Saturday, October 31, 2009

இயலாமைகள்..... கவிதை




நெரிசலான பேருந்தில்
சிறு இடைவெளியில்
கூனி..குறுகி.. புகுந்து

சற்றே கிடைத்த இடத்தில்
கம்பியை பற்றி
ஆசுவாசம்..

முன்பக்கம் நெரிசலில்
பார்த்த முகம்..

நெடுநாள்
பார்க்காத முகமும்
கூட...

ஆருயிர் நண்பன்
அருகில் அழைக்கத்தான்
மனமில்லை

அடுத்த நிறுத்தத்தில்
கள்வனாய் இறங்கி
கும்பலில் கலந்தேன்

காரணம் ஒன்றும்
பெரிதாயில்லை
கடன் தான்.

பாவம்..
ஏன் அவன்
குற்ற உணர்வை
கூட்டி விட வேண்டும்?


மீண்டும் கேட்டால்
இல்லையென்று
மறுக்க முடியாத
இயலாமை..

இன்னொரு சொல்ல
விரும்பாத காரணமும்
கூட....

Friday, October 30, 2009

180/120....எகிறிடுச்சு


முன் குறிப்பு:அறிகுறிகளே காட்டாமல் கூட உயர் இரத்த அழுத்தம் நம்மை பாதிப்பதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள்.அவ்வப்போது சோதனை செய்து கொள்ள வேண்டுமாம்.நண்பர்களின் நலம் விரும்பி என் அனுபவத்தை எழுதுகிறேன்(மேட்டர் கிடைக்க கூடாதே?..என்று சிலர் கருதலாம்)

0000000000000

முந்தாள் நாள் காலை முதலே நான் சரியாக வில்லை.லேசான கிடினெஸ் இருந்தது.சரி நேத்து நைட்டு மப்பாயிருக்கும் என்று விட்டு விட்டேன்.அன்று என் அத்தை இறந்து பத்தாம் நாள் காரியம்.அதற்காக எல்லோரும் கிளம்பி குரோம்பேட்டைக்கு போய் விட்டோம்.அங்கு வீட்டிற்கு வெளியில் அமர்ந்திருந்தோம்.மீண்டும் ஒரு சாவு செய்தி.என் கசினின் மகள் 45 வயது ஹார்ட் அட்டாக்.அதுவும் கிரோம்பேட்டையில்தான்.தலை நன்றாக சுற்றுவது தெரிந்தது.காலெல்லாம் தெம்பே இல்லாமல் துவள ஆரம்பித்தது.என்னிடம் ஒரு பழக்கம்.என்னதான் முடியவில்லையென்றாலும் வீட்டில் சொல்லி அவர்களை பயமுறுத்துவதை விரும்பமாட்டேன்.நைசாக வெளியில் வந்து ஒரு ஆட்டோ பிடித்து அருகில் உள்ள டாக்டரிடம் போப்பா என்றேன்.

டாக்டர் இன்னும் வந்திருக்கவில்லை.காலை மணி 9.அவர் வரும் நேரம்தான்.டோக்கன் கொடுத்தார் நர்ஸ்.6 ஆம் நம்பர் என்று முதலில் நினைத்தேன்.பின் தான் அது 9 என்று தெரிந்தது.டாக்டர் வந்தவுடன் வரிசைப்படி எல்லோரும் செல்ல ஆரம்பித்தனர்.ஒருவரிடம் கேட்டு பார்த்தேன் பலனில்லை.அவரவர் வேதனை அவரவருக்கு.கிட்ட தட்ட மயங்கி விழும் நிலையில் உள்ளெ சென்றேன்.டாக்டர் பி.பி செக் பண்ணிவிட்டு 180/120.என்னய்யா நினைச்சுகிட்டிருக்கே?மாத்திரை சாப்பிடறதில்லையா?ஹமாம் விளம்பரத்தில் வருவது போல்(பரு வந்துடும்,தன்னம்பிக்கையே போயிடும் இத்யாதி..)கை,கால் இழுத்துக்கும்,மூளை செயலிழுந்துடும் என்று பட்டியலிட்டு விட்டு உள்ளே படுக்க வைக்குமாறு ஏஞ்சலிடம்(அண்ணன் உ.த பாழையில்) சொன்னார்.முதல் உதவி ஆரம்பிக்கப்பட்டது

நான் அதற்குள் இன்ஷூரன்ஸ் பிரிமியம் எதாவது ட்யூ இருக்கிறதா?வரவேண்டிய பேமெண்ட்ஸ் என்னன்ன?கொடுக்க வேண்டிய கடன் பாக்கிகள் என்று புத்தி சகல திசைகளிலும் தறி கெட்டு ஓட ஆரம்பித்தது.இப்பல்லாம் 28 வயசுலயே ஸ்டிரோக் வருதுன்னு டாக்டர் சொன்னது நினைவுக்கு வர 17 வருஷம் போனஸோ என்றும் தோன்றியது.கை,காலகளை ஆட்டி பார்த்துக்கொண்டே இருந்தேன்.

விஷயம் தெரியப்படுத்தபட மனைவி,தம்பி எல்லோரும் வந்துவிட்டார்கள்.ரிஷப்ஷனில் இருந்த தினத்தந்தியில் எமன்(காலம்)பாசக்கயிற்றை வீசும் விளம்பரத்தை பார்த்தது வேறு நினைவுக்கு வந்து தொலைத்தது.அவ்வளவு சின்ன குறுகிய வாயில் வழியாக ஒரு எருமை வரும் காட்சியையும் கற்பனை செய்தும் பார்த்தேன்.

நோ சிகரெட்..நோ ஆல்கஹால்..நோ சால்ட்..நோ ஆயில்..நோ டென்ஷன்(இதை டாக்டர் சொல்லும்போது எனக்கு சிரிப்பு வந்தது.பின்ன? எத்தனை ரிமோட் உடைத்திருக்கிறேனே)சிரிப்பொலி,ஆதித்யா பாருங்கள்.நோ சீரியல்.நல்ல மீயூசிக்,மெடிடேஷன்..இன்னும்...

இப்படி ஏகப்பட்ட நோக்களையும்,எஸ்களையும் சுமந்து நொந்து வீடு திரும்பினேன்.மாத்திரை சாப்பிட்டு,நேற்று போட்ட என் மகள் பதிவிற்கு பதில் போட்டு விட்டு(இதுக்கு மட்டும் உடம்புல தெம்பு வந்திடுதுப்பா),நன்றாக தூங்கி இரவு 8 மணிக்கு வரட்டு சப்பாத்தி சாப்பிட்டு விட்டு ஒரு வாக்கிங் போனேன்.உடலில் பழைய தெம்பு வந்திருந்தது.கிளைமேட் இதமாக இருக்க ஒரு சிகரெட் பிடிப்பதை விட அப்போதைக்கு வேறு சுகம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை என்று சொன்னால் அது பொய்..(ஜமுக்காளத்தில் வடிகட்டிய).

முன்பு எழுதியது..

