Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Friday, December 14, 2012

திரைக்கடலோடுதல்...







ஆனை.. ஆனை
அழகர் ஆனை

கட்டிக்கரும்பை முறிக்கும் ஆனை
காவிரிக்கரையை கலக்கும்
ஆனை

அப்பாக்களுக்கு நேரம் இருப்பதில்லை
தாத்தாக்கள் உடன் இருப்பதில்லை
கதை கேட்கும் பொழுதுகள்
ஸ்கைப்பில் மட்டுமே
வாய்க்கிறது பேரன்களுக்கு..



நாளை முதல்
நீளத்தொடங்கும் என் தனிமை...
ஜெட்லாக் பற்றி விளக்கிக்கொண்டிருக்கிறான்
மகன்... .மனைவியிடம்

Friday, June 10, 2011

கண்ணாடி நிழல்..




அலைந்து கொண்டிருக்கின்ற
அவசரகதியில் அங்கமிங்குமாய்
அந்த நிழல்கள்

எனக்கு அருகாமையில் விசித்திர
ஒலியெழுப்பிக்கொண்டேயிருக்கிறது
ஒரு பூதாகர வஸ்து

மிதந்துகொண்டு இருக்கும் நான்
அந்த ஒலியில் மிரள்கிறேன்

செவ்வக பெட்டியின் மீது 
முளைக்கிறது சிறிது வெளிச்சம்
ஆறுதல் வேண்டி
தூவப்படும் உணவு


பொன்மயமாய் ஜொலிக்கும்
என்னுடலை
உடலை வெறித்து பார்த்து
நகர்கிறதுஅந்த நிழல்
அசைவற்று , அமைதியில்
இருப்பதை நான் காணவில்லை
ஒரு நிழலானேனும்...

எதையோ துரத்தி கொண்டே
இருக்கின்றன நிழல்கள்
துரத்தப்பட்டுக்கொண்டும்தான்

சுதந்திரமாக நீந்தியபடி
ரசித்துக்கொண்டே இருக்கிறேன் நான்..
...சுதந்திரமாக நீந்தியபடி

Monday, August 30, 2010

(பெயர் மாற்றப்பட்டுள்ளது)


அப்பனாலேயே
புணரப்பட்டவள் நான்

ஒரு தலைக்காதலனால்
ஆசிட் ஊற்றப்பட்டவள்


கூட வந்தவர்களுக்கு
ஊற்றி கொடுக்க வைத்தான்
கட்டியவன்

கூடவே படுக்கவும்
சொன்னான்

இணையத்தில் அதையும்
நீங்கள் பார்த்திருக்கலாம்

அது நான் இல்லை
இருந்தாலும் அவளின்
(மாற்றப்பட்ட) பெயராக
நான் தான் இருந்தேன்




Saturday, May 22, 2010

மெழுகு நதி


சலனமற்று கிடக்கின்றன
நம் பிடிவாதங்கள்
ஆவி அடங்கி கொண்டிருக்கிறது
கோப்பைக்குள்
மரங்களின் மெளன அஞ்சலி
காற்றின் மரணத்திற்கு

Friday, May 21, 2010

பேசிக் கொண்டிருக்கிறார்கள்


அவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்
உரக்க ஒலிக்கும் மெளனமே சாட்சியாக
உறங்கி கொண்டிருக்கும்
சில வார்த்தைகளும் அதை
ஆமோதிக்கின்றன

அவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்
வெறுமையிலிருந்து வெறுமை நோக்கி
செல்லும் வழியில் இடைப்பட்ட இடத்தில்
விரவியிருக்கும்
பிரியங்களின் மேல் நின்று கொண்டு

அவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்
முதலில் யார் கழட்டுவது முகமூடியை
என்ற யோசனையின் ஊடே

கொஞ்சல்கள் ஒளிந்திருக்கின்றன
இருவரின் நக இடுக்குகளின் உள்ளும்
நீதான் இல்லை நான் தான் இல்லை
நாம்தான் என்பது அவர்களுக்கு
தெரிந்தேயிருக்கிறது
ஏதோ ஒன்று உடைய காத்திருக்கிறார்கள்
அதுவரை பேசிக்கொண்டே இருக்கட்டும்

Monday, May 10, 2010

ராஜாதீ ..ராஜ...யாரங்கே ?


