Tuesday, July 27, 2010

இன்ன பிற





பத்ம வியூகத்தில் அபிமன்யூ
வைகுண்ட ஏகாதசிக்கு
இரண்டு படங்களாம்
பராசக்தியும் , பெண்சிங்கமும்


கூவாகத்தில் சிலை
பீஷ்மருக்கு
செருப்பு மாலையும்
விந்தாபிஷேகமும்


சர்ப்ரைஸ் ஷாக்
பீமனை சரவண பவனில்
சப்ளையராக பார்த்ததில்
கதை என்ன ? என்றேன்
செருப்பு மாறிப் போச்சு என்றான் .
அர்ஜீனனுக்கு மதுரையில் வேலையாம்
கூலிப் படைக்கு தலைவனான்
வச்ச குறி தப்பாது


சோழி உருட்டி ஜோசியம்
சகாதேவனுக்கு கிளி
சூப்பு ரொம்ப இஷ்டம்


லேசர் சிகிச்சைக்கு முன் பதிவு கியூ
திருதராஷ்டிரன் , குந்தி சகிதம்
நாங்க இருக்கோம் என்ற
இளைஞனை வெறிக்கிறாள் .
மூச்சில் உஷ்ணம் ஏறுகிறது
துரியோதனன் தொடையில்
டாட்டூஸ் குத்தப்படுகிறது



இலவச டிவி
கிருஷ்ணனுக்கும் ஒன்று கிடைத்தது
ஜெமினி சானலில் என்.டி.ஆரை
பார்த்த பிரமிப்பு அவனுக்கு



மனுநீதி சோழன் கதை
தருமனுக்கு சொன்னார்கள்
கோபாலபுரம் தரிசனம்
கோடி புண்ணியமாம்
மேல்சபையில் சீட்டு
அவனுக்கும் நிச்சயமாம்

நேரடி ஒளிபரப்பாம்
துச்சாதன துகிலுரிதல்
நிகழ்ச்சியை வழங்குபவர்கள்
போத்திஸின் சாமுத்திரிகா பட்டு

Friday, July 23, 2010

கிளியுடன் ஒரு இரவு





சின்ன முருகனுக்கு அவன் சொந்த பெயரே மறந்து போய்விட்டது.காரணம் ’கிளி” என்றே அவன் பெரும்பாலும் அழைக்கப்படுவதுதான். அவனுக்கு சொந்த ஊர் திண்டுக்கல் பக்கமாம்.சித்தி கொடுமை தாங்காமல் 14 வயதில் வீட்டை விட்டு வந்து விட்டான். பசி தாங்காமல் நின்றிருந்த ஒரு லாரியில் பின்னால் ஏறி படுத்து தூங்கிவிட்டானாம். லாரி டிரைவர் கன்னியப்பன் பார்த்து சாப்பாடு வாங்கி கொடுத்து தனது லாரியில் கிளினர் வேலைக்கு வைத்து கொண்டார்.அன்று முதல் முருகன் ”கிளி” யானான்.

தாம்பரம் விரைவு பேருந்து நிலையத்தில் நெல்லை போவதற்காக நண்பனுடன் காத்திருந்தேன். எல்லா வண்டியும் நிரம்பி வழிந்தது. ஆம்னி பஸ் நிற்கவேயில்லை. நண்பன் சொன்னான். மச்சான் லாரில போலாம். தாம்பரம் செக்போஸ்ட் அருகில் தான் லாரிக்கு டிக்கெட் ? போடுகிறார்கள். சின்ன முருகன் என்ற கிளியை அங்குதான் சந்தித்தேன். நாகர்கோயில் போகும் லாரி அது.(ஆண்டவன் அருள்). அண்ணே ..உள்ள கேபின் 100 ரூபா..5 பேர் ஏத்துவோம். பின்னால தார்பாய் மேல படுக்கலாம் 25 ரூபா ஆகும். ஆனா காத்து பிச்சுகிட்டு அடிக்கும் என்றான். சரி 500 ரூபா நானே தர்றேன்.. வேற டிக்கெட் ஏத்தாதே என்றேன். அவன் சட்டென்று பயந்து போய் டிரைவரை கேளுங்க என்றான். கன்னியப்பன் என்கிற டிரைவர் செக் போஸ்டில் வரி மற்றும் "தண்டம் "அழுது” விட்டு வந்தவர் எங்களை சற்று சந்தேகித்து பின் சம்மதிக்க என் முதல் லாரி பயணம்(நீண்ட) தொடங்கியது.

ஏற்கனவே கால்புட்டி உள்ளே போயிருந்தாலும் பயணத்தின் போது இருப்பு வைத்திருப்பது என்
ப(வ)ழக்கம்..கன்னியப்பனிடம் அடிக்கலாமா என்று அனுமதி கேட்க சார் இதை போய் கேட்பாங்களா... என்ன நா அடிக்க மாட்டேன். அடிச்சா வண்டி ஓட்ட மாட்டேன்...சரக்கு உள்ளே போக போக மன நிலை மாற தொடங்கியது. கொடைக்கானல் மலை ஏறும் போது இரண்டு கொண்டை வளைவுகளுக்கு ஒரு முறை சீதோஷ்ண மாற்றத்தை உணர முடியும். சரக்கும் அதே போல்தான். பேச்சு கன்னியப்பனின் சொந்த கதைக்கு திரும்பிற்று. சொந்த ஊர் சோழவந்தான். மனைவி ,2 குழந்தைகள்..மனைவியின் தங்கை வள்ளியூரில் நர்சாக இருக்கிறாள். போக வர தொடுப்பு ஏற்பட சேர்த்து கொண்டு விட்டார். குழந்தை இல்லை. அதற்கு அவள் அக்காவின் சாபம்தான் காரணம் என்றார். வண்டி செங்கல்பட்டு தாண்டி ஒரு ரோட்டு கடையில் சாப்பாட்டுக்கு போட பட்டது. மிச்சமிருந்த சரக்கை நானும் நண்பனும் ஒரே மூச்சில் காலி செய்து விட்டு அவர்களுடன் சாப்பிட போனோம்.

புரோட்டா,வருத்த கரி பிறை (அப்படித்தான் எழுதி இருந்தார்கள்), கல் தோசை, புல் பாயில் அவர்கள் இருவரும் பின்னி எடுக்க போதையில் பில்லை நாந்தான் கொடுப்பேன் என்று குழற.. கிளி யின் முகத்தில் தெரிந்திருந்தால் இன்னும் நாலு புரொட்டாவை தின்னிருக்கலாமே என்ற வருத்தம் ..

திடிரென்று கண் முழித்துப் பார்த்தால் வண்டி ஒரு அத்துவான காட்டின் நின்றிருந்தது. கன்னியப்பனை காணோம். கிளி மட்டும் கீழ் நின்று பீடியை ரசித்து பிடித்து கொண்டிருந்தான். என்னை பார்த்ததும் பீடியை அணைக்க ..கிளி..வண்டி ஏன் நிக்குது? டிரைவர் எங்கே?அண்ணே.தோ .உள்ளார போயிருக்காரு ..வந்துடுவாரு..சொல்லும் போது கன்னியப்பன் வந்து விட்டான். கிளி ..நீ போறியாடா? கிளிக்கு வெட்கம். இன்னும் கொஞ்ச நாளாவட்டும்னே. .நான் புரியாமல் பார்க்க.சார் உள்ள குஜிலிங்க இருக்குது..நீங்க போறிங்களா? இந்த வாட்டி சரக்கு சும்மா கும்முன்னு இருக்கு சார். அப்பா என்னை விட்டுடு நா இந்த ஆட்டத்துக்கு வரலே.. ஆனால் நண்பனுக்கு சபலம்தான்.அவனை அடக்கி வண்டியை கிளப்பினோம்.

சார் 2 மணிக்கு வண்டியை ஓரம் போற்றுவேன். .திரும்ப கிளம்ப 6 மணியாயிடும். நீங்க நல்லா தூங்குங்க என்றான் கன்னியப்பன். என் சந்தேகத்தை கேட்டேன். "ஒன்னுக்கு ரெண்டு பொண்ட்டாட்டி இருக்குல்ல. பின்ன ஏன் இப்படி? அட போங்க சார் இது நெதம் வோணும்..நான் உறை கூட போட மாட்டேன். அருகிலிருந்த கிளி"அண்ணனுக்கு அடுப்புல வைக்கும் போது சூடு உறைக்கணும். அப்பாதான் திருப்தியாம்.கன்னியப்பன் கையில் கிடைத்த எதையோ எடுத்து கிளியை வெட்கத்துடன் அடித்தான்.

திரும்ப காலை லாரி கிளம்பி நாங்கள் நெல்லை போய் சேர இரவு 8 மணியாகி விட்டது. சுவாரசியமான பயணம். கேமரா கையில் இல்லாமல் போய் விட்டது. லாரி ஓட்டுனருக்கும்,கிளினருக்கும் உள்ள உறவு ஒரு அன்னியோன்னியமான தாம்பத்யம் போலவே இருக்கிறது. கிளி நிறைய அடி வாங்குகிறான். ஆனால் கன்னியப்பனுக்கு எதுனா ஒண்ணுன்னா முதல் ஆளாய் இறங்கி விடுவானாம். கன்னியப்பன் தன் வாழ்க்கையில் நடந்த அத்தனையையும் கிளியிடம் சொல்கிறான். கிளி ஆறுதல் சொல்லும் விதமே ரொம்ப வித்தியாசமாக இருந்தது. அண்ணன் அடிச்சா அடுத்த நாள் பிரியாணி,புது துணி, விஜய் படம்னு அன்பை கொட்டி விடுவாரு. அந்த அன்புக்குகாகவே எத்தனை அடியும் வாங்கலாம். கிளி சொல்லும் போதே மீண்டும் எதையோ எடுத்து வீசுகிறான் கன்னியப்பன்.. கன்னியப்பன் அவுட்சைட் போகும் போது கூட அருகில் கிளி இருக்க வேண்டுமாம்.. பீடி,கால் கழுவ தண்ணி கொடுத்து சிஷ்ய பணிவிடை..கிளியின் லட்சியம்...ஒரு லாரிக்கு டிரைவர் மற்றும் முதலாளியாவதுதான்.பின் தன்னை போல் ஒரு கிளியை தேடி கண்டு பிடித்து கிளினராக வைத்து கொள்வதுதான்.

