Tuesday, February 16, 2010

வாழைப்பூ வாசனை..........


ஞானானந்தம் மயந்தேவம்...
நிர்மலம் ஸ்படிகாகிரிதிம்
ஆதாரம் சர்வ வித்யானம்
ஹயக்கீரிவம் உபாஸ்மஹே!

கணீரென்று அம்மாவின் குரல். நான் திரும்ப சொல்கிறேன்.

படிப்பு நன்னா வரும்டா தங்கம். எதுவுமே மறக்காது. எப்பல்லாம் தோணுதோ, சொல்லிண்டேயிரு!

செண்டர் ஃபார்வேர்டு. தேர்ந்த தட்டச்சுக்காரனின் விரல்கள் இயங்குவதை போல் என் கால்கள் விளையாடும். இடதும் வலதுமாய் சகாக்களிடம் அனுப்பி, திரும்ப பெற்று கொண்டு போய் நேர்த்தியாய் இலக்குதான். சமயங்களில் வரிசையாய் மூன்று. எதிரடி மறந்து பிரமிப்பாய் உன்னிடம் கொஞ்சம் கற்றுக்கொண்டோம் என்று மாற்று முகாமின் தலைவன் சிலாகிப்பான் சமயங்களில். கோப்பைக்குள் வெற்றிகள்.

சார் நீங்க தீர்த்தாமாடியாச்சா? இந்த பவித்ரத்தை மோதிர விரல்ல போடுங்கோ!. இதை அடியில போட்ருங்கோ! சொல்லுங்கோ! ஸ்ரீமான் கோவிந்த கோவிந்த..வேங்கடநாராயண பிரிதத்தம்.. வலது தொடைல கையை வச்சு குவிச்சு மூடி..

உமாவின் ஈரமுத்தம். எட்டாம் கிளாஸ் படிக்கும்போது அவளிடம் பெற்றது. இன்றும் உள்ளே ஒளிந்திருக்கிறது. இரண்டு முத்தங்கள்! இரண்டாவது முத்தம்தான் இப்போதும் நினைவில். கிணற்றடியில் துணி துவைக்கும் கல்லின் மேல் குத்துக்காலிட்டு உட்கார்ந்து அழுது கொண்டிருந்தேன். உமா வந்தாள். சொல்ல மறந்துவிடுவேன். நீங்கள் நியாபகப்படுத்துங்கள். உமா ஒன்பதாவது படிக்கிறாள். எனக்கு அவளிடம் இருந்த பிரியம் காதலாய் இருக்குமோ என்று எனக்கு தோன்றியது எப்போது என்று சரியாக சொல்லமுடியவில்லை. உமாவோடு என்னால் நடக்க முடியவில்லை..மீண்டும் கிணற்றடிக்கு வருகிறேன். உமா எதை நினைத்து இப்படி அழுது கொண்டிருக்கிறாய் என்று கேட்டாள். நீ அன்று கொடுத்தாயே ஒரு முத்தம். அதைத்தான் என்கிறேன். அவ்வளவுதானா என்றபடி இறுக்கி அந்த இரண்டாவது முத்தத்தை கொடுத்தாள். ஒரு எட்டு நிமிடங்கள் அந்த முத்தத்தில் கால அளவு இருக்கலாம்.

என்னத்துக்கு இப்படி பட்டபகல்ல எல்லா விளக்கையும் எரிய விடுறிங்க?

நான் கண்களை திறக்காமல் அவள் முகத்தை மனக்கண்களில் கொண்டு வரும் முயற்சியில் இருந்தேன்.பனிக்குடத்தில் நீந்தி கொண்டிருக்கும் சிசுவின் மீது சூடான கரங்கள் ஆதுரத்துடன் தடவி கொடுக்கும் சுகத்தை அனுபவிக்க வேண்டும் போலிருந்தது. அம்மாவின் முகம் தெரிய ஆரம்பித்திருந்தது.

எத்தனை பேரன்?

ஒன்னுதான் மாமா .

நெய் பந்தம் ரெடி பண்ணனும். சார் இந்த மாலையை எல்லாம் எடுத்துடுங்க !

