Friday, May 14, 2010

கூடையில் என்ன பூ ? குஷ்பூ


சிலரால் சுட்டியும், பலரால் கோயில் கட்டியும் கொண்டாடப்பட்ட முற்போக்கு “பெண்சிங்கம்” முன்னாள் கனவுக்கன்னி இன்னொரு ஜாக்பாட் அடித்தார். அது திருமாவளவனின் பாக்கெட்டிலிருந்து அடிக்கப்பட்டது இன்னும் விசேஷம். பெண்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடும் ஒரே கட்சி திமுகதான் என்று திருவாய் மலர்ந்தளியவர் சொல்லாமல் விட்டதும் “விழி” மொழி” என்ற பெயரில் முடியும் மாதர்களுக்கு என்பதைதான். சற்குணங்களும். ஜகதீசன்களும் விதிவிலக்கு. தூத்துக்குடி பண்ணையாரினிக்கு அடித்தது ஜாதி யோகம். போதும் . அது. இனி ஓவர் டூ குஷ்பூ. தலைவர் சொன்னது. “முற்போக்கு” சிந்தனை உள்ள குஷ்புவின் ”பணி” கழகத்திற்கு பெரிதும் உதவும் . கோயில் கட்டி கொண்டாடப்பட்ட ஒரு தெய்வத்தை கருவறையிலிருந்து கழகத்துக்கு கொண்டு வந்த பணி ஆஹா...91.9
ஆமாம் ..திருமா என்ன சொல்லுவார்? ஒன்னும் சொல்ல முடியாது. சக்தி கொடு என்று கேட்கலாம்.. அவ்வளவுதான். ஆமாம் தேசிய கட்சியில் ஏன் சேரவில்லையாம் ? பின்ன இட்லிதானே தமிழனின் தேசிய உணவு
டிஸ்கி: இட்லிக்கு மாவரைக்கும் போது நல்ல வழுக்கை இளநீரை போட்டு அரைத்தால் இட்லி மிகவும் மிருதுவாகவும்,சுவையாகவும் இருக்கும்.அரிசி ஊற வைக்கும் போது கொஞ்சம் அவல் சேர்த்தாலும் மிருதுவாக இருக்கும் (ஈரோடு குப்பண்ணா மெஸ் தகவல்)

Thursday, May 13, 2010

சத்யா..வசு..மற்றும் நான்


இன்று நண்பர்கள் தினமாம் . பத்திரிக்கையில் செய்தி படித்தேன். ராகுல் நிறைய ஃப்ரெண்டுஷிப் கயிறுகள் வாங்க காசு வாங்கி கொண்டான். இப்போதெல்லாம் தினம், தினம் நண்பர்கள் மாறுகிறார்கள். முன்பெல்லாம்.. எனக்கு என் பழைய நண்பர்கள் நியாபகம் வந்தது . கொஞ்சநாள் காதலித்து பின் நண்பியாகி போன சத்யாவின் நியாபகமும்..


எதை தேடற டார்லிங் என்றேன்.

வசுமதி. என் மனைவி. பிரோவையெலாம் கலைத்துப் போட்டு எதையோ சீரியஸாக தேடிக்கொண்டிருந்தாள். இந்த நகைசீட்டு புக்கு காணுங்க. அதைத்தான். போன மாசம் நீங்கதானே கட்டினீங்க? உங்க பைக் பெட்டியில் இருக்குமோ? அவள் கண்களில் பொய் தெரிந்தது. அப்பட்டமாக.


வசு எனக்கு பெரிசா ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் பிடிக்காது . நான் கொஞ்சம் ஓப்பன் டைப் . வாரம் ஒரு முறை ஃப்ரெண்ட்ஸோட பார்ட்டி உண்டு. ஒரு நாளைக்கு அஞ்சு சிகரெட் பிடிப்பேன். அப்புறம் கல்யாணம் கச்சேரின்னா சீட்டாடுவேன். இதுவரைக்கும் பெரிசா சேவிங்க்ஸ் ஒன்னும் கிடையாது. அவ்வளவுதான். உன்னை பற்றி கொஞ்சம் சொல்லேன். நீ அழகா இருக்கங்கறதை தவிர . ம்ம் இன்னொன்னு . நான் ஒரு பொண்ணை காதலிச்சேன். சத்யா என்றேன் ஒரு சிகரெட் பிடிக்கலாமான்னு அவள் அனுமதியை எடுத்துக் கொண்டபடி முதல்ல ஃப்ரெண்ட்ஸாத்தான் இருந்தோம் . அப்புறம் காதலிச்சோம். வெளியில் எங்கயும் சுத்தினது இல்லை .(ஜானியில் “காற்றில் எந்தன் கீதம் “ பாட்டில் ஸ்ரீதேவியின் அழகுக்கு எதுவும் ஈடில்லை என்று சத்யாவிடம் தேவி பாரடைஸில் கிசுகிசுப்பாய் சொன்னதை மறந்துவிடுகிறேன்) . என்னவோ சின்ன பிரச்சனை . கொஞ்சம் இல்லை நிறைய ஈகோ அவளுக்கு. இல்லை ரெண்டு பேருக்குமே. ஆனா அவளுக்கு கொஞ்சம் அதிகம் என்னை விட . பிரிஞ்சுட்டோம் . வசுமதியின் பார்வை இதை நம்பவில்லை என்றது. சரி வசு உனக்கு எதாவது காதல் அனுபவம் ? சும்மா சொல்லு . இன்னிக்கு நம்ப ஃப்ர்ஸ்ட் நைட் . ஒளிவு மறைவு இல்லாம இருப்பமே என்று நான் சொன்னதை அவள் ரசிக்க வில்லை. சாரி வசு . நான் ஓப்பனா சொன்னதால கேட்டேன் . ஃபர்கெட் இட் .

வசு மும்முரமாக தேடிக் கொண்டிருந்தாள் அந்த பாஸ் புக்கை உன்கிட்ட கொடுத்திட்டேன் வசு. வேற எங்கயாச்சும் வச்சிருப்ப . இல்லைன்னா டூப்ளிகேட் வாங்கிக்கலாம் விடு என்றேன் . சிகரெட்டை அணைத்தபடி. அவள் கண்களில் எதோ கலக்கம். கொஞ்சம் அழுதிருப்பாளோ என்றும் தோன்றியது . அரை நாள் லீவுடா . அதான் சீக்கிரம் வந்துட்டேன். பசிக்குது என்றேன். சாப்பாடு வழக்கத்துக்கு மாறாக இருந்தது . ஏனோ உப்பு சப்பில்லை. கேட்க வேண்டாம் என்று முடிவு செய்தேன் . மீண்டும் ஒரு சிகரெட் . அஞ்சு இப்போதெல்லாம் அதிகமாகி விட்டது. காலை பேப்பரை விரித்தேன்.