ஒட்டு போடப்பட்டிருக்கிறது
இளவரசியின் பட்டுப்பாவாடை

இடையில் துருத்திக் கொண்டிருக்கும்
அட்டைக்கத்தின் உட்புறம் குழந்தை வரம்
கேட்டு யாரோ
எழுதிப்போட்ட திருவுளசீட்டு

பட்டத்து மகிஷியின் பதவிசு
பார்க்கிறவர்களுக்கு பொறாமை
இருபது முழம் சேலையும் அழுக்கு பஞ்சு கச்சையும்
கால்கிலோ கவரிங் தோடும்
அரை மணி நேரமாக அவஸ்தை அவளுக்கு
மாசத்தொல்லை மயிரு நாறுது

காது வரை சிரிக்கிறான் விதூஷூகன்
வற்றிய வயிறுக்கு ஏழையின் சிரிப்பு
அறிமுகம் இருக்குமா? உள்ளுக்குள் அறுக்கிறது
ஆத்தாவின் இருமல்

நேற்றிரவின் காரித்துப்பல்களை
அரிதாரம் பூசி மறைத்திருகிறான் ராஜாதிராஜ...
ஆணவமாய் அரியணையில்
துப்பியவன் முன் வரிசையில்

கனவு காணத் தெரியாத புரவி பாவம்
கொள்ளை மறந்தே விட்டது
காலாட்படையினருக்கும் யுத்த மறக்கடிப்பு
அரசு வைத்தியம் இலவசம்
எஞ்சியிருக்கும் துருவேறிய ஆயுதங்களின்
எடைக்கு எடை
காலி பாட்டில்கள் டாஸ்மாக்கில்

முடை நாற்ற திரைசீலைகள்
கரப்பான் முட்டைகளும் ,பல்லி மூத்திரங்களும்
சக பரிவாரங்களாய் வீற்றிருக்கும் அவை
திரை விலகுகிறது
ஆர்ப்பரிக்கும் விருந்தினர்கள்

கந்தலும் கிழிசலும் காஞ்சிபுரமாகின்றன
குடிகள் கோமானாகிறார்கள்

ஒருவன் மன்னனாகிறான்

இன்னொருத்தி அல்லியாகிறாள்

அவள் புருஷனுக்கு
தர்பாரில்
கால் நகத்தில் அழுக்கெடுக்கும் பணிக்கு உத்தரவு

பழம்பெருமையை பட்டாக்கி உடுத்தி வருகிறது

பட்டத்து யானை
நல்ல வேளை
பிள்ளையார்
கொழுக்கட்டையை
முன்னரே
சாப்பிட்டு விட்டது மூஞ்சூரு

எட்டுத்திக்கும் ஏவப்பட்டிருக்கிறார்கள்
பாகன்கள்
சோளப்பொறி சேகரித்து வர உத்தரவு

சூம்பிய மார்பும் ,செத்த இடையுமாக
அரசு நர்த்தகி
அரை இஞ்சுக்கு அரிதாரம் பூசி

அஞ்சனம் தீட்டப்பட்டிருந்த விழிகளில்
ஒன்றில் பூ
இளித்த கால் கொலுசுகளின்
களி நடனம்
மேடை கோணல் என்ற பதம்
இன்னும் புழக்கத்தில்

சகுனியும், விதுரனும்
சரிபாதி கலந்த
சாணக்கியன்

எச்சில் ஊறுகாய்க்கு சாராயக்கடையில்

சண்டையிட்டதில்
காயம்
தண்டத்தால் ஒத்தடம்


காசென்றால் கதவை அடைக்கும் கூட்டம்

ஓசுக்கு ஊர் திரண்டு வந்திருக்கிறது

கூத்து முடியட்டும்

கூட்டி பார்க்கலாம்

வருவதை பிரித்துக் கொள்வோம் இல்லை
பிரித்துக் கொள்ள
நம்மிடம் எவ்வளவோ....
எதற்கும் ஈரத்துண்டையும்
நனைத்து வையுங்கள்
யாரங்கே?