அப்போது எங்கள் தோட்டத்தில் நிறைய வாழைமரங்கள். மொந்தை வாழைப்பூக்கள். அடிக்கடி அம்மா வாழைப்பூ மசியல் செய்வாள். இப்போதும் எங்கோ அந்த வாசனை கமழ்ந்து கொண்டே இருக்கிறது.

திஸ் ஈஸ் நாட் டோட்டல் மெமரி லாஸ். மே பி சிம்டம்ஸ் ஆஃப் அல்சீமர். நீங்க அவர் பிள்ளை இல்லியா? உங்க முகம், பேர் எல்லாம் கூட சட்டுன்னு மறந்து போகும். இல்லை சட்டுன்னு நியாபகம் வராது. அட் ஒன் ஸ்டேஜ் அவர் பெயர், முகம் கூட மறக்கலாம். கண்ணாடியில் பார்க்கும்போது இவர் யாருண்ணு அவருக்கே குழப்பம் வரலாம். அப்புறம் நீங்க எப்ப ஸ்டேட்ஸ் கிளம்பறீங்க? அப்பாவை யார்...?

நாவிதன் அப்பல்லாம் எங்கள் இடத்திற்கே வந்து விடுவான். அப்பாவின் மேற்பார்வையில் சுத்தமாய் சிரைக்கப்படும். இது ஆச்சாரம் இல்லை. ஹைஜீனிக் - அப்பா .

உனக்கு யார் மாதிரி ஹேர்கட் பண்ணனும்? இரண்டு போட்டோக்களை பார்பர் அவனிடம் காட்டுகிறார். ம்ம்ம்.. எனக்கு அப்பா மாதிரி தான் வேணும் ! கண்ணை நல்லா இறுக்கமா மூடிக்கோப்பா!

எனக்கு நியாபகம் வந்து விட்டது. அந்த இரண்டாவது முத்தம். உமா, கிணற்றடி, தோய்க்கிற கல். அந்த முத்தம் முடிகிற வரை நான் கண்ணை மூடிக் கொண்டிருந்தேன். இறுக்கமாக. திறந்த போது உமா போய் விட்டிருந்தாள். அன்று இரவு முழுசும் உப்பு கரித்துக் கொண்டேயிருந்தது.

அப்பா ! நான் சொல்றது உங்களுக்கு புரியுதான்னு பாருங்களேன். ஜஸ்ட் டிரை டூ அண்டர்ஸ்டேண்டு!

உன் கண்ணுல மயிரு போயிடுச்சா ? அப்பா ஊதட்டுமா?

அவன் சொன்னது எனக்கு புரிந்தது. ஆனால் இப்போது அது நினைவில் இல்லை. அதனால் நியாபகம் வரும்போது நிச்சயம் சொல்கிறேன். இப்போது எனக்குள் எட்டு அலைவரிசைகள் ஓடிக்கொண்டிருக்கிறது.என்று நினைக்கிறேன்.அவற்றை வரிசை படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்! அதாவது ஒழுங்கு படுத்த. அந்த முதல் முத்தம். அவள் பெயர் என்ன? கொஞ்ச நேரம் முன்னால் கூட சொல்லிப்பார்த்துக் கொண்டேனே! இப்போதெல்லாம் இப்படித்தான் நடக்கிறது. நீங்கள் வாழைப்பூ மடலில் தயிர் சாதம் சாப்பிட்டிருக்கிறீர்களா? உங்களால் அதை மறக்க முடியுமா? அந்த முதல் முத்தம் அப்படித்தான். ஆனால் அதை பெற்றுக் கொண்ட தருணம் மறந்து விட்டது. அதை கொடுத்தவள். நினைவுக்கு வந்து விட்டது. உமா. முழு பெயர் உமாராணி ! ஆனால் அவள் எங்கள் வீட்டிற்குள் வருவதற்கு அனுமதிக்க மாட்டார்கள். பின் பக்கமாகத்தான் வருவாள்.

அவுன்ஸ் விஸ்கி. இரண்டு ஐஸ் துண்டுகள் . ஆன் தி ராக்ஸ். சியர்ஸ் ..டியர் ஃப்ரெண்ட்ஸ் ! தி ஈஸ் டூ செலிப்ரேட் ஹிஸ் பிரமோஷன். ஜி. எம். மார்க்கெட்டிங் !