இது எப்படி வசுவின் பிரோவில் ? என் கண்ணில் இதுவரை பட்டதில்லையே . அது ஒரு பழைய பிரவுன் கவர். உள்ளே ஒரு குரூப் போட்டோ . வசுவும் அதில் இருந்தாள் . அநேகமாக பள்ளி இறுதி அல்லது கல்லூரி . வசுவின் பக்கத்தில் ஒருவன் . வசீகரமான சிரிப்புடன் . மீசையில்லாமல் இருந்திருக்க வேண்டும். சிகப்பு மையில் மீசை யாரோ அழகாக வரைந்திருந்தார்கள் . அனிச்சையாக மீசையில்லாத உதடுகளை தடவிப் பார்த்துக் கொள்ள தோன்றியது. நீங்க ஏன் மீசை வச்சுக்கலை ? வசு என்னிடம் ஒரு நாள் கேட்டது ஞாபகம் வந்தது. சட்டென்று ஒரு குயுக்தியான எண்ணம். அந்த படத்தை இடம் மாற்றி ஒளித்து வைத்தேன் . வசு கண்டுக் கொள்ளவில்லை. இல்லை எனக்கு தெரியவில்லை.


செய்திதாளில் அந்த கண்ணீர் அஞ்சலி விளம்பரம். அந்த முகம் . அந்த வசீகரமான மீசை . மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி . சசிதரன் ..தோற்றம் .. மறைவு இத்யாதிகள்.. உள்ளே வசு விசும்புவது போல் பட்டது. அழுது முடிக்கட்டும் என்று காத்திருந்தேன். முழுதாக ஒரு மணிநேரம் . வசு கொஞ்சம் வெளியில் போகலாமா என்றேன்.


சாரி. என்னால காட்டிக்கவும் முடியலை. ஆனா முழுசா மறைக்கவும் முடியலை . ஆனா கொஞ்சம் கூட வரம்பு மீறினதேயில்லை . நம்புங்க ப்ளீஸ். வசுவின் முகத்தில் எந்த களங்கமும் இல்லை. என் செய்கை மீது எனக்கு வெட்கம் வந்தது. வசு உனக்கு ஒரு சின்ன சர்ப்ரைஸ்...

அவள் ஒரு கேள்விக்குறியுடன் என்னை பார்த்தாள்

அந்த புத்தம் புதிய பிரவுன் கவரை பிரித்தேன்.

Tuesday, May 11, 2010

நானும் கொஞ்சம் பேசுகிறேன்................9


(என்ன சொன்னேன் ? இந்த பொண்ணு இவ்வளவு ஃபீல் பண்ணுது!)



ஞாநி வீட்டில் கேணி சந்திப்பு. இந்த முறை எழுத்தாளர் ”கருக்கு” பாமா பகிர்தலுக்கு வந்திருந்தார். எழுத தொடங்கிய சூழல், தங்கள் மக்கள் அதை எதிர்கொண்ட விதம், தலீத் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்று அழகாக பகிர்ந்தார். வாசகர்களின் கேள்விகளுக்கும் சளைக்காமல் பதிலளித்தார். முன்னதாக பாமாவின் “சாமியாட்டம்” சிறுகதை ஓரங்க நாடகமாக நடித்துக் காட்டப்பட்டது. அதுதான் நிகழ்வின் ஹைலைட். கூத்துப்பட்டறையில் பயின்ற வினோதினி அசுர அவதாரம் எடுத்தார். மெல்ல பக்கத்து வீட்டுக்காரியைப் பற்றி பேசும் அவர், மெல்ல அவள் வீட்டு பிரச்சனைக்குக்குள் நுழைகிறார். குடகூலி வாங்கும் பருத்த உடம்புக்காரியை கொஞ்சம் பகடியும் செய்கிறார். இதற்கு நடுவில் தன் வீட்டு வேலைகளும் கை ஓயாமல் செய்து கொண்டிருக்கிறார். அன்னலட்சுமிதான் கதைநாயகி. அவள் புருஷன் குடிகாரன். பெயர் வேங்கபுலி. பெரிய வீரன்லாம் இல்லை. உதார் பார்ட்டி. . ரெண்டு பொட்டை புள்ளைங்க. இந்த கதையை வினோதினி நேட்டிவிட்டி கொஞ்சமும் குறையாமல், உடல் மொழியின் இயல்பு மாறாமல் செய்து காட்டினார். நடித்து என்ற வார்த்தையை நான் உபயோகிக்க விரும்பவில்லை. கடைசியில் அன்னலட்சுமி ஓங்காரமாக உச்சபட்ச ஒலி எழுப்பி சாமியாடும் காட்சியை அவர் கண்முன் நிறுத்தியபோது. கூட்டத்தினர் 10 நிமிடங்களுக்கு விடாமல் கைதட்டினார்கள். ஞாநி சார் . இது போன்ற நிகழ்வுகளை அடிக்கடி நடத்துங்கள்.


நொடிக்கொரு முறை சுறா விளம்பரம். படம் பப்படம் ஆகிவிட்டாலும், கழக வாரிசின் படம் இல்லையா? வெட்கம் கெட்டத்தனமாய் இருகிறது. சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் “பெருமையுடன் வழங்கும் “ என்று வேறு போட்டுக் கொள்கிறார்கள். ஒரு குப்பையை பெருமையுடன் வழங்க இவர்களால் மட்டுமே முடியும். நிற்க. விஜய்க்கு பேசின சம்பளத்தில் கணிசமாக வெட்டு விழுந்து விட்டது. பெப்பே காட்டி விட்டார்களாம். அடுத்து சிங்கம், தில்லாலங்கடி என்று வரிசையாக சன் பிக்சர்ஸ் படங்கள் வரவிருக்கிறது. கழகத்தின் வாரிசுகள் சினிமாவை சுத்தமாக அழிக்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த குடும்பத்தை தவிர வேறு யாரும் சினிமாவே எடுக்க முடியாத நிலை வந்தே விட்டது. வாழ்க... வளர்க..

கலைஞர் டிவியிலும் பெண்சிங்கத்தின் தொல்லை தாங்க முடியவில்லை. இவர்களை வன்கொடுமை சட்டத்தில் உள்ளே தள்ளினால் என்ன ? சென்ற வாரம் வள்ளுவர் கோட்டத்தை சுற்றி போலிஸ் மயம். தலைவர் மீண்டும் (எத்தனைவாது முறை ?) பெண்சிங்கம் படம் பார்க்க வந்திருக்கிறார். இந்த வருடம் தமிழக அரசின் சிறந்த படம் அதுதான் போலிருக்கிறது. சமீபத்தில் டெல்லிக்கு பெரியார் மையத்தை தலைவர் திறந்து வைத்தார். 5 மணிக்கு விழா . இவர் ஆறு மணிக்குத்தான் வந்திருக்கிறார். காரணம் 4.30 -6.00 ராகுகாலமாம். பகுத்தறிவு சூரியன். வெங்காயம்...

