Wednesday, February 24, 2010

சிட்டு என்கிற ராமமூர்த்தி


ரெடி..ஹேன் யுவர் மவுத்!

ராமமூர்த்தி தன் அருகில் இருப்பவர்களை சற்றே ஏளனமாய்த்தான் பார்த்தான். என்னையும்தான். வாழ்க்கையின் எல்லாக்கட்டங்களிலும் யாருடனாவது போட்டி இருந்து கொண்டே இருக்கிறது. பெண்கள் விஷயத்தில் ரவியுடன். டேய் ! கொஞ்சம் விட்டு கொடுறா என்று கெஞ்சினால் மட்டும்தான் “போய்த்தொலை” என்பான்.

ராமமூர்த்தி 100 மீட்டரை 13 வினாடிகளில் கடப்பான். நான் 13.5. நான் கொஞ்சம் முயற்சித்து 13 வினாடிகளை எட்டினால், அவன் 12.5. அரை பாதத்தை மட்டும் ஊண வேண்டும். கொஞ்சம் குறுகிய இடைவெளியாய் இருத்தல் நல்லது. ஆனால் 1500 மீட்டர் ரேஸில் என்னை மிஞ்ச ஆள் நான் அந்த ஸ்கூலில் படிக்கும் வரை வரவில்லை. அதற்கான பிரத்யோக டெக்னிக்னுக்குகள் என்னிடம் இருந்தது.நீளமான ஸ்டெப்ஸ். நிதானமாய் மூச்சை சேமித்துக் கொண்டே மிதந்து , இறுதி சுற்றுகளில் பாய்ச்சல் காட்டி

சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு பாடல் நீங்கள் கேட்டு இருக்கிறீர்களா? சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து.? சுசிலாவின் கம்பி பாகு சாரீரம்.

வழக்கம் போல் ராமமூர்த்திதான் முதல் இடம். வில்லிருந்து விடுபட்ட அம்பு என்பதை விசில் கேட்ட பின் ராமு என்று மாற்றி விடலாம். சிட்டாய் பறப்பான்.

ஒரு முறை ஊருக்கு போயிருந்தபோது ராமமூர்த்தியை சந்தித்தேன். அவன் அப்பா ஓட்டலை நடத்தி கொண்டிருக்கிறான். புரோட்டா மாவு பிணைவதில் எக்ஸ்பர்ட் !

சலீம் அலி. இந்த பெயரை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். பறவை ஆர்வலர். அவர் சார்ந்த அமைப்பு தரும் ஒரு தவகல்தான் கொஞ்சம் அதிர்ச்சியாயும், தவிர்க்க முடியாத நம் இயலாமையையும்...

சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே ! ராமுவிற்கு பிடித்த பாடல். இந்த இடத்தில் அவன் பட்ட பெயரை நான் சொல்லி விடுகிறேன். சிட்டு. இன்று நான் அவனை பார்த்ததும் என் வாயில் வந்த பெயர் சிட்டுதான். உலக்ஸ்தான் சொன்னான் . மாப்ளை ! சும்மாயிருடா ! உனக்கு மேட்டர் தெரியாது.சிட்டுன்னு கூப்பிட்டா பயங்கர கடுப்பாயிடுவான். ஏண்டா ? என்றேன். அப்புறம் சொல்றேன்.

தேன்மொழியின் சிட்டுக்குருவியை பற்றிய ஒரு கவிதை நினைவுக்கு இதை எழுதும்போது வருகிறது. டைம்லேப்ஸ் என்ற விஷயத்தை மறந்து விடலாம்.

சிட்டு! சாரி ராமு. புரோட்டா நம்ம சாந்தி கடை டேஸ்ட் இருக்குமா? எந்திரிச்சு வந்து கவனிடா? மெட்ராசிலேர்ந்து உன் கடைக்கு சாப்பிட வந்திருக்கேன்.

அந்த அமைப்பினர் சிட்டுக்குருவி சார்ந்த பறவை முட்டைகளை செல்போன் டவர்களின் அருகாமையில் வைத்தனர்.

சொல்டா மாப்ளை ! தலைவெடிச்சுடும் போலிருக்கு.

ஆமாம்டா.. சிட்டுக்கு அந்த பிரச்சனைதான். வெக்கம் நாக்கம் பாக்காம பொண்டாட்டி கிட்டயே சொல்லிபுட்டான்.

அத்தனை முட்டைகளும் உள்ளே இருந்த கரு அழிக்கப்பட்டு இருந்தது கூமுட்டைகளாய் !குணா திரைப்படத்து காட்சி நினைவிருக்கிறதா? எங்கள் பழைய வீட்டு உத்திரத்தில் கூட ஒரு கூடு இருந்தது. சிலருக்கு முக அமைப்பு பார்க்க குருவி மாதிரியே இருக்கும். என் ஆசிரியர் ஒருவர் அப்படித்தான் இருப்பார். அவரைக்கூட குருவி என்ற பட்டப்பெயரை சொல்லி அழைத்து அடி வாங்கியதுண்டு.

போறவ சும்மா போகலை.அம்மிக்குழவியை தூக்கி..

காமம் தொடர்பான லேகியத்துக்கு ஏன் சிட்டுக்குருவியின் பெயரை இழுத்தார்கள் என்று தெரியவில்லை.

கோவுச்சுக்காதடா.......... மெல்ல எழுந்து ஒன்றைரைக்காலில் வந்தான் சிட்டு என்கிற ராமமூர்த்தி ..



Tuesday, February 23, 2010

அர்த்தமில்லாத கதைகள்....5


பாலு !

ஆஜர் சார்.

பாலு ஏன் நீ அவங்க கூட உட்கார்ந்திருக்க . எழுந்திரு.

இல்லை சார். இவனுக்கு கணக்கு பாடத்துல ஒரு சந்தேகம். அதான் சார். ஏன் சார் நான் இவன் பக்கத்தில் உக்கார்ந்தா தப்பா?

தப்பா ? தீட்டு. என் தலைதான் உருளும். இங்க வந்து உக்காரு.

பாலு என்கிற பாலசுவாமி.

இது ஆண்டவனுக்கே அடுக்குமா?

ஆண்டவனோட.. ஆள்றவாதான் பெரியவா?

இப்படியெல்லாம் நடந்திருக்குமா?

பாலு உனக்கு நீச்சல் தெரியுமா?

தெரியாதுடா முனியா ! நீ கத்து தர்றியா?

தருவேன். ஆனா யாராவது பாத்துட்டா? என் முதுகு தோல் இல்ல உரியும்.

ஏன் இப்படி பயப்படறீங்க ? நாமெல்லாம் ஒன்னுதானே.

இல்லை பாலு. நானும் முதல்ல அப்படித்தான் நினைச்சேன். அப்பறம் எங்கப்பாருதான் சொன்னாரு.

என்ன சொன்னாரு?

நீங்க என்ன சொல்றேள்? என்னால நம்பவே முடியலையே !

ஆமாம்டி. நம்ம சங்கரந்தான் சொன்னான். பெரியவர் முடிவு பண்ணிட்டாராம். எவ்வளவு பாக்கியசாலிடி நீ. லோகத்தை ரட்சிக்கிறப் போற ஒருத்தரை.