Thursday, April 15, 2010

மீதமிருக்கும் கதைகள்.......2


அங்க தேடிப்பாருப்பா
இங்கதானே வச்சிருந்தேன்
அன்னிக்கு கொல்லையில
எரிச்சீங்களே அந்த
பழைய மரப்பொட்டி
அதுல இருந்துச்சோ?
எதுக்கும் பரண் மேல
ஒரு தடவை பாரேன்
கொஞ்சம் மூக்குப்பொடியை
உறிஞ்சியபடி
நிணைவு அடுக்குகளில்
துழாவுகிறார் அப்பா
அவர் தொலைத்தது
எதுவென அறிந்துகொள்ள
இன்னும் கொஞ்சம் நாளாகும்
எனக்கு என்பது மட்டும் புரிந்தது

.........................................................

உனக்கு ஒன்னுமே தெரியலை
அப்பா என்கிறான் மகன்
உனக்கு இப்போது
புரிந்திருக்குமே
என்பது போலிருந்தது
அப்பாவின் பார்வை

Monday, April 5, 2010

நேர் எதிரில் ஒரு குறுக்கு சந்து




நாகராஜிக்கும் தாஸப்பிரகாஷுக்கும்

எனக்கு சற்று
அடையாள குழப்பம்
எப்போதுமே உண்டு

இருவரும் சற்று கறுப்பு
கூடவே பிரஷ் மீசையும்
பரஸ்பரம் மாற்றியே
அழைக்கிறேன்

ஆனால் அவர்களுக்கு
என்னிடம் இந்த குழப்பம் இல்லை
என்னைப் போல் வேறோருவன்
அவர்களுக்கு அறிமுகமாகாமல்
இருக்கலாம்

தூண்டிலுக்கு இருக்கும்
பொறுமை மனசுக்கில்லை
ஒவ்வொரு அவசர சுண்டுதலிலும்
மீன் தப்பித்துக் கொள்கிறது
தற்காலிகமாய்

Thursday, March 18, 2010

பிறிதொரு சரித்திரம்...........



காலம் கடந்து நிற்கும்

புதினமொன்றை வாசிக்க

ஆரம்பித்திருந்தேன்

கடைசி வரியிலிருந்து


குருதிப்புனலில் தொடங்கும்

சரித்திரம் அது

பின் வாசிப்பில்

இரத்தக்கறைகள் சற்றே

உலரத்தொடங்கியிருந்தன



கையகல சதைத்துண்டும்

சுருண்டிருக்கும் கற்றை முடியும்

அதன் கால் பாவி நிற்கும்

கைப்பிடி மண்ணும்தான்

இக்கோரத்தின் பிரதான பாத்திரங்கள்



அளவிலா ஆசைகளும், ஆணவமும்

இந்த அக்கினியில் நெய்யாக !



விழிப்பில் இருந்து மீண்டும்

உறக்கமும் அதற்குறிய கனவும் என்று

முன்னிரவு நோக்கிய பயணம் போல்

உணர்ந்தேன் அவ்வாசிப்பை


சிரசுகள் ஒட்டிக்கொண்டன

உடைந்த வாள்களும், ஈட்டிகளும்

கரங்களில் சதிராட்டம்


நறுமணத்தை நுகர ஆரம்பித்தேன்

கூடவே வந்த இன்னிசையையும்

என் உடல் பின்னோக்கி

இயங்க முடிந்தது

மெல்ல தலை திரும்ப தொடங்கியிருந்தது

முதல் அத்தியாயத்தின் முதல்

வரிக்கு வந்திருக்கிறேன்

ஆனால் தலைப்புதான் பொருத்தமில்லாமல்

முற்றும் என்று

Thursday, March 4, 2010

முடிச்சவிழும் தருணங்கள்......3


நகர்தலுக்கும்
மையங்கொள்ளுதலுக்கும்
உள்ள வித்தியாசம் புரிகிறது

இரண்டுக்கும் ஆசைதான்
எனினும் சாத்தியம்
அறிவதால் நிராசையாகிறது

கடவுள் என்று
தன்னை சொல்லிக்கொண்ட
ஒருவனுடன் உரையாட
நேரிட்டது.