மரம் தாவும் வேலையில் மீண்டும் மரம்வெட்டித்தலைவர். புத்திரனுக்கு பதவி நீட்டிப்பு வேண்டுமே. உப்பே சேர்த்துக்க மாட்டாங்க போலிருக்கு. ஒரு கோமாளி முகமூடியும், குல்லாவும் வாங்கி மாட்டிக்கங்கப்பா.

என்ன ஒரு ஹஸ்கி வாய்ஸ் ! கொஞ்சம் ஆண்மை கலந்த பெண் குரல். ஹலோ எஃப்ம்மில் தீபா வெங்கட். காலை 10 -12 “சும்மா” என்றொரு நிகழ்ச்சி. வித்தியாசமான கான்செப்ட்களில் கலக்குகிறார் தீபா. மனதிற்கு நெருக்கமாக உரையாடுகிறார். எனக்கு ஒரு முறை வாய்ப்பு கிடைத்தது. சொல்லாமல் விட்டு விட்டேன். எதை என்று கேட்காதீர்கள். நல்ல டான்சரும், பாடகியும் கூட. தீபாவின் பரம ரசிகனாகி விட்டேன். ஒரு முறை நேரில் பார்த்து ஆட்டோகிராப் வாங்கணும். அடுத்த விளம்பரத்துக்கு மாடலாக்கி விட்டால், கொஞ்சம் நேரிலும் ஜொள்ளலாம்..


சுஜாதா விருதுகளில் சாருவின் பேச்சு கொஞ்சம் ஓவர்தான். அநியாயத்துக்கு மனுஷ்யபுத்திரனுக்கு சொம்படிக்கிறார் சாரு. என்னமோ உயிர்மைதான் சுஜாதாவை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது என்கிற ரேஞ்சில் இருந்தது அவரது பேச்சு. படித்ததை அப்படியே இணையத்திலேற்றும் ஒருவருக்கு சிறந்த இணையத்திற்கான விருது கிடைத்திருக்கிறது. அப்படி ஒன்றும் செம்மையான விமர்சனமும் அதில் இல்லை என்று எனக்கு பட்டது. மாற்று கருத்து இருக்கலாம்.
பேராசிரியர் ஞானசம்பந்தனின் பேச்சில் கண்ணில் நீரே வந்து விட்டது . சிரித்து, சிரித்து. ஒரிஜினல் சுஜாதாவின் பேச்சு எளிமையாக இருந்தது. நெகிழ்ச்சியாக வும் கூட. சுஜாதா என்கிற மந்திரம் எவ்வளவு வலிமை என்பதற்கு வந்திருந்த கூட்டமே சாட்சி. அன்று இரவு அவர் நிச்சயம் உறங்கியிருக்க மாட்டார் என்று நினைக்கிறேன். கொஞ்சம் ஜால்ரா சத்தங்களை தவிர, நல்லதொரு நிகழ்வு.ஆனால் அங்கு போனதற்கு இன்னும் ஒரு காரணமும் உண்டு. வேண்டாம் . சில ரசனைகள் ரகசியமானவை.

அட்சயத்ருதியை அன்று தங்கம் வாங்கினால்தான் குடும்பமே விளங்கும் என்ற ரேஞ்சுக்கு விளம்பரங்கள் தூள் பறத்துகின்றன. சமீபத்தில் நான் எடுத்த ஒரு விளம்பரமும் உள்ளடக்கி(படத்தை காண்க. ) நகை கடைகாரர்கள்தான் விளங்குவார்கள். கேதான் தேசாய் வீட்டில் டன் கணக்கில் தங்கம் பிடிபட்டதே. எந்த அட்சய த்ருதியையன்று தங்கம் வாங்க ஆரம்பித்திருப்பார் ? திகாரில் மனு போட்டுத்தான் கேட்க வேண்டும்.

எனக்கு பிடித்த ஊர் பாண்டிச்சேரிதான் என்று ஒரு நண்பர் சொன்னார். அட.. காரைக்”காலும்” பிடிக்கும் சார்..ஆனால் உண்மையில் எனக்கு மிகவும் பிடித்த ஊர் தஞ்சாவூர்தான். வேண்டுமென்றால் பாண்டியை மிகவும் குடித்த ஊர் என்று வைத்துக் கொள்ளலாம்..


டிஸ்கி கவுஜை :

சில கேள்விகளுக்கான
பதில்களில் ஒளிந்திருக்கும்
கேள்விகளுக்கு ஏனோ
பதிலே கிடைப்பதில்லை





Monday, May 10, 2010

கை அரிக்குதே...என்ன பண்றது....




ஏண்டா நீ கவுஜை எழுதலேன்னு யார் அழுதா என்று கேட்டார் ரமேஷ் வைத்யா. இனிமே கவிதைன்னு வாயை திறந்தே, பாருன்னு ஒரே டார்ச்சர். ஆனா அந்த கவிதை கொஞ்சம் பரவாயில்லைடா என்றார். பேருந்தில் காணவில்லை என்றொரு நோட்டிஸ் பார்த்து எழுதிய கவிதை.. மீண்டும்..

அம்மா எனக்கு கடைசியாக
வாங்கி தந்தது
அந்த ஆரஞ்சு கலர் சட்டை

வெளியில் போகும்போதெல்லாம்
அதைத்தான் போட்டுக்குவேன்
அம்மா செத்துபோன
அன்னிக்கு கூடத்தான்

அப்பா கூட சிலசமயம்
தோசை சாப்பிட போவேன்
சித்திக்கு தெரியாமல்

அந்த ஆரஞ்சு கலர் சட்டைக்கு
சாம்பார் ஊத்துப்பா...
அப்பாவை பெருமையாக
பார்த்துப்பேன்

இந்த சனியனை எங்கயாவது
ஒழிச்சுடுங்க

சித்தி திட்டும்போது..
ஆரஞ்சு சட்டையால்தான்
கண்ணை துடைத்துக்
கொண்டிருந்தேன்

பொருட்காட்சிக்கும்
அதே சட்டைதான்

அப்பாவுடன் எடுத்துக்கொண்ட
போட்டோவில்
சட்டை ஏனோ வெள்ளையாயிருந்தது

பேர் என்ன தம்பி?
ஆரஞ்சு கலர் சட்டைன்னு சொல்லுங்க

ஆரஞ்சு கலர் சட்டை பையன்
இங்கு இருக்கிறான்....

திரும்ப,திரும்ப
கேக்கும்போது எனக்கு
பெருமையாயிருந்தது

ஏனோஅப்பாதான்
வரவே இல்லை.....


ஒரு மொக்கை கவுஜை


அட்சய த்ருதியை
ஆண்மைக்குறைவு
இரட்டை இலையின் கதி
ஈசல் கனவுகள்
உன்மத்த காமம்
ஊத்த வாய் நாற்றம்
எத்தனுக்கு எத்தன்
ஏறு மயில் முருகன்
ஒரு முறை சொன்னால்
ஓட்டுக் களவாணி
ஒளவையார் தற்கொலை
ஓடுறா ஓசியில் குவார்ட்டரும்
பிரியாணியும் தர்றாங்களாம்

ராஜாதீ ..ராஜ...யாரங்கே ?