நான் விடைபெறும் போது கன்னியப்பன் காசு வாங்க மறுத்து விட்டான். நான் கட்டாயப் படுத்தி கொடுத்து விட்டு சின்ன முருகா என்று அழைத்து அவன் கையில் ஒரு 100 திணிக்க அவன் கன்னியப்பனை பார்க்க..அவன் தலை அசைக்க சந்தோஷத்துடன் வாங்கி கொண்டான் சின்ன முருகன் என்கிற"கிளி"

பின் குறிப்பு: எங்கு போவதென்று முடிவு செய்யாமல் கிளம்பி, கண்ணில் படும் முதல் வண்டியில் ஏறி, அது நிற்கும் கடைசி இடத்தில் எறங்கி ..பின் அங்கிருந்து தொடங்கி.......யாராவது துணைக்கு வருகிறிர்களா

Tuesday, July 20, 2010

கால் எத்தும் கழுதை .. 2



அந்த எழவெடுத்த எளக்கிய கூட்டம்..ஹா..ஹா... கூட்டம்னா முதல்ல 50 சேர் போட்டிருந்தானுங்க . ஒரு 10 பேர் நின்னுக்கிட்டிருந்தானுங்க . மொத எளக்கியவாதி பேசினான் . அப்புறம் அவன். அப்புறம் இவன். அட ! பாலா பட டைட்டில் . அந்தாளு எப்படியும் நமக்கு சான்ஸ் கொடுக்கப் போறதில்லை . பாவம் அந்த நாற்காலிங்க. முழுசும் காலி. எளக்கியவாதீங்கதான் தீர்ற வரைக்கும் , அதாவது நம்ம தாவு தீர்ற வரைக்கும் போட்டானுங்க பாருங்க ஒரு போடு . நடுவில பி.பி.சி லேர்ந்து போன் மேல போன் . பிசியா இருக்கேன்னு சொல்லி சமாளிக்க வேண்டியதா போச்சு . அந்த எழுத்தாளன் பேர் என்னவோ மாறவர்மனோ சோழவர்மனோ ? எங்கயோ எதையோ படிச்சு எழுதிபுட்டான் . நரகத்திற்கு உள்ளே வாம் தலைப்பு . உண்மைதான் . அங்க இருக்கவரைக்கும் அப்படித்தான் இருந்தது . முதல் நாள் ராத்திரிதான் புத்தகத்தை கொண்டு வந்து கொடுத்தான் . சார் உங்கள மாதிரி எழுத்தாளர் என்னை பாராட்டி பேசினால் நான் தன்யனாவேன்னான் . எல்லாம் சரி . தட்சணை எங்கடான்னேன் . கோமதி நாட்டு மருந்து கடைன்னு போட்டிருந்த ஒரு துணிப்பையில ஒரு முழு பாட்டில் சாராயமும் , செல்வி ஊறுகாய் மூணு பாக்கெட்டும் கொடுத்தான் .

கொஞ்சநேரம் நான் எப்படி எழுத்தாளானா ஆனேன்னு (ஆகிட்டாலும்.) ஒரு மொக்கையை போட்டான் . நான் அவனை சாப்பிட சொல்வேன்னு எதிர் பார்த்தான் போல . ஒரு வழியா அவன் தலை மறைஞ்சதும் பாட்டிலை திறந்தேன் . ஒரு ரவுண்டு போச்சு . போன் அடிச்சுது . அவன் தான் . என்னடான்னேன் . சார் குடிச்சிட்டு மட்டையாகிடாதீங்க . விழாவுக்கு வந்திருங்க .

கண்டிப்பா வரேன்யா . போனை வை .

சார் வர்றது மட்டும் பத்தாது . கதையை படிச்சிட்டு ஒரு நாலு வார்த்தைன்னு இழுத்தான் .

அதென்னடா நாலுவார்த்தை . எழுவு மாதிரி . ஏன் நாற்பது வார்த்தை . இந்த இன்னா நாற்பது மாதிரி பேசக்கூடாதா ?

பேசுங்க சார் . அது என் பாக்கியம் . போனை வச்சிட்டான். அப்ப பிடிச்சது அவனுக்கு சனி....

நீங்க மொசாம்பிக் போயிருக்கீங்களா ? தம்பி கொஞ்சம் ஞாபகபடுத்தறியா ? பொறை வாங்கணும். என்னோட செல்லத்துக்கு . இல்லை என்னை கழுதைன்னு திட்டுமே. ஏன்னு கேக்கறீங்களா ? நேத்திக்கு என் நாயை கூட்டி கிட்டு வாக்கிங் போனேன் . எதிரில் வந்த ஒரு குடிகாரபாவி கேட்டான் . கழுதையை எங்க கூட்டி கிட்டு போறேன்னான் . ஏண்டா கண்ணு தெரியலை.. இது நாய்டான்னேன் . அதுக்கு அவன் சொன்னான் . நான் நாயை கேட்டேன்னான் . பாருங்க ஒரு எளக்கியவாதியோட நிலைமையை . அப்பாடா ஒரு வழியா முடிச்சானானுங்கப்பா. நான் தான் முடிவுரை. கூப்பிட்டதுக்கு நன்றி. அடுத்த வாட்டி இந்த எழவுக்குக்கெல்லாம் கூப்பிடலைன்னா ரொம்ப நன்றி..


ஆட்டோ அரேஞ்ச் பண்ணி கொடுத்தார்கள் . டிரைவர் உக்காருங்க தம்பின்னான் . தம்பியா ? பரவாயில்லை . டை அடிச்சது வேலை செய்யுதுன்னு பெருமை பட்டு முடிக்கறதுக்குள்

எங்க அண்ணே போகணும் ?

இன்னும் பத்து நிமிஷந்தான் இருக்குப்பா என்றேன் அண்ணனாகி தம்பியானவனிடம்

இன்னா சீரியல் சாரே என்றான் அவன்

முட்டாள் டாஸ்மாக் மூட என்றேன்

பிளாக்கில வாங்கலாம் சார்

நான் ஒன்னும் ஆட்டோ ஓட்டலைப்பா.. எழுத்தாளன்யா


சாரே . நீங்கதானா அது ? தெய்வமே


இவன் கேரளாக்காரனாயிருப்பானோ என்று சந்தேகம வந்தது . ஆனால் அவன் எழுத்தாளன் என்று சொல்வது இந்த சுவற்றில் எழுதுவார்களே” தலைவர் அழைக்கிறார்” அதையாம்

பொறை வாங்கணும் தம்பி . ஆமாம் நீ எம்.ஜி.ஆர் ரசிகனா ?

ஆமாம் சார் . நீங்களுமா ? கேட்டபடியே எஃப் .எம் ஐ போட்டான் . வீடு வரை உறவு . வீதி வரை மனைவி என்று அது புலம்ப , நம்மாள் சொன்னான் .

தத்துவ பாட்டுன்னா தலைவர்தான் . இந்த பாட்டுல புரட்சித்தலைவர் என்னமா நடிப்பார் . நீ பார்த்திருக்கியா என்று சட்டென்று ஒருமைக்கு தாவினான் . அடுத்த வாட்டி அடிச்சிடுவான்னு நினைக்கிறேன் . சரக்கும் , பொறையும் வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்தவுடன் சோழவர்மன் போன் பண்ணான் .

தலைவரே ! என் கதையை உள் வாங்கி படிச்சிருக்கீங்க . அவ்வளவு நேர்த்தியான விமர்சனம் என்றான் . அவனிடம் நேற்று அவன் போன பிறகு நடந்ததை சொல்ல முடியுமான்னு தெரியலை . உங்க கிட்ட சொல்றேன் . நீங்க அவனுக்கு சொல்லிடுங்க .

அதாவது அவன் கொடுத்த ஃபுல் பாட்டில் காலி . ஊறுகாய் லேபிள் மட்டும்தாம் மீதி . அதில் செல்வி என்னை பார்த்து கண்ணடித்து அழைத்தது வேண்டாம் . ஊறுகாய் என்ன எண்ணெயோ எழவோ ஒத்துக்கலை . அந்த நேரம் பார்த்து கரண்ட் வேற போயிருச்சு . வயித்தை கலக்குது . பாத்ரூம் போயிட்டு பார்த்தா , சொட்டு தண்ணி இல்லை . வேற வழி .. நரகத்திற்கு வெளியேதான் . ஆனா என்ன வேணுமின்னா சொல்லுங்க . அப்பதான் சொர்க்கத்துக்கு உள்ள இருக்கிற மாதிரி இருந்துச்சு ..

(அந்த பி.பி.சி போன் தாங்க முடியலைப்பா . என்ன சொல்றது அவனுக்கு ? . பி.பி.சினா பிஸ்மில்லா பீரோ கம்பெனி )


Monday, July 19, 2010

காதலாகி வாடா






இந்த கதையில் சிக்கல் இருகிறதா என்று எனக்கு தெரியவில்லை . ஆனால் இதை எழுதுவதில் இருக்கும் சிக்கல் தெரிந்தேயிருக்கிறது.
கொஞ்சம் அலுப்பாக இருந்தது எனக்கு . வழக்கமாக இந்த டைப் கதைகளை முதல் பாராவிலேயே யூகித்து விடலாம் . இதுவும் அந்த ரகம் தான் . ஒரு சிகரெட்டை பற்ற வைத்தேன் .

மூன்றாவது முறையாக முகத்துக்கு சோப்பு போட்டுக் கொண்டிருந்தேன் . வாசலில் சைக்கிள் பெல் கேட்டது . வந்துட்டா சண்டாளி..சக்களத்தி..புவனா..பிசாசு...ஆனால் மத்தவங்களுக்கு தேவதை....அழகிய அசுரன்களுக்கு தேவபானம்.

அரை மணி ஆச்சு புவனா..அந்த தேய் தேய்க்கிறா..என்ன தேய்ச்சாலும் காக்கா கறுப்பு உதிர்ந்துடுமா என்ன ? இந்த நியாயத்தை நீயே கேளுமா புவனா . நேத்து ராத்திரி படிக்காம உம்முனு உக்கார்ந்திருந்தா . என்னடி சாப்பிடறியான்னு கேட்டேன் .

ஏம்மா நீ சாப்பிடலை ?

அடிப்பாவி . இப்பதான் உன் கண்ணு முன்னாடி கொட்டிகிட்டேன் .

சனியனே . அதை கேக்கலை . நான் உன் வயித்துல இருந்தப்ப ஏண்டி குங்குமப்பூ சாப்பிடலைன்னு கேட்டா பாரு . என்னம்மா ஆச்சு ? யாராவது எதாவது அவ நிறத்தை கிண்டல் பண்ணாங்களா ?