நில் என்றால்

ஓட்டம்

பேசு என்றால்

அதிமெளனம்

பேசாதே என்றால்

பேரிரைச்சல்

எல்லாவற்றிலும்

ஏறுக்கு மாறு

ஏட்டிக்கு போட்டி

உன் மனசில்

என்ன?

மனசு

என்ற நினைப்பா?


டிஸ்கி:பதிவர் ஜீவன் எழுதிய புகையை நிறுத்துவது எப்படி என்ற ஒரு பதிவு.எனக்கு மிகவும் பிடித்தது.அதன் சுட்டி இணைத்துள்ளேன்.மருத்துவர் தேவன்மயம் உயர் ரத்த அழுத்தம் தொடர்பாக எழுதியிருந்தால் சுட்டியை இணைக்கவும்


Wednesday, October 28, 2009

என் மகளின் பிராஜெக்ட்..விளம்பரபடம்


என் மகள் இரண்டாவது வருடம் காட்சிஊடகவியல் படிக்கிறாள்.அவள் பிராஜெக்டுக்காக எடுத்த விளம்பர படம் உங்கள் பார்வைக்கு.கருத்துரைத்தால் மகிழ்வேன் நண்பர்களே..இதில் வரும் குரல் என்னுடையது.நடித்தது என் மகளின் கிளாஸ்மெட் திரு அஷ்வின் மற்றும் என் தம்பி மனைவி.


Tuesday, October 27, 2009

சில காரணங்களும்,காரியங்களும்


முன் குறிப்பு: உயிரோடை சிறுகதை போட்டிக்காக எழுதிய கதை.புதிய விமர்சனங்களுக்காக(புதிய வாசகர்களுக்காக)மீண்டும்


பொத்தி,பொத்தி வளர்த்தாங்க...


ம்ம்ம்..அப்புறம்..

அப்புறம் என்ன..பொத்தலாயிடுச்சு..

உரத்த குரலில் சிரித்தாள்..கண்ணில் நீர் வரும்வரை..

அழறியா என்ன?

ம்ஹீம்..ஆனந்த கண்ணீர்...உனக்கு தெரியுமா? ஒரு நாள் எங்கப்பா புது கொலுசு வாங்கி கொடுத்தார்..கால்ல மாட்டி, ரெண்டு பக்கமும் பாவாடையை விரிச்சு முழங்கால் வரைக்கும் தூக்கிட்டு வீட்டை சுத்தி நாலு ரவுண்டு அடிச்சேன்...

அது எல்லாரும் பண்றதுதானே..

ஆனா எங்கம்மா அதுக்கே கால்ல சூடு வச்சா..அப்ப வீட்டுல வெளியாளுக ஏதோ வேலையாக இருந்தாங்க..இப்ப பத்தியா..காலை தூக்கி காட்றதே பொழப்பாயிடுச்சு..

இங்க வந்து எப்படி மாட்டி கிட்ட..?

என் புருஷன் வித்துட்டு போயிட்டான்...

அவனுக்கு சட்டென்று அவன் மனைவியின் நினைவு வந்தது....தேடி,தேடி சலிச்சு அவளை பார்த்தவுடன் பிடிச்சு போக ..கல்யாணம்..ஒரே வாரம்.. முழுசாய் பார்க்க கூட அனுமதிக்க வில்லை..ஏதாவது காரணம் சொல்லி திரும்பி படுத்துக் கொள்வாள்..எட்டாவது நாள்......ஓடிப் போனாள்..ஒரு துண்டு சீட்டு...நாலு வரி..”உங்களை பிடிக்க வில்லை..ஏற்கனவே பிடித்து போனவருடன் போகிறேன்....மன்னிக்கவும்...

என்னய்யா யோசிக்கிற..

உன்னை உன் புருஷன் வித்துட்டு போயிட்டான்..என் பொண்டாட்டி என்னை விட்டுட்டு போயிட்டா?....உன் கதைய கொஞ்சம் சொல்லேன்..

நீ பைத்தியமா? இல்ல... பத்திரிக்கைகாரனா?...பொண்டாட்டி வேற இல்ல...இங்க எதுக்கு வந்த..வா ..என்னை தொழில பார்க்க வுடு..அவள் ஆடைய களைய ஆரம்பிக்க..

இரு..இப்ப வேண்டாம்...நீ அந்த கதையை சொல்லு..

கதையா...நிஜம்யா..தாங்குவியா நீ.. காதல்னு ஒருத்தன் கிட்ட ஏமாந்தேன்...கொஞ்ச நாள் குடும்பம் நடத்தினான்..வயித்துல மூணு மாசம்..ஒரு நாள் நைட்டு புல்லா குடிச்சுட்டு வந்தான்..கூட நாலு பேர்...தேவிடியா மகனுங்க..சின்னா பின்ன மாக்கிட்டானுங்க...சீரழிஞ்சு இங்க வந்து சிக்கிட்டேன்.குழந்தைக்கு பேர் கூட வச்சிருந்தேன்..நல்ல வேளை..கலைஞ்சிருச்சு..இல்ல..அப்பன் யார்னு தெரியாம வளர்ந்து மாமா பையனாயிருக்கும்..இங்க அதை விட கொடுமையான கதையெல்லாம் இருக்கு..இப்ப அவுக்கவா?

ம்ம்ம் சரி அவு..

எல்லா ஆம்பளையும் அப்படித்தான்யா..அவுக்க சொல்லிட்ட பார்த்தியா?ஆமாம் பின்ன ..நீ அதுக்குத்தான வந்திருக்க...ஆனா ஒன்னு..இன்னிக்கு எனக்கே மூடு வந்திருச்சு..விளையாடுயா..

பிறந்த மேனியாக இருந்தாள்..அவன் கண்களை மூடிக்கொண்டு கையில் கொண்டு வந்திருந்த பையை நீட்டி...இந்த புடவையை கட்டி கிட்டு நகையெல்லாம் போட்டு,கிட்டு வா..

அவள் புரியாமல் பார்த்தாள். ...பின் மெளனமாக வாங்கி கொண்டு பாத்ரூமுக்கு போனாள்..

தலையை குனிந்து அழுது கொண்டிருந்தவன்...காலடி சத்தம் கேட்டு நிமிர்ந்தான்...
அவன் மனைவியின் நெற்றி சுட்டி,மூக்குத்தி,கம்மல்,தாலி சங்கிலி..பார்வை கழுத்துக்கு கீழே போக திடுக் என்றது..

இது..

அவள் சொன்னாள்..இது என் ஆசைய்யா? நீ ஒன்னும் சொல்ல மாட்டேன்ற நம்பிக்கைலதான்..அவள் குரல் கம்மியிருந்தது..

அவன் முகத்தில் இனம் புரியாத உணர்ச்சி...நா காதை வச்சு கேட்கவா?

அவள் தலையாட்டினாள்..

அவன் எழுந்து அருகில் சென்றான்..அவள் நெற்றியில் முத்தமிட்டு அப்படியே குனிந்து சின்ன தலையணை வைத்து பெரிதாகப்பட்டு இருந்த அவள் வயிற்றில் காதை வைத்து “பேர் வச்சுட்டியா” என்றான்.

