Showing newest 11 of 18 posts from March 2010. Show older posts
Showing newest 11 of 18 posts from March 2010. Show older posts

Wednesday, March 31, 2010

மானிட்டர் பக்கங்கள்........31/03/10


புரட்சித்தலைவர் மறைவுக்கு பின் ஜானகி அம்மையார் கொஞ்ச நாள் கோட்டையில் கொலுவீற்றிருந்தார். எந்த புண்ணியவான் மதியூக மந்திரியோ கொடுத்த ஆலோசனையின் படி அம்மையார் கொண்டு வந்த புரட்சி திட்டம்தான் இலவச பல்பொடி திட்டம் . பல்பொடி கொடுத்தது பெரிய சங்கதியில்லை. கூடவே ஒரு பிட் நோட்டீஸ். அதை நான் படித்திருக்கிறேன். கைவசம் இப்போது இல்லை. அதில் குறிப்பிடப்பட்டிருந்தவை .

1. பல்பொடியை இடது உள்ளங்கையில் சிறிதளவு எடுத்துக் கொள்ளவும் .

2.வலது கை ஆள் காட்டி விரலால் தொட்டு பற்களில் வைத்து ,மேலும்,கீழும் தேய்க்கவும்.

3. பின், வாயினுள் விரலை விட்டு மேல் மற்றும் கீழ் பற்களை சுத்தம் செய்யவும்.

4.நீரைக் கொண்டு நன்றாக கொப்பளித்து வாயை சுத்தம் செய்து கொள்ளவும்.

நல்லவேளை ! புண்ணியவதி ஆட்சி பொசுக்குன்னு முடிஞ்சு போச்சு. இல்லைன்னா என்னவெல்லாம் கொடுத்திருப்பாங்களோ ?

பல்பொடின்னவுடனே தோணுது ! கோல்கேட்டின் விளம்பரம். வீட்டுக்கே வந்து பல் தேய்ச்சு விட்ருவாங்க போலிருக்கு. அதுவும் திரிஷா வந்தால் !! ஆட்டோமேட்டிக்கா “ஆ” காமிச்சிடலாம் . நம்ம உடற ஜொல்லுலேயே வாயும் கொப்பளிச்சுக்கலாம். ஆமாம் ! உங்க டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா? மானங்கெட்டவனே, சொரணை கெட்டவனே ! உப்பு போட்டுத்தான் பல் தேய்க்கிறயா ?

ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி . ஒரு ஜாதகத்தின் குளோசப் . அதில் இருக்கும் கட்டங்களை காட்டி ஒரு டுபாக்கூர் ஜோசியர் “சனி இங்க இருக்கு. சுக்கிரன் இங்கதான் சுத்தறான்னு” பயம் காட்டிக் கொண்டிருந்தார். கீழே ஸ்கிரோலிங்கில் அதிமுக பெண்ணாகரத்தில் டெபாசிட் இழந்து கொண்டிருந்தது.

போன முறையை விட பாமக அதிக ஓட்டுக்கள் பெற்றது என்பதை சொல்லி இன்னும் மக்கள் மனதில் நாங்கள் இருக்கிறோம் என்று ஜம்பமடித்துக் கொண்டிருந்தார் தமிழ்குடிதாங்கி. கொஞ்சம் “வ” ட்டாரத்தை விட்டு வெளியில் வாங்கய்யா . உங்க பவிஷு தெரியும்.

மீண்டும் அங்காடி தெரு. எழுத்தாளர்களுக்கான திரையிடலில் பதிவர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார் வசந்தபாலன். அகநாழிகை வாசு, அப்துல்லா, பட்டர்ஃப்ளை சூர்யா,ஷங்கர், உண்மைத்தமிழன், கேபிள் சங்கர் அனைவரும் சென்றிருந்தோம். இரண்டாவது முறை பார்க்கையில் படத்தின் நீளம் பொருட்டாக தெரியவில்லை. அநேகமாக அதிகளவு உலகப்படங்களை நான் பார்க்காததால் இருக்கலாம். கும்பமேளாவில் கோட்டு,சூட்டு போட்டுக் கொண்டால் வித்தியாசமாக இருக்கும்தான். அதைப்போல் முன் தீர்மானத்துடன் படத்தை பார்த்து விமர்சனம் எழுதுவதும் என்று நினைக்கிறேன்.


ஒரு வானொலி விளம்பரம் . என் மகள் இன் ஜீனியரிங் படிக்க ஆசைப்படுகிறாள். பணத்துக்கு என்ன செய்வது என்று கவலை. அப்போதுதான் “பாரத் இன் ஜீனியரிங் காலேஜை பற்றி கேள்விப்பட்டேன். நுழைவுத் தேர்வு எழுதினால் 50 % ஸ்காலர்ஷிப் கொடுக்கிறார்கள். பாரத் இன் ஜீனியரிங் கல்லூரிக்கு நன்றி.

மேற்படி கல்லூரி ஆல் இந்தியா ஐஸ் வைப்போர் சங்கத்தலைவரும், பாராட்டு விழா செம்மலுமான திரு . ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமானது. நன்கொடை மேட்டரில் போன வருடம் டைம்ஸ் ஆஃப் இந்தியா அவர்களை தோலுரித்ததும் நினைவிருக்கலாம். ஆமாம்..அந்த கேஸ் என்னாவாச்சு? வள்ளுவர் கோட்டத்துக்கு அடியில் புதைத்து விட்டார்கள் !

வலது காலை முன்னால் வைக்கவும். இடது உள்ளங்கையை விரித்துக் கொள்ளவும். வலது உள்ளங்கையை குவித்துக் கொள்ளவும். மெல்ல இரண்டு கைகளையும் பின்னோக்கி கொண்டு போய், மீண்டும் முன் பக்கம் கொண்டு வரவும் . வலது கையால் இடது கையில் குத்தவும்.மெதுவாக தொடங்கி, படிப்படியாக வேகத்தை அதிகரிக்கவும். பின் இடது கால். வலது கை.. செய்து பாருங்கள். டென்ஷன் குறைந்து ரிலாக்ஸ்டாக இருக்கும். வாசு ஒரு முறை என்னை காத்திருக்க செயத போது இதைத்தான் செய்தேன். பக்கத்திலிருந்த ஒருவர் கேட்டார். “சூப்பர் . வேறு என்ன வித்தைகள்ளாம் தெரியும்”

“ம்ம்.. உக்கார்ந்து கிட்டேயும் போவேன். நின்றுக் கொண்டேயும் போவேன்” என்றேன். நாம் பேருந்தை சொன்னேன். ஆனால் அவர் வேறு அர்த்தம் எடுத்துக் கொண்டார் என்று நினைக்கிறேன். இப்பல்லாம் இப்படித்தான் நடக்குது.


டிஸ்கி கவுஜை :

புரிதலுக்கான அர்த்தம் ஒன்றுதான்
நேற்றும் ,இன்றும் ,நாளையும்
புரிவதும் பின் சேர்வதும்
பின் புரிவதும் பிரிவதும்
சரிதானே...

Tuesday, March 30, 2010

அவள் பெயர் ராஜேஸ்வரி............


ஜீ ரொம்ப நாளா கேக்கணும்னு நினைச்சேன் .அது என்ன தழும்பு நெத்தியில்?

கேட்டவன் திலக். மராட்டிக்காரன். ஆனா நல்லா தமிழ் பேசுவான். சென்னையில் கொஞ்ச நாள் என்னுடன் வேலைப்பார்த்தவன். இப்போ நானும் அவனும் மும்பையில். ஒரே இடத்தில் வேலையும், ஜாகையும். நான்காவது ரவுண்டில் இருந்தோம். திலக் எட்டு ரவுண்டுகள் வரை போவான். நான் ஆறு. அதற்கே ஆடி , அடங்கி, வாந்தி .

ராஜேஸ்வரி என்றேன்.

காதலா ? முதல் காதலா?

ஆமாம் . ஆனா எனக்கு இல்லை. அவளுக்கு என் மேல்.

நீ காதலிக்கலையா?