பார்றா . ரெண்டு பேரும் கட்சி பிரசாரத்துக்கு போறாப்ல இருக்கு . கருப்பும் , சிவப்பும்... பெரிதாக சிரித்தார்கள் அந்தப் பையன்கள் .

எனக்கு அவர்கள் மேல் கோபம் வரவேயில்லை . இந்த சண்டாளி புவனா மீதுதான் வந்தது . சனியன் . என் கூட வராதடின்னு சொன்னா கேக்க மாட்டா . ஆனா நானும் அவளும் ஒன்னாவதுலேர்ந்து ஒன்னாத்தான் படிக்கிறோம் . எனக்கு ஒன்னுன்னா உசுரையே விட்ருவா தெரியுமா ?

பின்னால் யாரோ பெல் அடித்தார்கள் . யாரோ இல்லை .

அவன் தான்டி புவனா .

பேசாம வாடி .

சொன்னாலேயொழிய புவனாவின் முகத்தில் ஒரு மின்னல் வெட்டியது . ஏற்கனவே மினுமினுத்த உதடுகளை நாவால் ஈரப்படுத்திக் கொண்டே , கடந்து போனவனை ஓரக்கண்ணால் பார்த்தாள் .

உனக்கு அவனை பிடிச்சிருக்காடி ?

சீ..சீ.. சும்மாத்தான் . இவன் மட்டுமா என்னை சைட் அடிக்கிறான் . பாலு , கணேசன் . அதுவும் கணேசன் விட்டா , கால்லயே விழுந்துடுவான் . இவன் பேர் தெரியுமாடி உனக்கு ?

எனக்கு அவன் பெயர் தெரியாது . ஆனால் அவனுக்கு நான் ஒருபெயர் வைத்திருக்கிறேன் . ராஜகுமாரன் . தேருக்கு பதில் சைக்கிள் . அதில் அவன் பின்னால் இல்லையில்லை முன்னால் உட்கார்ந்து போகிறேன் . ரெண்டு பக்கமும் வாய்க்கால் ததும்ப ஓடுகிறது . நடுவில் நாங்கள் .

ஒரு கவிதை சொல்லவா ?

சொல்லேன்டா ராஜகுமாரா ..

சொல்வேன் . ஆனா உன் பேர் எனக்கு தெரியாதே .

சொல்லட்டுமா ?

வேண்டாம் . நானே உனக்கு ஒரு பெயர் வைத்திருக்கிறேன் .

பெல்லடித்தது . கிளாசில் என் பெயரை அழைக்கிறார்கள் . வருகை பதிவேடுக்கு .

ராஜகுமாரி என்கிறான் என் ராஜகுமாரன் . குப்பென்று வியர்த்தது எனக்கு . பாவியா நான் .

என்னை இறக்கி விடுடா என்கிறேன்


ஏண்டி பெஞ்சு மேலயா நிக்கறே . இறக்கி விடுதற்கு என்கிறாள் புவனா . ஒட்டு மொத்த கிளாசும் சிரித்தது . எனக்கு அவமானமாக இல்லை . ஆசையாக இருந்தது . ஒரே முறை.. அந்த சாலை.. அவனுடன் சைக்கிளில் ... அதை புவனா பார்க்க வேண்டும் . நான் செத்து போகிறேன்டா பாவி .


எனக்கு கொஞ்சம் சுவாரசியம் கதையில் வந்திருந்தது . கொஞ்சம் யூகிக்கவும் முடிந்தது . மீண்டும் ஒரு சிகரெட் . இந்த கதையை எழுதியவள் பெயரை குறிப்பிட்டுக்கவில்லை . ஒரு வேளை ராஜகுமாரியைத் தவிர வேறு பெயரை அவள் விரும்பாதிருக்கலாம் . ஆனால் நிச்சயம் அவள் பெயர் ராஜகுமாரியாய் இருக்க முடியாது . விலாசம் இருக்கிறதா என்று பார்த்தேன் . இல்லை .

என்னடி இன்னிக்கு அவனை காணும் என்றாள் புவனா .

வராட்டி என்ன இப்போ ? உனக்குத்தான் அவனை பிடிக்கலை இல்ல ..

அதுக்கில்லடி . தினம் வருவானே அதான் . அங்க பாரு கணேசன் தவமிருக்கறதை . புவனாவின் சிரிப்பு கொஞ்சம் அகங்காரமாய் இருந்தது . சனியனே கணேசனை நீ வச்சுக்கடி . ராஜகுமாரனை எனக்கு கொடுத்துடுடி . பதிலுக்கு வேணும்னா என் உயிரை கூட எடுத்துக்கடி சண்டாளி . தோலை பாரு ..வெண் குஷ்டம் வந்தாப்ல .

கருப்புதாண்டி அழகு . காந்தல்தாண்டி ருசின்னு பாட்டி சொன்னது நினைவுக்கு வந்தது . அதெல்லாம் உப்புமாவுக்குதாண்டி கிழவி.. காதலுக்கு இல்லடி

என்னடி நீயே பேசிக்கறே ?

உன் வேலையை பாருடி . உனக்கு என்ன பெரிய ரதின்னு நினைப்பா ? இனிமே நமக்குள்ள ஃப்ரெண்ட்ஷிப் இல்லடி . போய் முதல்ல இந்த தோலுக்கு வைத்தியம் பாருடி . ஏ தோ பெரிய வியாதி மாதிரி இருக்கு ..

கண்ணை மூடி விஷத்தை கொட்டிக் கொண்டே இருந்தேன் . புவனா கண்கள் கலங்கி , அப்படியே உட்கார்ந்து அழ ஆரம்பித்தாள் . நான் கண்களை மூடிக்கொண்டேன் . ராஜகுமாரன் வருகிறான் . ஏறிக்கோ என்கிறான் . இருடா என்கிறேன் . புவனாவின் தோளை தொட்டு உலுக்கினேன் . மிரள விழிக்கிறாள் . வெறித்துப் பார்க்கிறாள் . இடது கையால் அணைத்து , இடையை வளைத்து என்னை ஏற்றிக் கொள்கிறான் ராஜகுமாரன்.. என் ராஜகுமாரன் ...


எனக்கு ஒரு அழைப்பு . ஒரு சிகரெடை பற்ற வைத்து மாடிக்கு வந்தேன் . அந்த கதை இன்னும் முடியவில்லை . அதாவது நான் இன்னும் முடிக்கவில்லை . ஏனோ எனக்கு அந்த பெண்ணை இல்லை.. அந்த ராஜகுமாரியை பார்க வேண்டும் போல் இருந்தது .


நான் செய்தது தப்பான்னு தெரியாது . ஆனா சரின்னுதான் நினைக்கிறேன் . என்ன பணினேன்னு கேளுங்க . சொன்னா எப்படியும் கரிச்சு கொட்டுவீங்க . பரவாயில்லை சார் . அந்த பாரத்தை இறக்கி வைக்கத்தானே இதை எழுதினேன் .


புவனா என்னுடன் பேசுவதில்லை . தனியாத்தான் போறா. நான் செஞ்சதுதான் தப்புன்னு உணர முடியுது . ஆனா விட்டு கொடுக்க தயாரில்லை . ஆனா கதை இப்படியாகும்னு எதிர்பார்க்கவேயில்லை .


என் கல்யாணத்துக்கு புவனாவை அழைத்தேன் . ஆனால் அவள் வரவில்லை . ராஜகுமாரனை ஏறிட்டு பார்த்தேன் . என்னவோ ஏமாற்றம் அவனிடம் . மறைக்க முடியவில்லை அவனால் . நான் முடிவெடுத்து விட்டேன்.. என் பிரிய ராஜகுமாரா .. என்னால் முடியலைடா ...


நான் அவ்வளவு அழகாடா பாவி !

ஆமாம் நீதான் அழகு .. நீ என் தேவதை .. என் ராஜகுமாரி என்றான் அவன் . எனக்குள் நிகழ்ந்ததை சொல்ல தெரியவில்லை .

அப்போ நீ புவனாவுக்காக சுத்தி வரலையா ?

சே.. அவளும் அவ கலரும் ..திமிர் பிடிச்சவன்னு எழுதி ஒட்டியிருக்கு . ஆனா நீ ..எவ்வளவு அமைதி .. பார்த்துக் கிடே இருக்கணும் போல இருக்கும் எனக்கு தெரியுமா ? எத்தனை நாள் ஒளிஞ்சிருந்து உன் முகத்தை மட்டும் பார்த்திருக்கேன் தெரியுமா ? நீ எதாவது சொல்லச்சே .உன் கண்ணு அதுக்கு முன்னாடி பேசுமே அழகு.. அப்புறம் அந்த சின்ன , குட்டி வாய் ..எக்ளேர்ஸ் சாக்லெட் மாதிரி...வேட்கையுடன் அவன் நாக்கு நீள்கிறது . என் நெற்றியில் ஈரமாய் ... மெல்ல நாசியில் இறங்கி , உதடுகளுக்குள் நுழைந்து ...என் நாக்குடன் சேர்ந்து ..காளிங்கன் நர்த்தனமாய்


எனக்குள் ஒரு பனிக்குடம் உடைகிறது . என் நகங்கள் நீள்கின்றன . புவனாவின் தாமரை முகத்தில் ரத்த கோடுகளால் ஒரு ஓவியம் ....அழ ஆரம்பிக்கிறேன்


இது நடக்காதுடா பாவி .. வெட்டிப் போட்ருவாங்க உன்னை . உன்னை பலி கொடுக்கவா நான் ? இந்த காதலுக்கு அல்ப ஆயுசுதாண்டா ... ஆனா ஒரு நாள் நான் உன் கூட வாழ்வேன் நிச்சயமா...


காத்திருக்கிறேன்னு சொல்லி பிரிகிறான் என் ராஜகுமாரன்

ஆனால் நான் அவனுடன் ஒரு நாள் வாழ்ந்தேன் . என் கல்யாணத்தன்று . எனக்கு நிச்சயம் செய்த மாப்பிள்ளையை நான் அவனாகத்தான் பார்த்தேன் . என்னால் அப்படிதான் பார்க்க முடிந்தது . அன்று இரவும்... வெறும் உடம்பில் என்ன இருக்கிறது . அது ஒரு சதைப்பிண்டம் . அவ்வளவுதானே . ஆனால் மனசு .. அது முழுதும் அவன் தானே ஊறியிருக்கிறான் .