ஒட்டு போடப்பட்டிருக்கிறது
இளவரசியின் பட்டுப்பாவாடை

இடையில் துருத்திக் கொண்டிருக்கும்
அட்டைக்கத்தின் உட்புறம் குழந்தை வரம்
கேட்டு யாரோ
எழுதிப்போட்ட திருவுளசீட்டு

பட்டத்து மகிஷியின் பதவிசு
பார்க்கிறவர்களுக்கு பொறாமை
இருபது முழம் சேலையும் அழுக்கு பஞ்சு கச்சையும்
கால்கிலோ கவரிங் தோடும்
அரை மணி நேரமாக அவஸ்தை அவளுக்கு
மாசத்தொல்லை மயிரு நாறுது

காது வரை சிரிக்கிறான் விதூஷூகன்
வற்றிய வயிறுக்கு ஏழையின் சிரிப்பு
அறிமுகம் இருக்குமா? உள்ளுக்குள் அறுக்கிறது
ஆத்தாவின் இருமல்

நேற்றிரவின் காரித்துப்பல்களை
அரிதாரம் பூசி மறைத்திருகிறான் ராஜாதிராஜ...
ஆணவமாய் அரியணையில்
துப்பியவன் முன் வரிசையில்

கனவு காணத் தெரியாத புரவி பாவம்
கொள்ளை மறந்தே விட்டது
காலாட்படையினருக்கும் யுத்த மறக்கடிப்பு
அரசு வைத்தியம் இலவசம்
எஞ்சியிருக்கும் துருவேறிய ஆயுதங்களின்
எடைக்கு எடை
காலி பாட்டில்கள் டாஸ்மாக்கில்

முடை நாற்ற திரைசீலைகள்
கரப்பான் முட்டைகளும் ,பல்லி மூத்திரங்களும்
சக பரிவாரங்களாய் வீற்றிருக்கும் அவை
திரை விலகுகிறது
ஆர்ப்பரிக்கும் விருந்தினர்கள்

கந்தலும் கிழிசலும் காஞ்சிபுரமாகின்றன
குடிகள் கோமானாகிறார்கள்

ஒருவன் மன்னனாகிறான்

இன்னொருத்தி அல்லியாகிறாள்

அவள் புருஷனுக்கு
தர்பாரில்
கால் நகத்தில் அழுக்கெடுக்கும் பணிக்கு உத்தரவு

பழம்பெருமையை பட்டாக்கி உடுத்தி வருகிறது

பட்டத்து யானை
நல்ல வேளை
பிள்ளையார்
கொழுக்கட்டையை
முன்னரே
சாப்பிட்டு விட்டது மூஞ்சூரு

எட்டுத்திக்கும் ஏவப்பட்டிருக்கிறார்கள்
பாகன்கள்
சோளப்பொறி சேகரித்து வர உத்தரவு

சூம்பிய மார்பும் ,செத்த இடையுமாக
அரசு நர்த்தகி
அரை இஞ்சுக்கு அரிதாரம் பூசி

அஞ்சனம் தீட்டப்பட்டிருந்த விழிகளில்
ஒன்றில் பூ
இளித்த கால் கொலுசுகளின்
களி நடனம்
மேடை கோணல் என்ற பதம்
இன்னும் புழக்கத்தில்

சகுனியும், விதுரனும்
சரிபாதி கலந்த
சாணக்கியன்

எச்சில் ஊறுகாய்க்கு சாராயக்கடையில்

சண்டையிட்டதில்
காயம்
தண்டத்தால் ஒத்தடம்


காசென்றால் கதவை அடைக்கும் கூட்டம்

ஓசுக்கு ஊர் திரண்டு வந்திருக்கிறது

கூத்து முடியட்டும்

கூட்டி பார்க்கலாம்

வருவதை பிரித்துக் கொள்வோம் இல்லை
பிரித்துக் கொள்ள
நம்மிடம் எவ்வளவோ....
எதற்கும் ஈரத்துண்டையும்
நனைத்து வையுங்கள்
யாரங்கே?

Thursday, May 6, 2010

கொஞ்சம் ராவா...


குடிகாரனை விட
கொலைகாரன் மேல்
என்றாள் மனைவி
அவளை கொன்றதற்கு
இதுதான் காரணம்

தம்பதியராய் சிரிக்கிறார்கள்
விஷ்ணு,மகாலட்சுமி
பார்வதி, சிவன்
முருகன் ,வள்ளி
வண்ணப்படங்களில்
கொஞ்சம் எண்ணெய் கறை
படிந்த காலண்டர்களில்
கொழுக்கட்டைகள்
கிடைப்பதில்லை
பார்களில்

எத்தனை சுறுசுறுப்பு
அந்த குழந்தை தொழிலாளர்களிடம்
எவன் சொன்னான்
வேலையத்தவன் குடிக்கிறான் என்று
பின் அவர்களுக்கு யார்
வேலை கொடுப்பது
ஆனால் ஒன்று
“69” பற்றியும் அவனுக்கு
தெரிந்திருக்கிறது
குழந்தை தொழிலாளான்?

Wednesday, May 5, 2010

கருநாகம்............


உமா. கொஞ்சம் கருப்பாக இருப்பாள். அதனால் தாழ்வுமனப்பான்மையும் அதிகம். ஆனால் எனக்கு அவளை ரொம்ப பிடிக்கும். கொஞ்சம் அடல்செண்ட் காதல் என்றும் சொல்லலாம். நான் தான் சொன்னேன் .

உமா ..( அவள் என்னை விட இரண்டு வயது பெரியவள் அவளை அக்கான்னு கூப்பிடறா என்பாள் அம்மா .நீ அப்படி கூப்பிடறதாயிருந்தா என் கூட பேசாதே என்றாள் உமா)

நீ என்னைக்காவது உன் தலைமுடியை ரசிச்சுக்கிருக்கிறாயா?

உமாவுக்கு நல்ல அடர்த்தியான கூந்தல். சரியாக பராமரிக்காமல் செம்பட்டை பிடித்திருந்தது.

உமா எல்லோருக்கும் இப்படிமுடி அமையாது,.அபூர்வ ராகங்களில் ஸ்ரீவித்யாக்கு இருக்குமே அந்த மாதிரி..(ஸ்ரீவித்யா கமல் மிருந்தங்கம் வாசிப்பதை கேட்டு, பாதி குளியலில் வருவாரே..) எங்கம்மாவிற்கும் உன்னைப்போல்தான். அவளும் அலட்சியமாகவே இருப்பாள்..நான் சொன்னது உமாவை மாற்றி விட்டது. கூந்தலுக்கான டிப்ஸை தேடித்,தேடி படிக்க ஆரம்பித்தாள். முட்டை போட்டு ஊறவைத்தல், செம்பருத்தி இலை,மருதாணி இலை, கறிவேப்பிலை அரைத்து, புளிக்காத தயிர் சேர்த்து குளித்தல். அவள் கூந்தல் பொலிவு பெற ஆரம்பித்துவிட்டது. அக்கம் பக்கத்தில் உள்ள பெண்கள் பொறாமை படும்படி.