கோவிந்தா எல்லாம் ரெடியா? எல்லாரும் பூணுலை மாலையா போட்டுக்கோங்கோ ! நீங்க இந்த மந்திரத்தை ....

நான் லேசாக கண்களை திறக்க முயற்சிக்கிறேன். கொஞ்சம் வெளிச்சம் வந்தால் இடது பக்கம் அவள் போட்டோவை தரிசிக்கலாம். திருவஹீந்திபுரம் ஹயக்கீறீவர் சந்நிதியில் ஞானானந்த மயந்தேவம் நிர்மலம்... இப்போது தலைகீழாக நீந்த ஆரம்பிக்கிறேன். பனிக்குடத்தினுள் . மேடிட்டிருக்கும் வயிற்றை உமா தடவிக் கொண்டிருக்கிறாள். நான் கிணற்றடியில் உட்கார்ந்திருக்கிறேன். வீட்டினுள் இருந்து வாழைப்பூ மசியல் வாசனை. இரண்டு வாழைப்பூக்கள் இலைதூக்கி சிரிக்கின்றன. உமா உள்ளே நுழையும் மணம் வருகிறது. ஜெட்லாக் பற்றி மருமகளிடம் மகன் விளக்கி கொண்டிருக்கிறான். இப்போது அந்த முதல் முத்தம் பெற்ற இடம் நினைவுக்கு வந்து விட்டது. அதை கொடுத்தவள் பெயர் மெல்ல மறக்க ஆரம்பிக்கிறது. மீண்டும் கண்களை திறக்க முயற்சிக்கிறேன். ஜன்னல் கம்பிகளில் உட்கார்ந்திருக்கும் சிட்டுகுருவிகள் பறக்க ஆரம்பிக்கின்றன. மெல்ல எழ முயற்சிக்கிறேன். ஆச்சர்யம்.. என்னால் முடிகிறது. கண்களை திறக்காமலே !




34 comments:

Unknown said...

================================================
உங்கள் வலைத்தளத்தின் டிராபிக் ஐ அதிகரிக்க தமிழ்10 திரட்டியுடன் இணையுங்கள் .இதில்
enhanced user optimization என்ற வசதி இருப்பதால் உங்கள் பதிவுகள் ஸ்பாம் தளங்களால் பாதிக்கப் படாமல் உடனுக்குடன் பிரபல செய்திகளின் பிரிவுக்கு வந்து விடும்

உங்கள் பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கவும்
ஓட்டளிப்புப் பட்டையை பெற இங்கே சொடுக்கவும்

================================================

கே.என்.சிவராமன் said...

என்ன எழுத்து... என்ன எழுத்து... சபாஷ்...

அழுத்தமான முத்தங்களுடனும்
தோழமையுடனும்
பைத்தியக்காரன்

vasu balaji said...

மணிஜி. மாஸ்டர்பீஸ்.

Ganesan said...

என்ன எழுத்து... என்ன எழுத்து... சபாஷ்...

அழுத்தமான முத்தங்களுடனும்
தோழமையுடனும்
பைத்தியக்காரன்.

சிவாவிடம் இருந்து எப்பொழுதோ ஒரு முறைதான் இந்த முத்தம் கிடைக்கும், வாங்கி கொள்ளுங்கள். மணிஜி.

சிவாவே பாராட்டியாகிவிட்டது.ம்ம் நாங்கள் என்ன பின்னுட்டம் போட?

வாழ்த்துக்கள் மணிஜி

Ashok D said...

சங்கல்ப கல்ப சதக்கோடி அசமபராபர ஷிஷ்ட்டஜனபால தீரமுனிதன விகார மதன சுகுமார தத்தய

இரவினில் ஆட்டம் பகலினில் ஆட்டம்.. ஆனந்ததாண்டவம் ஆடிக்கொண்டிருந்தேன் உள்ளே...

:) :)

Paleo God said...

ததாஸ்து..

அகநாழிகை said...

//பைத்தியக்காரன் said...
என்ன எழுத்து... என்ன எழுத்து... சபாஷ்...

அழுத்தமான முத்தங்களுடனும்
தோழமையுடனும்
பைத்தியக்காரன்//

இதை விட வேறென்ன வேண்டும்,
அருமை மணிஜி.