இல்லை. நான் வேறு ஒரு பெண்ணை காதலித்துக் கொண்டிருந்தேன்.

அந்த பெண் என்றான் ஒரு கேள்விக்குறியுடன்.

அவள் வேறு ஒருவனை காதலித்துக் கொண்டிருந்தாள் என்று சிரித்தேன். ஒரு பழமொழி உண்டு திலக் . நீ காதலிக்கும் பெண்ணை விட்டு விடு . உன்னை காதலிக்கிற பெண்ணை காதலி என்று.

ஜீ எனக்கு இதில் வேறு கருத்து . நீங்க காதலிக்கிற பெண் உங்களை காதலித்தால் ?

நீங்கள் தீபாவளி லட்சுமி வெடியை பார்த்திருப்பீர்கள். அதில் இருக்கும் லட்சுமியைப் போல் இருப்பாள் ராஜேஸ்வரி. ஆனால் கொஞ்சம் கறுப்பாக. அப்போதே என்னை விட உயரமாக இருப்பாள். ரிங் பால் டீமின் ஸ்கூல் கேப்டன். நன்றாக ஓவியம் வரைவாள். நன்றாக சமைப்பாள்.(திருடி சுவைபார்த்தது). இதை விட ஒரு பெண்ணிடம் என்ன வேண்டும் ? ஏன் அவளை காதலிக்க வில்லை என்கிறீர்களா? வாஸ்தவம்தான். நான் தான் வேறு ஒருத்தியை காதலித்து தொலைத்து விட்டேனே !

இண்ட்ரஸ்டிங் . நான் கூட நிறைய பேரை காதலித்தேன். மொழி வாரியாக. உன் ஊரில் கூட. என்ன ? ஒரு முறை பார்த்து விட்டால் அலுத்து விடுகிறது என்றான் திலக்.

இடியட். நான் அப்படியில்லை. என் காதலியின் நினைவில்தான் இன்னும் கல்யாணம் செய்து கொள்ளவில்லை.

ஜீ இன்னிக்கு நீங்களும் என்கூட வர்றீங்க .

எங்கடா ?

காமாத்திபுரா !

நான் கபடி(யும்) நன்றாக விளையாடுவேன் . ஒரு முறை டோர்னமெண்ட்டுக்காக பிராக்டிஸ் செய்து கொண்டிருந்தோம். அருகில் ராஜி ரிங் பால் ஆடிக்கொண்டிருந்தாள். ஒரு லாவகமான கேட்சிலிருந்து எகிறி பல்டி அடித்தேன். கீழே இருந்த கல் நெற்றியை பதம் பார்த்தது. ரத்தம் கொட்ட சரிந்தேன். மயக்கம் வருவது போல் இருந்தது.அரை மயக்கம் . மின்னலிருந்து வரும் தேவதை போல் தெரிந்தாள் ராஜி. தாவணியை கிழித்து கட்டினாள். அரை மணி நேரம் கழித்துதான் கண்விழித்தேன். மற்ற பெண்கள் மலங்க மலங்க விழித்து கொண்டிருந்தார்கள்.

என்னடா சொல்றே ? நீ பாத்தியா?

ஆமாம்டா ! அப்படியே அச்சு அசல் நீதான். ஒரு ஹார்ட்டீன். அதுக்குள்ள உன் கறுப்பு மூஞ்சி . என் காதல் நாயகன் . உதடுகள் .

நான் பார்க்கணும்டா என்றேன்.

9 மணிக்கெல்லாம் கல்லூரிக்கு வந்துவிடுவாள் அவள். ராஜேஸ்வரியின் நோட்டை எப்படியோ எடுத்துக் கொண்டு வந்தான் நண்பன். அவன் சொன்னது உண்மைதான் . கூடவே ஒரு கவிதை (மாதிரியும்) ஏதேதோ எழுதி வைத்திருந்தாள்.

கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும் ஜீ. பாதி ஸ்ட்ரெஸ் போயிடும் .என்னத்துக்கு அதைப்போய் பூதம் மாதிரி காவல் காக்கணும் ? யாருக்காக ?

சபலம் தட்டியதா ? இல்லை ஒரு வித கழிவிரக்க மனநிலையா என்றெல்லாம் தெரியவில்லை. திலக்குடன் பைக்கில் ஏறிக் கொண்டேன். காமாத்திபுரா .

திலக் பிராபளம் ஒன்னும் வராதுல்லே!

உள்ளேயே வச்சிருந்தாதான் பிராபளம். மலச்சிக்கலுக்கு கூட இது ஒரு காரணம்னு சொல்றாங்க .

உளறாதே. அது மனச்சிக்கலாயிருக்கும் .

இல்லை ஜீ . கான்ஸ்டிபேஷனைத்தான் சொல்கிறேன் .

ராஜேஸ்வரியின் நோட்டை எடுத்த இடத்தில் வைக்க சொன்னேன். அன்று முழுவதும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவள் ஓரிருமுறை பார்த்தவள் பின் திரும்பவேயில்லை. ஒரு விஷயம் அவள் இரண்டாம் ஆண்டுடன் படிப்பையும் நிறுத்தி விட்டாள். டிபிஎஸ் நகரில் அவள் வீடு என்று நினைவு . சைக்கிளில் சுற்றினோம். கண்டு பிடிக்க முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அவளை மறந்தே போனேன் .

தவம் கலைந்தது போல் உணர்ந்தேன். முகம் அறியாத பெண்ணின் நினைவு ஆக்ரமித்திருக்க உஷ்ணம் ஏறத் தொடங்கியது.

ஜீ ! என்ன ஆச்சு ? சீக்கிரம் வந்துட்டீங்க ? ஒன்னும் நடக்கலையா?


முத்தம் மட்டும் கொடுத்தேன்டா . திலக் என்னை குழப்பமாக பார்த்தான் .


இத்தனை வருடங்கள் கழித்து இன்று ராஜேஸ்வரியை சந்திக்க வேண்டும் என்று இருக்கிறது. அதுவும் இந்த இடத்தில் . திரைப்படமாக இருந்தால் நம்ப முடியாமல் இருக்கும். ஆனால் இது வாழ்க்கையின் நிதர்சனம் .சரளமாக மராட்டியும் இந்தியும் பேசுகிறாள் . கொஞ்சம் கலராயிருந்தாள் . மேக்கப் மாதிரியும் தெரியவில்லை. என் நெற்றி தழும்பை வருடியபடி கண்களை மூடிக்கொண்டிருந்தாள் . கிரவுண்டில் இருக்கிறாள் என்று உணரமுடிந்தது . மெதுவாக கையை விலக்கினேன் . நான் அவளை கேட்க நினைத்த கேள்விகள் அவளுக்கு புரிந்தது . அவள் பதில் எனக்கும் அப்படியே ! பின் தவம் இருந்தா இந்த வாழ்க்கையை தேடிக்கொண்டிருப்பாள் !

திலக் . பக்கத்துல எதாவது பாருக்கு போ .

எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை என்றாள் ராஜி

ஆனால் நான் என்ன சொன்னேன்னு நியாபகம் இருக்கு ராஜி . மெளனமாக எழுந்து வெளியில் வந்தேன் .


பின் குறிப்பு : உன்னை என்னை சகோதரியாகத்தான் நினைக்கிறேன் ராஜி. மன்னித்து விடு. அன்று ராஜியின் நோட்டில் நான் எழுதியது . இன்று அவளை நெற்றியில் முத்தமிடும்போது கூட அதே உணர்வில்தான்.............



Monday, March 29, 2010

ஜோரா கைத்தட்டுங்க.............


ஏதாவது எழுதணும் ..என்ன எழுதறது ? சரி சும்மாதானே இருக்கோம் . சும்மா எதாவது எழுதி வைப்போம்ன்னு ஆரம்பிச்சு . அட சும்மா பத்தி எழுதிட்டேன் .

நாம எல்லோரும் தினம் ஒரு தடவையாவது சும்மா ங்கிற வார்த்தையை சொல்லாம பயன் படுத்தாம இருக்கோமா? சும்மா சொல்லுங்க ..