Monday, October 26, 2009

எக்ஸ்ட்ரா லார்ஜ் எலாக்ஸ்டிக் ஜட்டி(மீள்ஸ்)


”புநகோ” என்றால் என்னவென்று தெரியுமா உங்களுக்கு?எழுத்துக்களை தனித்தனியா பிரித்தும், விரித்தும் அர்த்தம் எடுத்துக்கொள்ளலாம்..ஆனால் உண்மையில் ”புநகோ” மொசாம்பிக் மொழியில் வெளிவந்த ஒரு நூல் ..கிட்டதட்ட 3000 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து இப்போது சிதைந்து போகும் அபாயத்தில் இருக்கும் ஒரு பரிதாப வஸ்து..

இரண்டு வாசல் இருக்கும் ஒரு வீடு..முன் வழி மற்றும் பின் வழி..முன் புறம் நுழைந்தால் பின் புறமும் வெளியேறலாம்..ஆனால் பின் புறம்??அது இலக்கணம் மீறும் விதி என்று வகுக்கப்பட்டுள்ளது....எக்ஸ்ட்ரா லார்ஜ் எலாக்ஸ்டிக் ஜட்டியில் இதைத்தான் விரிவாக உவ்வே எடுக்க உள்ளோம்..எச்சரிக்கை..அவாமின் கைவசம் இருக்கிறதா?

தம்பிக்கு எந்த ஊரு என்று கேட்டால் “அது இதுக்கு” பொருந்தாது...அட தம்பியுடையான் படைக்கு அஞ்சான்” அப்படி சொல்லாமா? ம்ஹீம்...இது பற்றி மொசாம்பிக் இலக்கியத்தில் “முன்,பின்,மேல் நவினத்துவங்களில் விரிவாக பார்க்கலாம்..

முன்... ஜட்டி என்றும் ,பின்.. பேண்டிஸ் என்றும் குறியீடுகள் சொல்கிறது..அப்ப மேல்...இல்லை முன் மேல் எதுவென்று யாராவது “கச்சை”கட்டி கேட்கும் பட்சத்தில் இச்சை வருகிறது....ஆனால் கட்டை உடைத்து பார்க்கும் பட்சம் மேல் முன் நவினத்துவம் ஒரு கேள்விக்குறி போல் தொங்கி விடும் அபாயமும் இருக்கிறது.. இதை பட்டவர்த்தனமாய் சொல்வதுதான் ”புநாகோ”...

ஆலயத்தின் உள்ளே 50 பக்தர்கள்..வெளியே 500 பிச்சைகாரர்கள்..இப்படி ஒரு விதி...இந்த நாட்டில்தான்...மொசாம்பிக்கில் ஒவ்வொரு பிச்சைக்காரனும் விபச்சாரம் செய்கிறான்..ஆமாம்...அங்கே பிச்சை எடுத்தல் விபச்சாரம் செய்வதுபோல்...

எதையும் குடி..யாரையும் அடி...முன்,பின் எங்கும்....அந்த கலாசார உணர்ச்சி இங்கு எப்போ வரும்...ஒரு மழை நாளில் நான் சந்தித்த ஒரு விலைமகளின் உண்மை பெயர் மகாலட்சுமி இல்லை..பின் என்ன? அதை நான் எழுதினால் நான் அந்த பெயரை களவாடினேன் என்று கீழ்பாக்கத்திலிருந்து ஒரு பிதற்றல் வரும்.....

கத்தரிக்காய் கறி செய்ய மட்டும்தான் என்று ஏன் நினைக்க வேண்டும்..அது ஒரு சிறந்த கருத்தடை சாதனம்...என் எழுத்தும் அப்படித்தான்..வெண்டைக்காயில் ”வெ” யை வெட்டி விட்டு வெறோரு எழுத்தை “பு’குத்தினால் என்ன? ஒலியில் சிறிய மாற்றம் அவ்வளவே..ஆனால் அதற்காய் அலையாதார் உண்டா என்ன?

மலச்சிக்கலை போல்தான் மனச்சிக்கலும்...என்னை ஒரு மன நிலை பிறழ்ந்தவன் என்று அழைத்துக் கொள்ள அனுமதிக்காத தேசம்..என்ன தேசம்....இப்படித்தான் ஒரு முறை என் டிராயரில் இருந்த கருத்தடை மாத்திரையை ஒரு பித்தன் களவாடி போய் விட்டான்..என்ன ஆகும் என்று மாத்ரூபூதத்திடம் கேட்டேன்..சிரித்துக் கொண்டே குதிரைக்கு கொள்ளுக்கு பதில் சுண்ட கஞ்சி கொடுத்தால் குதிரை குட்டியா போடும்..முட்டிதான் போடும்...

எழுத்தின் வெற்றி...விருதிலா? இல்லை ராயல்டியிலா? என்னை கேட்டால் சுகித்து எழுதலில்தான் என்பேன்...இரவில் கொட்டமடிக்கும் கூத்தாடிகளிடம் மடிப்பிச்சை கேட்டு துரிதஸ்கலிதம் செய்யும் பெட்டை எழுதிகளுக்கு தெரிய வாய்ப்பில்லை..தெரியவும் வேண்டாம்...கொடுப்பதை கொடு...முடிந்தவரை உன் வீட்டு குப்பையை அள்ளிவிடுகிறேன்...இவர்கள் என்ன முனிசிபாலிட்டியா? தீபாவளி படத்தில் வாய்ப்பு கொடு..பணம் வேண்டாம் ..மீந்து போகும் பலகாரம் மட்டுமே போதுமானது...இதற்கு ”கண்ணகி” சிலைக்கு அடியில் 5 ரூபாய்க்கு ”கையில்” சுண்டலும் ,10 ரூபாய்க்கு ”வாயில்” செட் தோசையும் வாங்கி சாப்பிடலாம்....

உனக்கும்,எனக்கும் சண்டை....அவிழ்ந்து போச்சு...மூதேவி கொண்டை....

இதில் என்ன கொறச்சீற்றம் ....ஒரு நண்டையும் காணும்....ஆனாலும் சிண்டை பிடிச்சு ஆட்டிகிட்டு த்தான் இருக்கிறார்கள்..அம்மாவாசைக்கு அடுத்த நாள் நண்டு சினையா கிடைக்கும்....தினம் அம்மாவாசையா இருந்தால் அடுத்த நாள் எப்ப வரும்??


மெசபடோமியாவில் “க்மாஸ்டா” என்ற உலகப் புகழ் பெற்ற(எங்க அளவுக்கு இல்லை என்றாலும்) ஒரு கவி இருந்தார்..அவரின் ஒரு கவிதை நம்மூர் பார்ட்டி
”யாரோச்சீ” யின் மொழிபெயர்ப்பில்....

“நொண்டி மாட்டை.வச்சுகிட்டு
வண்டி ஓட்ட முடியுமா?
இல்ல..சண்டி மாட்டைதான்
சவாரிக்கு பூட்டலாமா??
அட..ரெண்டையும் அடிமாடாக்கி
அண்டை மாநிலத்துக்கு
அனுப்பிடுங்க..
தமிழனுக்கு தவிடாவது
மிஞ்சட்டும்...