நல்லவனாய் இருப்பதைப்பற்றி
பேச்சு வந்தது.
அப்படி இருக்கப்போய்
என் தொடைக்கறியை
வேடனும் புறாவும்
பகிர்ந்து கொண்டார்கள்
என்று சொன்னேன்.

இல்லையென்றால்
புறா உணவாகியிருக்கும்
வேடன் சபித்திருப்பான்
என்பதையும் சேர்த்து


Friday, February 12, 2010

முடிச்சவிழும் தருணங்கள்... 2



ஆழ்ந்த நித்திரைக்கான
கனவுகள்தான்
எல்லா தலையனைகளுக்கும்!

பார்த்து கொண்டிருக்கையில்
ரசம் போனது கண்ணாடி.
நான் மறைந்து
நீ தெரிந்தாய்!

அடிபடும் இடத்தில்
மட்டும் நொடிப் பொழுது
வலியை காட்டும்
ஐந்தறிவு பிராணி!
உடல் முழுதும்
அதிர்கிறது ஒற்றை
சொல்லுக்கே!
வெட்கமாய்த்தான்
உணர்கிறது என்
ஆறாவது அறிவு!

எங்கோ கேட்கும்
வார்த்தைகளை சேகரிக்க
ஓடிக்கொண்டிருக்கிறேன்
மெளனம் என்னை
துரத்திக் கொண்டே
வருகிறது பேரிரைச்சலோடு!

Wednesday, February 10, 2010

மொழியின் விளையாட்டு




(”ம்ராயோஜ் க்மாஸ்டா” வின் மொழி பெயர்ப்பு கவிதை)


வால் முளைத்திருந்தது என்
நித்திரையை கெடுத்தவளுக்கு
எங்கோ முன்னரே பார்த்த
பிம்பம் போலவும் பிரமை
அலுத்து போய் எழுந்தேன்.
வெளியில் சென்று வாங்கி
வந்த எல்கான்ஸா ரம்மை
குடித்த களைப்பு மீண்டும்
மட்டையாகிவிட்டேன்
காலையில் பார்த்தால்
எமிலி டிக்கின்ஸின்
நான்கு பக்கங்களில்
பச்சை நிறத்தில் பற்குறிகள்
மீண்டும் அரை போத்தல்
எல்கான்ஸாவுடன்
வீடு திரும்பினேன்
என் புத்தக அலமாரியை
பீராஞ்சு கொண்டிருந்தது
அதே திருட்டுப் பூனை
பச்சை நிற பற்களுடன்!

Friday, January 29, 2010

முடிச்சவிழும் தருணங்கள்....



எலி கடித்த கால் சட்டை
விரல் நுழைகையில்
பல்லிடுக்கில்
கடலை உருண்டையின்
மிச்சம்!!

இங்கதானே வச்சேன்
காணலையே?
அப்பா தேடும் அந்த
பத்து ரூபாய்!!

காட்டிக் கொடுக்க
விரும்பாமல்
கக்கூஸில் கழிந்தது
சாந்தி புரோட்டாவும்
தேங்காய் குருமாவும்.


எதையோ தேடுகையில்
புடவை தலைப்பில்
பொத்தி வைத்திருந்த
புகைப்படம்!
எனக்கும் அவள்
ஞாபகம் வந்தது!!

குனிந்து கீழே விழுந்த
காசை எடுக்கையில்
யாராவது பச்சைக்குதிரை
தாண்ட மாட்டார்களா?
என்ற ஏக்கமும்!!