இந்த கதையை எப்படி எடுத்து கொள்வதென்று எனக்கு தெரியவில்லை . ஆனால் அந்த ஊருக்கு போக வேண்டும். ரெண்டு பக்கமும் ததும்ப ஓடும் நீர் . நடுவில் அந்த பாதை . எங்காவது அவள் வாசம் இருக்கும்..இருக்க வேண்டும் .



Saturday, July 17, 2010

மானிட்டர் பக்கங்கள் 17/07/10


சன் டிவியில் (கலைஞரிலும்) முதல்வரின் கடிதத்திற்கு பிரதமர் பதில் எழுதியிருப்பதாக சொன்னார்கள் . அதாவது ஜீலை 3 ஆம் தேதி எழுதப்பட்ட கடிதம் அது. கிட்ட தட்ட 15 நாட்களில் பதில் வந்து விட்டது. இலங்கையில் தமிழர்கள் கவுரமாக வாழ எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது . சந்தோஷம் நடந்தால் . சரி இந்த கடிதம் அடிக்கடி எழுதுகிறாரே . அதன் நடை முறை என்ன என்று தெரிந்து கொள்ள ஆசை . நம்மைப்போல் தபாலாபீசுக்கு போய் கார்டு , கவர் வாங்கி வந்து எழுதுவாரோ ? ஆனால் ஆ.ராசா துறை மந்திரி எதற்கு இருக்கிறார் ? அண்ணனுக்கு அடுத்த வினை 2 ஜீ அலைவரிசையில் சமீபத்தில் ஆரம்பமாகியிருக்கிறதாம் . இந்த முறை நிச்சயம் கீரிடம் கிட்ட தட்ட கழலும் நிலையில்தான் இருக்கிறதாம் .(டைம்ஸ் ஆஃப் இந்தியா - 17/07/10)

அரசு உயர் அதிகாரியாக இருக்கும் நண்பர் சொன்ன நடைமுறை . முதல்வரின் கடிதம் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யப்பட்டு . அவரால் தமிழில் கையெழுத்திடப்பட்டு , ஒரு ஸ்பெஷல் மெசஞ்சர் மூலம் டெல்லிக்கு கொடுத்தனுப்பப்படுமாம் . அந்த கடிதத்தை தமிழிலேயே எழுதி செம்மொழியை இன்னும் கொஞ்சம் வளர்க்கலாம். எப்படியிருந்தாலும் சிங் ஒன்றும் செய்யப்போவதில்லை . ஒரு சம்பிரதாய பதிலை தவிர . பின் அந்த மெசஞ்சர் டெல்லியில் பிரதமரின் அலுவலகத்தில் கனையாழியை காட்டி , கடிதத்தை சேர்த்து விட்டு பதிலுக்கு காத்திருப்பார் . சவுத் பிளாக்கில் குரங்குகள் தொல்லை அதிகம் . அதற்கு ஒருவர் சொன்ன காரணம் . ராமர் பாலத்தை இடிக்க முயற்சித்ததுதானாம் . பின் அரசு செலவில் (வெட்டி) தலைநகரில் உண்டு , உறங்கி பதிலை பெற்றுக் கொண்டு கண்டேன் சீதையை ரேஞ்சுக்கு திரும்புவாராம். அவர் திரும்பி வருவதற்குள் இவர் இன்னொரு கடிதம் தயாராக வைத்திருப்பார் என்பது வேறு விஷயம் .


நானும் , காமராஜிம் ஒன்றுதான் என்று முதல்வர் சொல்லியிருக்கிறார் . இனிமே காமராஜ் ஆட்சின்னு யாரும் பேசாதீங்கப்பா கதர் கிழிசல்களே . இல்லா விட்டாலும் தலைக்கு மேல் சபை தொங்குகிறதே . மூச்...


இந்த வாரம் ஆனந்த விகடன் கொஞ்சம் சூடும் , சுவையுமாக இருந்தது என்று சொல்லலாம் . சாருவின் மனங்கொத்தி பறவை அட்டகாசம் . ஆனந்தவிகடனுக்கு சன் சார்பு அதிகமோ என்று தோன்றுகிறது . துணை முதல்வரின் தேநீர் விருந்து அமர்க்களம் . ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் பற்றிய ஸ்கேனிங் . ஆங்காங்கே முதல்வருக்கு சில பச்சை மிளகாய்கள் . செழியனின் மார்க் கதையும் மனதை தொட்டது . எனக்கும் அந்த மாதிரி நண்பர்கள் இருந்தார்கள் . தியாகராஜன் என்றொரு இயக்குனர் நண்பர் . இப்போது எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை . சினிமா ..



மைக்ரோ சாஃப்ட் துணைத் தலைவரின் பர்சையே அடித்த கில்லாடிகள் திருச்சி ராம்ஜிநகர் திருடர்கள் . கும்பலாக கிளம்ப வேண்டியது . அண்டை மாநிலங்களில் ஆட்டையை போட வேண்டியது . திரும்ப இங்கு வந்து ஆட்டம் போட வேண்டியது . இவர்கள் குறவர் என்ற பிரிவு என்றும் ,சேர்வை என்ற பிரிவை சேர்ந்த மக்கள் என்றும் சொல்கிறார்கள். இவர்களுக்கு சிறையில் வைத்து கவுன்சிலிங் கொடுக்கப் பட்டிருக்கிறது . சுய உதவி குழுக்கள் மூலம் மாற்று தொழில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது . 50 க்கும் மேற்ப்பட்டோர் மனம் மாறியிருக்கிறார்களாம் . நம்மூர் மந்திரிகளுக்கும் ராம்ஜீ நகர் வாசிகளை வைத்து கவுன்சிலிங் கொடுத்தால் என்ன ? ஆனால் ஒன்று .இந்த மாதிரியெல்லாம் எழுதிடலாம். நாளை நமக்கு மந்திரியாகும் வாய்ப்பு கிடைத்தால் ? இதைத்தான் அல்லது இதை விட மேல் செய்வோமோ என்றும் தோன்றுகிறது




பாலகுமாரனின் முன் கதை சுருக்கம் பற்றி லக்கிலுக் எழுதியிருந்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது . அனாயசமான நடையில் ஆங்காங்கே நகைச்சுவை தூறல்களும் . அப்படியே கொஞ்சம் பால்யமும் , பாலகுமார விமர்சனமும் .....


செம்மொழி மாநாட்டில் முதல்வர் அதிகம் புகழப்பட்டது அவருக்கு இருந்த ஒரே வீட்டையும் தானமாக ஈன்றதற்கு .உண்மைதான் .




இல்லம் தானம்
உடல் தானம்
சுய பெருமிதம்

நாட்டையே நாம்
தானமாய் தந்ததை
கண்டு கொள்வாரில்லை
யாரும்.....

Friday, July 16, 2010

ஒரு பின்னூட்டம்


ராகவன் கவிதைகளை பற்றி சொல்லியே ஆகவேண்டியிருக்கிறது . சாணித்தாளில் கொட்டிய மை போல் மனசில் வியாபித்து அறுத்துக்கொண்டேயிருக்கும் மாய எழுத்து அவருடையது .என் பழைய கவிதை ஒன்றுக்கு அவர் இட்ட பின்னூட்டத்தை தற்போதுதான் பார்க்க நேர்ந்தது . அதை நீங்களும் படிக்க வேண்டியே இந்த பதிவு . ராகவன் வார்த்தைகளை தேடுகிறேன் .

அந்த கவிதை மீண்டும்.....
ஒட்டு போடப்பட்டிருக்கிறது
இளவரசியின் பட்டுப்பாவாடை

இடையில் துருத்திக் கொண்டிருக்கும்
அட்டைக்கத்தின் உட்புறம் குழந்தை வரம்
கேட்டு யாரோ எழுதிப்போட்ட திருவுளசீட்டு

பட்டத்து மகிஷியின் பதவிசு
பார்க்கிறவர்களுக்கு பொறாமை
இருபது முழம் சேலையும் அழுக்கு பஞ்சு கச்சையும்
கால்கிலோ கவரிங் தோடும்
அரை மணி நேரமாக அவஸ்தை அவளுக்கு
மாசத்தொல்லை மயிரு நாறுது

காது வரை சிரிக்கிறான் விதூஷூகன்
வற்றிய வயிறுக்கு ஏழையின் சிரிப்பு
அறிமுகம் இருக்குமா? உள்ளுக்குள் அறுக்கிறது
ஆத்தாவின் இருமல்

நேற்றிரவின் காரித்துப்பல்களை
அரிதாரம் பூசி மறைத்திருகிறான் ராஜாதிராஜ...
ஆணவமாய் அரியணையில்
துப்பியவன் முன் வரிசையில்

கனவு காணத் தெரியாத புரவி பாவம்
கொள்ளை மறந்தே விட்டது
காலாட்படையினருக்கும் யுத்த மறக்கடிப்பு
அரசு வைத்தியம் இலவசம்
எஞ்சியிருக்கும் துருவேறிய ஆயுதங்களின்
எடைக்கு எடை காலி பாட்டில்கள் டாஸ்மாக்கில்

முடை நாற்ற திரைசீலைகள்
கரப்பான் முட்டைகளும் ,பல்லி மூத்திரங்களும்
சக பரிவாரங்களாய் வீற்றிருக்கும் அவை
திரை விலகுகிறது
ஆர்ப்பரிக்கும் விருந்தினர்கள்
கந்தலும் கிழிசலும் காஞ்சிபுரமாகின்றன
குடிகள் கோமானாகிறார்கள்
ஒருவன் மன்னனாகிறான்
இன்னொருத்தி அல்லியாகிறாள்
அவள் புருஷனுக்கு தர்பாரில்
கால் நகத்தில் அழுக்கெடுக்கும் பணிக்கு உத்தரவு

பழம்பெருமையை பட்டாக்கி உடுத்தி வருகிறது
பட்டத்து யானை
நல்ல வேளை பிள்ளையார்
கொழுக்கட்டையை முன்னரே
சாப்பிட்டு விட்டது மூஞ்சூரு
எட்டுத்திக்கும் ஏவப்பட்டிருக்கிறார்கள் பாகன்கள்
சோளப்பொறி சேகரித்து வர உத்தரவு

சூம்பிய மார்பும் ,செத்த இடையுமாக அரசு நர்த்தகி
அரை இஞ்சுக்கு அரிதாரம் பூசி
அஞ்சனம் தீட்டப்பட்டிருந்த விழிகளில்
ஒன்றில் பூ
இளித்த கால் கொலுசுகளின்
களி நடனம்
மேடை கோணல் என்ற பதம் இன்னும் புழக்கத்தில்

சகுனியும், விதுரனும் சரிபாதி கலந்த
சாணக்கியன்
எச்சில் ஊறுகாய்க்கு சாராயக்கடையில்
சண்டையிட்டதில் காயம்
தண்டத்தால் ஒத்தடம்

காசென்றால் கதவை அடைக்கும் கூட்டம்
ஓசுக்கு ஊர் திரண்டு வந்திருக்கிறது
கூத்து முடியட்டும்
கூட்டி பார்க்கலாம்
வருவதை பிரித்துக் கொள்வோம் இல்லை
பிரித்துக் கொள்ள நம்மிடம் எவ்வளவோ....
எதற்கும் துண்டையும்
நனைத்து வையுங்கள்
யாரங்கே?