எங்க எந்த பக்கம் ? சும்மாதான். என்னா மச்சான் இவ்வளவு நேரம் . எந்த ராத்திரியிலே போன்?. சும்மாதாண்டா ...

சரி எந்த சும்மாங்கிற வார்த்தையின் உண்மையான அர்த்தம் பார்க்கலாம் ன்னு ஒரு தமிழ் அகராதியை தேடி பிடிச்சா ..அதுல சும்மாங்க்கிற வார்த்தையே காணும் ?

நான் தஞ்சையில் பிளஸ் ஒன் படிக்கும் போது , முத முறையா பொம்பளை புள்ளைங்க கூட படிச்சேன் ..அரை டிராயர் லேந்து வேட்டிக்கு மாறின பருவம் ..பயலுங்க எல்லாம் தேன் குடிச்ச நரியா திரிஞ்சோம் ...அப்பா இங்கிலீஷ் வாத்தியார் (ஹநிப் )டேய் ,என் கிளாஸ்லே ஒரு பயலும் தப்பி தவறி கூட தமிழ்லே பேசக் கூடாது. இங்கிலிஷ்லேதான் பேசனும்னு சொல்லி விட்டார் ..அதுலேந்து பயலுக ஒருத்தனும் வாயே தொறக்க மாட்டானே ..எதுக்கு பிள்ளைங்க முன்னாடி அசிங்கபட்டுக்கிட்டுனுதான் ?

ஒரு
நாள் நம்ம உலக்ஸ் (உலகநாதன் )கொட்டாவி விட்டான் ..வாத்தி பாத்துட்டு ..வாட் ஆர் யூ ட்யுஇங் மேன் ?ன்னாரு ? நம்மாளு உடனே சார் நான் பாட்டுக்கு சும்மா சிவனேன்னு இருக்கேன் சார் ன்னான் . வாத்திக்கு வந்ததே கோபம் ..சும்மா ன்னா என்ன ? சிவனேன்னு நா என்னன்னு போட்டு காயடிச்சுட்டார் .. நாம ஆளு க்கு அவமானமா போச்சு ..ஏன்னா அப்பத்தான் அவன் உமா ராணியை பிக்கப் பண்ணிக்கிட்டு இருந்தான் .. எப்படி ரா இவ்வளவு கன்பார்மா அவ உன்னை லவ் பண்றான்னு சொல்லறேன்னு கேட்டா ? பின்ன சும்மா என்னையே தான் பாத்துகிட்டு இருக்கா பாரேனாணன் ...

அப்புறம் ஒரு சினிமா பாட்டு சும்மா ..சும்மா ன்னு . சும்மா இருக்கும் போதெல்லாம் சும்மா சும்மா ன்னு கேட்டு அந்த பாட்டு சூப்பர் ஹிட்டு ....

சும்மா சொல்லக் கூடாது . சும்மா இருக்கிறதுலே ஒரு சொகம் இருக்கத்தான்யா இருக்கு சென்னை பாழையிலே சொம்மா கெட ...நை நை னுட்டு ..

சரி சும்மா இருக்கும்போது படிச்சுப் பாருங்க ...

கடந்த 27/03/10 நடந்த பதிவர் சந்திப்பு அன்று நமக்கான குழுமம் ஆரம்பிப்பதற்கான ஆலோசனை கூட்டம் பல பேரின் ஆழ்ந்த ஆலோசனைகளுக்கு பிறகு, சென்னை இணைய எழுத்தாளர் குழுமம் என்று ஒரு ஏரியாவாகவும், இணைய எழுத்தாளர் என்பதை விட வலைப்பதிவர் என்பது தனி அந்தஸ்தை கொடுக்கும் என்று பலரும் கருதியதால் சென்னை இணைய எழுத்தாளர் குழுமம் என்பதை தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் என்று ஒரு மனதாய் தேர்ந்தெடுக்க பட்டிருக்கிறது.

பிரபல எழுத்தாளர் ஞானி, தன்னுடய சங்க அனுபவங்களை பற்றி கூறி, நிச்சயமாய் ஒரு போரமாய் இல்லாமல் ஒரு சங்கமாய் செயல்பட்டால் என்ன செய்ய வேண்டும், என்ன என்ன பிரச்சனைகள் வரும் என்பதை பகிர்ந்து கொண்டார். சங்கமாய் ஆரம்பிப்பது நல்லது என்றும் சொன்னார்.

இன்னும் சில பேர் இப்போதைக்கு பதிவு செய்யப்பட்ட சங்கமாய் இருப்பதை விட விர்சுவலாய் ஒரு குழுமத்தை அமைத்து அதிலிருந்து நாம் அடுத்த கட்டத்தை நோக்கி போவோம் என்று சொன்னார். அதனடிப்படையில் முதற்கட்டமாய் நம்முடைய குழுமத்தை ஆரம்பிப்போம்.தமிழில் எழுதும் உலகில் உள்ள எல்லா வலைப்பதிவர்களும் இதில் இணைந்து கொள்ளலாம்.

இணைத்துக் கொள்ள உங்களது இணைய முகவரி, மின்னஞ்சல், தொடர்புக்கான தொலைபேசி எண்கள், போன்ற விபரஙக்ளோடு நமது tamilbloggersforum@gmail.com என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் உடனடியாயாக உங்களுக்கான இன்விடேஷன் அனுப்பப்பட்டு இணைக்கப்படும்.

அதன் பிறகு நமது எல்லா குழும நண்பர்களூடனும் குரூப் மெயிலின் மூலம் பரிச்சயபடுத்திக் கொள்ள முடியும். இது ஒரு முதல் படியே மேலும் என்ன என்ன செய்யலாம் என்பதை பதிவர்கள் அவர்களது ஆலோசனைகளை மின்னஞ்சல் மூலம் பகிர்ந்து கொண்டு ஒன்று சேர்ந்து குழுமத்தை அடுத்த நிலைக்கு கொண்டு சொல்வோம் என்று கேட்டுக் கொள்கிறோம். மேலும் உங்களுக்கு நமது குழுமத்திற்கான ஆலோசனைகளை வரவேற்கிறோம்.

Friday, March 26, 2010

அங்காடித் தெரு...............


ஷாப்பிங் உலகின் சூப்பர் ஸ்டோர் என்று அழைக்கப்படும் ரங்கநாதன் தெரு சரவணா ஸ்டோஸின் மறுபக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார்கள்.பெயரை சொல்லாவிட்டாலும், அந்தக் கடையின் பிராண்ட் ஐகான் சிநேகாவைத்தான் குறியீடாக எடுத்துக் கொள்ள வேண்டும். மாம்பலம் காவல் ஆய்வாளர் சொல்கிறார். “அண்ணாச்சி ! ஏற்கனவே ஏகப்பட்ட கேஸ் பெண்டிங்கில் இருக்கிறது” என்று.

ரங்கநாதன் தெரு ஒரு மாயவீதி. சேஃப்டி பின் முதல் சமோசா வரை சல்லிசாக விற்கப்படும் இடம். அண்ணா மற்றும் எம்ஜிஆர் சமாதிகளுக்குப் பிறகு சென்னை வருபவர்கள் தவறாமல் செல்லும் இடமாகி விட்டது. தமிழ் சினிமாவுக்கு புதிய கதைக்களமாக அதை அமைத்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர் வசந்தபாலன். பாராட்ட வேண்டிய முயற்சி. வாழ்த்துக்கள் பாலன்.

“செப்பல்லாம் மேல : சுடிதார்லாம் கீழ” என்ற குரலை நீங்கள் அங்கு கேட்டிருக்கலாம். சுருதி குறையாமலும்,சமயங்களில் குரல் உடைந்தும் திரும்ப, திரும்ப சொல்லிக்கொண்டே இருப்பாள் தென் தமிழத்தின் பெண் ஒருத்தி. பளிச்சென்று ஏழ்மையை பிரதிபலிக்கும் தோற்றம் . படிக்க வசதியில்லாமல் குடும்பத்தை காப்பாற்ற வந்து ரங்கநாதன் தெரு வாசிகளாகி போன ஜீவன்களை பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் . கொஞ்சம் வலியுடன் . காலை முதல் நின்று கொண்டே இருக்க வேண்டும் . முகத்தில் வேதனையை காட்டக் கூடாது. அடையாள அட்டையைப் போல் புன்னகையையும் அணிந்து கொணடேயிருக்க வேண்டும். முதலாளிகளின் பாலியல் வக்ரங்களையும் விழுங்க வேண்டும். “பெற்றுக் கொண்டேன் “ என்று கையொப்பமிடப்பட்ட மணி ஆர்டர் ரசீதுகளுக்காக!