Friday, January 22, 2010

10 தூக்க மாத்திரைகள்


துரத்துவது யார் என்று
திரும்பி பாராமலே
அனுமானிக்க முடிகிறது

அறிந்தும் அறியாமலும்
செய்த அத்தனையும்தாம்
அரூபமாய்!

கடல் மலை தாண்டி
உயிரை பதுக்க
ஓடுகிறேன்

சின்னதாய் தேங்கியிருந்த
கோணமற்ற அந்த
சிறு குளத்தில்
முகம் பார்க்கவும்
சலக்கென்று குதித்து
ஒலியெழுப்பவும்தான்
அதீத ஆசை!

----------------------------------------------

கனவுகள் விற்கலாம்
என்று கடை பரப்பினேன்
விலையென்று ஒரு
நிர்ணயம் இல்லை

வந்தவர் எல்லோரிடமும்
அதுவே இருந்தது.

உனக்காக ஒன்று
கண்டு தருகிறேன்
வாங்குகிறாயா?
காதில்தான் கேட்டேன்!

சினத்தை காட்டி
சீ என்று உமிழ்ந்தான்
வலிக்கவில்லை
அதில் நியாயம்
இருந்ததாலோ என்னவோ?

Monday, January 18, 2010

”நீ”


நீ என்ற சொல்லை
எப்போது முதலில்
கேட்டோமென்று
நினைவிருக்கிறதா?

நீயுமா என்றே
அடிக்கடி கேட்கப்படுகிறோம்

உரிமைகள் நீ என்று
அழைக்கும் போது
ஏற்றுக் கொள்கிறோம்

முரண்களில்
தே நீ சினமூட்டுகிறது

நெருக்கத்தின் வெளிப்பாடாகவும்
வெறுப்பின் உமிழ்தலாகவும்
”நீ” அடையாளப்படுத்தப்படுகிறது


நான் மற்றும் நாமுக்கு
நீ என்பது
ஆரம்ப எழுத்தாகவே...


எல்லோரும் நிச்சயம் கேட்பீர்கள்.
நீ என்ன சொல்ல வருகிறாய் ?
நான் கேட்கிறேன்.
நீ என்ன புரிந்து கொண்டாய் என்று!!




Wednesday, January 13, 2010

நாம்


என் வழியெங்கும்
அது காத்துக் கொண்டிருக்கிறது
ஒரு வேட்கையோடு..

இங்கு நான் என்பது
நீயும்தான்

அறியாமல்
அதன் பலியாகிறோம்
தெரிந்தே அடுத்தவனை பலியாக்குகிறோம்..

ஒத்த பெயருடைய இருவரில்
ஒருவனை சாய்த்து இட்ட கூக்குரல்
குருவையே வீழ்த்தியது

குருஷேத்திரம்’ முதல்
தொடர்கதையாய் வரும்
எல்லா துரோகங்களின் முடிவிலும்
கேட்கப்படும்
”நீயா’ என்ற கேள்விக்கு
நாமாகவும் இருந்தோம்
என்பது வேதனையின்
வெளிப்பாடாகவே.

Tuesday, January 12, 2010

நான்


எழுத்துக்களை கலைத்துப் போட்டு
வார்த்தைகளை வார்க்கும்
சிறுபிள்ளை விளையாட்டை
திரும்ப ஆடும் ஆசை

இக்கணம் தோன்றிய
அத்தனையும் இங்கு
தனித்தனி எழுத்துக்களாய்தான்

இதுவரையிலான நிகழ்வுகளிலிருந்து
சில எழுத்துக்கள்
சிதறி கிடந்தது

பொருத்தமான வார்த்தைக்கு
கொஞ்சம் மெனக்கெடத்தான்
வேண்டியிருந்தது

இறுதியில் எஞ்சிய ஐந்து வார்த்தைகள்

4.திமிர்
1.ஆணவம்
3.அகம்பாவம்
2.தற்பெருமை
5.நான்

இரண்டெழுத்தில் ஒரு
வார்த்தையை

“நான்” தேர்ந்தெடுத்தேன்.

