருகன். அவள் கொஞ்சம் வலது பக்கம் திரும்பினால் முருகன் தெரிவான். தெரிந்தான் . உமாவுக்கு ஆச்சர்யம் . அம்மாவும் , தங்கச்சியும் வரலைன்னு சொல்லி டிக்கெட்டை கொடுத்தவன் . அம்மா உடம்பு சரியில்லைன்னு வேற சொன்னானே ..இங்க படம் பார்க்க உக்கார்ந்திருக்கானென்னு தோணிச்சு அவளுக்கு . கலர் கிரேடை தூக்கி கொண்டு வந்த ரபீக் , அவள் கேக்காமலயே டபுள் செவனை ஓப்பன் பண்ணி நீட்டினான் . அம்மா ,தங்கச்சியெல்லாம் பொய் புள்ள..உனக்கோசரம்தான் டிக்கெட் எடுத்துக்கொடுத்தான் அவன்.. அம்மா வேறு எங்கொ பார்த்துக்கொண்டிருந்தாள் . உமாவுக்கு என்னவோ போலிருந்தது . இவன் ஏன் எனக்கு டிக்கெட் எடுத்து தரணும் என்று யோசித்தாள் . என்னடி உமா...என்ன அறைஞ்சாப்ல இருக்கேன்னா அம்மாகாரி

அவள் பெயர் உமாவா? உமா என்று ஒரு தடவைசொல்லிப்பார்த்துக்கொண்டான் முருகன் .. பேர் மட்டுமில்ல ..ஆளும் நல்லாத்தான் இருக்கா என்ற ரபீக்கை முறைத்தான் முருகன் . பார்த்த படத்துக்கே திரும்பவும் வந்தாள் உமா. பக்கத்து வீட்டு பெண்ணுடன் வர ஆரம்பித்தாள் . அவளை பார்த்தவுடன் கதவோர சீட்டை பிடித்து வைப்பான் முருகன் . ஒரு நாள் இடைவேளை விடுவதற்கு முன்பே வெளியில் போனாள் உமா . திரும்ப வரக்காணும் ? கக்கூஸ் போய் வர இவ்ளோ நேரமா என்று வெளியில் வந்தான் முருகன் . உமா நின்றுக் கொண்டிருந்தாள் . ஒரு சிரிப்புடன் உள்ளே போய் விட்டாள் . ஜிவ்வென்று இருந்தது முருகனுக்கு . பின்னால் வந்து ரபீக் முதுகில் தட்டி..செட் ஆயிடுச்சுடா என்றான் ..

சனிக்கிழமை காலைக்காட்சி . உமா வரவில்லை . அவளுக்காகத்தான் புது துணி உடுத்தியிருந்தான் முருகன் . மதியமும் காணும் . மாலைக்காட்சி . அதே ஆரஞ்சு கலர் தாவணி .உமாதான் . நாயுடுவிடம் சொல்லிவிட்டான் . அண்ணே .கால் சுளுக்கியிருக்குண்ணே .. ஸ்டாலை பாத்துக்கறேன் . கிரேடு தூக்கலைன்னு .. நாயுடு சரின்னுட்டாரு . ஆரஞ்சு கலரை அடுக்கும்போதே உமாவின் தாவணியை வருடுவது போல் இருந்தது . இடைவேளைக்கு முன் வரும் பாட்டு ஆரம்பித்திருந்தது . பொளேர்னு ஒரு அறை விழுந்தது . பொறி பறந்தது . தடுமாறி பார்த்தான் . நாயுடு நின்றுக்கொண்டிருந்தார் .

திருட்டு நாயே ...இவ்ளோ நாள் களவாண்டது நீதானாடா குச்சிக்காரி மவனே..

முருகனுக்கு ஒன்றும் விளங்கலை . என்ன அண்ணே சொல்றீங்க..என்றான் . குரல் கம்மியது . சட்டையை கொத்தாக பிடித்து இழுத்துக்கொண்டு போனார் நாயுடு . கேண்டீன் லோகு , வேலாயுதம் அண்ணன் எல்லோரும் கூடி விட்டார்கள் .