கனம் கோர்ட்டார் அவர்களே ! இந்த வழக்கு முற்றிலும் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே என் கட்சிக்காரரின் மீது அபாண்டமாக தொடுக்கப் பட்டிருக்கிறது. தனிப்பட்ட விரோதம் அரசியல்வாதிகளின் சூழ்ச்சி மற்றும்...

பாலு மகா கெட்டிக்காரன். படிப்பிலும் , விளையாட்டிலும். வில் விதையில் தேர்ச்சி பெற்றவனாக வேண்டும் என்பது அவன் கனவு. காண்டீபன் கதையை தினம் உறங்கும் முன் கேட்டதால் இருக்கலாம்.

பாலு . உனக்கு அதுக்குள்ள பழகிடுச்சே. குட்டிக்கரணம் வேற அடிக்கிற!

நீங்க இன்னொருவாட்டி பெரியவர் கிட்ட பேசுங்களேன். ஒத்தை புள்ளையை ஊருக்கு கொடுக்கிறதுக்கு எனக்கு மனசு வரலையே! தோ ஆச்சு. பொண்ணு வேற இடத்துக்கு போயிடுவா . அப்புறம் நீங்களும் நானும் மட்டும் தான் . மோட்டு வளையை பார்த்துண்டு உக்கார்ந்திருக்கறதா?

அடி அசடு . இதுக்கு நமக்கு கொடுப்பினை வோணும்டி .

நாட்ல இத்தனை பெரிய மனுஷாள் எல்லாரையும் தெரியும். ஒருத்தர் செல்வாக்கு கூடவா எடுபடலை. கேஸை ரொம்ப ஸ்டிராங்கா ஆக்கிட்டாளே.

அதுக்குத்தான் வேற ஸ்டேட்ல மாத்த சொல்லி அப்பீல் பண்ணியிருக்கோம். பாக்கலாம். இவா செஞ்ச பூஜைக்கு அந்த பகவான் என்ன கைமாறு பண்ணப்போறாறுன்னு!

அம்மா ! என்னம்மா இது ? நீங்க என் கால்ல விழறேளே ? நான் எங்கயும் போகலை. உங்க கூடவே என்னையும் கூட்டிண்டு போயிடுங்கோ . வயசுல பெரியவால்லாம் என் கால்ல.. எனக்கு பள்ளீக்கூடம் போகணும். வேணும்னா என்னை மிலிட்டரில கூட சேர்த்து விடுங்கோ !

இல்லை பாலு. நீ இனிமே சாதாரண மனுஷா மாதிரி இல்லை. இந்த லோகத்தை ரட்சிக்கிறதுக்குன்னே என் வயித்துல வந்து வாய்ச்சிருக்கே. உன் முகத்துல அந்த தேஜஸ் வந்துடுத்து.

அப்ப இனிமே நா விளையாட முடியாதா ? நம்ம ஊர் ஏரியில அவங்களோட குதிக்க முடியாதா?

பாலு என்கிற பாலகுரு. . ஒரு கொலை வழக்கில் உடந்தையாக இருந்ததாக சொல்லப்படுகிறது.

இனிமே உஷத் கால பூஜையை பாலுவே பண்ணட்டும்- பெரியவர்.

பாலுவிற்கு நாக்கு செத்து போச்சு. அம்மா பண்ணும் வற்றல் குழம்பிற்கும், புடலங்காய் கறிக்கும் மனசு ஏங்கியது. இந்த பழங்கள்..வெள்ளிக் கிண்ணத்தில் பால். வாழையிலையில் வெளிக்கி.. இன்னும் இத்யாதிகள்...இதெல்லாம் தூக்கத்தை வரவழைக்க வில்லை. மாறாக இனம் புரியாத சஞ்சலமும், வேதனையும்..

இதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம் யுவர் ஹானர் . சின்னவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. அவ்வளவுதான். மருத்துவ பரிசோதனை மாதிரியான விஷயங்கள் . அவரை பின் பற்றும் லட்சக்கணக்கான நபர்களை வேதனை படுத்தும்.

”சங்கு சக்கர சாமி வந்து
ஜிங்கு ஜிங்குன்னு ஆடிச்சாம்!

பாலுவிற்கு என்னன்னமோ தோண ஆரம்பித்திருந்தது. வேதம் , மந்திரம் எல்லாவற்றையும் மீறி உள்ளங்காலில் தைக்கும் முள் போல் ஒரு வித வலி. அது முட்டியில் தேங்கி என்னமோ செய்கிறது.கண்களை மூடி தியானம் .முடியவில்லை. இடுப்பு சளியின் இம்சை.

இவ என் பொண்ணு. வளர்ந்திருக்காளே ஒழிய, புத்திதான் அப்படியே இருக்கு. நமஸ்காரம் பண்ணுடி.

வயசுக்கு மீறி வளர்த்தியுடன் அந்த பெண் பாவாடை சட்டையுடன் குனிகிறாள். தொட்டு தூக்கி ஆதரவாய் தடவி கொடுக்கிறார் பாலு என்கிற பாலகுருசுவாமி.

நீங்க கொஞ்சம் வெளியில் இருங்கோ . நான் கொஞ்சம் பூஜை பண்ணனும். உங்க பொண்ணு கிட்ட கொஞ்சம் புஷ்பம் மட்டும் கொடுத்து விடறேன். எல்லாம் அம்பாள் சித்தம்.

இந்த ஒரு பெண் மட்டுமில்லை யுவர்ஹானர் . இன்னும் நிறைய .... ஜாமீனில் விட்டால் சாட்சியங்களை கலைத்து விடுவார்கள். எனவே..

பாலுவிற்கு இலை மறைவாய் காய் மறைவாய் பார்த்தவைகள் எல்லாம் மெல்ல புலப்பட ஆரம்பித்தது. வீட்டிலும், சமயங்களில் வெளியில். ஐந்து வயதில் வேதத்தை உருவேற்றும்போது இருந்ததை காட்டிலும் இன்னும் வேகம். உன்மத்தம். நாக்கு மடிந்து சொஷ்டமாய் சொல்லி கற்றுக் கொள்ள இது வேதமோ, மந்திரமோ இல்லையே. வழியில் இருக்கும் எந்த பாறையையும் உருட்டிக் கொண்டு பாயும் காட்டாறு போல் சீற ஆரம்பித்திருந்தது. அத்தனை ஜீவராசிகளுக்கும் பொதுவான அந்த காமம் என்னும் சுகவேதம்..

Monday, February 22, 2010

மானிட்டர் பக்கங்கள்.........22/02/10



தலைவர் எதை செய்யறாரோ இல்லியோ ! தினம் சினிமாகாரங்களை சந்தித்து விடுகிறார். பொறந்த வூட்டு பாசம் ! ராதிகா, ஸ்ரீப்ரியாவை தொடர்ந்து ரஜினி காலையில் சந்தித்தார். மாலை அஜீத் சந்திக்கிறார். உடனே பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா பிரமோவில் அஜீத் பெயரும். ஜாக்குவார் தங்கம் அஜீத் மேல் புகார் கொடுக்கிறார். குகநாதனும், கலைப்புலி சேகரனும் ரஜினிக்கு கண்டனம் தெரிவிக்கிறார்கள். தலைவரே ! சூப்பர் ஸ்கீரிப்ட் ! சீக்கிரம் பொறுப்பை தளபதி கிட்ட ஒப்படைச்சுட்டு நீங்கள் பொறந்தவீட்டுக்கு போயிடுங்க!