ராகவனின் சண்டமாருத கவிதை(யான பின்னூட்டம்)

மணிஜி! உங்கள் கவிதை படித்துவிட்டு எழுத ஆரம்பித்து முடிக்க முடியாமல் போய் விட்டது, நேரமில்லாத காரணத்தால் முடிக்க முடியவில்லை...

பகட்டுகள் ஆரம்பமாகும், பல வண்ண வெளிச்ச பந்தங்களில், முகம் மினுக்கும் இளவரசியின் பருக்கள் அப்பிய அரிதாரத்தின் அடியில் பதுங்கும், வளை எலிகளென. சேர்த்து வைத்துக் கொள்ள முடியாத கனவுகளின் பிரதியில் முகவடிவு தேய்ந்து வளரும், வளர்ந்து தேயும் நிலவென. நிரந்தரமற்ற எதுவும் சொற்ப நேர சந்தோசத்தின் உச்சமென, வாள்முனையின் கூரென ரத்தம் ஏங்கும், நிஜம் தங்கி போகும் சத்திரத்தில் சாசுவத சொகுசுக்காய், சுவர் முழுக்க இரத்தக்கீறல்கள் உராய்ந்து சென்றவனின் சுகம் விட்டு செல்லும் அமில குமிழ்கள் உடலெங்கும் பூத்து கிடக்கும். கண்கள் செருகி கிடந்தவனின் சுயமைதுன கிறக்கங்கள், பொழுது விடிந்ததும் பொசுக்கென்று வடியும், சுகம் ஒரு சருகின் அடியில் காய்ந்த நரம்புகளை போல சுண்டி போன ரத்தம் இழந்து கை பிடிக்க நொறுங்கும். கணக்க சுமந்த தொப்பி இறகுகள் அழுத்தி கொல்லும், பளுக்குண்டுகள் இணைத்த அவயங்களின் அசைவு அவஸ்தையாகும்.

அரவம் தீண்டிய துளைகள், உறிஞ்சி குடித்த உடைந்த மதுக்கோப்பைகள், பிடுங்கி நட்ட மயிர்க்கால்கள், எச்சிலில் மிதக்கும் பூத உடல், மீண்டு காற்று நிரப்பிய பைகளென ஊதி பெருக்கும். ஆடைகள், அணிகலன்கள், அப்பிய அரிதாரம் கொஞ்சம் புன்னகை வெந்தனழ் சுழலில் பற்றி எரியும் கச்சையும், விடாய் துணியும். எல்லாம் எரித்து சாம்பலில் புலரும் சவக்காட்டு ஞாயிறு. இச்சையில் குளிர்ந்து இரப்பையில் அடங்கும், பிசின் வியர்வை, உயிர் துளைக்கும் வண்டாய் நெடி, இறைக்கும் மூச்சு, சொற்க்கடி தடங்கள் எல்லாம் ஆளை புதைத்து தோலை சேர்க்கும்.

கொலை பழகும் கலைகள் மறந்த பொழுதுகளின் ஓரத்தில் குத்தவைத்திருக்கும் துருப்பிடித்த வேல்கம்புகளும், குத்தீட்டிகளும் வாசல் வந்து குருதி துளியும் புள்ளிகளின் மேல் வரைந்த கோலங்களின் சிக்கல்களில் நெளியும் சர்ப்பங்கள் பிளந்த நாக்கின் சாபங்களில் கருகித் தொலைகிறது யவ்வன சொப்பனங்கள்.

அருமையான கவிதை...

அன்புடன்
ராகவன்

Wednesday, July 14, 2010

ஒரு கதை


அஞ்சு மணிக்கெல்லாம் எக்மோர் போய் லைன்ல வண்டியை போடணும் . இன்னிக்கு கொஞ்சம் நிறைய சவாரி போகும்னு நினைக்கறேன் . உமாவை நாளைக்கு செக்கப்புக்கு வேற கூட்டி கிட்டு போகணும் என்று நினைத்தபடி எழுந்தேன். உமா லேசாக சிணுங்கி “மணி என்னங்க என்றாள் . 4 மணி உமா . நான் குளிச்சிட்டு கிளம்பறேன் . நீ மெதுவா எழுந்திரு போதும். வயிறு வலி இப்ப எப்படியிருக்கு ?


பரவாயில்லைங்க . அதான் நைட்டு ஃபுல்லா விளக்கெண்ணெய் தேய்ச்சி விட்டீங்களே .



அம்மா சொல்வாங்க . நியாபகம் வந்துச்சு .



சும்மா கதை . உங்க புள்ளையை ஆசையா தடவி கொடுத்தீங்க . அப்படித்தானே என்றாள் உமா .



குனிந்து அவள் கன்னத்தில் முத்தமிட்டு சரி அப்படியும் வச்சுக்கலாம் . கதவை சாத்திக்க என்றபடி வெளியில் வந்தேன் .



இருங்க . கொஞ்சம் வாசல்ல தண்ணியை ஊத்திட்டு கிளம்புங்க



நேற்று முழுவதும் ஆட்டோ மக்கர் பண்ணி கொண்டிருந்தது . உமாவை நினைத்துக்கொண்டே ஸ்டார்ட் பண்ணினேன் . ஒரே ஸ்டார்ட் ..இன்னும் பனி மூட்டம் விலகவில்லை . ஒரு டீ குடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது . கடையில் வண்டியை நிறுத்தினேன் . தினத்தந்தியை பிரித்தேன் .
சமீபத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான படத்தின் இயக்குநரின் பேட்டி வந்திருந்தது .


நான் சிகரெட்னு கேட்க கூட வேணாம் . குறிப்பறிஞ்சு பாக்கெட் வந்துடும் உமா .

அப்படியா ? அப்புறம்..

அதை பத்த வைக்க ஒரு போட்டி நடக்கும் பாரு .

ஹீரோயின் கூடவா ?

ம்ம்.. ஆனா அவளும் ஒன்னு பத்த வச்சுக்குவா .

நீங்க அவ கூட நிறைய பேசக்கூடாது .

அப்புறம் அவளுக்கு எப்படி சீன் சொல்றது ?

உங்க அஸிஸ்டெண்ட் சொல்லட்டும் . நாளைக்கு பேப்பர்ல எதாவது அரசல் ,புரசலா வந்துச்சு . பலி போட்ருவேன் .

என்னையா ?

ம்ம் . உன்னை பலிபோடவா உன் கூட வந்தேன் . அந்த சிறுக்கியை என்றாள் உமா பல்லை கடித்தபடி .


மொதல்ல அத்தைக்கு மீசை முளைக்கட்டும் . அப்புறம் பார்க்கலாம் . இன்னிக்கு சேலம் புரொடியூசர் வராரு . அநேகமா கிளிக்காயிடும்னு நினைக்கிறேன் .



ஒரு ரூபா காயின் கொடுங்களேன்



எதுக்கு உமா ?



சமயபுரம் மாரியம்மனுக்கு முடிஞ்சி வைக்கிறேன் . நிச்சயம் நடக்கும் .




தம்பி டீ ஆறுதே . அப்படி என்ன பேப்பர்ல படிக்கிறீங்க ?



ஆட்டோவை கிளப்பினேன் . ராக்ஃபோர்ட் வந்திருக்கும் . வரிசை எப்படியிருக்கும்னு தெரியலை . தலைவர் கிட்ட சொல்லியிருக்கேன் . பார்க்கலாம் . ஸ்டேஷனை அடைந்தேன்.கூட்டம் வெளியில் வர ஆரம்பித்திருந்தது . தயங்கியபடி அருகில் வந்தான் அந்த இளைஞன் .

எங்க போகணும் சார் ?

முதல்ல ஒரு லாட்ஜ்க்கு போகணும் . அப்புறம் இந்த அட்ரஸ் என்றபடி ஒரு கார்டை காட்டினான் .

லேசாக குடித்திருந்தேன் . சேலம் பார்ட்டியை சந்திக்கவே முடியவில்லை .சேம்பருக்கு போயிட்டு வந்துடறேன் . லஞ்சுக்கு அப்புறம் சந்திக்கலாம் என்றார் . நடேசன் பார்க்கில் கொஞ்சம் பொழுதை ஓட்டிவிட்டு ரூமுக்கு போனால் , சார் தூங்கறார் . எழுப்பினா பயங்கர கோபம் வரும் என்றான் ஒரு அல்லக்கை . காலையில் பார்த்த போது தென்படாத ஒரு லேடிஸ் செருப்பு கண்ணில் பட்டது . டிஸ்கஷன் நடக்கிறது என்று நினைத்துக் கொண்டேன் .

ஈவினிங் வரட்டுமா சார் ? சார் கண்டிப்பா சந்திக்கலாம்னு சொலியிருந்தார் என்றேன் பலகீனமான குரலில்

உன் கிட்ட மட்டுமா சொல்றாரு . பத்து பேர் கிட்ட அப்படித்தான் சொல்லியிருக்காரு . அதுல ஒருத்தன் புத்திசாலி . பாரு என்று அந்த செருப்பை காட்டினான் அல்லக்கை . சே என்ன பிழைப்பு இது . திறமைக்கு இங்க மரியாதையே கிடையாதா ? என்று நொந்து கொண்டேன் . கிடையாது என்று தெரிந்திருந்தும் . அதிர்ஷ்டம் வேண்டும் . இல்லை எவனுக்காவது வாரிசாக இருக்க வேண்டும் .வெளியில் வந்தேன் . யாரோ பேர் சொல்லி அழைத்தார்கள் . கிருஷ்ணா !