புறநகர் பகுதிகளில் இருக்கும் மளிகை கடைகளில் வேலை செய்வதற்கு ஆட்கள் கிடைக்கவில்லை. அத்தனை பேரையும் விலை பேசி தூக்கி கொண்டு வந்து விடுகிறார்கள். கோடிக்கணக்கில் விளம்பரத்திற்கும், நட்சத்திரங்களுக்கும் வாரி இறைக்கும் ஜவுளிகடை முதலாளிகள் இவர்களை நடத்துவதைப் பார்த்தால் கனமாகி போகிறது மனசு. அப்பட்டமாக தோலுரித்திருக்கும் இயக்குனருக்கு ஒரு சல்யூட் .

இயல்பான நடிப்பு . அளவான ,ஆழமான வசனங்கள் .”சனியனே ! வூட்டுக்குத்தான் வந்துகிட்டிருக்கேன் “ இதுதான் முதல் வசனம் . தொடர்ந்து “உரையாடல் ஜெயமோகன்” என்று கார்டு வருகிறது. நேட்டிவிட்டி ஸ்லாங் என்று கொல்லாமல் மண்ணின் இயல்போடு எழுதியிருக்கிறார் ஜெமோ. ரிச்சர்டின் உறுத்தாத ஒளிப்பதிவு கதையை விட்டு நம்மை திசை திருப்பாமல் இருக்கிறது. மேனஜராக வரும் இயக்குனர் வெங்கடேஷின் பாத்திரப்படைப்பும் , அவர் அதை வெளிப்படுத்திய விதமும் நன்றாக இருக்கிறது. அண்ணாச்சியாக செருப்பில்லாமல் வெறுங்காலுடன் வரும் பழ்.கருப்பையா, ஒரே ஒரு காட்சியில் வரும் கவிஞர் விக்ரமாதித்யன் ,ரங்கநாதன் தெரு நடைபாதை வியாபாரிகளாக சில பெயர் தெரியாதவர்களும் யதார்த்தத்தை காட்டுகிறார்கள். கனா காணும் காலங்கள் தொடரில் நடித்த பாண்டி, ஸ்டோர் ஊழியர்களாக வருபவர்களின் இயல்பான நடிப்புக்கும் கிரெடிட் வசந்தபாலனுக்கே .

நாயகன் மகேஷ் . அறிமுகம் . கூத்துப்பட்டறையில் பயிற்சி கொடுக்கப்பட்டதாம். பள்ளி இறுதியில் முதல் மாணவன் . தந்தையின் அகால மரணம். குடும்பச்சுமை . வேலைக்கு வந்த இடத்தில் காதல் . முதலாளியோடு மோதல் என்று ஒரு டாட் பால் விடாமல் அடித்து ஆடியிருகிறார். காதல் பரத்தை போல இருக்கிறார். சிறந்த அறிமுகம் வசந்த் .

முதலில் ஜி.வி பிரகாஷ் . பின் விஜய் ஆண்டனி என்று இரண்டு இசையமைப்பாளர்கள் . பிண்ணனி இசை சிங்க் ஆகாமல் திரிகிறது. “அவள் அப்படி ஒன்றும் அழகில்லை “ பாடல் . பாடல் வரிகளும் , காட்சிப்படுத்தலும் “வில்ஸ் ஃபில்டர்” சிகரெட்டைப் போல் "filter and tobacco" perfectly matched.

அங்காடித் தெருவின் அல்டிமேட் அஞ்சலிதான் . பொன்னிறமாய் வறுத்த புகையிலைப் போல் இருக்கிறார். வெடுக்,வெடுக்கென்று அவர் பேசும் வேகத்திற்கு , புருவவெட்டும், மூக்கு சுருக்குதலும் , கண்ணசைப்புகளும் எக்ஸ்லண்ட் . (மன்னித்து விடு ரீமா !) சொந்தக்குரல் என்று நினைக்கிறேன் . மாடுலேஷனும் பின்னல். காமத்தை வெளிப்படுத்தாத அவர் உடல்மொழி அற்புதம் . அவரை பெற்றவர்களுக்கும் , கண்டுபிடித்த இயக்குனர் கற்றது தமிழ் ராமிற்கும் ராயல் சல்யூட்.

எதிர் வினை போல் யதார்த்த மீறல்களும் இருக்கிறது. கொஞ்சம் நீளமோ என்று தோன்றுகிறது . இருந்தாலும் பரவாயில்லை. இதுவரை நாம் கண்டிராத கதைக்களம் . மிகையில்லாத நடிப்பு. போலித்தனமில்லாத இயக்கம். எல்லாவற்றுக்கும் மேல் அஞ்சலியின் "outstanding perfomence "

”அங்காடித்தெரு “ ஒரு அனுபவம்......

Thursday, March 25, 2010

நானும் கொஞ்சம் பேசுகிறேன்........ 7



என் சில அனுபவங்களை கதையாக எழுதுகையில் அதில் உலக்ஸ் என்ற பாத்திரம் வரும். அவனுக்கு ஒரு வருத்தம் . ஏன் மாப்ளை என் போட்டோவையே போட மாட்டேங்கிறன்னு கேட்டான். போட்டேன்டா மாப்ளை . கேபிள் சங்கர் , ரமேஷ் வைத்யா, அகநாழிகை வாசு ஆகியோருக்கு உலக்ஸுடன் பரிச்சயம் உண்டு. மிக எளிமையான, வெகுளியான நண்பன் அவன்.


மெத்த படித்த மேதாவி நண்பர் அவர் . படித்த என்றால் ஆங்கில எழுத்துக்களை அடுக்கி போட்டுக் கொள்வது இல்லை. இலக்கியம் வகையறாக்களை . நாம் படித்திராத ஒரு எழுத்தாளனைப் பற்றியோ அல்லது எதாவது கவிதையைப் பற்றியோ நம்மிடம் சந்தேகம் கேட்பார் . நடுநிசியில் கூட . (நீங்க வெறும் தாஸா , இல்லை லார்டு லபக்தாஸா என்ற ரீதியில் ) . சும்மா ஈகோவை உரசிப்பார்ப்பதில் ஒரு ஆனந்தம். அவருடன் ஒரு சிறிய உரையாடல் .

தலைவரே . என்னை விட அறிவாளி யாரும் இருக்க முடியாதுன்னு தெரியும். இருந்தாலும் ஒரு பிரச்சனைக்கு செகண்டு ஒப்பினீயன் உங்க கிட்ட கேக்கணும் - அவர்.

இருங்க. முதலில் நீங்க அறிவாளியாங்கிறதுக்கே செகண்டு ஒப்பினீயன் தேவைப்படும் போல இருக்கே . (பழி !)

அறிவாளி ,புத்திசாலி, படிப்பாளி,படைப்பாளி என்ன வித்தியாசம் சொல்லலாம் ?


மதுரை அண்ணன் உடைத்து சொல்லிவிட்டார் .”கலைஞரைத் தவிர யாரையும் தலைவராக ஏற்றுக் கொள்ள முடியாது” என்று. சிக்கல் தீர்ந்தது தலைவருக்கு. பட்டாபிஷேகம் நடக்கும்போது அண்ணனை மூலவராக்கி விட்டு, தளபதியை உற்சவராக்கினால் போதும். அவர் பாட்டுக்கு எழுத்துப் பணியை தொடரலாம் . (ஐயோ கொல்றாங்களே..)