உனக்குத்தாண்டா தேங்க்ஸ் சொல்லணும் என்றாள். தலையை காய வைத்துக்கொண்டே.. எனக்குள் ஏதோ கிளர்ந்தது.

உமா எனக்கொரு ஆசை என்றேன்.

என்னடா என்றாள். ஒன்றும் சொல்லாமல் அவள் கூந்தலை கையில் எடுத்து முகர்ந்தேன். கண்களை மூடி அந்த வாசத்தை ரசித்துக் கொண்டிருந்தபோது, சட்டென்று இறுக அணைத்து முத்தமிட்டாள் உமா. வயசு வித்தியாசம் இருந்தால் என்ன? படிப்பு முடிந்ததும், வேலைக்கு போய் உமாவை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். உன் கூந்தல் அழகுக்கே எத்தனை ராஜகுமாரன்கள் போட்டி போடப்போகிறார்கள் பார் என்றாளாம் உமாவின் பாட்டி. இடையிலிருந்து வாளை மானசீகமாய் உருவி , அத்தனை பேரையும் சாய்த்தேன். வெள்ளை புரவி தயாராக இருந்தது. சாண்டில்யனின் இளவரசனாக மாறினேன். காற்றில் கடுகி விரைகிறோம் இருவரும். அவள் கூந்தல் முகத்திலடிக்க. எங்கோ பட்டு மஞ்சம் பால் பழங்களுடன் காத்திருந்தது.

கதையாகவே போனது. உமாவும் திருமணம் ஆகி போய் விட்டாள். அந்த மாப்பிள்ளைக்கு முன்வழுக்கை. கொடுமை.எப்படி சம்மதித்தாள்? உமா விடை பெறும்போது அழவில்லை. சிரித்தாள். மெதுவாக காதில் சொன்னாள்.

“அந்த முத்தத்தை மறந்துடுவியாடா?

மறக்க முயற்சி பண்றேன்

ப்ளீஸ்.. என்றவள்.. மறக்காதடா பிரசன்னா என்றாள் ஹஸ்கி வாய்சில்.

பிரசன்னா ? அப்படியென்றால் அவள் பைரவியா ?எதை மறக்காதே என்று சொன்னாள். அந்த முத்தத்தையா? அவளையா?

உமாக்கா வந்திருக்காடா என்றாள் அம்மா. எத்தனை வருடம் ஆயிற்று பார்த்து. சுரீரென்று அவள் கூந்தல் வாசம் நாசியில் உணர்ந்தேன். அனிச்சையாய் உதடுகளை ஈரப்படுத்தி கொண்டேன். லேசாக உப்பு கரிக்கும் சாக்லெட் சுவை . நான் லீவில் அமெரிக்காவிலிருந்து வந்திருந்தேன். பாப் வெட்டிக் கொண்ட என் மனைவி, மகள். உமா ..அவளின் அந்த கூந்தல் . அந்தாளின் வழுக்கை.. நிச்சயம் உமாவின் கூந்தலை அவன் வெட்டியிருப்பான் என்று தோன்றியது.

அன்று மாலை உமா வந்தாள். மொட்டை மாடியில் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தேன்.

என்னடா இந்த கெட்ட பழக்கம் என்றவள், காதருகே வந்து எனக்கு சிகரெட் ஸ்மெல் ரொம்ப பிடிக்கும்டா என்றாள் கிசுகிசுப்பாய்.

கொஞ்சம் வயசாகியிருந்தது. அந்த கூந்தல் இன்னும் அதே பளபளப்பு மாறாமல் அப்படியே..

மனதை படித்தவள் போல் சொன்னாள்.

திரளபதிக்கு அவள் கூந்தலால்தான் எல்லாக்கஷ்டமுமாம்

யார் சொன்னா என்றேன்

என் மாமியார்தான். அவளுக்கு எலிவாலைப் போல் இருக்கும். ஆன மட்டும் தண்ணி குடிச்சா. இதை சிரைச்சுடுடின்னு.

அன்னிக்கு பார்த்தாப்லயே இருக்கு உமா . அவர் எப்படியிருக்கார்? எப்படியிருக்கு வாழ்க்கை என்றேன்.

கருநாகமாக மின்னிய ஜடையை எடுத்து முன்னால் விட்டுக்கொண்டே சொன்னாள்.

‘இது ஒன்னுதாண்டா மிச்சம்

Sunday, May 2, 2010

தண்டோரா விருதுகள்............... 2010


தண்டோரா குடும்ப விருதுகள் -2010

வணக்கம். தண்டோரா குடும்ப விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு உங்களை வரவேற்கிறோம். அன்புடனா என்றால் இல்லை என்றும் ,ஆமாம் என்றும் இரண்டு விதமாகவும். இந்த விருது வழங்கும் விழாவிற்கு வந்திருக்கும் சிறப்பு விருந்தினர்களையும் வரவேற்கிறோம். பரிசு வழங்க வந்திருக்கும் முக்கிய பிரமுகர்களையும் வரவேற்கிறோம்.ஆக்சுவலா நாங்க அவங்களை கூப்பிடலை.அவங்களேதான் வந்தாங்க. சரின்னுட்டோம்
முதலில் சிறந்த நடிகர் விருது. வழங்க வருபவர் ராதிகா .

வனக்கம் அன்பு நேயர்கலே.(அவருக்கு இன்னும் மழலை போகலைங்க)

எங்கப்பாவோட காலத்துலேர்ந்து நான் நடிக்கிறவங்களை பார்க்கிறேன். அவரோட நடிச்சு, இன்னும் எல்லோரோடவும் நடிச்சாலும், யாராலும் வெளியே சொல்லமுடியலை. எதைன்னா அவர் நடிக்கிறாருங்கிறதை. அப்படிப்பட்ட இடத்துல அவரு இருக்கிறாரு. எங்கப்பா ஸ்தானம். என்னோட திருமணத்துக்கெல்லாம் வருவாரு..பலத்த சிரிப்புடன்.அநேகமா அடுத்த வாட்டியும்...கரகோஷம்..அவர் வேற யாரா இருக்கமுடியும் ? நம்ம தலைவர்தான். தமிழனத்தலைவர்தான்

அடுத்து சிறந்த எழுத்தாளர் விருது. வழங்க வருபவர். சொம்பு கவிஞர் வாலி

கொஞ்சம் இருங்க . வெற்றிலை சீவல் போட்டுக்கறேன். தலைவர் தப்பா நினைக்கமாட்டார். வாய் கொப்பளிச்சுக்கிறேன். இப்ப ஆரம்பிக்கிறேன்.