கலைஞர் டிவியில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்போது, அஜீத் இல்லையென்றால் ரேட்டிங் பாதிக்கப்படலாம் என்று சேனல் தரப்பில் சொல்லப்பட்டதாம். எனவே முதலில் தொட்டிலை ஆட்டிவிட்டு , அப்புறம் பிள்ளையையும் கிள்ள முடிவெடுக்கப்பட்டதாம். அஜீத்துக்கு இன்னும் நிறைய இருக்கிறது போலும் !

ஒரு சுவாரசியமான தகவல் படித்தேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.”சினிமாட்டோகிராபி” என்ற புரொஜெக்டர் கருவி கண்டு பிடிக்கப்பட்ட பின் தான் சினிமா தனது வரலாற்றை தொடங்கியது. முதன்முதலில் திரையில் தோன்றிய மெளனப்படங்களை பார்த்து மக்கள் அதிசயித்தனர். மதத் தலைவர்களுக்கு இது பொறுக்கவில்லை. இது ஆவி, சாத்தான், பில்லிசூனியம் என்று கதை கட்டினர்.

நல்லவேளை ! இந்திய சினிமாவில் இத்தகைய தொல்லைகள் இல்லை. முதலில் வந்த மவுனப்படங்கள் எல்லாமே இந்து மதத்தில் வரும் புராணங்களை அடிப்படையாக கொண்டிருந்தது. இந்தியாவுக்குள் முதன்முதலாக வந்த மவுனப்படம் இயேசுவின் வாழ்க்கை. 1896-ம் வருடம் மும்பை நகரில் முதல்முதலாக மக்களுக்காக திரையிடப்பட்டது.

டூப்பாண்ட் என்ற பிரெஞ்சுக்காரர் ஒரு கையில் புரெஜெக்டரையும், மறு கையில் பிலிம் ரோலையும் எடுத்துக் கொண்டு இந்தியா வந்தார். பல நகரங்களில் இயேசுவின் வாழ்க்கையை திரையிட்டார்.

தமிழ்நாட்டில் முதல்முதலாக சினிமா திரையிடப்பட்ட இடம் கோடம்பாக்கம் இல்லையாம். திருச்சி ! பேசாத படத்தை பற்றிதான் ஊரெங்கும் பேச்சாக இருந்ததாம். அதில் ஒருவர்தான் சாமிக்கண்ணு வின்செண்ட். திருச்சியில் ரயில்வேயில் பணி புரிந்தவர். ஊருக்கு கிளம்பிய டூப்பாண்டிடம் இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து கருவியையும், படச்சுருளையும் வாங்கிவிட்டார். தமிழ்நாடு மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் சென்று திரையிட்டு காட்டினாராம். இவர் இல்லையென்றால் சினிமா தன் வரலாற்று பயணத்தை 20 ஆண்டுகள் கழித்துதான் தொடங்கியிருக்கும்.

கோவையில் தமிழகத்தின் முதல் தியேட்டரான வெரைட்டி ஹாலை கட்டியவர் இவர்தான்.இந்த வரலாற்றில் சென்னைக்கு அன்று இடமேயில்லை!


பெண்ணரசியை கல்லூரிக்கு பஸ் ஏற்ற சென்று கொண்டிருந்தேன்.

அப்பா! டைம் என்ன?

ஏம்மா ! நீ வாட்ச் கட்டிகிட்டு வரலையா?

அதுக்கெல்லாம் டைமே இல்லைப்பா !!(எதாவது புரிகிறதா?)


வழக்கமான டிஸ்கி “ கவுஜைக்கு பதில் கதை :

கூகுலூர். சில ஊர்களில் குடுகுடுப்பைகாரர்கள் இருப்பதை போல் கூகுலூரில் கம்ப்யூட்டர் ஜோசியம் பார்ப்பவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். பில்கேட்ஸ் அந்த ஊரில் கூகுலாத்தாவிற்கு கோயில் கட்டி கூழ் ஊற்றினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

பஞ்சாயத்து கூடுகிறது.

போதும்டா சாமி ! நம்ம ஊரை எல்லாம் கிண்டலடிக்கிறானுங்க. மொக்கை மெயில்ல கோமாளி ஊர்னு எழுதிட்டாங்க.

அதுக்கு என்ன பண்றது நாட்டாமை?

இனிமே பொறக்கற குழந்தை, ஆணோ, பெண்ணோ கட்டை விரலை வெட்டி விட்டுங்க! அப்பதான் விமோசனம் கிடைக்கும்.

நாட்டாமை நம்ம மொக்கைசாமி சம்சாரம் பிள்ளை பெத்திருக்கா. மொத போணிய போட்ருலாமா?

மொக்கைசாமியின் பிள்ளையின் கட்டைவிரலில் சுண்ணாம்பு தடவப்படுகிறது. மருத்துவச்சி களிம்புடன் தயாராக இருக்கிறாள்.

ம்ம்..ஆகட்டும்.

நாட்டாமையின் செல்ஒன் சிணுங்குகிறது. ஒரு குறுஞ்செய்தி.

“இந்த பிள்ளை சாதாரண பிள்ளை இல்லை. உங்க ஊருக்கே பெரிய பேரை வாங்கித் தரப்போறான். அதனால அவனை உட்ருங்க!

யாருடா இதை அனுப்புனது?

யாரோ “காரு உன்னுதா”ன்னு ஒரு பேர்ல வந்திருக்கு.

காரு உன்னுதாவா? அய்யோ? அவரு நம்ம குலசாமியோட இன்னொரு பேராச்சே!
அப்ப விட்ருங்கடா!

மொக்கைசாமிக்கு ஜல்லிக்கண்ணன் என்று நாமம் சூட்டி வளர்க்கிறார்கள். அவனுக்கு 20 வயது ஆகும்போது ஒரு சாமியார் வருகிறார்.

நான் சுவாமி பைத்தியானந்தா! இந்த பிள்ளையை கூட்டிகிட்டு போக வந்திருக்கேன்!

மொக்கைசாமிக்கு குழப்பம். நான் என் பிள்ளையை அனுப்பமாட்டேன் என்று சொல்லும்போது அவனுக்கு குறுஞ்செய்தி வருகிறது.

காரு உன்னுதாதான் அனுப்பியிருக்கிறார். பையனுக்கு வேளை வந்துவிட்டது. அனுப்பி வை!

அப்புறம் ஜல்லிக்கண்ணன் பெரிய எழுத்தாளனா ஆகி புத்தமெல்லாம் போட்டாரு! (யாரையும் குறிப்பா சொல்லலிங்கோ!)