மொபைல் அடித்தது . சாமி. வழக்கமாக முடி வெட்டும் நண்பர். சார் ஃப்ரீயா இருக்கு . வந்துடுறீங்களா? (மொபைல் எவ்வளவு செளகரியம் !)

குமாருக்கு போன் செய்தேன்.

குமார் . துணி எடுக்க வா . ஒரு செட் அர்ஜெண்ட் .

மீண்டும் என் மொபைல் அடித்தது.

சார் வீட்டுல இருக்கீங்களா?

நீங்க யாரு ?

நேர்ல வர்றேன் சார். பக்கத்துலதான் இருக்கேன்.

நீங்க யாருங்க ?

சிட்டி பேங்க் . கிரெடிட் கார்டு கலெக்‌ஷன் டிவிஷன் .

சே! இம்சை !!


இன்னொரு போன் வந்தது. (இப்ப இதான் லேட்டஸ்ட் ட்ரெண்டு . போன் இல்லைன்னா மெயில்)

நான் உங்க முதன்மையான வாசகன் சார் !

சமயங்களில் எழுதவும் செய்வீங்களோ ? (அட! அவர் இல்லீங்க)

உங்களுக்கு மாதுன்னா ரொம்ப பிடிக்குமோ ?

ஏன் கால் இல்லைன்னா கூட பிடிக்குமே .

இல்லை உங்கள் கதைகளில் ..

நிறுத்துங்க. முதல்ல கதைன்னு ஒத்துகிட்டதுக்கு உங்க காலை கொடுங்க !

அதில்லை சார். கிட்ட தட்ட எல்லாக் கதைகளிலும் மாதுன்னு ஒரு பேர் வருதே. அதான் .

சப்பை மேட்டர் . ( கவனிக்கவும்... இந்த வார்த்தை வெட்டி ஒட்ட உதவலாம் )


இயக்குனர் கற்றது தமிழ் ராம் சொன்ன ஒரு சம்பவத்தை “கடைசி பெட்டியிலிருந்து சில குறிப்புகள் “ என்று புனைவாக்கியிருந்தேன் . அதைஅவர் படிக்க லிங்க் கொடுத்தேன். படித்து விட்டு அழைத்தார் . நல்லாயிருக்கு தோழர் . நான் அந்த சம்பவத்தை வைத்து ஒரு நாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன். அதை முடிந்தால் நீக்கி விடுங்களேன் என்றார் . நீக்கி விட்டேன். ராம் காட்சி என்ற பெயரில் வலைமனையில் எழுதுகிறார் . எல்லாம் ஏற்புடைய கருத்துக்கள் இல்லை. என்றாலும் அவரின் வலிமையான எழுத்துக்களுக்காக படிக்கலாம். படிங்களேன் . சனிக்கிழமை சந்திப்புக்கு வருகிறேன் என்று சொல்லியிருக்கிறார் .பார்க்கலாம் .


பாஸ்கர் சக்தியின் சிறுகதைகளை துண்டு துண்டாக படித்திருந்தாலும், அவரின் முழு தொகுப்பான கனக துர்கா வை (அவர் அன்பு கையெழுத்துடன்) காசு கொடுத்து வாங்கி படித்தேன் . எளிமையான எழுத்து . இயல்பாக தெறிக்கும் நகைச்சுவை . எனக்கு இரண்டு கதைகள் மிகவும் பிடித்திருந்தது . ”ஏழு நாள் சந்திரன்” என்றொரு சிறுகதை . சித்தப்பா என்ற குணசித்திரம்தான் இந்த கதையில் மையம் . “புடிச்சா பண்ணிப்பாத்துரணும் . புடிக்கலின்னா விட்டுட்டு போறோம்” இதான் அவர் பாத்திரத்தின் தன்மை. அண்ணன் மகனுடன் அவர் காட்டும் சிநேகிதம் , ஊர் குடியானவர்களிடம் அவரின் தோழமையும் ,கரிசனமும் . அண்ணனிடம் மூளும் பகை . அருமையான சித்தரிப்புகள் . பழகின மாடு போல் சீரான நடை .

மற்றொரு சிறுகதை “அழகர் சாமியின் குதிரை “ ஒரு அருமையான மண் மணம் கமழும் கிராமத்து கதை . சாமியின் மரக்குதிரை களவு போகிறது . ஊள்ளூர் கோடாங்கியை புறக்கணித்து விட்டு மலையாள குறி சொல்பவனை அழைத்து வருகிறார்கள் . காவல் நிலையத்திலும் புகார் கொடுக்கிறார்கள் . மலையாள குறிகாரன் யதேச்சையாக ஏதோ சொல்ல , ஒரு நிஜ மட்ட குதிரை ஊருக்குள் வருகிறது . பின்னாடியே அந்த குதிரைக்கு சொந்தக்காரனும் வருகிறான் . ஊர் கோடாங்கியின் மகளுக்கும், ஒரு இளவட்டத்துக்கும் காதல் டிராக் ஓடிக் கொண்டிருக்கிறது. மொத்தத்தில் சினிமாவுக்கு ஏற்ற கதை. சமீபத்தில் வம்சி வெளியீட்டு விழாவில் பாஸ்கரை சந்தித்தேன் . இந்த கதையைப் பற்றி பேசும்போது சொன்னார். வெண்ணிலா கபடிக்குழு சுசீந்திரன் அதை திரைப்படமாக்குகிறாராம். ஸ்கிரிப்ட் பாஸ்கர் சக்தி. அட்வான்ஸ் வாழ்த்துக்கள் நண்பரே . நிச்சயம் ஏமாற்றாத கதை.


நாளை முதல்
நீளத்தொடங்கும்
தனிமை
ஜெட்லாக் பற்றிய
மருமகளின் சந்தேகத்தை
தீர்த்துக் கொண்டிருக்கிறான்
ஒரே மகன்.

Wednesday, March 24, 2010

அழைக்கிறார்கள்..............




சும்மா அங்கிட்டும், இங்கிட்டும் திரிஞ்சிகிட்டேயிருக்கோம். கொஞ்சம் கூடி பேசலாமா? என்ன பேசலாம் ?


1. தமிழ்மணத்தில் எப்படி ஓட்டு வாங்குவது?
2. எப்படி குழு அமைப்பது?
3. ப்ளஸ், மைனஸ் மற்றும் இடைத்தேர்தல் ஓட்டு, அதாங்க கள்ள ஓட்டு எப்படி போடறது?
4. எதிர்பதிவுகள்/எதிர்வினை பற்றிய தெளிவுகள்

அன்பு வலைத்தமிழ் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே ! படைப்பாளி சொந்தங்களே !

நட்சத்திரப் பதிவர் உண்மைத்தமிழனார் அழைக்கிறார்...9840998725
கேபிளார் அழைக்கிறார் ... 9840332666
நரசிம்மார் அழைக்கிறார்.. 9841888663
அகநாழிகையார் அழைக்கிறார்.. 9994541010
லக்கியார் அழைக்கிறார்.... 9500061605
அதிஷார் அழைக்கிறார்...... 9500061607


யார்/ஆர்னு வருவதால் யார் இவர்கள் என்று கேட்கவில்லை. உங்களுக்கே தெரியும். இவர்கள் மோசமானவங்கள்ளேயே முக்கியமானவங்க ! மற்றும் உங்களை நீங்களே அழைத்துக் கொண்டும் வந்து விடுங்கள்.


சென்னைவாழ் பதிவர்களுக்காக ஒரு அமைப்பு ஏற்படுத்தும் அவசியம் வந்திருக்கிறது. அமைப்பின் பயன்கள் சில ;


1 . வலைப்பதிவர்களுக்கு பத்திரிக்கையாளர் அட்டை வழங்கப்படலாம். அதை வைத்துக் கொண்டு ஒன்வேயில் போகலாம். மாமூல் கொடுக்காமல் தப்பிக்கலாம்.

2. சினிமாக்களை ஓசியில் பார்க்கும் வாய்ப்பும், கவர் வாங்கி கொண்டு விமர்சனம் எழுதும் வாய்ப்பும் கிடைக்கலாம்.