எழுத்தாளர்னு சொல்லிட்டு வேற யாரையும் பற்றி இவர் வாழுற காலத்தில் அல்லது இவர் ஆட்சியில் இருக்கும்போது நினத்துக்கூட பார்க்கமுடியுமா என்ன? பாலைவனத்தில் ரோஜாக்களை பதியம் போட்டவர். பாசப்பறவைகளை ஒன்று சேர்த்தவர் . அப்போது அவர் இதயம் இனித்து, கண்கள் பனித்ததை தமிழகம் மறக்க முடியுமா என்ன? சிறந்த படிப்பிருந்தால் மட்டுமே உயர்ந்த நிலையை அடைய முடியுமா என்ன? என்ற விதியை தகர்த்து பலரை மந்திரிக்கியாக்கியவர்.(அவர்களில் பலரை எந்திரிக்க சொல்லியும் அவர்கள் இப்போது முடியாதென்கிறார்கள். கரண்ட் கட்டாகிறது)

இன்று கூட இளைஞனாய் இருந்து கொண்டு, பெண் சிங்கத்துக்கு பிரசவம் பார்க்கிறார். பதிபக்தியை பற்றி பக்கம் பக்கமாய் விளக்கம் கொடுக்கிறார்.அதற்கு இவரைத் தவிர வேறு யாருக்கு தகுதி இருக்க முடியும்?ஆகவே சிறந்த எழுத்தாளருக்கான விருதை சொம்மொழி காக்கப்போகும் சிங்கத்துக்கு வழங்குகிறேன். (தலைவரே அப்பல்லோ நன்றிக்கடன் கொஞ்சம் கழிந்ததா?)

அடுத்து சிறந்த வசனகர்த்தா விருது. வழங்க வருபவர் கவிப்பேரரசு( தலையெழுத்துடா தமிழனுக்கு) வைரமுத்து.

சூரியனுக்கு சூடு வைத்த சுடரொளி
சுமாரையெல்லாம் சூப்பராக்கிய
சுடலைமாட சாமி
பேனாவை திறந்தால் ஒன்று
வசனம் இல்லை கடிதம்
இரண்டிலும் மக்கள் நலனே
பிரதானம்
இன்று கூட இளைஞனுக்கு எழுதியதை
தமிழனுக்கு தாரை வார்த்த
தங்கமகன்
அவருக்கு நிகராக
இன்னொருவரை தேட
அடுத்த ஆட்சி மாற்றம் வரை காத்திருக்க
எனக்கு பொறுமையில்லை
அதற்கு சாத்தியமுமில்லை
காசா, பணமா ?எத்தனையோ எனக்கும் செய்த
வித்தகனுக்கு முத்தமிட்டு
முகமன் செய்கிறேன்
முத்தமிழே..உங்களுக்கு பாராட்டு பிடிக்காது(யாருமற்ற இடத்தில்)
என்று தெரியும்.
தமிழுக்காக ஏற்றுக் கொள்ளவேண்டும்

அடுத்து சிறந்த தமிழனுக்கான விருது. வழங்க வருபவர்கள். திரு அமிதாப்பச்சன், திரு சிரஞ்சீவி, திரு. மோகன்லால், திரு பால்தாக்கரே.

மேற்கண்டவர்களுக்கு தமிழை பற்றியும், தமிழனைப்பற்றியும் மிக நன்றாக தெரிந்த காரணத்தால் ,இவர்கள் ஒரு மனதாக தேர்ந்தெடுத்தது யாரைத்தெரியுமா? ஆடியன்ஸ் கைத்தட்டல்.(வீரமணியும், பால்தாக்கரேயும் ஏதோ பேசிக்கொள்கிறார்கள

சட்டசபை காவலர்,
திட்டமிடும் திங்கள்
செம்மொழி செவ்வாய்
புரையேறும் புதன்
விடிவெள்ளி வியாழன்
வெள்ளி சனி ,ஞாயிறும்
அரசு ஊழியர்களுக்கு விடுமுறை
வழங்க இருக்கும்
கடைதேங்காய்
டாக்டர், இஞ்சீனியர்,
கம்பவுண்டர் கலைஞர் அவர்களை
மேடைக்கு அழைக்கிறோம்.


சொல்ல மறந்து விட்டோம்.

பரிசு பெற்ற அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.

Thursday, April 29, 2010

நானும் கொஞ்சம் பேசுகிறேன்..........8


எவ்வளவு நாளாம்மா உங்கப்பா குடிக்கறாரு?

பொறந்ததலேர்ந்தே !

என்ன சொல்றீங்க?

மகள் சொன்னாள்.. நான் பொறந்ததலேர்ந்தே .

அப்படின்னா 20 வருஷமாவா?

சீ..சீ.. எனக்கு பதினெட்டு வயசுதான்

கையில் நரம்பை தேடிக்கொண்டே அந்த நர்ஸ் சொன்னாள். (செவிலிகள் சீருடையில் அவ்வளவு அழகாயிருக்கிறார்கள். காதலாகி, கசிந்துருக வேண்டும் போல் இருக்கிறது)

பார்த்தால் ரொம்ப நல்லவராயிருக்கீங்க?(அடிப்பாவி ! நல்லவேளை !) எவ்வளவு கஷ்டம் பாருங்க.. உங்களுக்கு, உங்க வீட்டுக்கு . அப்படி ஏன் நம்ம குடிக்கணும்? சொல்லுங்க.

சிஸ்டர் நீங்களும் குடிப்பிங்களா?

விளையாடாதீங்க சார். பாருங்க. இப்ப உங்க பிள்ளைக்கு கல்யாணம் செய்யணும் . எவ்வளவு ரூபா ஆகும் . நீங்க குடிச்ச காசு இருந்தா?

இப்ப போய் கேட்டால் திருப்பி கொடுப்பாங்களா?

சிஸ்டர் என்று என்னால் வெறும் வார்த்தைக்கு அழைக்கப்பட்டவளுக்கு எஸ். ஜானகியின் குரல். அவள் குரலில் மழலையும் கொஞ்சியது. அவளுக்காகவே இனி குடிக்க கூடாது என்ற முடிவுக்கு வரும் நிலையில் இருந்தேன்.

இனிமே நல்ல பிள்ளையா இருக்கணும். சரியா? நான் போன் பண்ணி கேப்பேன்.

இன்னிக்கு நிச்சயமா குடிக்க மாட்டேன் சிஸ்.. சாரி உங்க பேர் என்ன?


-------------------------------------------------------------------------------------------------

நண்பரின் தாயாருக்கு ஹியரிங் எய்டு வாங்க போயிருந்தோம்.. தாயாரின் செவித்திறனை பரிசோதிக்க சில கேள்விகள் கேட்டார்கள்.

எங்கயிருந்து வர்றீங்கம்மா?

என் மவன் வீட்டுலேர்ந்து.

எந்த ஊர்?