Saturday, February 20, 2010

விஜய டி.ராஜேந்தரும்...தண்டோராவும்



ஆல் இன் ஆல் அழகுராஜா. டி. ராஜேந்தர். ஒரு பெயருக்கு ஏதோ ஒரு பெயரோடு கட்சியை நடத்தும் நகைச்சுவை திலகம். அவர் கட்சியின் பொதுக்குழு கூடுகிறதாம். கட்சிக்கொடியின் கலரை மாற்றிவிட்டார்களாம். 2011 ல் ஆட்சியை பிடிக்க யாரோடு கூட்டணி வைக்கலாம் என்று ஆலோசனை நடைபெறுகிறதாம். தண்டோராவுக்கு அவர் முன்னர் அளித்த ஒரு பேட்டி. மீண்டும் உங்களுக்காக !

1. உங்க ஊர்,பெயர் சொல்லுங்க.. உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

தண்ணில பாயுறோம்...
வெயில்ல காயுறோம்.
போதைல சாயுறோம்..
என் ஊர் மாயுரம்

ஷங்கர் எடுக்கிரார் எந்திரன்.
என் பெயர் ராஜேந்திரன்..
T.T.R ஆ என்னை ஆக்க ஆசைப்பட்டார் எங்கப்பா.
ஆனா நா T.R ஆ ஆயிட்டேன் தப்பா.


2.கடைசியாக அழுதது எப்பொழுது?

இந்த டிஆர் எப்பவும் எதுக்கும் அழ மாட்டான்
மாடிலேர்ந்து கீழே விழ மாட்டான்
ஆனா இப்ப மன்சூரலிகான் குடிச்சதுக்கு நா தண்டம் அழுதேன்

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

பேப்பர்ல எழுதுவேன் எழுத்து..
பெப்பர் சிக்கனை நீ அழுத்து..
மைல போடுவேன் கையெழுத்து...
டைல போட்டா அது தலையெழுத்து....

4).பிடித்த மதிய உணவு என்ன?

தங்கச்சி...முள்ளுல சேலை விழுந்தாலும்..சேலை முள்ளுல விழுந்தாலும்

சார்..நா பிடிச்ச மதிய உணவு என்னன்னு கேட்டேன்..

யோவ்..தண்டோரா..அதைத்தான்யா சொல்ல வர்றேன்..ஆத்துக்கு தங்கச்சி தண்ணி எடுக்க போயிருக்கு

புரியலயே சார்..

தங்கச்சி தண்ணி எடுத்துட்டு வந்தவுடனே சோத்துல தண்ணி ஊத்தி சாப்பிடுவேன்..

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

ரெண்டு நண்பர்கள் காட்டுக்கு போனாங்க..அப்ப திடீர்னு ஒரு கரடி வந்துச்சு.ஒருத்தன் மரத்துல ஏறிட்டான்...கரடிக்கு மரம் ஏறத் தெரியாது...இன்னொருத்தன் மூச்சை அடக்கிட்டு படுத்தானா?

சார்..இப்ப எதுக்கு இந்த கதை..

யோவ் அந்த கரடி நாந்தான்யா..


6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

ஏன் நீ முதுகு தேச்சு விடப்போறியா?

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

இப்ப நீ இங்க வந்தப்ப நா எங்க பார்த்தேன்...அதை எழுதிக்க...

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்ச விஷயம்: எதிர்ல இருக்கிறவங்களை அடிக்கிறது

பிடிக்காத விஷயம் : அடிச்சப்புறம் கடிக்கிறது...

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

சரி பாதி இல்ல..அவ சரீரத்துல நான் தான் பாதி..

அவ உயிருள்ளவரை நான் உஷார்...

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

என் பக்கத்தில யாரும் நிக்க முடியாது...


11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

நாலு வாழை இலையை இடுப்புல சுத்திகிட்டிருக்கேன்...

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

மச்சி...அவ மூஞ்சில துப்பினா எச்சி...

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

சொர்ணம்..கர்ணம்..புர்....கரடி கலர்

14.பிடித்த மணம்?

கோமணம்...

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

உஷாதான்..ஒட்டியாணம் கேட்டு உயிரை எடுக்கிறாள்.....

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

மன்சூரலிகான்...கழுதைக்கு கருத்தடை பண்றதை பத்தி எழுதியிருந்தார்..படிச்சுட்டு பின்னங்காலால எத்திட்டு வந்தேன்..


17. பிடித்த விளையாட்டு?

திருடன்,போலிஸ்

18.கண்ணாடி அணிபவரா?

இல்லன்னா வேற எங்கயாவது கடிச்சுடுவேன்...

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

ஒரு கிரேன் ஷாட் வச்சுக்குவமா?

20.கடைசியாகப் பார்த்த படம்?

சிம்புவும்,நயனும் ஓட்டல்ல எடுத்துகிட்ட படம்..

21.பிடித்த பருவ காலம் எது?

வீட்டுக்கு போன உடனே ஊசி போட்டுக்க..இல்லன்னா செப்டிக் ஆயிடும்...

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:

சிம்புவுக்கு வந்த லவ் லெட்டரையெல்லாம் அழகா பைண்ட் பண்ணி வச்சிருக்கான்..அதைத்தான்....

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

என் கிட்ட ஹார்மோனியம்தான் இருக்கு...

24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

நா கடிக்கும்போது நீ கத்துன சத்தம் பிடிச்சது...கடிச்சு அரை மணி நேரமாச்சு..இன்னும் அழுதுகிட்டிருக்க..அந்த சத்தம் பிடிக்கலை..

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

வண்டலூர்

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

இன்னொருவாட்டி கேளு..சொல்றேன்...

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

விஜயகாந்த்

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

எவ்ளோ பட்டாலும் உனக்கு புத்தி வராது போலிருக்கே...

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

சினிமா தியேட்டர் கக்கூஸ்...

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

இப்ப இருக்கிறா மாதிரிதான்

31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?

சவரம் பண்றது

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

பொழைச்சு..போயிடு

Friday, February 19, 2010

இப்படித்தான் ஆரம்பிக்கிறார்கள்


ராஜஸ்தான்ல ரிக்‌ஷா ஓட்டுற ஒரு ஆளு சவாரி முடிச்சு சப்பாத்தி சாப்பிடறச்சே யோசிக்கிறான். என்ன பொழைப்புடா இது...நாமளூம் எப்ப முதலாளி ஆகறதுன்னு ! ஒரு முடிவுக்கு வந்து வந்த விலைக்கு ரிக்‌ஷா மற்றும் தட்டு முட்டு சாமானையெல்லாம் வித்துட்டு கோதுமை கலர்ல முக்காடு போட்டுகிட்டு இருக்கிற பொஞ்சாதியையும் கூட்டி கிட்டு சென்னை சென்ட்ரல்ல வந்து இறங்கி நேரா செளகார்பேட்டைக்கு போறான்.