நர்சிம் said...

பிரமிப்பாய் உணர்கிறேன்.

Unknown said...

சூப்பரப்பு.முதல் முத்தத்தின் உப்பு கரிக்குது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

மணிஜி..அடடா..என்னத்தைச் சொல்ல முடியும்? எது சொன்னாலும் மாற்று குறைவாகத்தான் இருக்கும்

செ.சரவணக்குமார் said...

மிக அருமை சார். (உங்களுக்கெல்லாம் டெம்ளேட் பின்னூட்டம்தான் போடமுடியும்)

கலகலப்ரியா said...

அம்மாடியோ... :(... வார்த்தைகள் இல்லை மணிஜி... :((...

anujanya said...

ஜ்யோவ் மாதிரியே நீங்களும் சமீபத்தில் பிராண்டை மாற்றி விட்டீர்கள். எது என்று தான் சொல்ல மாட்டேங்கறீங்க :).

ரொம்ப நல்லா வந்திருக்கு மணிஜி.

அனுஜன்யா

butterfly Surya said...

என்ன சொல்ல மணிஜி..??

திகைச்சு போயிட்டேன்.

எங்க (என்) கூட எல்லாம் இனிமே பேசாதீங்க.

ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணா

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

ஆஹா! அருமை..!! கட்டிப்போடும் நடை... தொடருங்கள்...

creativemani said...

சார்... நமஸ்காரங்கள்.. :)

ரவி said...

யோவ்.

வாழப்பூவும் மூனு லார்ஜ் கோட்டர் அடித்த குரங்கும் என்று ஒரு சிறுகதை புத்தகம் எழுதாம முடிக்க மாட்டே போல.

நானும் ஆரம்பிச்சாத்தான் சரிப்படும். (உண்மை அண்ணன் அல்ரெடி ஆஜ்ர்)

"உழவன்" "Uzhavan" said...

மிகவும் ரசித்தேன்

Jerry Eshananda said...

mind blowing.

உண்மைத்தமிழன் said...

என்னங்கண்ணே இது..?

பைத்தியக்காரனோட சகவாசம் வைச்சுக்காதீங்கன்னு சொன்னா கேட்டாத்தான..?

பா.ராஜாராம் said...

ஒன்றுமில்லாமல் செய்துவிட்டீர்கள் மணிஜி.

ஜெயன்ட் வீலில் சுற்றுவது என்னைப் பொறுத்தவரையில் தற்காலிக பறப்பே...அப்படி பறந்த ஒரு அனுபவமாக இருந்தது.அவ்வளவு தூரத்தில் இருந்து கொண்டு இந்த அனுபவத்தை தந்த உங்களுக்கு..உங்கள் கரங்களுக்கு..

சிவராமன் தந்த அதே முத்தம்!

முதல் முத்தம் தருகிற எல்லா உமாக்களும்,கொல்லை வழியாகத்தான் வருகிறார்களோ மணிஜி?இந்த வரிகளை தட்டச்சுகிற இத்தருணத்தில் கண் நிறைகிறேன்.

இதே flow வில் இன்னும் கொஞ்சம் பெருசாக எழுதி இருக்கலாமோ என தோனுகிறது மணிஜி.வலைப் பதிவிற்க்கென சுறுக்கி விடாதீர்களேன் ஒரு அபாரமான சிறுகதையை.

அப்புறம்,ஒரு வேண்டுகோள்.

நீங்கள் எழுத சொல்லி இருந்த மாமாவின்,மகளின்(கவனிக்கவும்,உங்கள் மனைவி என குறிப்பிடவில்லை.)கதையையும் நீங்கள் எழுதுவதே சிறப்பாக இருக்கும் என தோனுகிறது.இதுக்கு மேலேயா மக்கா ஒரு எழுத்து வேணும்?

கண்டிப்பாக அந்த மாமாவும்,அவரின் மகளும் நிறைந்துதான் போவார்கள்.அப்படி வருந்தினால் கூட..வருந்தட்டுமே!

இம்மாதிரியான வருத்தங்கள் ஒரு பேரானந்தம் மணிஜி.அதையோ,இதையோ அவர்களுக்கு தாருங்களேன்.

இது எதுவும் இல்லாவிட்டாலும்..