இப்பல்லாம்..
தவிடுலேர்ந்து
எண்ணெய் எடுக்கிறாங்கவோய்..

Saturday, October 24, 2009

கல்லுடைப்பவனும்,கட்டுடைப்பவனும்




அவன் தலையில்லாமல் நடந்து போனான்


அப்படின்னா முண்டமாவா?


அது அப்படி இல்லை..மூளையில்லாமல்..அப்படித்தான் பின் நவீனத்துவம் சொல்லுது

பின் பக்கமா நடந்து போனானா?

போடா முண்டம்.உனக்கு புரிய வைக்க முடியாது.ஒவ்வொரு இசமா சொல்றேன்.புரியிதா பாரு.நிறைய கேள்வி கேளு என்ன?

சரிங்க

இருத்தலிசம் தெரியுமா உனக்கு?

யார் வீட்டுலங்க தெவசம்

கிழிஞ்சது ..நீட்ஷே பற்றி வாசித்திருக்கிறாயா?

எனக்கு கோட்சேதான் தெரியும்

கிளிஷே?

கிளிஞ்சா தச்சு போட்டுக்க வேண்டியதுதான்

மெட்டிரியலிசம் பற்றி சொல்லவா?

மெட்டிஒலி திரும்ப போடறாங்க இப்ப.பாவம் அந்தாளு.அஞ்சு பொண்ணை பெத்துட்டு..


போதும் .நிறுத்து.இந்த ரோசா..

தெரியுமே..செல்வமணி பொண்டாட்டி.எலெக்‌ஷனல தோத்து போச்சு

இழவு போதும் நிறுத்து..இந்த மேஜிக்கல் ரியலிசம்?

ஜேம்ஸ் மேஜிக் ஷோ தெரியும்.சுவர் புல்லா விளம்பரம் பண்ணியிருப்பாங்க

பூகோவாவது?

வைகோ தெரியும்.பொசுக்,பொசுக்குன்னு அளுதுடுவாரு.தமாஷா இருக்கும்.

பூர்ஷ்வா பற்றி கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்

ஆமாம்..பழைய சோறும்,பச்சமொளகாயும் சூப்பர்தான்

அதிகாரத்தின் உரையாடல்?

இருங்க.மீன் குழம்பு காரமா இருந்தாதான் நல்லாயிருக்கும்..நீங்க எழுத்தாளரா?

இல்லை.இலக்கியவாதி.கட்டுடைப்பவன்..நீ?

நான் கல்லுடைக்கிறவன்.

அப்ப என்னை விட நீ கண்டிப்பா நல்லாத்தான் உடைப்ப.இப்ப கதை எழுது..

ஒருவன் தெருவில் தலையுடன் சென்றுகொண்டிருந்தான்.

என்னை கிண்டல் பண்ணினே..தலையில்லாம போனா முண்டமான்னு?

இருங்க..அவன் கையில தலையுடன் போய்கிட்டிருந்தான்..அந்த தலை
யாருதுன்னு கேட்டேன்..

யாருதாம்?

கிட்ட வாங்க சொல்றேன்...யாருகிட்டயும் சொல்லாதீங்க


Friday, October 23, 2009

வேறு ஒன்றுமில்லை....கவிதை...


நப்பாசைக்கும் அப்பாவுக்கும்
இடையில் அல்லாடுகிறது
குழந்தை

இல்லாமையோ
இயலாமையோ
சாமர்த்தியமாக
சளியின் மீது
பழியை போட்ட
அப்பா..

மணியை அடித்தபடி
அங்கேயே சுற்றுகிறான்
பாவம்
ஐஸ்வண்டிக்காரன்..

...

000000000000000000000

உனக்கென்னடி தங்கம்
ஆயிரம் பேர்
குதிரையில் வருவார்
உன் அழகுக்கு

சொன்ன பாட்டி
சுவற்றில் மாட்டப்பட்டிருக்கிறாள்
சுமங்கலியாய்

ராஜகுமாரன் வேண்டாம்
ஒரு ராட்சஸன்கூட
வரவில்லை


0000000000000000000000000000000

புதியதாய்
எதையோ எழுதத்தான்
நினைக்கிறேன்

அடுத்த நொடியில்
அதுவும் பழையதாக
போவதை அறிந்தும்

Thursday, October 22, 2009

மானிட்டர் பக்கங்கள்.........22/10/09


ஒரு வாரம் விடுப்பு எடுத்துக்கொண்டதில் அலுப்பு வந்துவிட்டது.(Aloof என்ற ஆங்கில வார்த்தையும் ,அலுப்பும் ஒரே அர்த்தம் தொனிக்கிறது ).தீபாவளிக்கு தஞ்சைக்கு குடும்பத்தோடு போனேன்..என்.ஹெச் 45 ல் சுகமான பயணம்.சும்மா கார் வெண்ணெய் போல் வழுக்கி போனது.பெரம்பலூர் வருவதற்குள் 5 டோல் பிளாசா.சுமார் 160 ரூ பழுத்துவிட்டது.சாலையையும்,பாலங்களையும் பார்க்கும்போது டி.ஆர்.பாலுவின் “வளமை”புரிந்தது.வழியெங்கும் காணப்பட்ட போஸ்டர்களில் அன்னை,தலைவர்,தளபதிகள் டாக்டர் பட்டத்துடன் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.மக்களை நோயாளிகளாகவே வைத்திருக்கும் மாண்புமிகு ”மருத்துவர்கள்”கேப்டன் மட்டுமே மீதி.அவருக்கும் ஒரு டாக்டர் கொடுத்துவிட்டால் தமிழன் முதுகில் இருக்கும் கொஞ்ச நஞ்ச கூனையும் எடுத்துவிடுவார்.

இரண்டு படங்கள் பார்த்தேன்.முதலில் பேராண்மை.அமெரிக்க சாட்டிலைட்டை ஏமாற்றி பொக்ரானில் அணுகுண்டு வெடித்த பெருமை நமக்கு உண்டு.அப்படிப்பட்ட நம் நாட்டிற்குள் விண்கலத்தை தகர்க்க வரும் வெள்ளைக்காரர்களை நாயகன் முறியடிக்கும் கதைதான்.மேக்கிங்கில் ஜனா பின்னியிருக்கிறார்.ரவியின் உடல்மொழி மற்றும் குரல் மொழி இரண்டும் எக்ஸ்லண்ட்.நிச்சயம் அவருக்கு இது ஒரு மைல்கல்தான்.இளமையும்,தேசபக்தியும் இணைந்து பெண்கள் மிரட்டியிருக்கிறார்கள்.