அங்க அவங்களுக்கு ஒரு சங்கம் இருக்கு.அவிங்க சொன்னதை கேட்டு சென்னை புறநகர் பகுதில ஒரு வீடு வாடகைக்கு பிடிச்சு வீட்டு வாசல்ல”மாணிக்சந்த் கட்டாரியா”பான்புரோக்கர் னு ஒரு போர்டு மாட்டறான். தங்கத்துக்கு 3 வட்டி,வெள்ளி,பித்தளைக்கு 10 காசு வட்டி.சைடுல 1 கிராம் கவரிங் நகை. சிறு சேமிப்பு நகை சீட்டுனு விரிவு படுத்தறான்.சுற்று வட்டார ஜனங்களின் காது ,கழுத்து,மூக்கு எல்லாம் இந்தி படிக்க ஆரம்பிக்குது.அப்படியே சின்னதா ஒரு நகைகடையும் ஆரம்பிக்கிறான்..வாசல் மட்டும் சின்னதா இருக்கும்.உள்ளே பக்காவா டைல்ஸ் வச்சு வீடு பிரமாண்டமா இருக்கும். ரேஷன் கார்டு,வாக்காளர் அடையாள அட்டை எல்லாம் வாங்கிடறான் . அப்புறம் என்ன ராஜஸ்தான்ல ரிக்‌ஷா ஓட்டுன ஆசாமி இப்ப “சேட்டு”ஆயிட்டான். அவன் கொடுக்குற அடகு சீட்டுக்கு பத்து ரூபா ஸ்ஸ்டேசனரி” பீஸ் வேற.

நானும் என் அவசிய மற்றும் அனாவசிய தேவைகளுக்கு படியேறியதுண்டு. அதுல பாதி வட்டி கட்டாம் மூழ்கியும் போனதுண்டு. ஆனா இப்பல்லாம் நான் என் தங்கங்களை இந்தி படிக்க அனுப்பறதில்ல. வங்கில வச்சு வணிகவியல் கத்து கொடுக்கிறேன்.


என்ன மச்சான்..கன்னமெல்லாம் டொக்கு விழுந்தாப்ல இருக்கு..இப்படி இருந்தா அட்டு பிகர் கூட மடியாது.

அதுக்கு என்னடா பண்றது?

டெய்லி ஒரு 5000 போட்டு தாக்கு.சும்மா தக தகன்னு ஆயிடுவே..

சரி இப்பவே ஸ்டார்ட் பண்ணுவோம்..

மச்சான் கவிதா ஒர்க் அவுட் ஆயிட்டா.

அப்ப பார்ட்டி?

வெறும் பீர் கிக்கே இல்ல மச்சான்.ஒரு குவார்ட்டர் வாங்கி மிக்ஸ் பண்ணலாம்.

என்ன மச்சான்..வேலைக்கு போகல?

இல்லடா..நேத்து ரவி கல்யாணத்துல மப்பு ஜாஸ்தியாயிடுச்சு. தலைவலி.
முள்ளை முள்ளாலதான் எடுக்கணும். வா ஒரு கட்டிங் போடுவோம்..

இப்படியாகவும் இளைய தலைமுறையினரிடம் ஆரம்பிக்கும் மது பழக்கம்.மெல்ல மெல்ல அக்டோபஸ் போல் தன் பிடியை இறுக்க தொடங்குகிறது. அந்தி சாய்ந்து இருள ஆரம்பித்தால் போதும்! மண்டைக்குள் மரங்கொத்தி போல் ஆல்கஹால் அரிப்பெடுக்க ஆரம்பிக்கிறது.பணத்துக்காக,குடிக்காக எதையும் செய்ய துணியும் நிலைக்கு குடிகாரன் தள்ளப்படுகிறான்.சமீபகாலமாய் அதிகரித்து வரும் வாகன திருட்டு மற்றும் செயின் பறிப்பு குற்றங்களில் பிடிபடும் நபர்களின் வயது 18/20 ஆகவே இருக்கிறது.உணர்வு ரீதியான பாலியல் பிரச்சனைகளுக்கும்,விவாக ரத்து மற்றும் கள்ள தொடர்பு,கொலை போன்றவைகளூக்கும் மதுவே அடிப்படையாகிறது.டாஸ்மாக் கடைகளில் கூடும் இளைய தலைமுறை கவலை அளிப்பதாகவே இருக்கிறது. தொழிலையும்,குடியையும் சரியாக அவர்களால் நிர்வகிக்க முடியாது என்பது இன்னும் கவலையை கூட்டுகிறது.நிச்சயம் அவர்களில் கணிசமானோர் எதிர்கால குற்றவாளிகளே

குடி கவுஜை :

ஏன் இப்படி குடிக்கிற?
என் பொண்டாட்டி என்னைய விட்டுட்டு போயிட்டா.
ஏன் போயிட்டா?
நா குடிக்கிறது அவளுக்கு பிடிக்கல !

Thursday, February 18, 2010

நானும் கொஞ்சம் பேசுகிறேன்.....4



கவிஞர் தேன்மொழியின் “ நெற்குஞ்சம்” மீண்டும் ஒரு முறை படித்தேன். பத்து சிறுகதைகளை கொண்ட அற்புதமான நூல். அதில் “தாழி” என்றொரு சிறுகதை. அனுபவம் என்றும் சொல்லலாம். சுனாமிக்கு பின் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பாக எழுதப்பட்டது.

சுனாமியில் இறந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கும் ஒரு அரசு அலுவலகம். அதில் பணிபுரியும் ஒருவரது பார்வையில் கதை சொல்லப்படுகிறது. நிவாரணம் வாங்க கூட்டம் அலைமோதுகிறது. நாகப்பட்டினம், கோடியக்கரை, வேதாரண்யம், பூம்புகார் இங்கெல்லாம் மாண்டவர்களின் புகைப்படங்கள் கணினியிலும், ஆல்பமாகவும் சேகரிக்கப்பட்டிருக்கிறது. வருபவர்கள் அதை பார்த்து இறந்தவர்களை அடையாளம் காணவேண்டும். பின் உறுதி செய்யப்பட்ட பின் அரசுக்கு நிவாரணத்துக்கு பரிந்துரை செய்யப்படும். இதில் அரசின் உதவியை வாங்க வேண்டும் என்பதற்காக வரும் போலிகளும் உண்டு. அதனால் உண்மையில் பறிகொடுத்தவர்களை கூட சந்தேக கண் கொண்டு பார்த்து அவர்களை புண்படுத்தும் நிகழ்வுகள் தவிர்க்க முடியாமல் போவதை ஆசிரியர் சொல்கிறார்.

கதையின் மையமாக ஒரு முதியவர் வருகிறார். கையில் நைந்து போன ஒரு பாலீதீன் கவரில் இரு இளம் பெண்ணின் புகைப்படம். ஒரு பொக்கிஷத்தை போல் அதை பாதுகாத்து வருகிறார். அலுவலரிடம் அந்த படத்தை காட்டுகையில் அவர் கண் கலங்குகிறது. ஆனாலும் அவள் இறந்திருக்க மாட்டாள் என்றும் நம்பிக்கையுடன் சொல்கிறார். அலுவலர் ஆல்பத்தை கொடுத்து தேடிப்பார்க்க சொல்கிறார்.