நானு, என் மவன் எல்லாரும் காரைகுடிதான்

எப்ப ஊருக்கு போவீங்க?

ஏன் ?என் மவன் வீட்டுல எத்தனை நாள் வேணா இருப்பேன் . என்னை யாரும் ஒன்னும் சொல்ல முடியாது( மருமகளை பார்த்துக் கொண்டே)

உங்களுக்கு எத்தனை புள்ளைங்க?

இதோ இவன் மட்டும்தான். ஒரே மவன். அதுக்கப்புறம்தான் அவளுக்கு புருஷன் .

நண்பரின் மனைவி குறுக்கிட்டார். அத்தை உங்களுக்கு காது நல்லாத்தானே இருக்கு. இப்ப எதுக்கு வெட்டி செலவு?

-------------------------------------------------------------------------------------------------

சைதாபேட்டை பேருந்து நிலையத்தில் கண்ட ஒரு காட்சி.ஒரு இளம் தம்பதி..அருகில் அவன் தாய்..அவன் சூழலை மறந்து மனைவியை கொஞ்சி கொண்டிருந்தான்..மற்றவர்கள் பார்ப்பதை அவர்கள் சட்டையே செய்ய வில்லை..அவன் தாய் முகத்தில் ஒரு இனம் புரியாத கவலை இருப்பதாக எனக்கு பட்டது. அவள் மகன் கவனத்தை திசை (மனைவியிடமிருந்து) திருப்பும் வண்ணம் செயல் பட ,அவனுக்கு வந்ததே கோபம். தாயை திட்டி தீர்க்க இளம் மனைவி கண்கள் கலங்க. ஒரு மினி சீரியல் பார்ப்பது போல் இருந்தது. சற்று நேரம் ஆயிற்று. அவர்கள் பஸ் வரவில்லை.இளம் மனைவி ஆட்டோவில் போகலாம் என்றாள். தாய் வெட்டி செலவு என்று மறுக்க மீண்டும் மனைவியின் கண்ணீர். இளமை வென்றது. ஆட்டோ வந்தது. மனைவி முதலில் ஏறினாள். மகன் ஏற முற்படுகையில் தாய் அவனிடம் ஆட்டோவின் பின்னால் எழுத பட்ட வாசகத்தை காட்டினாள்.நானும் அதை படித்தேன்..நீங்களூம் படித்திருப்பீர்கள். "சீறும் பாம்பை நம்பு..சிரிக்கும் பெண்ணை நம்பாதே.." அவர்கள் போய் விட்டர்கள்.

நான் யோசிக்க ஆரம்பித்தேன். ஏன் அந்த தாய் அப்படி நடந்து கொண்டாள். ஒரு வித insecurity யா? கணவனை இழந்த அந்த விதவை தாய்க்கு மருமகள் மகனை தன்னிடமிருந்து பிரித்து விடுவாளோ? என்ற பயம் காரணமா?எப்படி அவர்கள் ஒத்து குடும்பம் நடத்த போகிறார்கள். காலம் காலமாய் இந்த பிரச்சனை இருந்துதான் வருகிறது.

அமரர் சுஜாதா ஒரு முறை வினோதமாக ஒரு விளக்கம் எழுதி இருந்தார்.
"தாய் தன் மகன் உருவில், ஜாடையில் தன் புருஷனை பார்ப்பது போல் உணர்கிறாள்.ஆனால் அவன் இன்னொரு பெண்ணுடன் (மனைவியுடன்) வரும் போது அவளை தன் சக்களத்தியாக பார்க்க தொடங்குகிறாள்.

பெண் குழந்தைகள் இல்லாத வீட்டிற்கு மருமகளாக வருபவர்கள் மகளாக நடத்த படுவதாக ஒரு ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. ஆனால் கணவர்களுக்கு உத்தரவாதம் இல்லை. பெண்களோடு வளராததால் அவர்கள் அருமை தெரியாமல் துச்சமாக பெண்டாட்டியை மதிக்கிறார்களாம்.


---------------------------------------------------------------------------------------

எவ்வளவு அழகு அவள்
என்றேன்
ஆமாம் அவன் அழகுக்கு
யாரும் ஈடு இல்லை
என்றாள் மனைவி

Monday, April 26, 2010

சாரி.....கொஞ்சம் ஓவராயிடுச்சு


எனக்கே சற்று சோம்பல்தான்

அந்த வாசம் நாசியை தாக்கும்வரை

பார்வையை கூராக்கி உற்று நோக்கினேன்

தூரத்தில் பளபளத்தது அது

ஆஹா..அருமையான வேட்டைதான்

தனியொருவனாய் தள்ளிக் கொண்டு வர முடியாது

பரிவாரங்களுக்கு தகவல் அனுப்பினேன்

தளபதிகள் அணிவகுக்க பயணம் தொடங்கியது.

நாங்கள் மேலிருந்தோம்

அது கீழே சமவெளியில்

இத்தனை பேரும் பங்கு போட்டாலும்

மிச்சம் நிறையவே இருக்கும்

இதோ இலக்கு நெருங்கி விட்டது

சின்ன அடையாள ஒலி

அதற்கே வந்துவிட்டாள் தோழி

சீ..சீ நான் அதற்கு அழைக்கவில்லை

பின்..

மேலே பார் அணிவகுப்பை

இடமும்,வலமுமாய்

இரு பக்கமும் காத்திருப்போம்

சரியான தீனிதான்..

என்னை பார்க்கும் போதெல்லாம்

மனதிற்குள் மழையடிக்கும்

என்பீர்களே

இப்போதும் அப்படித்தானா?

எட்டாவது திருமண நாள்

முடிந்ததும் மனைவி கேட்டாள்

இல்லையென்று உண்மையை சொன்னால்

புண்படுவாள்-என்று

“ஆமாம்என்று பொய் சொன்னேன்

இதில் எதாவது முரண் இருந்தால்

அதுமுன் நவினத்துவம்

இல்லையென்றால் ‘பின் நவினத்துவம்

புரியவில்லையென்றால்

எளக்கியம்


அய்யா இருக்காரா?

அட நீங்களா? உங்களுக்கு கடுதாசி எழுதிகிட்டிருக்காரு. இருங்க போனை கொடுக்கறேன்

அய்யா புள்ளையை எங்க காணலையே. பள்ளிக் கூடம் ஆரம்பிச்சப்ப வந்தது. அப்புறம் கண்லயே பார்க்கலை.

அப்படியா? வெயில் அதிகம்னு பீச்சுக்கு போறேன்னாரு. வந்தாக்க சொல்றேன்.

இந்தி வாத்தியார் கிட்ட சண்டையாம். அதுக்காக பள்ளிக்கூடத்துக்கே வராம இருந்தா எப்படி?

அதில்லை. அவருக்கு அந்த ஸ்கூலு புடிக்கலையாம். இங்க வீட்டிலயே படிக்கிறேன்னு சொல்றாப்ல..