கேபிள் சொன்னதைப் போல் கதையில் நம்பகத்தன்மை இல்லாததால் சற்றே அலுப்பு தட்டுகிறது..பழங்குடியினரை அப்புறப்படுத்துதல்,வனத்தை அழித்து அயலானுக்கு தாரை வார்த்தல் என்று பிரச்சனையை உக்கிரமாக சொல்லியிருக்கலாம்.வெள்ளைக்காரன் வில்லன் தேவையேயில்லை.அயல் நாட்டு சதி,உள்நாட்டு கைக்கூலிகள் என்று கதைக்களம் அமைந்திருந்தால் நேட்டிவிட்டி கூடியிருக்கும் என்பது என் கருத்து.(சுற்று சூழல் பற்றி நிறைய பேசி விட்டு காட்டில் பெட்ரோல் குண்டுகளை வெடிக்கவைத்து இவர்கள் அதை கெடுத்தது பற்றி என்ன சொல்ல?யதார்த்த மீறல் என்பதை தவிர)

அடுத்தது ஆதவன்.இந்த படம் பார்த்த நேரத்தில் பட்டாசு குப்பைகளை சுத்தப்படுத்தியிருக்கலாம்.வெடிவேலு மட்டும் இல்லையென்றால் சுத்தம்.புஸ்வாணம்தான்.சூர்யா பார்த்து படங்கள் செய்யுங்கள் என்று நான் சொல்வதில் பயன் இல்லை(அவர் இதை படிக்கமாட்டாரே)காஞ்சிவரம் அருணா தியேட்டர் முதலாளியை நேற்று சந்தித்தேன்.22 லட்சத்துக்கு வாங்கினாராம்.எப்படியும் 10 க்கு குறையாமல் லாபம் வரும் என்று சொன்னார்.
ஆக விற்றவன்,வாங்கினவன் எல்லோருக்கும் லாபம்.நமக்குத்தான் பணநஷ்டமும்,மனக்கஷ்டமும்.

தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் முனியாண்டி விலாஸ் ஓட்டல் ரொம்ப புகழ் பெற்றது.விரால் மீன் குழம்பும்,வருவல்,விரால் மண்டையும் சும்மா பிச்சுகிட்டு போகும்.உட்கார இடம் கிடைக்காது..எனக்கு நண்பர்கள்தான்.எனக்கு அங்கு ஸ்பெஷல் உபசரிப்பு உண்டு.இந்த முறை அந்த ஓட்டல் இல்லை.இன்னொரு அசைவ விடுதிக்கு சாப்பிட போனேன்.அங்கு சப்ளை செய்த ஆளை பார்த்ததும் ஷாக்.முனியாண்டி ஒனர் பையன்.தினக்கூலி 100 ரூபாயாம்.என்னடா ஆச்சு? என்றேன்.அப்பா போயிட்டார்.அண்ணன் தம்பிகள் அகலக்கால் வைத்தார்கள்.கடைசியில் எல்லாம் போச்சு..பாவமாக இருந்தது.எச்சரிக்கையாகவும்தான்..சுதாரிப்பா இருக்கணும் இல்லை..சுண்ணாம்புதான்..

தீபாவளிக்கு டாஸ்மாக் இலக்கு 150 கோடியாம்.ஆனால் விற்றது 200 கோடி.நம்ம பங்கும் அதில் சுமார் ரூ 5000 இருக்கும்.தலையில் எண்ணெயுடன் கடைக்கு வந்தான் ஒருத்தன்.

ஓவர் மப்பில் எழுதியது..

ஞாபகபடுத்த
சொன்னீர்களே
மறக்காமல்
ஞாபகபடுத்தி
விட்டேன்

ஆனால் எதை
ஞாபகபடுத்த
சொன்னீர்கள்
என்பதைதான்
மறந்தேவிட்டேன்

Thursday, October 15, 2009

சம்திங் ராங்க்.......(மீள்)


ஆத்திரத்தை அடக்க
முடிந்தாலும்
மூத்திரத்தை அடக்க
முடியவில்லை...
டயாபட்டிக்..

மூத்திரத்தை அடக்க
முயன்றாலும்
ஆத்திரத்தை அடக்க
இயலவில்லை...
ஹைபர்டென்ஷன்..

கிழிந்த நைட்டியில்
வழியும் இளமை
கிளர்ச்சியில்லை..
இம்பொடன்ஸ்...

இருட்டினதும் விளக்கை
அணைக்கிறேன்...
டிமென் திஷியா..

வாங்கின கடன்
நினைவில் இல்லை..
செலக்டிவ் அம்னீஷீயா...

பல்லவன் படிக்கட்..
ஏற கஷ்டம்
ஆர்த்தரைடிக்ஸ்..

விரல் மரத்து
அவஸ்தை..
ஸ்பாண்டிலைட்டிஸ்

சட்டென்று பெயர்
மறந்து போகிறது..
அல்சைமர்..

இதெல்லாம் சரிதான்...

இப்போதெல்லாம்
இடுகையிடாமல்
இருக்க முடியவில்லை..
ஒரு நாள் கூட

சம்திங் ராங்க்...

Wednesday, October 14, 2009

அந்தரங்க சாட்சியாய்......கவிதை




இந்த இரும்பு பாதை
முடியும் இடத்தில்
ஒரு நகரம்
இருந்தது..

இன்று
அது இல்லை
காற்றில் கலந்திருக்கும்
ரத்த வாசம்
மட்டுமே
மிச்சமாயிருக்கிறது

தினம் விடியலில்
தன்னை
புதுப்பித்துக் கொள்ளும்
அழகான
இயற்கை
மட்டுமே
அந்தரங்க
சாட்சியாயிருக்கிறது..

மெலிதாய்
கேட்டுக்கொண்டிருந்த
முனகல்களும்
அடங்கி விட்டன..

இடமும் வலமுமாய்
நெளியும் இந்த
வழியேதான்
கடைசியாக கடந்து
போனது..ஆர்மி ரயில்

இவைகளுக்குள்
பறிமாறிக்
கொள்ளப்படும்
தடக்..தடக்
மொழியும்
அதிர்வும்
இனி இல்லை..

அந்த நகரம்
முற்றிலுமாய்
அழிக்கப்பட்டு
விட்டது...

நீங்கள்
இந்த பாதையின்
வழியே சென்று
இடதுபுறம்
திரும்பி
பாருங்கள்

அங்கே
இரண்டும்
ஒன்றோடு
ஒன்று
பிண்ணி
பிணைந்திருக்கலாம்
சாரைகளாய்...