அட்லீஸ்ட்,எனக்காகவாவது.

ப்ளீஸ்...

Unknown said...

படிச்சிட்டு கொஞ்ச நேரம் என்ன செய்றதுன்னே தெரியாம உக்காந்திருக்கேன். தண்டோரா என் முன் பிரம்மாண்டமாய் நிற்கிறார்.

புலவன் புலிகேசி said...

படிச்சி முடிச்சும் ஓடிக்கொண்டே இருக்கிறது...

vichenou said...

ஏதோ இனம் புரியாத ஒன்று மனதில். விடிந்து,விடியாத பொழுதில்,சில்லென்ற பனி உடலில் உடுருவும் ஒரு சிலிர்ப்பு.
மறைந்து தழும்பாகிபோன நினைவுகளில், மீண்டும் காயம், வலிகளை சுவாசித்து வாழ்ந்த பொழுதுகளுக்கு மீண்டும் ஒரு பயணம்.வார்த்தைகளால் மனிதனுக்கு மீண்டும் ஒரு பயணமா ?
அருமை என்று இதை வேலிபோட முடியாது.... ஏனென்றால் இது முழுவதும் உணரபடவேண்டியவை...
வாழ்த்துக்கள்.........

கார்த்திகைப் பாண்டியன் said...

ரொம்ப நாள் கழிச்சு.. அதகளம் பண்ணி இருக்கீங்க தலைவரே.. வாழ்த்துகள்..:-)))

Sanjai Gandhi said...

லேபிளை பார்த்து தான் தெரிந்துக் கொண்டேன் புனைவென்று.. கலக்கு மாமா..

Romeoboy said...

அருமைன்னு ஒரே வார்த்தையில் சொல்லி முடிக்க மனம் வரவில்லை. அதற்கு எல்லாம் மேல்

க ரா said...

என்னன்னு சொல்ல. பாரட்ட வார்தைகள் இல்லை.

Unknown said...

சில இடங்கள் புரியவில்லை.., ரொம்ப நல்லா இருக்கு அண்ணே

R.Gopi said...

மணி ஜி........

இந்த விஸ்வரூப எழுத்து உங்ககிட்ட இருந்து வரும் என்று ரொம்ப நாள் காத்து கிடந்தேன்...

இதோ.... இந்த வாழைப்பூ வாசனை என்பதன் மூலம் அது வந்தே விட்டது..

இப்போதெல்லாம், உங்களின் எழுத்து நடை வேறு ஒரு திசையை நோக்கி நகர்வதாக தெரிகிறது... எனக்கு மட்டுமா என்று தெரியவில்லை...

ஹாட்ஸ் ஆஃப் டூ யூ தலைவா...

ராகவன் said...

அன்பு தண்டோரா,

ரொம்ப அருமையாக இருந்தது.

குழந்தைகளை தூக்கி வைத்துக் கொண்டு முன்னும் பின்னும் நடக்கும் யானையாய் நடை மயக்கத்தைக் கொடுக்கிறது. உச்சானிக்கொப்பில் உட்கார்ந்துகொண்டு காற்றினூடே ஆடும் அந்த லேசான பறவையின் வீசல் மாதிரி ஒரு ஊஞ்சல் பயணம் தண்டோரா.

என்ன சொல்றதுன்னு தெரியலை. அபிவாதயே சொல்றது தவிர...

அன்புடன்
ராகவன்

Cable சங்கர் said...

தலைவரே.. ஒரு அருமையான திரைக்கதை. ஹைஸ்பீடிலும், செபியாடோனில் சில காட்சிகளையும், ப்ளாஷ்கட்டிலேயும், சவுண்ட் ஓவர்லாப்பிலும், இன்னும் என்ன என்னா சினிமா தனங்கள் உண்டோ அத்தனையும் கதையின் திரைக்கதையில் ஓடுகிறது.. ஆழமான கதையுடன்.. சூப்பர்..

ஆடுமாடு said...

நச்!

வாழ்த்துகள்.

மாதவராஜ் said...

கைதேர்ந்த எடிட்டரின் சிறப்பில் மொழி அடர்த்தியாகி, காட்சிகளின் வண்ணம் கொண்டு இருக்கின்றன. வாழ்த்துக்கள் தண்டோரா!