ஒரு பழைய ஜீன்ஸும் , டி ஷர்ட்டும் அணிந்து கொண்டு வெளியில் வந்தான் அந்த இளைஞன் . ஆட்டோவில் ஏறிக்கொண்டான் .

எங்க போகணும் சார் ?

முதல்ல வீனஸ் காலணி

எந்த தெரு சார் ?

மணிரத்னம் வீடுப்பா என்றான் . ஹம்மா..ஹம்மா என்று முணுமுணுத்தபடி

மணிரத்னம் வீடு . சற்று தள்ளி வண்டியை நிறுத்தினேன் .போன சுருக்கில் திரும்பி வந்தான் . டிநகர் போங்க என்றான்

டிநகர்ல எங்க சார்?

டைரக்டர் ஷங்கர் வீடு . தெரியுமா?

தலையை அசைத்தபடி வண்டியை கிளப்பினேன் .கிருஷணா!

வேண்டாம் கிருஷ்ணா . உமா திட்டுவா . இப்பல்லாம் குடிக்கறதில்லடா என்றேன் நப்பாசையுடன்

வா என்று அவன் பைக்கில் ஏற்றி கொண்டான் . அரை பாட்டில் ஆர்டர் பண்ணினான் . சிக்கன் சாப்பிடறியாடா?

உமாவுக்கு சிக்கன் ரொம்ப பிடிக்கும் . இந்த நேரத்தில் அவளுக்கு பிடிச்சதை வாங்கி கொடுக்க வேண்டும் .

கிருஷ்ணா ஒரு பார்சல் கிடைக்குமா? என்றேன்.

வீட்டுக்குத்தானே . போகும்போது வாங்கிக்கலாம் .

ரெண்டு ரவுண்டு போன பிறகு எல்லாம் மறந்து போச்சு . அவனிடம் கொஞ்சம் பணம் கேட்டு வாங்க வேண்டும் என்று நினைத்தேன் . மறந்து போச்சு . குடி வாங்கி கொடுத்தவனிடம் பணம் கேட்கும் கொடுமை இருக்கிறதே ..வீட்டுக்கு வரும்போது கொஞ்சம் இறங்கியிருந்தது . சேலம் பார்ட்டி என்ன ஆச்சு என்று உமா கேட்பாள் . அவளிடம் உண்மையை சொல்லக்கூடாது . ரெண்டு நாள் கழித்து வர சொல்லியிருக்கிறார் என்று சொல்லி விடலாம் . கிருஷ்ணா ஒரு பொள்ளாச்சி பார்ட்டியை சொல்லியிருக்கிறான் . பார்க்கலாம் .

கதவை தட்டினேன் . பதிலில்லை . தள்ளினால் கதவு திறந்திருந்தது . லைட் கூட போடாமல் என்ன பண்ணுகிறாள் இவள் ? உமா என்று மெல்லிய குரலில் அழைத்தேன் . ஒரு வேளை தூங்கலாம் . ஆனால் உமா முனகி கொண்டிருந்தாள் .


இப்ப எங்க சார் போகணும் ?

லாட்ஜ்க்கு போயிடுங்க . டைரக்டர் வெளியில் போயிருக்காராம் . சாயந்திரம் மறுபடியும் போகணும் என்றபடி அவன் பணத்தை எண்ண ஆரம்பித்தான் .

லாட்ஜில் அவனை இறக்கி விட்டு

சார் ஒரு நிமிஷம் என்றேன் .

கேள்விக்குறியுடன் பார்த்தான் . சினிமா சான்ஸ்தானே தேடறீங்க என்றேன்

ஆமாம் . முதல்ல உதவி இயக்குநர் ஆகணும் . அப்புறம் நடிக்கணும்

வேற எதாவது தொழில் தெரியுமா ?

டிகிரி முடிச்சிருக்கேன் என்றான் கொஞ்சம் பெருமையுடன் .

ஆட்டோ ஒட்ட கத்துக்கங்க . நிச்சயம் உதவும் என்று சொல்லி விட்டு வண்டியை கிளப்பினவனை புரியாமல் பார்த்தான் அவன்

முதலில் ஒன்றும் புரியவில்லை . குளமாய் ரத்தம் அவளை சுற்றி . நைட்டி நனைந்திருந்தது . என்னவாயிற்று ? அரை மயக்கத்திலிருந்தாள் உமா .

Friday, July 9, 2010

கால் எத்தும் கழுதை


தலைப்பை கேட்டவுடன் கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது . தலைப்பை மாற்றலாமா என்று ஆசிரியரை கேட்டதறகு , ஸ்டிராங்காக மறுத்தார் . சரி என்று நித்தியானந்தாவை மனசுக்குள் வேண்டிக்கொண்டு தொடரலாம். சரி அந்த ஆளிடம் என்ன வேண்டிக் கொண்டிருப்பேன் என்ற சரியாக யூகிப்பவர்களை தாந்தேவின் சிறுத்தையை விட்டு கடிக்கலாம் என்று உத்தேசம் . ஜெய்ஹிந்த்...


என்னைப்போன்ற ஒரு எழுத்தாளனுக்கு இந்த சமூகத்தில் என்ன மதிப்பிருக்கிறது என்று பார்த்தால் அதிர்ச்சிதான் மிஞ்சுகிறது . சற்றே ஆயாசமாகவும் இருக்கிறது . மொசாம்பிக்கில் ... மொசாம்பிக் தெரியுமா உங்களுக்கு ? நிச்சயம் நிறைய நபர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை . அங்கு எழுத்தாளனின் பேனாவில் இங்க்..அதாவது மை தீர்ந்து விட்டால் போட்டி போடுவார்கள் நிரப்ப . இங்கு நிலைமை தலைகீழ் . பேனாவை புடுங்கி கிடாச ஒரு கூட்டமே அலைகிறது . கேவலம் ஒரு பேருந்தில் கைவரிசையை காட்ட கூட முடியவில்லை . விவரமாக சொல்கிறேன் .


பக்கிரியை உங்களுக்கு தெரியுமா ? மூலக்கொத்தளம் சுடுகாட்டில்தான் அவ(ரை)னை முதலில் சந்தித்தேன் . ஒரு எடுபட்ட அல்லது எடுபடாத எழுத்தாளனின் சாவுக்கு அஞ்சலி செலுத்த போயிருந்தேன் . ரொம்ப நாள் முன்னாடியே போக வேண்டியவன் அவன் . நாலைந்து முறை தற்கொலைக்கு முயற்சித்து நடக்கவில்லை . நல்லவேளை இந்த முறை நிறைவேறியது . எப்படி செத்து போனான் என்று கேட்டால் ஆச்சர்யப்படுவீர்கள் . கொஞ்ச நாளாக நெஞ்சுவலி இருந்திருக்கிறது . சம்பவ தினத்தன்று (இந்த சம்பவம் , சம்பவம்ங்கிறாங்களே . இன்னா சார் அது கேக்காதீங்க..)யாரோ போனில் அழைத்திருக்கிறார்கள். நம்பர் ஏதோ புதுசாக இருந்திருக்கிறது . லைன் கட்டாகிவிட்டது . மீண்டும் அழைப்பு . மறுமுனையில் பேசியவர் உங்களுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்திருக்கிறது என்று சொன்னாராம். என்னதான் சூடு,சொரனை இல்லாமல் வாழ்க்கை போயிருந்தாலும் , மனசாட்சி என்று உண்டு இல்லியா? அப்போது பார்த்து காலாவதி மருந்துகளை எவனோ மொள்ளமாறி மெடிக்கல் ஷாப் காரன் கொட்டி வைத்திருந்தானாம் . அதை பாக்கெட் சாராயத்தில் கலந்து குடித்திருக்கிறான் எடுபட்டவன் . அப்பிட் .


சரி அவன் கதை எதுக்கு ? பக்கிரிக்கு வரலாம் . சர்வோதய சங்கத்தலைவர் இறுதி அஞ்சலிக்கு வர்றாராம் . அதுக்கு வெயிட்டிங் என்றான் பக்கிரி . எனக்கு அதிர்ச்சி . எழுத்தாளர் சங்கத்தலைவர் வந்தாலும் ஒரு அர்த்தம் இருக்கு. அவருக்கும் , இவனுக்கும் என்னய்யா சம்பந்தம்னு கேட்டால் , பக்கிரி ஒரு பிச்சுவா சிரிப்பு சிரிச்சான் . அது ஒரு காமெடி தலைவரே . அந்தாளுக்கு நம்மாளு எதோ கதை எழுதி தாரேன்னு துட்டு வாங்கியிருக்கான் . அதை சர்வோதயம் அவர் பேர்ல போட்டுப்பாராம் . மேலிடத்துல சொல்லி அவார்டு வாங்கிப்பாராம் . இப்ப கூட கோயம்புத்தூர்ல சுடர்விழி கூட்டம் நடந்துச்சாமே . அதுல கூட அவருக்கு பரிசு கொடுக்கறேன்னு சொல்லியிருந்தாங்களாம் . இதை சொல்லிட்டு பக்கிரி என்னை ஒரு மாதிரி பார்த்தான் . பக்கிரி அது செம்மொழி மாநாடுப்பா .சரி மேட்டருக்கு வா என்றேன் . நம்மாளுங்க அங்க போயிருந்தாங்க சாரே . செம்ம கலெக்‌ஷனாம் நான் தான் போக முடியலை . பெட்டி கேசுக்கு ஆளு வோணும்னு புளியந்தோப்பு ஸ்டேஷன்ல இட்டுகினு போயிட்டாங்க. சும்மா சொல்ல கூடாது அஞ்சாயிரம் ரூபா கொடுத்தாங்க அதுக்கு . பக்கிரி என்று முறைத்தேன் . இருந்தாலும் எனக்கும் மனசு அடிச்சுக்குது . பெட்டி கேசுக்கு அஞ்சாயிரமா ? நாமளும் போலாமான்னு தோணிச்சு . காட்டிக்கொள்ளாமல் பக்கிரி விஷயத்துக்கு வா என்றேன்


அதான் சாரே காசு வாங்கினப்புறம் இவன் அவரை பார்க்கவேயில்லை . எழுதியும் கொடுக்கலை . அதான் இப்பவாச்சும் பார்க்கலாமேன்னு வர்றாராம் . எனக்கு புரியலை பக்கிரி . இப்ப பார்த்து என்ன ஆகப்போவுது ? எந்திரிச்சு எழுதி கொடுத்துடுவானான்னு பெரிசா சிரிச்சேன் . அதுக்கு பக்கிரி சொன்னான் . அதில்லை சாரே .இன்னிக்கு வுட்டா இந்தாளை மறுபடியும் பார்க்க முடியாதில்ல . அதான் வந்து காறி துப்ப போறாராம் . எப்படி இருக்கு பார்த்தீங்களா எழுத்தாளன் நிலைமை ?