Tuesday, October 13, 2009

மானிட்டர் பக்கங்கள்........13/10/09



வேலை அதிகம் இல்லை.ஒரு நாளைக்கு 3 மணி நேரம் வேலையிருந்தால் பெரிய விஷயம்.எனவே இணையத்தில் அதிக நேரம் கிடைக்கிறது.பல புதிய பதிவர்கள் பின்னுகிறார்கள்..ஈரோடு கதிர்,நாடோடி இலக்கியன்,நேசமித்ரன் ஆகியோர் கவிதையில் கவர்கிறார்கள்.அரவிந்தும்,நைனாவும்,எடக்கு மடக்கு/ஜோக்கிரி கோபியும் நையாண்டியில் ஜொலிக்கிறார்கள்..இன்னும் கலை,டக்ளஸ்,கார்த்திகை பாண்டியன்,பிராபகர்,வானம்பாடிகள்,ஜெர்ரீ ஈசானந்தா,ஸ்ரீ,எவனோ ஒருவன் பெஸ்கி,முத்துவேல்.இன்னும் நிறைய நண்பர்கள்..அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்..ஜமாய்ங்க தோழர்களே..(நானும் புதிய பதிவர்தான்)

அகநாழிகை இதழ் வெளியாகியிருக்கிறது.மணிஜி என்ற பெயரில் இரண்டு கவிதைகள் எழுதியிருக்கிறேன்..பொன்.வாசுதேவனுக்கு என் வாழ்த்துக்கள்

அகில உலக படைப்பாளி விருது தலைவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது..ஏற்கனவே உளியின் ஓசைக்கு விருதை கொடுக்கும் இடத்தில் இருந்து அவரே எடுத்துக் கொண்டார்...விருது வழங்கும் விழாவில் நடிகைளின் குத்தாட்டம் நடைபெற்றது.புவனேஸ்வரி அந்தரங்கத்தில் செய்ததாக சொன்னதை இவர்கள் அம்பலத்தில் அரங்கேற்றினார்கள்.முதுகு வலியை பொருட்படுத்தாமல் முதல்வர் புன்சிரிப்புடன் அமர்ந்து ரசித்தார்.தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக அது கலைஞர் டிவியில் ஒளிபரப்ப தயார்(அவர் தீபாவளி வாழ்த்து சொல்ல மாட்டார் என்பது வேறு விஷயம்)

தமிழ் ஸ்டுடியோ.காம் அமைப்பின் முதல் ஆண்டு நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது.அதில் எனது சியர்ஸ் என்ற குறும்படத்துக்கும் விருது கிடைத்தது.கேபிள் சங்கரின் விபத்து படத்திற்கு சிறந்த படத்தொகுப்பு விருதும் கிடைத்தது மகிழ்வை தந்த்து..தமிழ் ஸ்டூடியோ அருண் மற்றும் குணாவிற்கு என் வாழ்த்துக்களூம் நன்றியும்

ஒரு சிகரெட்டுக்கு ரூ 100/- ஒரு பாக்கெட் சிகரெட்டுக்கு 24,000/-ரூ செல்போனையே ஒருத்தர் கொடுத்து விட்டார்.நண்பரை சந்திக்க மது அடிமைகள் மறுவாழ்வு மையத்திற்கு சென்றிருந்தேன்..அங்கு கேள்விப்பட்ட தகவல் இது.சோதனை செய்துதான் அனுமதிக்கிறார்கள்.அப்படியும் நான் பீடி கட்டை நண்பரிடம் சேர்த்தது வேறு கதை..பீடி வந்து விட்டது என்ற உடன் ஒருவர் முகத்தில் அவ்வளவு பூரிப்பு.பிற்பாடு நண்பர் சொன்னார்”அவர் ஆந்திராவில் பெரிய மணல் காண்ட்ராக்டர்.கோடிஸ்வரர்.குடி படுத்தும் பாடு...

அங்கு ஒரு பெண்மணியும் இருக்கிறார்.கணவர் வீட்டில் வைத்து குடிப்பாராம்.குழந்தை இல்லை.மனைவிக்கும் பழக்கி விட்டார்.கணவர் திடீர் என்று இறந்து விட மனைவி முழு நேர குடிவாசி..அவர்து தம்பி கொண்டு வந்து அங்கு சேர்த்திருக்கிறார்..ஆனால் அவர் சொல்வதுவெளியில் போனாலும் என்னால் குடிக்காமல் இருக்க முடியாது.ஏன் இருக்க வேண்டும்?எனக்கு என்ன வாழ்க்கை வேண்டியிருக்கிறது?நியாயமான கேள்வி..

நண்பரை மாற்றம் தெரிகிறதா? என்று கேட்டேன்..எப்ப வேணா சுவர் ஏறி குதிச்சு ஓடி வர கண்டிஷன்லதான் இருக்கேன்னார்..கடவுள்தான் காப்பாத்தணும்(முடிஞ்சா)

பட்டினப்பாக்கம் சங்கீதா ஓட்டல் பக்கத்தில் ஒரு டாஸ்மாக் கடை.மேலே ஏசி பார் வசதி.மிகவும் அருமையான சர்வீஸ்..விலையும் சகாயம்தான்..ஸ்டார் ஓட்டலில் குடிக்க விரும்புவர்கள் அங்கு போனால் நிறைய பணம் மிச்சமாகும்..
(குடியை ஊக்குவிக்கவில்லை.தகவல்தான்..கேபிள் சாப்பாட்டு கடையை பற்றி சொல்வது போல்)

ஒரு எஸ்.எம்.எஸ் ஜோக்.:

டிரைவர் :சார் சுத்தமா பெட்ரோல் இல்லை..வண்டி ஒரு அடி கூட முன்னாடி போகாது

விஜய் : சரி அப்படின்னா ரிவர்ஸ் எடு.வீட்டுக்கு போயிடலாம்..(அத்திரி அனுப்பியது)

Monday, October 12, 2009

மானசீகமாய்...................கவிதை



எத்தனை முறை
முனை உடைந்தாலும்
மீண்டும் சீவுகிறேன்

உன்னை வேதனை
படுத்துவதில்
எனக்கும் சம்மதமில்லைதான்

இந்த ஓவியத்துக்கு
உயிர் கொடுத்தாக
வேண்டியிருக்கிறதே

மானசீகமாய்
கேட்டுக்கொள்கிறேன்
பென்சிலிடம் மன்னிப்பு

ஒரு பின் குறிப்பு:

எத்தனை காத தூரம்
இடுப்பொடிய
சுமந்து வருகிறேன்
ஒரு குடம் நீரை

என் கால்
கொப்புளங்களின்
வேதனை அறியாமல்
எத்தனை தற்பெருமை
இந்த ஓவியனுக்கு....

Saturday, October 10, 2009

மாயமான்.................சிறுகதை




ம்ம்...சொல்லுங்க..எத்தனை நாளா இப்படி ஒரு எண்ணம்?

“கொஞ்ச நாளா.. டாக்டர்..” அனு கம்மிய குரலுடன் இடை மறித்தாள்..

இவர் கம்பெனில நிறைய பேரை வேலையை விட்டு அனுப்பிச்சுட்டாங்க...இவருக்கு சம்பளம் பாதிக்கு மேல கட் பண்ணியாச்சு...வீட்டு கடன், கிரெடிட் கார்டு இன்னும் நிறைய பொருள் கடன்ல வாங்கினதுதான்...எல்லாத்தையும் எப்படி அடைக்கப் போறொம் தெரியலன்னு புலம்பிகிட்டே இருந்தாரு..இப்ப திடீர்னு நா செத்துட்டா இன்ஷூரன்ஸ் அது இதுன்னு நிறைய பணம் வரும். கடனை அடைச்சுட்டு நீயும் குழந்தையும் சந்தோஷமா இருங்கன்னு அடிக்கடி.....