“முகங்களும் உடல்களும் புரளகின்றன. மூச்சடைத்து இறந்தவர்களின் முகங்களில் காற்றுக்கான தேடல் இருந்தது. அளவுக்கு அதிகமாக நீரை குடித்து இறந்தவர்களின் முகங்களில் வாந்தி எடுக்கும் உணர்வு படிந்திருந்தது. குழந்தையின் பசித்த வாய், தாயின் மார்பிற்காக உதடுகளை குவித்தபடி ஒரு புறம் கிடக்க, தாயின் ஒற்றை மார்பகம் குழந்தைக்கான பாலை ஏந்தியபடி இன்னொரு புறம் திறந்து கிடந்தது. முள்காடுகளில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட உடல்கள் துணிகளோடு கிழிந்து கிடந்தது. வாழ்வின் அழகியலை அர்த்தமற்றதாக்கி எல்லாவற்றின் கீழும் இருக்கும் அசிங்கங்களை திறந்து காட்டிக்கொண்டிருந்தன அந்த புகைப்படங்கள். இயற்கையை போல் மேடு பள்ளங்களை சமப்படுத்தும் தொழிலாளி வேறு யார் இருக்க முடியும்? எல்லைக்கோடுகளை அழித்து, பேதங்களை கரைத்து , சாவின் மீது சிரிக்கும் பலவான் இயற்கை.”

பெரியவர் “இதுல என் பொண்ணு படம் இல்லை” என்று ஆனந்த குரல் எழுப்பும்போது , அவரிடம் இன்னொரு ஆல்பம் தரப்படுகிறது. நிச்சயம் இதுலையும் இருக்க மாட்டா மகராசி என்றபடி பெரியவர் ஆல்பத்தை புரட்டுகிறார்.

“என் புள்ள இருக்கா என்று முதியவர் அலறுகிறார். முகத்தில் அறைந்து கொண்டு அழுகிறார். அங்கு இருக்கும் பணியாளர்கள் மரத்து போனவர்களாக இருக்கிறார்கள். பெரியவரே ! உங்களுக்கு அரசு நிவாரணம் உண்டு என்று சொல்லும்போது

“பெரியவர் தோளில் கிடந்த துண்டு இப்போது ஆல்பத்தின் மீது கிடந்தது.கண்ணுக்குள்ள பொத்தி வச்சு வளர்த்த புள்ளைய இப்படி அம்மணமா போட்டு வச்சிருக்கீங்களே! குற்றசாட்டாக பாய்ந்து கொண்டிருந்தது அவரது குரல்.

“அள்ளிட்டு போன கடலுக்கும் மனசில்ல, என்னைய விட்டுட்டு போன இவளுக்கும் மனசில்ல: கிழ உசுரு போயிடும் தாயி”

ஆல்பத்தின் மேல் கிடந்த துண்டின் மீது முட்டிமுட்டி கதறுகிறார் கிழவர்.

தேன்மொழி இந்த வரிகளுடன் கதையை முடிக்கிறார்.

“சுனாமிக்கு முன் நிகழ்ந்ததுபோல் மீண்டும் புவிப்பாளம் நழுவத்தொடங்கியது.கண்கள் இருட்டிக்கொண்டு வந்தன”

வாசகனை கதையின் பாத்திரமாக்குகிறார் தேன்மொழி. நம் கண் முன் சம்பவங்கள் நடக்கின்ற உணர்வை கொடுக்கிறார்.

படித்து முடித்தவுடன் என் கண்கள் கலங்கியது. அந்த முதியவரின் வேதனை நம்மையும் தொற்றிக்கொள்கிறது எனலாம் !


தேன்மொழியின் கவிதை ஒன்று

பல மரக்கிளைகளில்
அமர்ந்த பறவை
சலித்துப் போய்
சரணடைகிறது
என் ஜன்னல் கம்பிகளில்
சிறுகாற்று வரலாம்
ஜன்னல் கதவுகளை
மீட்டிப் போகலாம்
என் அசைவுகள்
அதன் அமைதியில்
கல்லெறியலாம்
ஆகவே அமர்ந்திருக்கிறேன்
அதன் காட்சிப்புலத்தில்
தவமாய்
தியானமாய்
இல்லை, சிலையாய்!

Tuesday, February 16, 2010

வாழைப்பூ வாசனை..........


ஞானானந்தம் மயந்தேவம்...
நிர்மலம் ஸ்படிகாகிரிதிம்
ஆதாரம் சர்வ வித்யானம்
ஹயக்கீரிவம் உபாஸ்மஹே!

கணீரென்று அம்மாவின் குரல். நான் திரும்ப சொல்கிறேன்.

படிப்பு நன்னா வரும்டா தங்கம். எதுவுமே மறக்காது. எப்பல்லாம் தோணுதோ, சொல்லிண்டேயிரு!

செண்டர் ஃபார்வேர்டு. தேர்ந்த தட்டச்சுக்காரனின் விரல்கள் இயங்குவதை போல் என் கால்கள் விளையாடும். இடதும் வலதுமாய் சகாக்களிடம் அனுப்பி, திரும்ப பெற்று கொண்டு போய் நேர்த்தியாய் இலக்குதான். சமயங்களில் வரிசையாய் மூன்று. எதிரடி மறந்து பிரமிப்பாய் உன்னிடம் கொஞ்சம் கற்றுக்கொண்டோம் என்று மாற்று முகாமின் தலைவன் சிலாகிப்பான் சமயங்களில். கோப்பைக்குள் வெற்றிகள்.

சார் நீங்க தீர்த்தாமாடியாச்சா? இந்த பவித்ரத்தை மோதிர விரல்ல போடுங்கோ!. இதை அடியில போட்ருங்கோ! சொல்லுங்கோ! ஸ்ரீமான் கோவிந்த கோவிந்த..வேங்கடநாராயண பிரிதத்தம்.. வலது தொடைல கையை வச்சு குவிச்சு மூடி..

உமாவின் ஈரமுத்தம். எட்டாம் கிளாஸ் படிக்கும்போது அவளிடம் பெற்றது. இன்றும் உள்ளே ஒளிந்திருக்கிறது. இரண்டு முத்தங்கள்! இரண்டாவது முத்தம்தான் இப்போதும் நினைவில். கிணற்றடியில் துணி துவைக்கும் கல்லின் மேல் குத்துக்காலிட்டு உட்கார்ந்து அழுது கொண்டிருந்தேன். உமா வந்தாள். சொல்ல மறந்துவிடுவேன். நீங்கள் நியாபகப்படுத்துங்கள். உமா ஒன்பதாவது படிக்கிறாள். எனக்கு அவளிடம் இருந்த பிரியம் காதலாய் இருக்குமோ என்று எனக்கு தோன்றியது எப்போது என்று சரியாக சொல்லமுடியவில்லை. உமாவோடு என்னால் நடக்க முடியவில்லை..மீண்டும் கிணற்றடிக்கு வருகிறேன். உமா எதை நினைத்து இப்படி அழுது கொண்டிருக்கிறாய் என்று கேட்டாள். நீ அன்று கொடுத்தாயே ஒரு முத்தம். அதைத்தான் என்கிறேன். அவ்வளவுதானா என்றபடி இறுக்கி அந்த இரண்டாவது முத்தத்தை கொடுத்தாள். ஒரு எட்டு நிமிடங்கள் அந்த முத்தத்தில் கால அளவு இருக்கலாம்.

என்னத்துக்கு இப்படி பட்டபகல்ல எல்லா விளக்கையும் எரிய விடுறிங்க?