3. வலைப்பதிவர் நலவாரியம் அமைக்கப்படலாம்.

4. சோழிங்கநல்லூரில் இலவச வீட்டு மனை கிடக்கப்பெறலாம்.

5. ஆளுங்கட்சிக்கு ஜால்ரா அடிப்பவர்களுக்கு கணையாழி விருதும் கிடைக்க வாய்ப்புண்டு.


நிகழ்ச்சி நிரல்
தேதி : 27.03.10/சனிக்கிழமை நேரம் : மாலை 5.30 இடம் : டிஸ்கவரி புக் பேலஸ் 6.முனுசாமி சாலை முதல் மாடி, மஹாவீர் காம்ப்ளெக்ஸ் பாண்டிச்சேரி ஹவுஸ் அருகில், மேற்கு கே.கே.நகர் சென்னை –78


அன்புடன் அனைவரையும் வரவேற்கும்


Tuesday, March 23, 2010

பெயர்ச்சொல்...........


என் பெயர் கொஞ்சம் வித்தியாசமான பெயர். அதில் என்ன இருக்கிறது என்று கொஞ்சம் அலட்சியமாகத்தான் இருந்தேன். ஆனால் பெண்பிள்ளைகளுடன் சேர்ந்து படிக்க ஆரம்பித்தவுடன் தான் அதைப் பற்றிய கவலை அதிகமானது. அவள்கள் எதிரில் வேண்டுமென்றே அந்த பெயரை சொல்லி நண்பர்கள் அழைக்கும்போது அவமானம் பிடுங்கி தள்ளும்.

ஏம்பா எனக்கு இப்படி பெயர் வச்சீங்க?

என்னடா சொல்றே ? அது நம்ம குலதெய்வத்தோட பேராச்சே ராசா . நிறைய படிப்பும், தீர்க்காயுசும் கொடுக்கணும் நேர்ந்து கிட்டு வச்சிருக்கேன். அப்படியெல்லாம் நினைக்காதேப்பா . சாமி குத்தமாயிடும்.

என் நண்பனின் தந்தை கோர்ட்டில் வேலை பார்க்கிறார். அவரிடம் பெயரை எப்படி மாற்ற வேண்டும் என்று ஒரு நாள் கேட்டேன்.

நீ மைனராச்சேப்பா . உங்கப்பா ஒரு மனு கொடுத்தா மாத்திடலாம்.

அப்பாவிற்கு கடுமையான கோபம் வந்தது. புத்தி கெட்டு போச்சா உனக்கு. படிக்கிற வயசுல இந்த மாதிரியெல்லாம் எவன் கத்து கொடுத்தான். பளாரென்று அறை விழுந்ததுதான் மிச்சம். சாப்பிடாமல் முஞ்சியை தூக்கி வைத்து கொள்ளுதல் என்று சகல அஸ்திரங்களுக்கும் அப்பா அசரவில்லை. வெள்ளை பேப்பரில் ஸ்டைலான பெயர்களை எழுதி பார்க்க தொடங்கியிருந்தேன். படிப்பு முடிச்சு வேலைக்கு போயிட்டா, அப்பா என்ன ! ஆண்டவன் கூட எதுவும் கேக்க முடியாதில்லை. அதற்காக பெயரை இப்போதே தேர்ந்தெடுக்க ஆரம்பித்தேன்.

உன் பெயர் என்ன ?

கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும்போது அவள் கேட்டாள். முதலாம் ஆண்டு மாணவி அவள். மிக அழகான பெயர் அவளுக்கு. என்னை வெட்கம் பிடுங்கியது. வீட்டில் வைத்த பெயர் இது. ஒரு வேண்டுதலுக்காக வைத்திருக்கிறார்கள். பதினெட்டு வயது வரை எனக்கு கண்டம் இருக்காம். அதற்கு பிறகு மாற்றிக் கொள்ளலாம் என்று பரிகாரம் சொல்லியிருக்கிறார்கள் என்று அவளிடம் சொன்னேன்.

அது சரி. நீ இன்னும் பெயரை சொல்லவில்லையே !

உனக்கு.. சாரி உங்களுக்கு எல்லாம் பரிச்சயமான பெயர்தான். இப்ப கூட நீ என் பெயரைதான் மஞ்சள் நிறத்தில் கட்டியிருக்கிறாய் என்று கவிதை போல் உளறினேன் .அவளுக்கு சட்டென்று புரியவில்லை. கொஞ்சம் யோசித்து “பாவாடை” என்றாள்.

இல்லை பாவாடைசாமி. நான் வேறு பெயருக்கு மாறும் வரை நீ என்னை சாமி என்று கூப்பிடேன் .

இல்லை. எனக்கு பாவாடைதான் பிடித்திருக்கிறது.

அப்படியானால் உன்னை எனக்கு பிடிக்காது.

சே..பெயரால் என் முதல் காதலுக்கான வாய்ப்பு போனது. அப்பாவிற்கு வயசாகி விட்டது. நான் படிப்பை முடித்து விட்டு வேலைக்கு போக ஆரம்பித்தேன்.

அப்பா .. நான் பெயர் மாற்றிக் கொள்ளலாம் என்று உத்தேசித்திருக்கிறேன்.

என்னவாது பண்ணு. ஆனா நான் பாவாடைன்னுதான் கூப்பிடுவேன். இல்லைன்னா கூப்பிடவே மாட்டேன்.

ஒரு சுப நாளில் பெயரை மாற்றிக்கொண்டேன். பத்திரிக்கையில் விளம்பரமும் கொடுத்தேன். ஷ் ல் முடியும் பெயர் வேண்டும் என்று ஆசை.(அவரிடம் சொன்னதற்கு ”உஷ்” என்று வைத்துக்கொள் என்று சொன்னார்).

தினேஷ் ! வீ ஆர் காலிங் ஃப்ரம்.. என்று ஆரம்பித்து ஏகப்பட்ட அழைப்புகள். கொஞ்சம்,கொஞ்சமாக பாவாடை மறைய ஆரம்பித்தது. ஊரில் எவனாவது பாவாடை என்று சொன்னால் அடிதான். இதுவரை மூணு, நாலு பற்கள் உடைபட்டது. அப்பாவும் மறைந்து போனார்.கூட வேலை பார்க்கும் ரெஜினாவை காதலித்து (பெயருக்காகவே) திருமணமாகி விட்டது. ஒரு குழந்தை. சென்னையில் செட்டிலாகி விட்டேன். குழந்தைக்கு மொட்டை போடுவதற்காக ஊருக்கு வந்திருக்கிறேன்.

ஊர் சுத்தமாக ! மாறியிருக்கிறது. ஒரு ரவுண்டு அடிக்க கிளம்பினேன். டாக்டர் சைக்கிள் ஓட்டுங்கள். உடம்புக்கு நல்லது என்று சொன்னது நியாபகம் வந்தது. மாது கடையில் வாடகை சைக்கிள் எடுக்கும்போது ஏற இறங்க பார்த்தான்.

என்ன மாது . தெரியலை என்னை?தினேஷ் .

சட்டுன்னு தெரியலை. இந்த புது வண்டியை எடுத்துக்கங்க .

சென்னையில் இது போல் சைக்கிள் ஓட்டமுடியும் என்று தோணவில்லை. மனைவியையும் கேரியரில் உட்கார வைத்துக் கொண்டேன். கோவிலுக்கு போனோம்.

இந்த சாமி பேர் என்னங்க என்றாள் மனைவி.

பேர்ல என்ன இருக்கு . எல்லாம் சாமிதான். இந்த பதிலுக்கு கொஞ்சம் குழம்பி போய் என்னை பார்த்தாள். வீட்டில் அவளை இறக்கி விட்டு விட்டு சைக்கிளை விடப் போனேன்.

2 மணிநேரம். பத்து ரூவா என்றான் சைக்கிள் கடை மாது.

கொடுத்து விட்டு திரும்பும்போது அந்த எண்ணம் தோன்றியது. நோட்டில் என் பெயரை எப்படி எழுதியிருப்பான் ? தினேஷ் என்றா பாவாடை என்றா? வாங்கி பார்த்தேன்.