எனக்கு பயமா இருக்கு டாக்டர் .எதாவது பண்ணிப்பாரோன்னு பயத்துலயே.. அனு குரல் உடைந்து அழ ஆரம்பித்தாள்.

ரவி அமைதியாக தலையை தொங்கபோட்டிருந்தான்..

இது ஒரு வித டிப்ரெஷன்.. காம்ப்ளெக்ஸ்.. வரப் போகும் பிரச்சனைகளை நம்மால சமாளிக்க முடியுமான்னு குழப்பம்..

மிஸ்டர் ரவி நீங்க மனசை அனாவசியமா குழப்பிக்காதீங்க...நல்ல தூங்குங்க..உங்க குழந்தையோட நேரத்தை செலவழியுங்க.. மறுபடியும் மூணு நாள் கழிச்சு வாங்க. மிஸஸ் ரவி. இந்த டேப்ளேட்ஸ் ரெகுலரா கொடுங்க...டென்ஷன் குறையும்...

அடுத்த இரண்டு நாள் ரவி கொஞ்சம் பெட்டரா இருந்தது அனுவுக்கு ஆறுதலாயிருந்தது.”

நம்ம குல தெய்வ கோயிலுக்கு போயிட்டு வந்திடலாங்க..காசு முடிஞ்சு வச்சிருக்கேன்.. நீங்க வேணும்னா பாருங்க. எல்லாம் நல்லபடியா நடக்கும். ஆனால் அந்த கிரெடிட் கார்டு வசூலுக்கு வந்தவன் பூதத்தை கிளப்பி விட்டு விட்டான். அக்கம் பக்கம் வேடிக்கை பார்க்க அவன் கத்தின கத்து அனுவிற்கும் சே .செத்துடலாம்னு தோன்றியது.

பால்கனியில் சிகரெட் பிடித்து விட்டு ரவி உள்ளே வந்தான். அனு பால் வைத்திருந்தாள்.

அனு உனக்கு?

ரெண்டு கிளாஸ் இருக்கு பாருங்க.. ப்ரியா குடிச்சாச்சு.. ரவி அனுவின் கிளாசில் பொடி பண்ணி வைத்திருந்த தூக்க மாத்திரையை கொட்டி கலக்கினான்.

மணி 12. ரவி மெல்ல எழுந்து அனுவை பார்க்க மெல்லிய குறட்டையுடன் ஆழ்ந்த தூக்கத்திலிருந்தாள். ஆபிஸ் பேக்கை திறந்து ஒரு பேப்பரை எடுத்தான். டைப் செய்யபட்டிருந்த ஒரு கடிதம் அது.அதை டேபிள் மேல் வைத்தான். மீண்டும் படுக்கை அருகில் வந்தவன் ப்ரியாவை அனைத்து நெற்றியில் ஒரு முத்தம்.. அனுவையே உற்று பார்த்தான்.அனு தைரியசாலி. நிச்சயம் இதை அவள் தாங்கி கொள்வாள். போன வருஷம் ரவியின் அம்மா இறந்தபோது அவள்தான் அவனை தேற்றினாள். ”ரவி,எது நடந்தாலும் life has to go.சரியா...

காலை மணி ஐந்து. ரவி ஹாலில் தலை குனிந்து உட்கார்ந்திருக்க, அனு அழுகையினுடே பேசி கொண்டிருந்தாள்.பக்கத்தில் மோகன். ரவியின் உற்ற நண்பன்.
“என்ன பைத்தியகாரத்தனமா லெட்டர் எழுதி வச்சுட்டு போயிருக்கார் பாருங்க.

மோகன் கடிதத்தை படித்தான்.

அனு

இந்த முடிவை நல்லா யோசிச்சுத்தான் எடுத்திருக்கேன்.எனக்கு அப்புறம் இன்ஷுரன்ஸ் அது இதுன்னு கிட்டதட்ட நாற்பது லட்சம் வரும்.கடனையெல்லாம் அடைச்சுடு..உயிரோடிருந்து உன்னையும் ,ப்ரியாவையும் கஷ்டபடுத்த நா விரும்பல.அது மட்டுமில்ல நாளைக்கு எல்லா கடன்காரனும் வீட்டு வாசல்ல கத்தி மானம் போறதை நிணைச்சு பார்க்க முடியல.யார் வந்து கேட்டாலும் அவர் போயிட்டார்.. ஆபிஸேலேர்ந்து பணம் வரும்.கடனை அடைச்சுடறேன்னு சொல்லி..


ரவி.இது என்ன?முட்டாள்தனம்.செத்தா பிரச்சனை தீர்ந்துடுமா?

ரவி ஒன்றும் பேசாமல் எழுந்து படுக்கையறைக்குள் சென்றான்.
வெளியே மோகன் “அனு இதை அப்படியே விட்டுடு. இந்த மட்டும் மனசு மாறி வந்தானே..வீ ஆர் லக்கி”

பீச் ஹோவென்று இருந்தது.குமாருக்கு அவமானமாயிருந்தது.. சே.சின்னப் பையன் .அவன் கிட்ட இருந்து செயினை புடுங்க முடியல.. ம்ம் குடி கொஞ்சம் ஓவர். இல்லன்னா?சரி.. கசுமாலம் சாவறதுக்குத்தானே வந்தான். பேசாம சாகுடான்னு வுட்டிருக்கணும்.. அப்புறம் செயினை கழட்டியிருக்கலாம்...நம்ம கத்தியை காட்டி செயினை கழட்டுடான்னு சொல்ல..வெறி புடிச்சா மாறி இல்ல கத்தியை புடுங்க பார்த்தான். குத்த சொல்ல ஓடிட்டானே..

சாவையே ஜெயிச்சுட்டீங்க..வாழ்க்கையை ஜெயிக்க முடியாதா என்ன?இப்பவாவது புரிஞ்சுதா...ரவியின் கையில் வழிந்த ரத்தத்தை துடைத்து கொண்டே அனு சொன்னாள்..


Friday, October 9, 2009

மேற்கொண்டு...... கவிதை



அடி மாடுகளை
பார்க்கும் போதெல்லாம்
மனதை ஏனோ
பிசைகிறது

சுரக்கும் வரை
கறந்துவிட்டு
மடி வற்றிய பின்

அடிமாடாக்கி
அண்டை மாநிலத்துக்கு
அனுப்புவதை
நினைத்தால்

ஒரு குறிப்பு:

ஆறு மாசமாச்சு
அன்பு இல்லத்தில்
இருக்கும்
அப்பாவை பார்த்து

ஒரு நடை
போய் வந்தபின்
மேற்கொண்டு
தொடர உத்தேசம்

Thursday, October 8, 2009

பயணங்களில்.......கவிதை


இருக்கை தேடி அமர்ந்து

சற்று ஆசுவாசம் ..


அப்புறம் ? நீங்க ..எங்க ..

வழித்துணைக்கு ஆள் சேர்த்தல் ..


குறும்பு செய்யும் குழந்தை .

விழுந்து விடுவானோ

பெருமையும் சற்று

பயத்துடனும் தாய்


ஆங்காங்கு சிணுங்கும் அலைபேசிகள் .