பக்கிரி ரூபா எவ்வளவு இருக்கு ? சரக்கடிக்கலாமான்னேன் .ஒரு நாலைந்து பர்ஸ்களை கொட்டி கவிழ்த்தான் பக்கிரி . 200 ரூபா தேறும் சாரேன்னான் .கொஞ்சம் மப்பு ஏறினவுடன் எனக்கு அந்த ஆசை வந்தது .பக்கிரி எனக்கு தெரியாத விஷயமே இல்லை . ஆனா ரொம்ப நாளா பிக்பாக்கெட் அடிக்கனும்னு ஆசை என்றேன் .அவ்வளவுதானே வாத்தியாரே . கத்துகொடுக்கிறேன்னு சொன்னான் பக்கிரி . எடுபட்ட எழுத்தாளனின் தகனம் முடிந்தது . இந்த இடத்தில் ஒன்று சொல்ல வேணும் . சாவும்போது கூட அவன் வலது கையை பேனா பிடிப்பது போலவே வைத்திருந்தான் அந்த எழுத்தாளன் .இட்ஸ் ப்யூர் டெடிகேஷன் என்றேன் பக்கிரியிடம் . ஆமா சாரே . பிக்பாக்கெட்டுக்கும் அது வோணும்னான் பக்கிரி .


குருகுலவாசம் தொடங்கியது . முதல்ல மேல் பை வாங்க சொல்லித்தரேன் .மேல்பைனா சட்டை மேல் பாக்கெட்டாம் . தரை வாங்கறதுன்னா பின் பாக்கெட் . துண்டு பிளேடை எப்படி நேக்கா விரலிடுக்கில் கையாள்வது என்ற சூத்திரத்தை துரோணாச்சார்யார் ரேஞ்சுக்கு போதித்தான் பக்கிரி . சாரே நாளைக்கு வெள்ளோட்டம் என்றான் . எனக்கு கொஞ்சம் உதறலாக இருந்தது . பக்கிரி எழுதி கொள்ளையடிக்கறது ரொம்ப ஈசி . நான் சொன்னாப்போதும். அவங்களே வந்து பாக்கெட்டை காட்டி கிட்டு நிப்பாங்க. பிரச்சனையில்லை. ஆனா இதுல மாட்டிகிட்டா என்றேன் .


அடப்போ சாரே ! நீ எவ்வளவு அடிச்சாலும் தாங்குவே என்றானே பார்க்கலாம்.


(தொடரும்(லாமா)


Thursday, July 8, 2010

தலை கோதுதல்


என்னன்னு தெரியலை . ரெண்டு நாளா அஞ்சலை நினைப்பாவே இருக்கு . மவராசி என்னைய ஒத்தையில விட்டுட்டு போய் சேர்ந்துட்டா. ஆச்சு . ஒரு நாலு வருஷம் . அவ கருமாதியன்னிக்கு தின்னேனே கறி சோறு . அதுக்கப்புறம் கண்ல கூட பாக்கல . விரலை கடிச்சுகிட்டு குடிங்க கஞ்சியைன்னுட்டாங்க மருமவளுக. உடம்பு முடியலை . ஆனா நாக்கு இந்த கேக்கு கேக்குது . கறி தின்னாம உசுர் போயிட்டா கட்டை வேகாதோ .


முதல்ல இளையவன் கால் மாட்ல வந்து உக்காந்தான் . பின்னாடியே மூத்தவன் தலைமாட்டுல . மருமவ ரெண்டு பேரும் ஆளுக்கொரு திசையா நிக்கறாங்க. மூஞ்சியில கரிசனம் தெரியுது . இன்னிக்கு கறி சோத்துக்கு வேளை வந்திருச்சோ ?
நல்ல குறும்பாட்டு கறியா பிடிச்சிட்டு வாடா மக்கா . நம்ம தோட்டத்து மாங்கா போட்டு , எலும்புல எண்ணெய் ஊற குழம்பு வைங்க அய்யனுக்கு . எனக்கு வாய் ஊறல் கொஞ்சம் அடங்கினாப்ல இருந்துச்சு . ஏனோ எங்கப்பன் நினைப்பு ஓடுது . அவனுக்கு இந்த மாதிரிதான் கறி சோறாக்கினோம் . அன்னிக்கு அவன் கண்ணுல தெரிஞ்ச ஒரு சித்தம் . இன்னிக்கு என் கண்ணுல தெரியறாப்ல ஒரு ஒரு பிரமை .


குழம்பு கொதிக்கிற வாசம் வருது . சின்ன வயசுல கறி வாசம் , எலும்பு வாசம்னு பிரிச்சு மேய்வேன் . ஒத்தை ஆளு ஒன்றரை கிலோ கறியை அஞ்சு கவளத்துல அமுக்குவேன் . இன்னிக்கு ஏன் இப்படி ஆகுதுன்னு தெரியலை .
ரெண்டாமவதான் தட்டுல சோத்தை போட்டு குழம்பை ஊத்தி , மலையா எலும்பை குமிச்சு எடுத்தாறா . பின்னாடியே மவனும் . மூத்தவனை காணும் .அவன் எங்கடான்னு கேக்கேன் . தோட்டத்துக்கு போயிருக்கானாம் . அவன் பொண்சாதி சாடையில சொல்றா .


நல்லி எலும்பை கடிக்கும்போது அஞ்சலை நினைப்பு திருப்பி வருது . கூடவே எங்கப்பன் நினைப்பும் . கறி என்னவோ இளசாத்தான் இருக்கு . எதுவோ என்னைய மெல்ல வுடாம செய்யுது . நல்லா கேட்டு போடுறி கெழவனுக்கு . பெரியவ சின்னவளுக்கு சொல்லுறா . கொஞ்சம் கேலியா பட்டுச்சு எனக்கு . மூத்தவன் உள்ளே வந்தான் . கையில கொத்து ,கொத்தா ..அம்மாடி . மறுபடியும் எங்கப்பன் வரான் . மவனேன்னு தலையில கையை வைக்கறான் . இன்னும் கொஞ்சம் கறியை வைங்கடி அப்பனுக்கு . அய்யா நல்லா தின்னு . என்னா ? மவனே வேண்டாமுடா . வார்த்தை வரலை. தொண்டை முட்டுச்சு . இனி பிரயோசனமில்லை. முடிவு பண்ணிட்டானுங்க. அதோ மூத்தவ தூக்கை எடுத்து கிட்டு வராளே . சின்னவனும் வந்துட்டான். நல்லா சூடு பறக்க தேய்க்கணும்டா என்கிறான் பெரியவன் . ரெண்டு பேத்துக்கு ஆகாம இருந்துச்சு . காரியத்துக்காக ஒன்னு , மன்னா இருக்கானுங்க போல .


சின்னவன் நல்லெண்ணெயை தலையில கொட்டி தேய்க்க ஆரம்பிச்சான் . எனக்கு பொறி கலங்குச்சு . பெரியவன் இளநியை சீவ ஆரம்பிக்கிறான் .
ரெண்டு மருமவளும் கிணத்தடியில நிக்கறாளுக . ஒரு படி எண்ணெய் என் தலையில . உடம்பு லேசா நடுங்கறாப்ல இருக்கு . மறுபடியும் எங்கப்பன் மூஞ்சி தெரியுது . கூடவே அஞ்சலை மூஞ்சியும் . வாரி இறைக்கறாளுவ . ஒரு 50 தவலை தண்ணி. ஒரு அரை மணி . கை அலுப்புக்கு கொஞ்சம் நிப்பாட்டறாளுவ . பெரிய சொம்புல இளநியை எடுத்துட்டு வரான் சின்னவன் .


டேய் வேண்டாமுடா . வாயில வச்சு குடிங்கப்புங்கிறான் . எனக்கு தெரிஞ்சு போச்சு . அன்னிக்கு எங்கப்பனும் இப்படித்தான் இருந்தான் . அஞ்சலையும் . இன்னும் ஒத்தை காது கிழவி , நொண்டி சித்தப்பு எல்லாரும் .



கீத்து வந்து இறங்கியது . பந்தல் போட ஆரம்பித்தார்கள் . ஒப்பாரி சத்தம் கேட்க தொடங்கியது . ரெண்டு மருமவளும்தான் மூக்கை சிந்திக் கொண்டே இருக்கிறார்கள் . வந்திருந்த ஊர் சனத்துக்கு தெரிந்தே இருந்தது . என்ன நடந்திருக்கும் என்று . ஆனாலும் ஆறுதல் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள் . பிள்ளைகளுக்கு . குப்பை மெட்டில் கொட்டப்பட்டிருந்த எலும்புகளை நாய்க்கூட்டம் ஒன்று சீறலோடு சுவைத்துக் கொண்டிருக்கின்றன

Wednesday, July 7, 2010

ஜெயா தொலைகாட்சி காலைமலரில் நான்


ஜெயா தொலைகாட்சி அலுவலகம் . அம்மாவின் ராசி நிறம் . பார்க்கும் இடங்களிலெல்லாம் பச்சை வண்ணம்தான் . நல்லவேளை ! பச்சை , பச்சையாக பேசவில்லை . காலை மலர் நிகழ்ச்சியில் விளம்பரத்துறை பற்றிய நிகழ்ச்சிக்கு , விருந்தினராக அழைத்திருந்தார்கள் . நான் அவ்வளவு ஒர்த் இல்லையப்பா என்று சொன்னேன் . அட ...ரொம்பத்தான் ஃபீல் பண்ணாதீங்க என்று உட்கார வைத்து விட்டார்கள் .

“எப்படி இந்த துறைக்கு வந்தீங்க ?