Saturday, January 9, 2010

நசுங்கி போன நெஞ்சுக்குழி


வீட்டுக்குள் சுற்றிக்கொண்டேயிருக்கிறது
சாவின் வாசனை.

பெரிசா ஒன்னுமில்லை
பெரிசுக்கு இழுத்துக் கொண்டிருக்கிறது

இப்பவோ, அப்பவோ
எப்பவோ என்பதே
எல்லோரிடமும் பேச்சு


தாங்கலாம் ஆனால் தங்காது
வைத்தியரின் வாக்குமூலம்

அதுதான் தெரியுமே
அதிலென்ன புதுசு

கஷ்டப்படாம போயிட்டா
நல்லாயிருக்கும்

யார் கஷ்டப்படாம?
மூத்திரம் அள்ளி கொட்டும்
மூத்தவன் சம்சாரத்தின் அங்கலாயிப்பு

சஷ்டி சொல்லுங்க
அப்படியே கொஞ்சம்
சீமைப்பாலை ஊத்திப்பாருங்க.

என்னவோ மனசுல இருக்கு
அதான் இழுத்துக் கிட்டுயிருக்கு
என்னவா இருக்கும் ?

சினை நண்டு விரும்பி
தள்ளுவாரு.
அது அம்மாவாசைக்கு
அடுத்த நாள்தானே கிடைக்கும்

அட! அம்மாவாசைன்னா தங்காது
நண்டை படையல் போட்டுடலாம்
சாவுறதுக்கும் கொடுப்பினை வேணுமய்யா!

எலப் போட்டு
சோத்தை அனுபவிச்சவருக்கு
இருபது வருசமா
கஞ்சி ஊத்தினஅந்த
அலுமியத்தட்டுதான் நசுங்கி
நெஞ்சுக்குழியை அடைச்சுக்கிட்டு
இருக்குன்னு யாருக்குமே புரியலை..


Thursday, December 17, 2009

அர்த்தமில்லாத கவிதைகள்



பிரி என்றும்
பிரிக்காதே என்றும்
போராட்டமாம்
சீந்துவாரின்றி கிடக்கிறேன்
உலையில்

இருப்பது ஒன்று
போவதும் ஒருமுறைதான்
பிரவாகமாய் வெடித்தான்
தானைத் தலைவன்
அவன் பவளவிழாவில்
தீக்குளித்த தொண்டன்
மனைவியின் வயிற்றில்
ஆறுமாத வாரிசு

எங்கள் ஆட்சியில்
எட்டும், ஒன்றும் பத்து
உங்களுக்கு ஒன்று அதில்
ஆர்ப்பரித்த கூட்டம்
ஒன்றை வாங்கிகொண்டது
ஒன்பதை சமமாக பிரித்தான்
தலைவன்
ஆளுக்கு மூன்று என்று

இல்லம் தானம்
இந்த உடலும் தானம்
பக்கம் பக்கமாய்
தம்பட்டம்
நாட்டையே தானமாய்
தந்து விட்ட நம்மைத்தான்
கண்டு கொள்வதாய்
இல்லை யாரும்

Tuesday, December 15, 2009

முலைப்பால் அடர்த்தி..



உள்ளங்காலில் பட்ட பிரம்படியாயும்
சுவற்றில் இடித்துக்கொண்ட
முழங்கை அதிர்வாயும்
தெறித்துக்கொண்டே
இருக்கிறது காமம்

வரைமுறையே இன்றி
அத்தனை நிழல்களும்
இரையாகின்றன
என் வன்புணர்ச்சிக்கு

சுயமாய் விரும்பி வந்தவளுக்கு
இறக்கைகளும் இருந்தது

முன்னும்,பின்னும்
நீந்தும் பட்சியாய்
இயங்கிவிட்டு போனவளிடமிருந்து
என் குறியை மீட்க முடியவில்லை

கண்கள் பனியில்
வியர்த்திருந்தது
முலைப்பாலில் குளித்த
பெருமிதம்

வெட்கை தணிந்து அடுத்த
உறவுக்காக காத்திருக்கிறேன்
அம்மா என்ற அரற்றலோடு...