
என் பெயர் கொஞ்சம் வித்தியாசமான பெயர். அதில் என்ன இருக்கிறது என்று கொஞ்சம் அலட்சியமாகத்தான் இருந்தேன். ஆனால் பெண்பிள்ளைகளுடன் சேர்ந்து படிக்க ஆரம்பித்தவுடன் தான் அதைப் பற்றிய கவலை அதிகமானது. அவள்கள் எதிரில் வேண்டுமென்றே அந்த பெயரை சொல்லி நண்பர்கள் அழைக்கும்போது அவமானம் பிடுங்கி தள்ளும்.
ஏம்பா எனக்கு இப்படி பெயர் வச்சீங்க?
என்னடா சொல்றே ? அது நம்ம குலதெய்வத்தோட பேராச்சே ராசா . நிறைய படிப்பும், தீர்க்காயுசும் கொடுக்கணும் நேர்ந்து கிட்டு வச்சிருக்கேன். அப்படியெல்லாம் நினைக்காதேப்பா . சாமி குத்தமாயிடும்.
என் நண்பனின் தந்தை கோர்ட்டில் வேலை பார்க்கிறார். அவரிடம் பெயரை எப்படி மாற்ற வேண்டும் என்று ஒரு நாள் கேட்டேன்.
நீ மைனராச்சேப்பா . உங்கப்பா ஒரு மனு கொடுத்தா மாத்திடலாம்.
அப்பாவிற்கு கடுமையான கோபம் வந்தது. புத்தி கெட்டு போச்சா உனக்கு. படிக்கிற வயசுல இந்த மாதிரியெல்லாம் எவன் கத்து கொடுத்தான். பளாரென்று அறை விழுந்ததுதான் மிச்சம். சாப்பிடாமல் முஞ்சியை தூக்கி வைத்து கொள்ளுதல் என்று சகல அஸ்திரங்களுக்கும் அப்பா அசரவில்லை. வெள்ளை பேப்பரில் ஸ்டைலான பெயர்களை எழுதி பார்க்க தொடங்கியிருந்தேன். படிப்பு முடிச்சு வேலைக்கு போயிட்டா, அப்பா என்ன ! ஆண்டவன் கூட எதுவும் கேக்க முடியாதில்லை. அதற்காக பெயரை இப்போதே தேர்ந்தெடுக்க ஆரம்பித்தேன்.
உன் பெயர் என்ன ?
கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும்போது அவள் கேட்டாள். முதலாம் ஆண்டு மாணவி அவள். மிக அழகான பெயர் அவளுக்கு. என்னை வெட்கம் பிடுங்கியது. வீட்டில் வைத்த பெயர் இது. ஒரு வேண்டுதலுக்காக வைத்திருக்கிறார்கள். பதினெட்டு வயது வரை எனக்கு கண்டம் இருக்காம். அதற்கு பிறகு மாற்றிக் கொள்ளலாம் என்று பரிகாரம் சொல்லியிருக்கிறார்கள் என்று அவளிடம் சொன்னேன்.
அது சரி. நீ இன்னும் பெயரை சொல்லவில்லையே !
உனக்கு.. சாரி உங்களுக்கு எல்லாம் பரிச்சயமான பெயர்தான். இப்ப கூட நீ என் பெயரைதான் மஞ்சள் நிறத்தில் கட்டியிருக்கிறாய் என்று கவிதை போல் உளறினேன் .அவளுக்கு சட்டென்று புரியவில்லை. கொஞ்சம் யோசித்து “பாவாடை” என்றாள்.
இல்லை பாவாடைசாமி. நான் வேறு பெயருக்கு மாறும் வரை நீ என்னை சாமி என்று கூப்பிடேன் .
இல்லை. எனக்கு பாவாடைதான் பிடித்திருக்கிறது.
அப்படியானால் உன்னை எனக்கு பிடிக்காது.
சே..பெயரால் என் முதல் காதலுக்கான வாய்ப்பு போனது. அப்பாவிற்கு வயசாகி விட்டது. நான் படிப்பை முடித்து விட்டு வேலைக்கு போக ஆரம்பித்தேன்.
அப்பா .. நான் பெயர் மாற்றிக் கொள்ளலாம் என்று உத்தேசித்திருக்கிறேன்.
என்னவாது பண்ணு. ஆனா நான் பாவாடைன்னுதான் கூப்பிடுவேன். இல்லைன்னா கூப்பிடவே மாட்டேன்.
ஒரு சுப நாளில் பெயரை மாற்றிக்கொண்டேன். பத்திரிக்கையில் விளம்பரமும் கொடுத்தேன். ஷ் ல் முடியும் பெயர் வேண்டும் என்று ஆசை.(அவரிடம் சொன்னதற்கு ”உஷ்” என்று வைத்துக்கொள் என்று சொன்னார்).
தினேஷ் ! வீ ஆர் காலிங் ஃப்ரம்.. என்று ஆரம்பித்து ஏகப்பட்ட அழைப்புகள். கொஞ்சம்,கொஞ்சமாக பாவாடை மறைய ஆரம்பித்தது. ஊரில் எவனாவது பாவாடை என்று சொன்னால் அடிதான். இதுவரை மூணு, நாலு பற்கள் உடைபட்டது. அப்பாவும் மறைந்து போனார்.கூட வேலை பார்க்கும் ரெஜினாவை காதலித்து (பெயருக்காகவே) திருமணமாகி விட்டது. ஒரு குழந்தை. சென்னையில் செட்டிலாகி விட்டேன். குழந்தைக்கு மொட்டை போடுவதற்காக ஊருக்கு வந்திருக்கிறேன்.
ஊர் சுத்தமாக ! மாறியிருக்கிறது. ஒரு ரவுண்டு அடிக்க கிளம்பினேன். டாக்டர் சைக்கிள் ஓட்டுங்கள். உடம்புக்கு நல்லது என்று சொன்னது நியாபகம் வந்தது. மாது கடையில் வாடகை சைக்கிள் எடுக்கும்போது ஏற இறங்க பார்த்தான்.
என்ன மாது . தெரியலை என்னை?தினேஷ் .
சட்டுன்னு தெரியலை. இந்த புது வண்டியை எடுத்துக்கங்க .
சென்னையில் இது போல் சைக்கிள் ஓட்டமுடியும் என்று தோணவில்லை. மனைவியையும் கேரியரில் உட்கார வைத்துக் கொண்டேன். கோவிலுக்கு போனோம்.
இந்த சாமி பேர் என்னங்க என்றாள் மனைவி.
பேர்ல என்ன இருக்கு . எல்லாம் சாமிதான். இந்த பதிலுக்கு கொஞ்சம் குழம்பி போய் என்னை பார்த்தாள். வீட்டில் அவளை இறக்கி விட்டு விட்டு சைக்கிளை விடப் போனேன்.
2 மணிநேரம். பத்து ரூவா என்றான் சைக்கிள் கடை மாது.
கொடுத்து விட்டு திரும்பும்போது அந்த எண்ணம் தோன்றியது. நோட்டில் என் பெயரை எப்படி எழுதியிருப்பான் ? தினேஷ் என்றா பாவாடை என்றா? வாங்கி பார்த்தேன்.
“தெரியும்” என்று எழுதியிருந்தான் பாவி .