Friday, December 2, 2011

வெம்மை





அம்மா கொளுத்திக்கிச்சு மாமா என்றாள் சுமதி..

திடீரென்றது . என்னடி சொல்ற தங்கம்..விளையாடுறியா ?

இல்ல மாமா .. இப்பதான் ..அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சண்டை..அப்பாவை போட்டு அம்மா அடிச்சிச்சு .. சீமெண்ணெயை ஊத்திக்கிட்டு ...

 12 வயசு பெண் . குரலில் பிசிறில்லாமல் தெளிவாக சொல்கிறாள் .. அம்மாவை பெரியாஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போயிருக்காங்க.. அப்பாவை போலிஸ்காரங்க கூட்டிகிட்டு போயிட்டாங்க..தம்பி தூங்கிட்டு இருக்கான் . எனக்கு என்னமோ ஆயிடுச்சு..பாவாடையெல்லாம்..ஒரே ரத்தம்..


இன்னிக்குத்தான் பிரச்சாரம் கடைசி நாளு.. தலைவர் வந்துட்டு போற வரைக்கும் அங்க இங்க நகரமுடியாது .. அடுத்த வாட்டியும் நம்ம ஆட்சிதான் .. அப்புறம் இருக்கவே இருக்கு உள்ளாட்சித்தேர்தல் .. இந்த ட்ரிப்பு எப்படியும் கவுன்சிலர் சீட்டு நிச்சயம்.. சந்திரனின் செல் அடித்தது .செல்வி ..

முந்தாநாளே கேஸ் தீர்ந்து போச்சு .. கெரசினும் இல்லை.. எப்படி பொங்கி புள்ளைகளுக்கு சோறு போடறது . உனக்கென்ன .. ஓசியில குடிச்சிட்டு பிரியாணியை தின்னுட்டு ஆட்டோவில கத்திகிட்டே சுத்துவ.. நிறுத்தாமல் பேசிக்கொண்டே போனாள் செல்வி ..

ஏய் ...கொஞ்சம் நிப்பாட்டறியா.. புள்ளைகளுக்கு கடையில இட்லி வாங்கி கொடுத்தனுப்புறேன்..அப்படியே கெரசினும் ,மீனும் வரும்.. பொங்கி வை. தலைவர் வந்துட்டு போனதும் வந்துர்றேன் என்றபடி கட் பண்ணினான் சந்திரன் .

விட்டிற்குள் நுழையும்போதே எரிஞ்ச வாசனை அடிக்குது . சுமதி தம்பியை மடியில போட்டு கிட்டு திண்ணையில் இருந்தாள் .. பக்கத்து வீட்டு அம்மா கூட . புள்ளை உக்கார்ந்துட்டா .. துணி மாத்தி உக்கார வச்சிருக்கேன் . என்ன அழுத்தமா இருக்கா பொட்டச்சி.. அம்மாக்காரி உடம்பு பத்தி கிட்டு எரியுது .. அப்பன் அண்டாத்தண்ணியை கொண்டு வந்து ஊத்தினான் .. கழுத்துக்குகீழ முக்காவாசி வெந்திருக்கும் .. அதுக்குள்ள போலிஸ் வந்திருச்சு .. புருஷனை கையை காட்டிட்டா அவ . பக்கத்து ஊட்டுக்காரி சொல்லிக்கொண்டே போனாள்  .

இல்ல மாமா ..அப்பா மேல தப்பு இல்லை .. எங்களுக்கு இட்லியும்  ,புரோட்டாவும் செந்தில் அண்ணன் கிட்ட வாங்கி கொடுத்து விட்டாரு ..கெரசினும் கேன்ல வந்துச்சு .. இன்னிக்கு அவன் வரட்டும் .. ரெண்டுல ஒன்னு பார்த்துட்டுத்தான் அடுப்பை பத்த வைப்பேன்னு அம்மா சொல்லிடுச்சு .. நானும் தம்பியியும் சாப்பிட்டுட்டு டிவியை பார்த்துக்கிட்டிருந்தோம்.. தம்பி தூங்கிட்டான் .. அப்பா வந்துச்சு ..


உனக்கெல்லாம் எதுக்குய்யா பொண்டாட்டி ,புள்ளைங்க..அப்படியே உன்  கட்சி ஆஃபீசிலயே இருந்துக்க வேண்டியதுதானே.. விரால மீன் கவரை விசிறியடித்தாள் செல்வி ..

ந்தாப்பாரு செல்வி.. எலெக்‌ஷன் நேரம் . அப்படித்தான் இருக்கும்.. தலைவரு காலைலேர்ந்து ஒன்னும் சாப்பிடலையாம் .. மீட்டீங்க்ல சொன்னாரு ..அப்படியே அழுதுட்டேன்.. போய் அடுப்பை பத்த வை..நல்லா மாங்கா போட்டு மீன் குழம்பு வை.. நாளைக்கு ஒரு நாள் பொறுத்துக்க ..கேஸ் வந்திரும் என்றான் சந்திரன் ..

முகம் கழுவி கைலி மாற்றி திரும்புவதற்குள் கெரசின் வாசம் சுர்ரென்று மூக்கில் ஏறியது .. தொப்பலாய் இருந்தாள் செல்வி.. இந்தாய்யா .. நீயே பத்த வை .. கொளுத்திட்டு என் மேலயே சோறாக்கிக்கோ என்றவள்..சடாரென்று தீக்குச்சியை உரசி..

முழுக்க வெந்திருச்சு .. உசிர் மட்டும்தான் இருக்கு .. முகம் அப்படியே இருக்கு.. பெரிய கண்ணு செல்விக்கு .. கண்ணாலயே கவுத்துடுவான்னு  ஆச்சி அடிக்கடி சொல்லும் .. கணுக்காலை கூட அடுத்தவன் ..அதுவும் பொம்பளைங்க கூட பார்க்கக்கூடதுன்னு இருப்பா .. தழைய , தழைய சீட்டிப்பாவாடை கட்டி கிட்டு கொலுசு சிணுங்க அவள் ஓடியது ஞாவகம் வருது .. என்னடி கண்ணுன்னு கன்னத்தை தொடப்போனாக்கூட , தட்டி விட்டுட்டு ஓடிருவா தங்கம்.. இன்னிக்கு. கிட்டதட்ட முக்கா அம்மணம்.. கண்கள் மூடியிருந்தது .. 

மெட்ராஸ் கொண்டு போலாமான்னு பார்த்தோம்.. ஆனா பிரயோசமில்லன்னு பெரிய டாக்டர் சொல்லிட்டாரு . போயிரும்னு சொல்றாரு .. புள்ளை வேற பெரியவளாயிட்டா .. அவ ஆத்தாக்காரி மூஞ்சியலயே முழிக்கமாட்டேன்னு சொல்லிட்டா.. புலம்பினாள் செல்வியின் ஆத்தாக்காரி.. எனக்கு அக்காமுறை.. என்ன சொல்றது ..செல்விக்கு ஏதோ தோணியிருக்க வேண்டும்.. ஒரு முறை உடம்பை கூனி குறுக்கிக்கொண்டாள்.. கண்ணை திறந்து என்னைப்பார்த்தாள். ஒரு நொடிதான் ..முகத்தில் ஒரு வேதனை..

என்னண்ணே... இன்னும் கொஞ்சம் பொறுத்து , இந்த சிறுக்கி செத்தப்புறம் வந்திருக்க கூடாதா? என் சுபாவம் தெரிஞ்சு எப்படிண்ணே ?

இதுதான் அவள் மனதில் ஓடியிருக்க வேண்டும்..