நான் கண்களை திறக்காமல் அவள் முகத்தை மனக்கண்களில் கொண்டு வரும் முயற்சியில் இருந்தேன்.பனிக்குடத்தில் நீந்தி கொண்டிருக்கும் சிசுவின் மீது சூடான கரங்கள் ஆதுரத்துடன் தடவி கொடுக்கும் சுகத்தை அனுபவிக்க வேண்டும் போலிருந்தது. அம்மாவின் முகம் தெரிய ஆரம்பித்திருந்தது.

எத்தனை பேரன்?

ஒன்னுதான் மாமா .

நெய் பந்தம் ரெடி பண்ணனும். சார் இந்த மாலையை எல்லாம் எடுத்துடுங்க !

அப்போது எங்கள் தோட்டத்தில் நிறைய வாழைமரங்கள். மொந்தை வாழைப்பூக்கள். அடிக்கடி அம்மா வாழைப்பூ மசியல் செய்வாள். இப்போதும் எங்கோ அந்த வாசனை கமழ்ந்து கொண்டே இருக்கிறது.

திஸ் ஈஸ் நாட் டோட்டல் மெமரி லாஸ். மே பி சிம்டம்ஸ் ஆஃப் அல்சீமர். நீங்க அவர் பிள்ளை இல்லியா? உங்க முகம், பேர் எல்லாம் கூட சட்டுன்னு மறந்து போகும். இல்லை சட்டுன்னு நியாபகம் வராது. அட் ஒன் ஸ்டேஜ் அவர் பெயர், முகம் கூட மறக்கலாம். கண்ணாடியில் பார்க்கும்போது இவர் யாருண்ணு அவருக்கே குழப்பம் வரலாம். அப்புறம் நீங்க எப்ப ஸ்டேட்ஸ் கிளம்பறீங்க? அப்பாவை யார்...?

நாவிதன் அப்பல்லாம் எங்கள் இடத்திற்கே வந்து விடுவான். அப்பாவின் மேற்பார்வையில் சுத்தமாய் சிரைக்கப்படும். இது ஆச்சாரம் இல்லை. ஹைஜீனிக் - அப்பா .

உனக்கு யார் மாதிரி ஹேர்கட் பண்ணனும்? இரண்டு போட்டோக்களை பார்பர் அவனிடம் காட்டுகிறார். ம்ம்ம்.. எனக்கு அப்பா மாதிரி தான் வேணும் ! கண்ணை நல்லா இறுக்கமா மூடிக்கோப்பா!

எனக்கு நியாபகம் வந்து விட்டது. அந்த இரண்டாவது முத்தம். உமா, கிணற்றடி, தோய்க்கிற கல். அந்த முத்தம் முடிகிற வரை நான் கண்ணை மூடிக் கொண்டிருந்தேன். இறுக்கமாக. திறந்த போது உமா போய் விட்டிருந்தாள். அன்று இரவு முழுசும் உப்பு கரித்துக் கொண்டேயிருந்தது.

அப்பா ! நான் சொல்றது உங்களுக்கு புரியுதான்னு பாருங்களேன். ஜஸ்ட் டிரை டூ அண்டர்ஸ்டேண்டு!

உன் கண்ணுல மயிரு போயிடுச்சா ? அப்பா ஊதட்டுமா?

அவன் சொன்னது எனக்கு புரிந்தது. ஆனால் இப்போது அது நினைவில் இல்லை. அதனால் நியாபகம் வரும்போது நிச்சயம் சொல்கிறேன். இப்போது எனக்குள் எட்டு அலைவரிசைகள் ஓடிக்கொண்டிருக்கிறது.என்று நினைக்கிறேன்.அவற்றை வரிசை படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்! அதாவது ஒழுங்கு படுத்த. அந்த முதல் முத்தம். அவள் பெயர் என்ன? கொஞ்ச நேரம் முன்னால் கூட சொல்லிப்பார்த்துக் கொண்டேனே! இப்போதெல்லாம் இப்படித்தான் நடக்கிறது. நீங்கள் வாழைப்பூ மடலில் தயிர் சாதம் சாப்பிட்டிருக்கிறீர்களா? உங்களால் அதை மறக்க முடியுமா? அந்த முதல் முத்தம் அப்படித்தான். ஆனால் அதை பெற்றுக் கொண்ட தருணம் மறந்து விட்டது. அதை கொடுத்தவள். நினைவுக்கு வந்து விட்டது. உமா. முழு பெயர் உமாராணி ! ஆனால் அவள் எங்கள் வீட்டிற்குள் வருவதற்கு அனுமதிக்க மாட்டார்கள். பின் பக்கமாகத்தான் வருவாள்.

அவுன்ஸ் விஸ்கி. இரண்டு ஐஸ் துண்டுகள் . ஆன் தி ராக்ஸ். சியர்ஸ் ..டியர் ஃப்ரெண்ட்ஸ் ! தி ஈஸ் டூ செலிப்ரேட் ஹிஸ் பிரமோஷன். ஜி. எம். மார்க்கெட்டிங் !

கோவிந்தா எல்லாம் ரெடியா? எல்லாரும் பூணுலை மாலையா போட்டுக்கோங்கோ ! நீங்க இந்த மந்திரத்தை ....

நான் லேசாக கண்களை திறக்க முயற்சிக்கிறேன். கொஞ்சம் வெளிச்சம் வந்தால் இடது பக்கம் அவள் போட்டோவை தரிசிக்கலாம். திருவஹீந்திபுரம் ஹயக்கீறீவர் சந்நிதியில் ஞானானந்த மயந்தேவம் நிர்மலம்... இப்போது தலைகீழாக நீந்த ஆரம்பிக்கிறேன். பனிக்குடத்தினுள் . மேடிட்டிருக்கும் வயிற்றை உமா தடவிக் கொண்டிருக்கிறாள். நான் கிணற்றடியில் உட்கார்ந்திருக்கிறேன். வீட்டினுள் இருந்து வாழைப்பூ மசியல் வாசனை. இரண்டு வாழைப்பூக்கள் இலைதூக்கி சிரிக்கின்றன. உமா உள்ளே நுழையும் மணம் வருகிறது. ஜெட்லாக் பற்றி மருமகளிடம் மகன் விளக்கி கொண்டிருக்கிறான். இப்போது அந்த முதல் முத்தம் பெற்ற இடம் நினைவுக்கு வந்து விட்டது. அதை கொடுத்தவள் பெயர் மெல்ல மறக்க ஆரம்பிக்கிறது. மீண்டும் கண்களை திறக்க முயற்சிக்கிறேன். ஜன்னல் கம்பிகளில் உட்கார்ந்திருக்கும் சிட்டுகுருவிகள் பறக்க ஆரம்பிக்கின்றன. மெல்ல எழ முயற்சிக்கிறேன். ஆச்சர்யம்.. என்னால் முடிகிறது. கண்களை திறக்காமலே !




Monday, February 15, 2010

மானிட்டர் பக்கங்கள்.........15/02/10


கேபிள் சங்கருக்கும், பரிசல்காரனுக்கும், டாஸ்மாக்குக்கும் ஒரு ஒற்றுமை இருகிறது. என்ன அது?