“தெரியும்” என்று எழுதியிருந்தான் பாவி .

Monday, March 22, 2010

வித்தை


இந்த பெரிய மூங்கிலில் மலைப்பாம்பை சுத்தினாப்ல இருக்குமே ! அதை வச்சுகிட்டு சுத்திகிட்டிருந்தானே ஒருத்தன். அவனேதான்.

தேடிகிட்டிருக்கோம் சார்.

சார். அந்த சீனுக்கு பேக்ட்ராப் எப்படி ஃபீல் வேணும் ?

தேவா . கொஞ்சம் வெஞ்சன்ஸ். கொஞ்சம் விரகம். பல்லவி, சரணம் எதுவும் இல்லை. தாமரை எழுதியிருக்காங்க. ரெண்டு வரி, கொஞ்சம் பிஜிஎம், மறுபடியும் ரெண்டு வரி. ஒரு வாரியர் ஃபீல் மியுசிக். சிகப்பு கலர் டோன் மையமா இருக்கட்டும். அப்புறம் அந்த கடலும், வானும் பிரதிபலிக்காத ஒருவித நீலம். ஆனா பெப்சி நீலம் இல்லை.

வாட்ச், தேள், பாம்பு, டைனோசர் உனக்கு என்னடா வேணும் செல்லம்? ஒரு ரூபாதான் .

சார் ஸ்டோரி போர்டு .

ரவி ஸிக் ஸாக்கை அவாய்டு பண்ணுங்க. ரொம்ப இரிடேட் பண்ணுது. சாய்வா , ஸ்டெடியா இருக்கட்டும். டிராவல் ஃபீல் வேணும் ரவி . சின்னதா ஒரு செமி சர்கிள் டிராலி போட்டுக்கலாமா?

உங்கப்பாவுக்கு இதெல்லாம் தெரியுமா?

ம்ம்ம். அவருக்கு பெயிண்டிங், டான்ஸ், மியூசிக் எல்லாம் தெரியும். நீ எங்கப்பா சைன் பாத்திருக்க இல்ல ! டிராயிங் மாதிரி இருக்கும்.

சார் ஷாட் ரெடி. ஒரு மானிட்டர் பார்த்திருலாம்.

என்னம்மா . டேடி பிஸியா இருக்கேன்டா.

டேடி எப்ப வருவீங்க?

சார் அந்தாளை பிடிச்சிட்டாங்க. ஸ்டூடியோவிற்கு கொண்டு வரவா?

வேண்டாம் மாது. நானே அங்கே வரேன். பேக்கப் .

மலைப்பாம்பு சுற்றிய மூங்கிலை இறுக்கமாக பிடித்து கொண்டிருந்தான் அவன். காருக்குள் அவனை ஏற்றிக்கொண்டேன். கடற்கரை. ஆள் அரவமற்ற இடத்தில் நிறுத்தினேன் .

மூன்று தேசிய விருதுகள். நிறைய மாநில விருதுகள். பிலிம்ஃபேர். திகட்ட, திகட்ட புகழ்.

டேடி .

என்னடா செல்லம் ?

இங்க பாரு. கையில் கொழகொழவென்று ஏதோ உருட்டி வைத்திருந்தாள். தொட்டால் பிசினாய் ஒட்டிக் கொண்டது. ஜவ்வு மிட்டாய்.

என்னம்மா இது? வீட்டுல எவ்ளோ சாக்லெட்ஸ் இருக்கு. இதைப் போய் ! நாட் ஹைஜீனிக்டா செல்லம்.

இல்லைப்பா. இது சாப்பிட இல்லை. இதுல வாட்ச், தேளு அப்புறம் டைனோசர் எல்லாம் பண்ணி கொடுத்தார்ப்பா .

யாரு ?

தெரியலை. நான் எல்லாத்தையும் கலைச்சிட்டேன். நீங்க செஞ்சு கொடுங்க டேடி

மொபைல் அடித்தது. உதவியாளன். சார் எல்லாரும் ரெடி.

வந்துகிட்டேயிருக்கேன் .

வேலையே ஓடவில்லை. ஷீட்டிங்கில் கவனம் செல்லவில்லை.

சார் என்னை எதுக்கு கூட்டிகிட்டு வந்தீங்க ? நாலு இடம் சுத்துனாத்தான் பொழைப்பு ஓடும்.

நான் அவனிடம் ஒரு கட்டை கொடுத்தேன். வித்தியாசமாக பார்த்தான்.

எப்படி இதெல்லாம் பண்றது ? சொல்லிக்கொடு என்றேன் .

Saturday, March 20, 2010

இருத்தல்..........சில கோணங்கள்


இது சாதாரண வாழ்க்கை :

ராத்திரி முச்சூடும் அரசு தொலைக்காட்சியில் சினிமாவும், சாமியார் சங்கதிகளும் பார்த்து விட்டு தூங்கப்போனதால் ராக்காயிக்கு கண்ணெல்லாம் எரிந்தது. மெதுவாக எழுந்தாள். பகல் முச்சூடும் டாஸ்மாக்கில் குடித்து விட்டு தூங்கி கொண்டிருந்தான் முனுசாமி. பெரிய குறட்டை வேறு. சமைலறைக்கு போனாள். சமையலறை என்றால் தனியாக இல்லை. பத்துக்கு பத்தில் ஒரு தடுப்பு. அதாவது சின்ன குடிசைதான். அரசு கொடுத்த இலவச கேஸ் அடுப்பை பற்ற வைத்து அலுமினிய சட்டியில் தண்ணீரை ஊற்றினாள். கருப்பட்டியை இடித்து போட்டு வடிகட்டினாள். ஊதி, ஊதி குடித்தாள். வயிற்றை கலக்குவது போல் இருந்தது. விடிவதற்குள் கம்மா கரைக்கு போய் வர வேண்டும். வெளியில் வந்தாள். துணைக்கு ஆள் சேர்ந்தது. வேப்பங்குச்சியை ஒடித்து பல்லை விளக்கி கொண்டே போனார்கள்.

............................................................................................................................................................................

மெண்டோஸ் வாழ்க்கை :

ஸ்கார்ப்பியோ மெலிதாக உறுமி கொண்டிருந்தது. சீரான ஏசி குளுமை. டின் சவுண்டு சிஸ்டம் அலறிக்கொண்டிருந்தது. ஜாக்சனின் டேஞ்சரஸ். ஷிவாஸ் ரீகல் சுகத்தில் தூங்கி கொண்டிருந்தவன் லேசாக கண்களை திறந்தான். ஏரிக்கரையோரம் வண்டி நின்றது. இறங்கினான். வயிற்றை கலக்கியது. நல்ல காற்றோட்டமான இடம்தான். யாருமேயில்லை. ஜீன்சை கழற்றி அமர்ந்தான்.

................................................................................................................................................................................

பின்நவீனத்துவ வாழ்க்கை :

பிரம்ம முகூர்த்தம் . உஷத் கால பூஜை வேளை. அமானுஷயமான அதிகாலை இருள். நிலவின் விழித்திரைகள் மெல்ல மூடத் தொடங்குகிறது. தூரத்தில் தெரியும் நிழல். நீண்ட கடும் கோடை போல் நடை. சற்று அருகில் தெரிய ஏனோ நிழல் சுருங்குவது போல் ஒரு மாயத்தோற்றம். நீட்சியின் ஆயாசம் வெளிப்படுகிறது. சீற்றமில்லா அலைகளுடன் சிணுங்கும் ஏரி. கருவில் இருக்கும் சிசுவாய் மடங்கி காட்சியளிக்கிறான் அவன். கால்மடிந்து தவக்கோலம் பூணுகிறான். சற்றே கழிகிறது ஜாமம். நீரில் முன்னும், பின்னும் நீந்தும் அன்னமாய் அவன் நிழல் மாறுகிறது. துடுப்பாய் இயக்குகிறான் கைகளை. மாயசிரிப்பொலி நீரில்.

Thursday, March 18, 2010

பிறிதொரு சரித்திரம்...........