இப்பதான் ...கிளம்பிச்சு .

இன்ன பிற உரையாடல்கள் ..


கொஞ்சம் நேரம் ஆகட்டும் மாப்ள..

"மூடி திறக்கும் " தவிப்பில் 'மப்பர்கள் "


கடந்து செல்லும் சிற்றுண்டி

விற்பவனின் குரலிலும்

தெறிக்கும் பசி


பிச்சை எடுக்கவில்லையப்பா ..

பார்த்து கொடுங்கள்

மண்டியிட்டு சுத்தம் செய்பவனின்

பரிதாப பார்வையில்

பிச்சை பாத்திரம் ....


வெள்ளைத்தோல் காரியை

வெறித்து நோக்கும்

வெள்ளந்தி மனிதர்கள் ...


சேர்வதே நிச்சயமில்லை

எனினும்

திரும்பும் இடம்

பற்றிய கவலைகள் ..


பற்றியும் பற்றாமலும்

சுழன்று கொண்டேயிருக்கிறது

சக்கரம்


பின் குறிப்பு:ஏற்கனவே எழுதிய கவிதைதான்...திரும்ப வாசிக்கையில் சில திருத்தங்கள் தோன்றியது..மீண்டும் நண்பர்களுக்காக..

Wednesday, October 7, 2009

இப்படியும்.........கவிதைகள்



புத்தம் சரணம்
மார்க்கம்

யுத்தம் மரணம்
நரகம்

மோகம் முத்தம்
சொர்க்கம்

அடுத்த வரி
யோசிக்கையில்
வாசலில்

அம்மா தாயே
பசிக்குது......

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

என்னதான்
இறுக்கமாய்
இருப்பதாக
உன்னை
காட்டி கொள்ள
முயற்சித்தாலும்

கசியும் அந்த
துளி மெளனத்தில்
எனக்கான சம்மதம்
ஒளிந்திருக்கிறது

இன்னும் கொஞ்சம்
அவகாசம் கொடு
என்று கேட்பதாக
கருதிக்கொண்டு
காத்திருக்கிறேன்.....


Tuesday, October 6, 2009

கோவிந்தா...கோவிந்தா...


உலகின் நம்பர் 1 பணக்காரர் யார்?பில்கேட்ஸ்?லட்சுமி மிட்டல்?அம்பானி?ம்ஹிம் இவர்கள் யாரும் இல்லை.சாட்சாத் தேவுடா திருப்பதிசாமிதான் அவர்

ரு. 1 லட்சம் கோடிக்கு அதிபதி ஆனார் வெங்கி
ஒரு காலத்தில் ஏகப்பட்ட கடனாளியாக இருந்த ஏழுமலை இன்றைய தேதியில் உலகின் நம்பர் 1 கோடீஸ்வரர் ஆகி இருக்கிறார்
பெயர் ஏழுமலையான், ஊர்.. ஆந்திரமாநிலம் திருப்பதி

வெங்கடாஜலபதியானவர் பத்மாவதி தாயாருடன் தான் செய்த திருமண செலவுக்காக குபேரனிடம் மீட்டர்,ஸ்பீடு மற்றும் எக்ஸ்பிரஸ் வட்டிகளில்
ஏகப்பட்ட கடன் வாங்கினாராம்.
அந்த பணத்தை வட்டியுடன் திருப்பித்தருவதாக அவர் கூறியிருந்தாராம்.
திருப்பதி ஏழுமலையான் அப்படி பணத்தை திருப்பித்தருவதற்காகத்தான், அவருக்கு உதவும் வகையில் பக்த்ர்கள் இன்னமும் காணிக்கைகளை அள்ளித் தந்து கொண்டிருக்கிறார்கள்

வெங்கடாஜலபதியின் இன்றைய சொத்துக் கணக்கை பார்த்தால் அவர் என்றைக்கோ அந்த கடனை அடைத்திருப்பார் என்பது வேறு விசயம்
ஏழுமலையானின் மொத்த சொத்து எவ்வளவு இருக்கும் என்று நினைக்கிறீர்கள்
ரு.1000 கோடி, 10,000 கோடி... இல்லை

அவரது சொத்து மதிப்பு ரு,1 லட்சம் கோடியையும் தாண்டிவிட்டது.
கடல் மட்டத்திலிருந்து 3,200 அடி உயரத்தில் 10,33 சதுர மைல் பரப்பளவில் விரிந்து கிடக்கிறது திருப்பதி கோயில். உலகிலேயே அதிக பக்த்தர்கள் வந்து போகும் நம்பர் 1 கோயில் இதுதான். தினமும் சராசரியாக 1 லட்சம் பக்த்தர்கள் வருகிறார்கள்.

ஓரே ஒரு வினாடி நேரம் வெங்கடாஜலபதியை தரிசிக்க நீங்கள் குறைந்த பட்சம் 48 மணி நேரம் காத்திருந்தால் தான் முடியும். சராசரியாக ஆண்டுக்கு 4 கோடி பேர் இங்கே வருகிறார்கள். அவர்கள் தரும் காணிக்கையால் உலகின் மிகப்பெரிய பணக்கார இந்துக்கோவிலாகத் திகழ்கிறது திருப்பதி.

திருப்பதியின் விசேஷம் இங்கு இந்து, முஸ்ஸீம், கிறிஸ்தவர் எனப் பலதரப்பட்டவர்களும் மிகப் பெரிய அளவில் காணிக்கை செய்திருப்பதுதான்.
தாஜ்மகாலை கட்டிய முகலய மன்னர் ஷாஜகான் வெங்கடாஜலபதிக்கு எட்டு சுற்று சங்கிலி ஒன்றை வழங்கியிருக்கிறார். இதன் எடை100 கிலோவுக்குமேல்.

மன்னர் ஜஹாங்கீரும் இந்தக் கோவிலுக்கு விலை மதிபப்ற்ற ஆபரணங்களை வழங்கியிருக்கிறார். இங்கிலாந்து மன்னர் ஜார்ஜ் மற்றும் ராணி விக்டோரியாவும் கூட தங்கள் பெயர் பொறித்த பல ஆபரணங்களை வழங்கியிருக்கிறார்கள்.
இங்கு காணிக்கையாக வந்த நிலப்பத்திரங்களை அடுக்கி வைக்க மட்டுமே ஒருவரின் வாழ்நாள் போதாது என்கிறார்கள். இந்த பத்திரங்கள் அனைத்தும் வெங்கடாஜலபதி பெயரில் இருப்பது இன்னும் விசேஷம்.


என்ன ஒரு கொடுமை.தரிசனத்திற்கு போனால் கூண்டில் போட்டு அடைத்து விடுகிறார்கள்.பாலாஜியை அடைவதற்குள் நொந்து நூடில்ஸ் ஆக வேண்டியிருக்கிறதுஒரு முறை நான் பாதியில் ஓடியே வந்துவிட்டேன்.


தூள் திரைப்படத்தில் மயில்சாமியின் ஜிலேபி காமெடியை ரசிக்காமல் இருக்கமுடியுமா?