திருட்டு பய ..வெள்ளையும் ,சொள்ளையுமா உடுத்துப்போதே நினைச்சேன் .தட்டு தூக்கற நாயிக்கு ஏதுடா இவ்வளவு பவுசுன்னு...2000 ரூ கேஸ் கம்பெனிக்கு கொடுக்கறதுக்கு வச்சிருந்தேன் . அதை ஆட்டையை போட்டிருக்கான் கூதி மவன்.. சாண்டைகுடிக்கி..நாயுடுவுக்கு பெரிதாக இறைத்தது . கண் மண் தெரியாமல் அடிக்க ஆரம்பித்தார் . முருகனின் பொட்டியை தொறந்து காட்டினார் . 1000 ரூ இங்கன வச்சிருக்கான் . மீதி எங்கடா திருட்டு தாயோளி..

முருகனுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை .என்ன பணம் ..என் பொட்டியில ஏது இந்த காசு..அண்ணே..சத்தியமா ஒன்னும் தெரியாதுண்ணே..ரபீக்கை கேளுங்கண்ணே...திருட்டு பட்டம் கட்னதாலதான் வீட்டை விட்டே ஓடியாந்தேன் ..கால் காசு அடுத்தவன் காசுக்கு ஆசை இல்லண்ணே..துக்கமும் ,அவமானமும் தொண்டையை அடைத்தது முருகனுக்கு ..கரகரவென்று கொட்டியது கண்ணீர் .

நீலி வேசம் போடதடா குச்சிக்காரி மவனே..எப்படிறா உன் பொட்டியில காசு வந்துச்சு என்றபடி நாயுடு புதுசட்டையை கிழித்தெரிந்தார் . பேண்ட்டையும் ருவினார் . தாயொளி அண்ட்ராயர் முதக்கொண்டு புதுசா..கன்னத்தில் வெடித்தார் . இண்ட்ரவல் விட்டு வெளியில் வந்தவ்ர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்க்க அரை அம்மணமாக நின்றுக்கொண்டிருந்தான் முருகன்.. 

சோறு தண்ணி கிடையாது ..இப்படியே நிக்கனும்திருட்டு நாயே..  கைகள் காட்டப்பட்டன.. இறுக்கி கடித்துக்  கொண்டதில் உதட்டில் ரத்தம் வழிந்தது . கண்ணீர் பட்டு எரிந்தது . கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டான் . எவனோ கூட்டத்தில் இருந்தவன் முதுகில் ஒரு குத்து குத்தினான்

மறுநாள் வரை அப்படியே கிடந்தான் முருகன் . கைகட்டை யாரோ அவிழ்த்தார்கள். வேலாயுதம் அண்ணன் .  முருகா.. நீ செஞ்சிருக்க மாட்ட.. எனக்குத்தெரியும் ஆனா பொட்டில பணம் இருக்கே ..ஒன்னும் எடுபடாது என்றார் . தடுமாறி எழுந்தான் .துணியை உடுத்திக்கொண்டான் ..பாதி கிழிந்து இருந்தது

சோடாவுக்கு கேஸ் நிரப்பி கொண்டிருந்தார் நாயுடு . சத்தம் கேட்டு திரும்பினார் . முருகன் . திருட்டு நாயே ..யார்றா அவுத்து உட்டது ?.கையை ஓங்கி கொண்டு வந்தார் .முருகன் கையில் சைக்கிள் பம்ப்பை கெட்டியாக பிடித்திருந்தான் .கண்களில் கண்ணீரும் , வெறியும் ..

அப்படியே வுட்டுட்டா வந்த..ஓங்கி போட்டு மண்டை பொளந்திருக்க வேண்டாம் என்றான் ரபீக் ..

போடத்தான் ஓங்கினேன்.. அடி வவுத்துல கங்கு எரிஞ்சுச்சு ரபீக்க்கு .. அந்தாளை உத்து பார்த்தேன் ..கை எடுத்து கும்புடறான் . உசிரு பிச்சை போடுங்கற மாதிரி .. சே..என்ன மனுஷன் நானு . சோறு போட்டவனாச்சே அவன் . அன்னிக்கு வேலை இல்லைன்னு துரத்தி விட்டிருந்தா நான் நிஜமாவே எங்கயாச்சும் திருடி இருப்பேனோன்னு தோணிச்சு . என்ன மானம் போச்சு ..அவ்ளோதான் ..வயித்து பசியோட மானமொன்னும் அவ்ளோ பெரிசா தோணலை. அதுவுமில்லாம நன்றி கெட்டு போய்.... அதான் வந்துட்டேன் .

சட்டென்று முருகனை கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தான் ரபீக் ..