காலம் கடந்து நிற்கும்

புதினமொன்றை வாசிக்க

ஆரம்பித்திருந்தேன்

கடைசி வரியிலிருந்து


குருதிப்புனலில் தொடங்கும்

சரித்திரம் அது

பின் வாசிப்பில்

இரத்தக்கறைகள் சற்றே

உலரத்தொடங்கியிருந்தன



கையகல சதைத்துண்டும்

சுருண்டிருக்கும் கற்றை முடியும்

அதன் கால் பாவி நிற்கும்

கைப்பிடி மண்ணும்தான்

இக்கோரத்தின் பிரதான பாத்திரங்கள்



அளவிலா ஆசைகளும், ஆணவமும்

இந்த அக்கினியில் நெய்யாக !



விழிப்பில் இருந்து மீண்டும்

உறக்கமும் அதற்குறிய கனவும் என்று

முன்னிரவு நோக்கிய பயணம் போல்

உணர்ந்தேன் அவ்வாசிப்பை


சிரசுகள் ஒட்டிக்கொண்டன

உடைந்த வாள்களும், ஈட்டிகளும்

கரங்களில் சதிராட்டம்


நறுமணத்தை நுகர ஆரம்பித்தேன்

கூடவே வந்த இன்னிசையையும்

என் உடல் பின்னோக்கி

இயங்க முடிந்தது

மெல்ல தலை திரும்ப தொடங்கியிருந்தது

முதல் அத்தியாயத்தின் முதல்

வரிக்கு வந்திருக்கிறேன்

ஆனால் தலைப்புதான் பொருத்தமில்லாமல்

முற்றும் என்று

Monday, March 15, 2010

மானிட்டர் பக்கங்கள் ....... 15/03/10


இந்த வாரம் ஆனந்தவிகடனில் சாமியார்களைப் பற்றி ஒரு கட்டுரை புகைப்படங்களுடன் வந்திருக்கிறது. சாய்பாபா, ரஜனீஷ், பிரேமானந்தா, நித்தியானந்தா இன்னும் பிற ஜென்மங்களும். சாமர்த்தியமாக ஜெயேந்திரையும், சின்ன சாமியையும் தவிர்த்திருக்கிறார்கள். ஆனால் அவர்களைப் பற்றி ஓரிரு வரிகள் எழுதியிருக்கிறார்கள். ஆனால் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் குதிரை ஓட்டி ஜக்கியை விட்டு விட்டார்கள். இத்தனைக்கும் ஜீனியர் விகடன் பழைய இதழில் வெள்ளியங்கிரி மலை மர்மங்கள் பற்றிய ஒரு கட்டுரை படித்த நியாபகம் இருக்கிறது. விகடனில் “அத்தனைக்கும் ஆசைப்படு “ ஜக்கி எழுதுவதால் விட்டுவிட்டார்கள் போலும். கோலங்கள், திருமதி செல்வம் எல்லாம் சன் டிவியில் காட்டப்பட்ட நித்தியின் வீடியோவிற்கு எந்த விதத்திலும் குறைந்ததில்லை. ஜக்கி பற்றிய சிடி எதுவும் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதுவும் சன் டிவி கையில் சிக்கினால் அவ்வளவுதான். ”அவர்களை” பற்றிய சிடி கிடைத்தாலே ஒளிபரப்புவார்கள் போல ! ஆனால் எங்கோ இருக்கிறது. வரும் என்றுதான் பட்சி சொல்கிறது !


பகுத்தறிவு பகலவனின் பாசறையிலிருந்து வந்த தலைவர் . பாராட்டு விழாவிற்கே பாராட்டு விழா எடுக்கும் பெண்சிங்கத்தின் படைப்பாளி. ஊருக்கெல்லாம் பகுத்தறிவு சோறூட்டும் தானைத்தலைவன். 13 ஆம் எண்ணை பிடித்து தொங்கி கொண்டிருக்கிறார். கிடக்கறது கிடக்கட்டும் . கிழவனை தூக்கி மணையில் வை என்பது போல் வேலை அறைகுறையாக முடிந்திருக்கும் புதிய சட்டமன்ற கட்டிடத்தை திறந்து விட்டார். ராசி நம்பராம். இதுக்கு டம்மி டூம். அதுக்கு இரண்டு கோடி ரூபாயாம். 90 லட்சம் வீடுகளில் கழிப்பறை வசதி இல்லையாம்.


காந்திய கிராமங்கள் என்ற ஒரு வலைப்பூ. அதில் ஒப்பாரியை பற்றிய ஒரு பதிவு மிகவும் சுவாரசியமாக எழுதப்பட்டிருந்தது. சாந்தி லட்சுமணன் என்பவர் எழுதுகிறார். எல்லாப்பதிவுகளுமே தகவல்பூர்வமாகவும் இருக்கிறது. படித்துப் பாருங்களேன்.

இழவு , சிக்கன் பிரியாணி போன்றவர்கள் இந்த திரைப்படத்தை தலையில் தூக்கி கொண்டாடலாம். ஒடுக்கப்பட்டவர்களின் குறியீடாக ஒற்றைக்கால சட்டையுடன் படம் முழுவதும் அலைவதற்காக. அல்லது ஆதிக்க சாதியினரின் கோயில் தேரை இழுத்து வந்து காலனியில் கட்டி விடுவதற்காக. மாத்தியோசி திரைப்படம் ! ஒரு மண்ணாங்கட்டியையும் மாத்தியோசிக்கவில்லை. இறுதியில் நாயைப் போல் அடிபட்டு செத்து போகிறார்கள் டிரவுசர் பார்ட்டிகள். தயாரிப்பாளருக்கு டிரவுசராவது மிஞ்சினால் சந்தோஷம்தான். இயக்குனர் நந்தா பெரியசாமி . தினமும்தான் வாயால் சாப்பிடுகிறோமே , ஒரு நாள் என்று மாத்தி யோசித்திருக்கிறார் போலும்.

திருவண்ணாமலையில் நண்பர் அய்யனாரின் மூன்று புத்தகங்கள் வெளியீட்டு விழா சிறப்பாக நடந்தது. வாழ்த்துக்கள் அய்யனார். நானும் , அகநாழிகை வாசுவும் சென்றிருந்தோம். சிறப்பாக உபசரித்தார் அய்யனார். (அப்சலூட் ஓட்காவுடன்). எழுத்தாளர் பிரபஞ்சன் சொன்னது. அவர் குங்குமத்தில் வேலை செய்தபோது ஒரு முறை டி.ஜி.எஸ். தினகரனை பேட்டி எடுக்கப் போனாராம். காலை சிற்றுண்டியுடன் சிறப்பான வரவேற்பு. ஒரு தட்டில் உணவு வகைகள் வைக்கப்பட்டிருக்க, அதை உண்ண ஆள் யாரும் இல்லை. கேட்டதற்கு தினகரன் சொன்னாராம். அது ஜீசஸுக்காக. அவர் தினமும் என் வீட்டில் உணவு அருந்துவார் என்று. பிரபஞ்சனுக்கு கடுப்பு. நேர்காணல் முடிந்து மதிய உணவு நேரம் வந்துவிட்டது. தினகரன் சாப்பிட சொன்னாராம். பிரபஞ்சன் சொன்னார். மதிய உணவு என் வீட்டில்தான் . வேறெங்கும் சாப்பிட மாட்டேன். ஏனென்றால் மதிய உணவுக்கு ஜீசஸ் வருவார் என்று. தினகரனுக்கு திருடனுக்கு தேள் கொட்டிய நிலமை. அதெப்படி என்று எப்படி கேட்கமுடியும் ? கேட்டால் உங்கள் வீட்டிற்கு டிபனுக்கு வருகிற ஆள் , ஏன் என் வீட்டிற்கு லஞ்சுக்கு வரக்கூடாது என்று கேட்க பிரபஞ்சன் ரெடியாக இருந்திருக்கிறார்.

டிஸ்கி கவுஜை :

எல்லாவற்றையும்
சரியாகவே
புரிந்து கொள்கிறாய் !
நான் சொல்ல வந்ததை
தவிர....