என்.எச்.எம். ரைட்டர்களாக இருந்தவர்கள் எழுத்தாளர்களாகி விட்டனர். இருவரின் புத்தகங்களும் வெளியீட்டு விழா இஷ்டமித்திர பந்துக்கள் புடை சூழ வெகு விமர்சையாக நடை பெற்ற திருமணம் போல் இருந்தது. நர்சிம் இரு வீட்டார் அழைப்பு அனுப்பியது பொருத்தமானதுதான். கேபிள், பரிசல் உங்களிடம் நாங்கள் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம். வாழ்த்துக்கள் !

அப்புறம் அந்த முதல் பத்தியில் சொன்ன ஒற்றுமை! இரண்டு இடங்களிலும் ஆன்லைனில் ஒரு 20 பேராவது இருந்து கொண்டேயிருக்கிறார்கள் !

பாசத்தலைவனை பாராட்டி தள்ளிவிட்டார்கள். 86 வயதில் களிப்பூட்டும் நடனங்களை பார்த்து தலைவரும் சார்ஜ் ஏற்றிக் கொண்டார். சரி. பாராட்டு விழாவில் அவுத்து போட்டு நடனங்கள் எதற்கு? பணம் ! மற்றும் சேனலின் அந்தஸ்தை கூட்டிக்கொள்ளும் முயற்சிதான். இல்லையென்றால் ஒரு காண்ட்ரவர்சியல் ஜோடியான பிரபுதேவாவையும், நயனையும் ஆட வைப்பார்களா? கேரளாவில் படபிடிப்பிலிருந்த நயனை அதிகாரம் அழைத்து வந்தது. பிரபுதேவா சொன்னாராம். “ நிலம் வாங்கும்போது ஒரு விழா ! கட்டிடம் கட்டியபின் இன்னொரு விழா! சாவி கொடுக்கும்போது மறுபடியும் விழா ! ஏற்பாடு பண்ணுங்க. வந்து ஆடி கொடுத்துட்டு போகிறேன்”

ஜெயலலிதாவின் விழுப்புரம் ஆர்ப்பாட்டம் மகா காமெடி. ஷோப்பிகண்ணு மாதிரி (பால்வாடி டீச்சர்) அவர் முழக்கங்கள் எழுப்ப , ரத்தத்தின் ரத்தங்கள் பின் பாட்டு பாடினார்கள் !

அஜித்தின் அதிரடி பேச்சுக்கு திரையுலகில் நல்ல ரெஸ்பான்ஸ். ஆனால் ஆளும் வர்க்கம் அதை ரசிக்கவில்லை என்பது கலைஞர் டி.வி பிரமோவில் தெரிந்தது. ரஜினி, கமல், இளையராஜா, விஜய் பங்கு பெற்ற நிகழ்ச்சி என்றுதான் சொல்கிறார்கள்.

ஸ்டாலின் அரசின் தொகுப்பு வீடு கட்டும் திட்ட விழாவிற்கு ஜெயலலிதாவிற்கு அழைப்பு அனுப்பி ஒரு நல்ல முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளார். ஸ்டாலின் பொதுவாக அதிகம் பேசுவதில்லை. செயலில் காட்டும் முனைப்பு அவரிடம் இருக்கிறது. வாழ்த்துக்கள் துணை முதல்வருக்கு! அதிகார போட்டிக்கு யாரும் வராமல் இருந்தால் இன்னும் சிறப்பாக நிச்சயம் செயல்படுவார் என்றே தோன்றுகிறது.

ராபர்ட் ஒரு பைலட். லுப்தான்சாவில் இருந்தவர். ஹாபிக்காக குடிக்க ஆரம்பித்தார். மூழ்கி போனார். வேலை போனது. மனையுடன் விவாகரத்து. குடிநோய் ! அந்த மையத்தில் அப்படித்தான் சொல்கிறார்கள். சிகிச்சை முடிந்து ஒரு வருடமாக விஸ்கியை தொடவில்லை. அந்த மையத்திலேயே சேவை செய்கிறாராம். நண்பர் அங்குதான் சிகிச்சையில் இருக்கிறார். அவரை பார்க்க போயிருந்தேன். முன்பிற்கு ஆள் கொஞ்சம் தெளிவாகவே இருக்கிறார். கண்களில் ப்ழைய ஒளி திரும்பியிருக்கிறது. வெளியில் வந்து தொடாமல் இருக்க வேண்டும். இதுதான் அவருக்கு கடைசி சந்தர்ப்பம். கடவுளை பிரார்த்திப்போம்!

எனக்கும் கொஞ்சம் கவுன்சிலிங் கேட்டேன். ஒரு மணிநேரம் என்னுடன் பேசினார்கள். முடிவில் உங்களுக்கு குடிநோய் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். அவர்கள் சொல்வது. “நாளையிலிருந்து குடிக்க மாட்டேன். இன்று கடைசி” என்பதை போல் “ இன்னிக்கு வேண்டாம். நாளைக்கு குடிக்கலாம் “ என்று ஒரு பாலிசியை அடாப்ட் செய்யுங்கள் என்பதுதான்.

முன்னாள் மிஸ்.மெட்ராஸ். BBC master minds நிகழ்ச்சியில் இறுதி சுற்றுவரை வந்தவர். உலக விஷயங்கள் விரல்முனையில். அவர் நடிகை கஸ்தூரி. கல்யாணம் ஆகி வெளிநாட்டில் கொஞ்சம் காலம் இருந்தார். வழக்கம் போல் பிரச்சனை. இங்கு வந்து ஜி.வி. பிலிம்சில் கிரியேட்டிவ் ஹெட் ஆக இருந்தார். ஆடின கால்! தமிழ்ப்படத்தில் “குடும்ப குத்து விளக்கு” பாட்டிற்கு உரித்து போட்டு விட்டார்கள். உள்ளத்தை அள்ளித்தா படத்தில் ரம்பாவிற்கு முன் கஸ்தூரியைத்தான் கேட்டார்கள். கவர்ச்சி காட்டமுடியாது என்று மறுத்து விட்டார். ஆனால் இன்று ? சினிமா !

பெரிய பதவிகளில் இருப்பவர்களுக்கு நகைச்சுவை உணர்வு தேவை என்பதை நம் தலைவர்கள் நிருபீக்கிறார்கள்!

பிரதமர் : விலைவாசி விரைவில் குறையும் ! பதுக்கல்காரர்களுக்கு இறுதி எச்சரிக்கை !

நம் பாசத்தலைவர் : ராஜபக்‌ஷேவை இனியும் பொறுக்க மாட்டோம்!(இராசா அண்ணே ! கார்டு, கவர் எல்லாம் வாங்கி அனுப்புங்க. தலைவர் கடிதம் எழுத ஆரம்பிக்க போகிறார்!)

டிஸ்கி கவுஜை:

பிரதமர் சொன்னதை கேட்டாயா கண்ணே?
இனியும் வார்த்தைகளை பதுக்காதே!
சொல்லி விடு!

கைகுட்டை பரிசளித்தால்
பிரிந்து விடுவார்களாமே!
தெரியாமல் நான் தந்தேன்.
தெரிந்தே நீயும்
வாங்கி கொண்டாய்!

மற்றுமொரு காதலர் தினம்
புத்தம் புது காதலியுடன்!