ஜஸ்ட் பிடிச்சுது . வந்துட்டேன் என்றேன்

சார் இந்த மாதிரி ஒன் வேர்டு ஆன்சர் சொன்னால், எப்படி நாங்க அரை மணி நேரத்தை கடத்தறது ? இந்த ஒரு கேள்விக்கே ஒரு மணி நேரம் பேசணும் என்றார் சரவணன் . நிகழ்ச்சி தயாரிப்பாளர் . வாழ்க கலைஞர் என்று சத்தமாக கோஷம் போட்டால் அங்கிருப்பவர்கள் ரியாக்‌ஷன் எப்படி இருக்கும் என்று ஒரு நினைப்பு ஓடியது . உள்ளேயே சமாதி கட்டி , அதற்கும் பச்சை பெயிண்ட் அடித்து விடுவார்கள் . என் பிளாக் ஐடி கேட்டார்கள் . சொன்னேன். ஜெயலலிதாவிடம் நான் கேட்ட 32 கேள்விகளை படித்தால் கன்ஃபார்ம் சமாதி

கொஞ்சம் கஷ்டப்பட்டுதான் பேச வேண்டியிருந்தது . பத்து மணிக்கு மேல் என்றால் பிரச்சனையேயில்லை . ஏன் என்றால் நான் பேசப் போவதில்லை. உள்ளம் பேசுமே...moreeeeeeeeee... (இந்த பொன்னான தருணத்தில் பத்து மணிக்கு மேல் என் மொக்கைகளை சகித்துக் கொண்ட அன்பு உள்ளங்களுக்கு நன்றியையும் ,அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்ள கடமை பட்டிருக்கிறேன் .)

பேட்டி நாளை வியாழன் காலை மலர் நிகழ்ச்சியில் (08/07/2010) ஒளிபரப்பாகும் . நேரம் காலை 8.00 மணியளவில்

...........................................................................................................................................................................




Saturday, July 3, 2010

சொங்கியார் பராக்...பராக்..


சொன்ன நேரத்துக்கு சொங்கியார் வரவில்லை. வானம் மப்பும் , மந்தாரமுமாக இருந்தது . போச்சுடா ..என்று நொந்து கொண்டோம் . செல்லடித்தால் எடுக்க வில்லை . இனி அவர் வர மாட்டார் . நாம் தான் தேடி போக வேண்டும் . பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினோம்.

சிந்தாதிரிபேட்டை கூவம் ஓரமாக ஒரு டாஸ்மாக் கடை உண்டு . சொங்கியாரின் மாமூல் ஸ்பாட் . அங்கு அவருக்கு அக்கவுண்ட் கூட உண்டு . உள்ளே நுழைந்து பார்த்தால் அரை மயக்கத்தில் இருந்தார் சொங்கியார் . பக்கத்தில் ஒருவன் ரத்த வாந்தி எடுத்துக் கொண்டிருந்தான் . சொங்கியாரின் அபிமான எழுத்தாளர் ஒருவர் உண்டு . புரியாத பஃப் பெயர்களை பற்றியும் , அங்கு கிடைக்கும் ஃபாரின் சரக்குகளை பற்றியும் விலாவாரியாக எழுதி தள்ளுவார் . சொங்கியாரும் , அவரும் ஒரு முறை இதே பாரில் சரக்கு அடித்ததை பற்றி சொல்லியிருக்கிறார் . அன்றும் இதே போல் ஒருவன் வாந்தி எடுத்தானாம் . ம்ம்.. அவர் ஒரு ”மனங்கொத்தி பறவை “


சொங்கியார் மட்டையாகி விட்டால் அவ்வளவு சீக்கிரம் எழுப்ப முடியாது . இதழ் வேறு அச்சுக்கு போக வேண்டும் . வேறு வழியில்லை . ஒரு ஊறுகாய் பாக்கெட்டை வாங்கி பிரித்து , மூக்கில் வாசம் காட்டினோம். அனிச்சையாய் கண் விழித்தவர் , கிளாசை நீட்டினார் . புரிந்தது . குவார்ட்டர் ஆர்டர் செய்தோம் . சொங்கியாரின் முகத்தில் செய்தி களை வந்து விட்டது . அப்பாடா..

முதலில் அம்மாவின் அறிக்கையை பற்றி சொல்லுங்கள் சொங்கியாரே


வர, வர அம்மாவின் அறிக்கைகளில் அனல் பறக்கிறது . கொஞ்ச நாள் முன்பு , அண்ணா அறிவாலயத்துக்கு சீட்டு விளையாடவும் , கேளிக்கைகளில் ஈடுபடவுமே செய்கிறார்கள் என்று சொன்னவர் . நேற்றைய அறிக்கையில் முதல்வரை போர் குற்றவாளி என்று கடுமையாக சாடியிருக்கிறார் . முதல்வரும் அதற்கு பதில் சொல்லிவிட்டார் . கூடவே ஒரு காமெடியும் செய்திருக்கிறார் .

“தனி ஈழம் கிடைக்குமென்றால் நான் ஆட்சியையையும் காவு கொடுக்க தயாராக இருந்தேன் என்று சொல்லியிருக்கிறார் . வெந்த புண்ணில் வேலை பாய்ச்சும் செயல் இது என்று எல்லோரும் சொல்கிறார்கள் (உன் கிட்ட யார்டா சொன்னது . எதை வேணுமினா எழுதுவியா ?)

சரி மேல என்றோம் .

ஒரு ஆஃப்பாயில் ப்ளீஸ் என்றார் சொங்கியார் . வந்தது . அப்படியே உடையாமல் சாப்பிடுவேன் பாருங்கள் என்றார் .

எதோ பொடி இருக்கிறது என்று புரிந்து கொண்டோம் .

சும்மா ஒன்னு , ரெண்டா கூட்டிகிட்டு வராம ,கொத்தோடு பிரித்து , அம்மாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க தயாராகிவிட்டதாம் ஆளுங்கட்சி .

அம்மா சும்மாவா இருப்பார் ?

அவர் எங்க சும்மா இருக்கிறார் . கொடநாட்டில் மேஸ்திரி வேலையில் இருக்கிறார் . இங்கு அதிமுகவின் பேஸ்மெண்ட் வீக்காகி கொண்டிருக்கிறது . அவர் அங்கு கொடநாட்டில் பில்டிங்கை ஸ்ட்ராங் பண்ணி கொண்டிருக்கிறார் .


சரி தேர்தல் எப்போது வரும் ? சொல்லுங்கள் .

செம்மொழி மாநாட்டு வெற்றி களிப்பில் தலைவர் இருக்கிறார் . ஆனால் அடுத்த முறையும் நீங்கள்தான் முதல்வராக வேண்டும் என்று வீட்டில் பிரஷராம் . துணை முதல்வர்தான் இதை ரசிக்க வில்லை . மதுரைக்காரர்தான் இந்த உறுதி மொழியை வாங்கியிருக்கிறாராம் . இல்லையென்ரால் எலெக்‌ஷன் சமயத்தில் தன் அதிருப்தியை காட்டலாம் என்ற அச்சமாம் ..

தலைவருக்கு ஒரு தொண்டர் கோயில் கட்டியிருக்கிறாரே ? பிரசாதம் உமக்கு வந்ததா ?

சும்மா கட்டுவாரா ? எதாவது ”வேண்டுதல்” இருக்கும் . அதில் துரைமுருகன் , வேலூர் மாவட்ட செயலாளர் படங்களும் வரையப்பட்டிருந்தது . ஆனால் அதை அகற்றி விட்டார்கள் குங்குமம் வழிந்ததை ரத்தமா என்று கிண்டலடித்தவராயிற்றே முதல்வர் . பத்திரிக்கள் கிண்டலடிக்கும் . இந்த அம்மா வேறு அறிக்கையில் சாடும் . அதனால்தான் இடித்து விட்டார்கள் போல .

என் நண்பர் ஒருவர் பழைய கிழிந்த துணிகளை தைக்கும் தொழில் செய்து வந்தார் . நேற்று அவரைப் பார்த்தேன் . டாடா சுமோவில் வருகிறார் .

நல்ல முன்னேற்றம்தான் . யார் அவர் என்றோம் .

சத்தியமூர்த்தி பவன் வாசலில்தான் கடை போட்டிருக்கிறாராம் .

புரிகிறது . தமிழ்நாடு காங்கிரஸ் என்று இழுத்தோம் .

ஆமாம் . சுதர்சனம் வகித்த பதவிகளுக்கு போட்டி ஆரம்பமாகி விட்டது . அடுத்து அடி , தடி , வேஷ்டி கிழிப்புகள்தானே . சரி பா.மா.க ?

தமிழ்குடிதாங்கி சாதி வாரி கணக்கெடுப்பு போராட்டத்தில் தீவிரமாக இருக்கிறார் . தங்கள் சாதி எண்ணிக்கை துல்லியமாக தெரிந்து கொண்டால் பேரத்துக்கு உதவும் என்று நினைக்கிறாரோ என்னவோ ?

அவங்க சாதி சனம் அப்படியே , இவர்களை ஆதரிப்பார்களா என்ன?

அவங்க நினைப்பு அப்படி ? மொத்த எண்ணிக்கை தெரிந்துவிட்டால் ., எதாவது போராட்டம் ,குருமா என்று பொழுதை ஓட்டும் எண்னம் கூட இருக்கலாம் . பாவம் மக்கள் தொலைக்காட்சி .

ஏன் ? நன்றாக தெரிகிறதே .

விளம்பரம் பற்றி சொல்கிறேன் . சீரியல் ஆரம்பித்து விட்டார்கள். தமிழில் பெயர் பலகைகள் முழுவதும் இல்லை என்று கொஞ்ச நாட்கள் முன்பு ராமதாசு போராட்டம் நடத்தினார் . அது ஒரு பெரிய காமெடி .

தமிழ் குடிதாங்கி தமிழுக்காக போராட்டம் நடத்துவது தவறா ?


மக்கள் தொலைக்காட்சி . புலி பசித்தால் புழுக்கையை கூட சாப்பிடும் என்பது போல் ஆகி விட்டது . நீரே நிகழ்ச்சிகளை பார்த்து தெரிந்து கொள்ளும் . இன்னொரு கட்டிங் ப்ளீஸ் .

தொலையுங்கள் . எதாவது கடைசி பிட்ஸ் ..

கேப்டனுடன் கொடநாடு சேராமலிருக்க வழி செய்யும்படி , மன்னார்குடிக்கு கோரிக்கை போயிருக்கிறதாம் . அவர்களுக்கும் நிறைய நன்றி கடன் பாக்கியிருப்பதை நினைவூட்டியிருக்கிறார்களாம் .

வாய் குழறி சாயத் தொடங்கினார் சொங்கியார் . சரக்கு புது சரக்காம் . ஆளுங்கட்சி ஆலையிலிருந்தாம் . மயங்குவதற்கு முன் சொங்கியாரின் அப்டேட்ஸ் ...