எதையாவது சட்டுபுட்டுன்னு செய்ங்க அய்யா. இல்லைன்னா அவருக்கு பதிலா பொண்ணையாச்சும் சேர்த்து விடுங்க

---------------------------------------------------------------------------

ஐந்து பேர்..சமாளிக்க முடியுமா?

ஐயோ..நிச்சயம் முடியாது..

அட்ஜஸ்ட் பண்ணி பாரேன்..

வேற வழியில்லை..வர சொல்லிட்டேன்

என்னை கேட்க வேண்டாமா?

நீ பெரிய கைகாரியாச்சே..உன்னால முடியும்

ம்ம்.. மானத்தை வாங்கறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க..வரட்டும் ..பார்க்கலாம்

உள்ளே சென்று டப்பாவை திறந்து இருந்த கொஞ்சம் துவரம் பருப்பை எடுத்து ஊற வைத்தாள்..

ஆறு பேருக்கு சாம்பார் வைக்க இந்த பருப்பு எப்படி போதும்..சாம்பார் தண்ணியாத்தான் இருக்கும்.புலம்ப ஆரம்பித்தாள்

(துவரம்பருப்பு கிலோ 96 ரூபாயாம்)

எனக்கொரு வேலை கொடுங்க..

சம்பளம் எவ்வளவு வேணும்?

முத நாள் ஒரு பைசா..

ஒரு பைசாவா?

ஆமாம்..ஆனா அடுத்த நாள் ரெண்டு பைசா..அதுக்கு அடுத்த நாள் நாலு பைசா..அப்புறம் எட்டு..பதினாறு..முப்பத்திரண்டு..

சரியென்று ஒத்துக் கொண்ட முதலாளி ஒரு மாசத்தில் போண்டியானார்..

(கணக்கு போட்டு பாருங்களேன்)

Saturday, April 24, 2010

கொஞ்சம் பழைய சோறும்,ஒரு பச்சைமிளகாயும்



மெயின் மேட்டர் :

இந்த இடுகையில் உள்குத்து இருக்கிறது என்று பரப்பப்படும் வதந்திகளை நம்பாதீர்கள்..

டிஸ்கி :

உ‌ங்க‌ள் ‌வீ‌ட்டில் நா‌ய் வள‌ர்‌த்தாலு‌ம் ச‌ரி, நா‌ய் வள‌ர்‌‌க்க ஆசை‌ப்ப‌ட்டாலு‌ம் ச‌ரி இதை முத‌லி‌ல் படியு‌ங்க‌ள்.

பொதுவாக வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய்களின் ஆயுள் 18 முதல் 20 ஆண்டுகள் வரை.

நாய்கள் தனக்குதானே பிரசவம் பார்த்துக் கொள்ளும். நாய்கள் பிரசவம் முடிந்ததும் ஓரிரண்டு குட்டிகளை தானே சாப்பிட்டு விடுவது‌ம் உண்டு.

நாயின் மூக்குப்பகுதி காய்ந்து இருந்தால் அவற்றுக்கு காய்ச்சல் என்று அர்த்தம்.

நாய்கள் அருகம்புல்லை சாப்பிடும் பழக்கமுடையவை. அவற்றின் உடலில் ஏற்படும் பல உபாதைகளுக்கு அரும்கம்புல் மருந்தாகிறது. ‌வீ‌ட்டி‌ல் வள‌ர்‌க்கு‌ம் நாயை பூ‌ங்கா அ‌ல்லது பு‌ற்க‌ள் இரு‌க்கு‌‌ம் பகு‌திகளு‌க்கு ‌நி‌ச்சய‌ம் அழை‌த்து‌ச் செ‌ல்ல வே‌ண்டு‌ம்.

நாய்கள் தினமும் ஒரு வேளை மட்டுமே உணவை உண்ணும் பழக்கம் கொண்டவை. பெரு‌ம்பாலு‌ம் அசைவ உணவுக‌ள்தா‌ன் நா‌‌ய்களு‌க்கு‌ப் ‌பி‌ரிய‌ம்.

தனது குட்டிகளின் மீது அதிக பாசம் கொண்டவை. நாய்கள் பிரியமானவர்களை பிரிந்தால் கண்ணீர் விட்டு அழும்.

நா‌ய் கு‌ட்டியை ஈனு‌ம் வரை ஒரே இட‌த்‌தி‌ல் வ‌சி‌க்கு‌ம். கு‌‌ட்டியை ஈ‌ன்றது‌ம் உடனடியாக ம‌ற்றொரு இட‌த்‌தி‌ற்கு மா‌ற்‌றி‌விடு‌ம் பழ‌க்க‌ம் கொ‌ண்டது.

எப்போதும் நாய்கள் காற்றடிக்கும் திசையை எதிர் நோக்கித்தான் படுக்கும். ஏ‌ன் எ‌ன்றா‌ல், கா‌ற்று மூலமாக வரு‌ம் வாசனையை‌க் கொ‌ண்டு எ‌ந்த ‌விஷய‌த்தையு‌ம் மோ‌ப்ப ச‌க்‌தியாலே க‌ண்ட‌றி‌ந்து கொ‌ள்வத‌ற்காக.

நாய்களுக்கு குளிர் காலங்களில் அதிகமாக முடி கொட்டும். எனவே அதற்கு முன்பாகவே அவற்றுக்கு முடியை வெட்டிவிடுவது நல்லது.

குருவியின் நன்றி உணர்வு

ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது தோழருடன் ஒரு பாதையில் சென்று கொண்டிருந்தார்.

அங்கே ஒரு மரக்கிளையில் குருவி ஒன்று கத்திக் கொண்டே இருந்தது.

அதைக் கண்ட தோழர், ஏன் இந்தக் குருவி கத்திக் கொண்டே இருக்கிறது என்று கேட்டார்.

அதற்கு நபிகள், அந்த குருவிக்கு கண் தெரியாது. அதனால் இறைவா, எனக்கோ கண் தெரியவில்லை. நான் எப்படி இரை தேடி உண்பேன் என்று கூறி கத்துகிறது என்றார்.

அந்த நேரத்தில் அந்த பக்கம் பறந்து வந்த வெட்டுக்கிளி ஒன்று குருவியின் வாயில் விழ, குருவி அந்த வெட்டுக்கிளியை கவ்வி விழுங்கியது. வெட்டுக்கிளியை உண்ட குருவி உடனே மீண்டும் கத்தத் துவங்கியது.

இதைப் பார்த்ததும் வியந்துபோன தோழர், இப்போது மீண்டும் ஏன் கத்துகிறது என்று கேட்டார்.

நபிகள், உணவு கிடைத்ததற்காக இறைவனுக்கு நன்றி சொல்கிறது என்று பதிலளித்தார்.

உபயோகமாய் எதுவும் எழுதுவதில்லை என்று மின்னஞ்சலிலும், கைப்பேசியிலும் புகார்கள் குவிவதால் , கொஞ்சம் முயற்சி செய்து பார்த்தேன். நன்றி..